Sunday 26 January 2014

சொல், ஒரு சொல்!...(2)

நேற்று ககனம் என்ற சொல் பற்றிப் பார்த்தோம்.

ககனம் என்றால் வானம். சில இடங்களில் சொர்க்கம் எனவும் பொருள்படுகிறது.

இந்தக் ககனத்தில் வார்த்தை விளையாட்டை நிகழ்த்திப் பார்த்தால் நமக்குக் கனகம், கனம், ககம் போன்ற சொற்கள் கிடைக்கும்.

கனம் என்ற சொல் நாம் நன்கு அறித்த ஒன்றே!

கனகம் என்றால் பொன் என்று பொருள்.

ககம் என்றால் அம்பு அல்லது பறவை.

இதில் பறவை என்ற பொருளில் திருப்புகழில் 'குடரும் மலசலமும் இடை இடை தடியும்' என ஆரம்பிக்கும் பாடலில் 'கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீலக் கலப ககம் மயில் கடவி' என்று வருகிறது.

பொருள்: கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட (திரிவிக்கிரமனாக) வளர்ந்த மேக நிறத் திருமால் என்னும்படி, இந்த உலகமும் ஆகாய உச்சி முழுமையும் பொருந்தும்படி நிமிர்ந்து எழுந்ததும், முழு நீல நிறமுள்ள தோகையைக் கொண்டதுமான மயில் என்னும் பறவையை வலிவாகச் செலுத்தி என்பதாகும்

ககம் என்பதை அம்பு எனக் குறிக்கும் இலக்கிய மேற்கோள்கள் என் கண்ணில் இது வரைக்கும் படவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் இங்கே சொல்லலாம்.

சரி, Lets coming to the point...

இன்றைக்கான சொல்: "மரை"

மரை என்றால் மான். சில இடங்களில் காட்டுப்பசுவும் மரை என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

மரை என்பது நான்கு கொம்புகள் உள்ள மான் என்றும், கடல் சார்ந்த சதுப்பு நிலங்களில் வாழக் கூடியதும் என்றும் சொல்கிறார்கள். அதன் புகைப்படம் என்று விக்கி இதைக் காட்டுகிறது. நாமும் நம்புவோம்.

படிமம்:Anxious Sambhur.JPG

மேற்கோள்கள்:

1. 'மரையா மரல் கவர' எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடல்

மரையா மரல் கவர மாரி வறப்ப
வரை ஓங்கு அரும் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத் -
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அரும் துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்,
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும்,
அன்பு அறச் சூழாதே, ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின், அது அல்லது
இன்பமும் உண்டோ, எமக்கு?


2. 'நெல்லிக்காயை மரையா உண்ணும்' எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல்

3. திருவேங்கடத்து அந்தாதியில் ஓர் அருமையான பாடல் வருகிறது. அது:

அம்பரந்தாமரைபூத்தலர்ந்தன்னவவயவரை
அம்பரந்தாமரையஞ்சனவெற்பரையாடகமாம்
அம்பரந்தாமரைசூழ்ந்தாரைவாழ்த்திலரைம்புலனாம்
அம்பரந்தாமரைபோற்றிரிவாரையகனெஞ்சமே.

படிப்பதற்கு இலகுவாக சீர் பிரித்து:

அம்பரம் தாமரை பூத்த அலர்ந்து அன்ன அவயவரை
அம் பரந்தாமரை அஞ்சன வெற்பரை ஆடகம் ஆம்
அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை வாழ்த்திலர் ஐம்புலனாம்
அம்பரம் தா மரை போல் திரிவாரை அகல் நெஞ்சமே!

(இதுக்கு நான் விளக்கம் சொல்ல மாட்டேன். அருமையான பாடல். நீங்களே விளக்கம் கண்டுபிடிச்சுக்கோங்க. அப்பொழுது தான் அதன் அழகு புரியும்)

இதே போல, கம்பராமாயணத்தில் ஒரு பாடல். இதற்கும் மரைக்கும் சம்பந்தம் இல்லை என்ற போதும், சும்மா சொல்லி வைக்கிறேன்.

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்,
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக் கண்ணன் தம்பி

இன்னொரு தகவல் ஒன்று தா.க.த மாநாட்டில் சொல்லக் கேட்டேன்.

நாம் வேதாரண்யம் என்ற ஊர் பற்றி அறிவோம். அது திருமறைக்காடு என்ற தமிழ்ச்சொல்லை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்ததால் வேதாரண்யம் ஆனதாம். (ஆரண்யம் என்றால் காடு). ஆனால் உண்மையில் அது ம'றை'க்காடு இல்லையாம். ம'ரை'க்காடாம். அதாவது மான்கள் நிறைந்த காடு என்பதால். இடையின 'ர'கரம் வல்லினமானதால் வந்த வினை! 'வல்லி, உன் வல்லிபமே!' என்று கூறிக் கொண்டு நான் கிளம்பிக்கிறேன்.

No comments:

Post a Comment