Wednesday 1 January 2014

அத்தா ஆனந்தா அமிர்தா!

தமிழ் இலக்கியத்தில் சில வார்த்தைகள் அல்லது வரிகள் மிக catchy-ஆக, மனதிலேயே நின்று அதிகாரம் செலுத்தும். மற்றவர்களுக்கு சாதாரணமாக இருந்தாலும், நம் மனதில் அது ஒரு வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வரிசையில் 'திருவெம்பாவை' முதல் பாடலின் இடையில் வரும் வரியான 'வன்செவியோ நின் செவி தான்' இருந்தது.

அதே தொகுப்பின் மூன்றாம் பாடலில் 'அத்தன் அமிர்தன் ஆனந்தன் என்று உள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்' என்று வர
ுகிறது. இதில் 'அத்தன்' என்ற சொல் மனதை வெகுவாகத் தொட்டது. எங்கேயோ கேட்ட சொல் போலவும், பழக்கமேயில்லாத புதிய சொல் போலவும் ஒரே நேரத்தில் இருப்பது சில சொற்களுக்கு மட்டுமே கிடைத்த வரம்.

அத்தன் என்றால் தகப்பன் என்று பெரும்பான்மையான இடங்களில் பொருள்படுகிறது. (அது போல இறைவன், தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம்)

உதாரணங்கள் சில:

"அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி ஆடப்
பொற்சுண்ணம் இடித்தது நாமே"

"அத்தன் கருணையோடு ஆட ஆட ஆடப்
பொற்சுண்ணம் இடித்தது நாமே"

- திருவாசகம்

"அத்தன் அமைத்த உடல் இரு கூற்றினில்
சுத்தமாகிய சூக்குமம் சொல்லுங்கால்"

- திருமூலர் திருமந்திரம்

"அத்தா உனக்கு இனி அல்லேன் எனலாமே"

- தேவாரம்

அத்தன் என்ற சொல் இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ளது.

முஸ்லீம் குடும்பங்களில் இப்பொழுதும் அப்பாவை 'அத்தா' என்றழைக்கும் வழக்கம் உள்ளது. இவ்வளவு நாட்களாக அது உருதுச் சொல்லாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அது சுத்த தமிழ்ச் சொல்.

இப்போது ஒரு கேள்வி.

அத்தன் = தகப்பன், தலைவன், இறைவன்

இந்த 'அத்தான்' என்ற சொல் அத்தன் என்பதிலிருந்து வந்ததா?

அத்தான் என்றால் மாமன் மகன் / கணவன். அதாவது தலைவன். பொருள் இங்கு கிட்டத்தட்ட பக்கத்தில் வந்து விட்டதே! அத்தன் என்பதிலிருந்து அத்தான் சொல் பிறந்திருக்க வாய்ப்பு இருக்கிறதோ?

No comments:

Post a Comment