Wednesday 1 January 2014

பாரதி பிறந்தநாள் ஸ்பெஷல்

பாரதி பிறந்தநாள் ஸ்பெஷல்!

எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவராக இருந்த காந்திமதி நாதருக்கு பாரதி மேல கொஞ்சம் கடுப்பு. அதனால அவரை அவமானப்படுத்தனும்னு நெனச்சு 'பாரதி சின்னப்பயல்' என்று ஈற்றடி அமையுற மாதிரி 5 நிமிடத்தில் ஒரு பாடல் இயற்ற வேண்டும்ன்னு பாரதி கிட்ட சொன்னாராம். நம்மாளு அதுக்கு உடனே பாடுனாராம் இப்படி:

"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்ப
ோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்."

புரியுதா? (சகாக்களுக்காகப் பிரித்து, கீழே)

ஆண்டில் இளையவன் என்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்து என்னை ஏளனம் செய் - மாண்பு அற்ற
கார் இருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்.

அதாவது, தன்னை விட வயதில் இளையவன் நான் என்று அந்த அகந்தையினால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்த, பெருமை அற்ற, கருமையான இருள் போன்ற உள்ளம் கொண்ட காந்திமதி நாதனைப் பார், மிகவும் சின்னப் பயல் அவர்! என்று பொருள். (பாரதி சின்னப் பயல் = பார் அதி சின்னப் பயல்)

உடனே கா.ம.நா வுக்கு தலைகுனிவாப் போயிட்டுது.

அதைப் பார்த்து பாரதி பாட்டை கொஞ்சம் மாத்திப் பாடுறார் இப்படி:

"ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்."

ஆண்டில் இளையவன் என்றைய அருமையினால்
ஈண்டு இன்று என்னை நீ ஏந்தினையால் - மாண்புற்ற
கார் அது போல உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்

(கார் அது போல உள்ளத்தான் - மழை மேகம் போல கருணை மிக்க உள்ளம் கொண்டவன்)

இங்க பாரதி, தன்னையே சின்னப் பயல் ன்னு சொல்லிக்கறார்.

நன்றி: மாலன் சார்

மாலன் சார், உங்களுக்கு ஞாபகம் இருக்கா? பாரதி பற்றி நீங்க சொன்ன இந்தத் தகவல் தான், அவர் எழுத்துக்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டிய முதல் பொறி. மேலே சொன்ன இந்தப் பாட்டு வரிகளை நினைவில் இருந்து தான் எடுத்து எழுதறேன்(சரியாத் தான் இருக்கும்ன்னு நம்புறேன்). நாம் இது பற்றிப் பேசிய அந்த மாலைப்பொழுது, என் உலகத்தை விழிக்கச் செய்த ஒன்று. இடைப்பட்ட 11 மாதத்தில் நான் வளர ஆரம்பிச்சுருக்கேன். அதுக்கெல்லாம் முதல் பொறி நீங்கள் தந்தது. என் நன்றியை வெறுமனே வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனாலும் நெகிழ்ச்சி நிறைந்த நன்றிகள் சார்.

No comments:

Post a Comment