Thursday 9 January 2014

ஒரு ஆடும் இரண்டு மேய்ப்பர்களும்

ஒரு ஊரில் பல ஆடுகள் இருந்தன. அவற்றுள் துரு துறுவென்று இருந்த சில ஆடுகளில் அதுவும் ஒன்று. அதனால் அதை எப்படியாவது கொழு கொழுவென்று ஆக்க வேண்டும் என்று அதற்கு மட்டும் 2 மேய்ப்பர்கள். இருவரும் அதைக் கவனித்துக் கொள்வார்கள்.

ஒருநாள் அப்படித் தான், அதன் கொழு கொழு டார்கெட்டின் முதல் கட்டமாக, சின்ன மேய்ப்பர் ஒரு செடியின் பெயரைச் சொல்லி, அது மென்று கொள்ள எளிதாக இருக்குமென்றும், சீக்கிரமே கொழுக்க வைக்கும் என்றும் சொன்னார். அது எங்கிருக்கும் என்று ஆர்வமாய்க் கேட்டது அந்த ஆடு.

'அதோ தெரியுதே அந்த மலை, அங்க போயி சாப்டணும்' என்றார்.

அது பார்வைக்குப் பக்கத்தில் இருந்தாலும், நடந்தால் தூரமாகத் தான் ஆகும் என்பது அந்த ஆட்டுக்குத் தெரியும். இருந்த போதும், அதற்கு அவ்வளவு ஆர்வம்! எப்படியாவது கொழுத்து விட வேண்டும் என்று! நடக்கத் தொடங்கியது.

அவ்வளவு நேரம் மற்ற ஆடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த பெரிய மேய்ப்பர், அப்பொழுது தான் வந்தார். விபரத்தைச் சொன்னது கள்ளம் கபடமில்லாத அந்த ஆடு. அவர் 'எல்லாம் சரி...........' என்று ஆரம்பித்தார். 'ஐயகோ! அப்படிச் சொன்னாலே அவ்வளவும் போச்சு' என்பது அந்த ஆட்டுக்குத் தெரியும். அது தான் புத்திசாலியாயிற்றே!

பெரிய மேய்ப்பர் தொடர்ந்தார். 'கொழுப்பது சரி தான். ஆனால் அவ்வளவு தூரம் போகும் நேரம் நமக்கில்லை. பொழுது விடிவதற்குள் கொட்டகைக்குத் திரும்ப வேண்டும்' என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டார். 'அந்த மலையைத் தேடிப் போவதற்குப் பதிலாக, இதோ இருக்கும் புல்லை, இரு மடங்கு தின்னட்டுமே! தானாகக் கொழுத்து விடும். இதற்கு எதற்கு இவ்வளவு சுத்துவானே?' என்று கேட்டார். ஆட்டிடமல்ல, சின்ன மேய்ப்பரிடம்.

அவரும் 'இல்லை...இல்லை' என்று ஆரம்பித்தார். 'அய்யய்யோ...இவர் இப்படிச் சொன்னாலே சரியென்று முடிப்பார் என்று தானே அர்த்தம். என்ன நடக்கப் போகிறதோ' என்று அந்த ஆடு விழிக்கத் தொடங்கியிருந்தது. பெரிய மேய்ப்பர் சொன்னது போலத் தான் ஆடு ஆளப்பட்டது. இல்லையில்லை, வழி நடத்தப்பட்டது. மேய்ப்பர்கள் இந்தச் சொல்லைத் தான் பயன்படுத்துவார்கள்.

முதலில் அதற்கு வருத்தம். அப்புறம் ஒரு நாள் திடீரென, 'எல்லாம் சரியாகி விடும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள். உன்னால் முடியும். நீ கொழுப்பாய் குள்ள ஆடே' என்று தனக்குள்ளே சூளுரை எடுத்துக் கொண்டு பேய்த்தனமாய் செடிகளைத் தின்ன ஆரம்பித்தது. அந்தப் பரபரப்பு அதற்குப் பிடித்திருந்தது.

ஓரிரு தினங்கள் கழித்துச் சின்ன மேய்ப்பர், கயிற்றில் கட்டப்பட்ட ஒரு மெலிய ஆட்டுடன் வந்தார். அதற்குத் தின்னும் முறையைச் சொல்லித் தரும்படிப் பணித்தார். அதுவும் வெள்ளை மனதுடன் சொல்லித் தந்தது. விரைவில் கொழுக்கும் சூட்சமங்களையும் சேர்த்துச் சொன்னது. அன்பு நிறைந்த ஆடு அது!

பெரிய மேய்ப்பர் வந்து பார்த்து வெகுவாகப் பாராட்டினார். தண்ணீர் காட்ட வந்த அந்தச் சாயுங்காலம் சொன்னார்: 'நீ ஏன் இங்கேயே இருக்கிறாய்! மலையில் போய்ச் சாப்பிட்டேன். இங்கே இவன் தான் இருக்கிறானே!' என்றார். ஆடு பலமாகத் தலையாட்டியது. இத்தனை நாளும் அதற்காகத் தானே காத்துக் கிடந்தது. 'ஜாலியோ ஜிம்கானா...தானனே தனனானா!' என்று பாட்டுப் பாடிக் கொண்டே குஷி(தி)த்தோடியது.

சட்டென ஒரு அழைப்பு. சின்ன மேய்ப்பர் 2 நிமிடம் வருமாறு கொட்டகைக்கு அழைத்தார்.

......................

......................

......................

நாட்கள் சில நகர்ந்தன. நம் ஆடு ரொம்பவும் மெலிந்திருந்தது. கண்ணுக்கு முன் நின்ற வளமான மலை, சூறைக்காற்றில் சூதாடப்பட்டிருந்தது. அருகிலிருந்த செடிகொடிக்கெல்லாம் சண்டையாகக் கிடந்தது. 'தகுந்தன தப்பிப் பிழைக்கும்' என்ற கோட்பாடு அந்த அறிவாளி ஆட்டுக்குத் தெரியும். பசித்த ஆடுகள் அதன் முன்பு பாவமாய் நின்றிருந்தன. மனம் கரைந்தது. மயங்கி விழுந்தது. அதன்பின் அது எழவேயில்லை.

முதல் நினைவு நாளில் அதன் கல்லறையில் கிலோக்கணக்கில் செடிகள் படைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆட்டின் ஆவி சிரித்தது. கசாப்புக் கடையை நோக்கி நகர்ந்தது.

No comments:

Post a Comment