Saturday 25 January 2014

சொல், ஒரு சொல்! ...(1)

தாயகம் கடந்த தமிழ் தொடக்க மாநாட்டில் உயர்நீதி மன்ற நீதிபதி திரு. ராமசுப்ரமணியன் பேச்சின் போது சொன்னார். ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை நீண்ட நாட்களாகத் தொடர்ந்து ஆங்கில சொல் vocabulary-யில் சிறப்பான/வேறுபட்ட வார்த்தைகளைத் தினமும் பகிர்ந்து கொள்கிறார்களாம்.

அது போல நாமும் தமிழ் வார்த்தைகளை ஏன் படித்துப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று ஒரு இரவல் சிந்தனை வந்தது. அதை முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். தினமும் முடியுமா என்று தெரியவில்லை. வாரத்திற்கு இரு முறை முயற்சிக்கலாம் என்பது எண்ணம்.

~ Lets start the game ~



சொல், ஒரு சொல்! ...(1)

[தலைப்பு நல்லாயிருக்குல்ல?! நானே யோசிச்சேனாக்கும்!]


இன்றைய சொல்: "ககனம்"


பொருள்: வானம், (சில இடங்களில்) சொர்க்கம்


மேற்கோள்கள்:


1. கம்பராமாயணம் - பாலகாண்டம் - எதிர்கொள் படலம் - பாடல் எண்: 1137


***

இளைய பைங் குரிசில் வந்து
அடி பணிந்து எழுதலும்,
தளை வரும் தொடையல்
மார்பு உற, உறத் தழுவினான்;
களைவு அரும் துயர் அறக்,
ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான்,
எவரினும் மிகுதியான்.

***


இங்கு ககனம் என்பது வானம்.


பாடல் விளக்கம்:
--------------------------------
களைவு அருந்துயர் அறக் ககனம் எண்திசை எலாம்- (பிறரால்)
நீக்குதற்கு அரிய (சம்பரன் முதலிய அசுரர்களால் உலகோர்க்கு
நேர்ந்த) துயரங்களையெல்லாம். நீக்கியதால் விண்ணிலும்
எண்திசைகளிலும். பிறஎல்லா இடங்களிலும்;


விளைதரும் புகழினான் எவரினும் மிகுதியான் - பரவிய புகழினையுடையவனும். எல்லோரினும் சிறந்தவனுமான தசரதன்;


இளைய பைங்குரிசில் வந்து அடிபணிந்து எழுதலும் - பசும்பொன்னின் நிறம் வாய்ந்த இளைய பெருமாள் வந்து (தன்னுடைய) திருவடிகளை வணங்கி எழுந்த அளவிலே;


தளைவரும் தொடையல் மார்புற உறத்தழுவினான் - கட்டப்பட்ட மாலைகள்
நிறையும் மார்பில் பொருந்துமாறு. நன்கு அணைத்துக்கொண்டான்.


2. அபிராமி அந்தாதி - பாடல் எண்: 64 & 65


***


வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.



***


இங்கு ககனம் என்பது வானம்


ககனம் = சொர்க்கம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.


***


ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? - வல்லி, நீ செய்த வல்லபமே.


***


3. காளமேகப் புலவரின் தனிப்பாடல் ஒன்று


***


கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது!

நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்!!

வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்

மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!!!

***

பொருள்:

நீரே! நீ ஆகாயத்தில் இருந்த போது மேகம் என்ற பெயரைப்பெற்றாய்.

தரையை அடைந்த பிறகு நீர் என்ற பெயர் பெற்றாய்.

ஆனால், நீண்ட நெடுங் கூந்தலை உடை​ய பால் விற்கும் மாதரின்

கையில் வந்ததும் மோர் என்று பேர் பெற்று முப்பேர் பெற்று

விட்டாயே என்று கூறுகிறார்.


மேற்கூறிய பாடலில் புலவர் ஆயர் குலப்பெண்ணை நையாண்டி செய்கிறார்.


அவள் விற்ற மோர் தண்ணீரைப்போல் இருந்தது.

அதை நேரடியாகச் சொல்லாமல் அப்பெண்ணைப் புகழ்வதுபோல்,

அவள் கைவண்ணத்தால் தண்ணீரே மோரானதாகப் பாடுகிறார்.

--

No comments:

Post a Comment