Tuesday 31 December 2013

எப்படியிருந்தது 2013?

இது ஒவ்வொரு வருட முடிவிலும் அந்த ஆண்டில் நடந்த நல்லது பொல்லதுகளை நினைத்துப் பார்ப்பது தான்.
சம்பிரதாயமாக ஆகாமல் அடுத்தடுத்த செயல்களுக்கு ஊக்கமாகவும், தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கட்டும் என்று உள்மனதிற்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

இது நண்பர்களுக்கான வருடம் போல! அருமையான அக்காக்கள், அன்பான அண்ணன்கள், பிரியம் நிறைந்த மச்சிக்கள், குட்டித் தங்கைகள் என்று
நிறைய்ய்யய்ய்ய்ய நட்புகள் இந்த வருடம் கிடைத்தன. இது ஆசிர்வதிக்கப்பட்ட வருடம். போன வருடத்தை விட, இந்த வருடம் இன்னும் கொஞ்சம் நிறைவாய் உணர்கிறேன். அது நண்பர்களின் வரவால் கூட இருக்கலாம்.

இந்த வருடம் தந்த மிக மிக்கியமான ப்ளஸ்: என் பலம் என்று நான் நம்பிக் கொண்டிருந்தவைகள் ஒரு பாதைக்கு முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆர்வம் என்று மட்டும் இருந்தவைகள் எல்லாம் செயல் என்று மாற ஆரம்பித்திருக்கின்றன. நிச்சயமாய் இது முன்னேற்றத்தின் முதல் படி என்று நம்புகிறேன். இதற்கான அத்தனை credit-களும் என் ஆசானுக்குச் சமர்ப்பணம்.

புத்தகங்கள் வாசிப்பு போன வருடத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஆத்மார்த்தியுடன் நட்பான ஆரம்ப நாட்களில் ஒருமுறை புத்தக வாசிப்புக்கு அவ்வளவு நேரம் கிடைப்பதில்லை என்று ஒரு வாதம். 'உங்களுக்கு அதே தான் தொழில். உங்களால் முடிகிறது. எனக்குத் தொழில் வேறு. இது வேறு. இது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அவ்வளவு நேரம் ஒதுக்க முடியல ஆத்மா' என்றேன். அழகாக ஒரு வார்த்தை சொன்னார்: 'இல்ல ராஜி. அப்டியெல்லாம் சொல்லவே முடியாது. உனக்கு நிஜமாவே ஆர்வம் இருந்தா உன்னால படிக்காம இருக்கவே முடியாது. புத்தக வாசிப்புன்றது தன்னிச்சையா நிகழ்கிற ஒன்று. படிக்கணும் ராஜி. நிறையப் படிக்கணும்' என்றார். நிச்சயமாய் அது உண்மை தான் என்று அடுத்த சில மாதங்களிலேயே புரிந்தது. இந்த இடத்தில் என்னை உற்சாகப்படுத்திய ஆத்மாவுக்கு நன்றி சொல்லியாகணும்.

இந்த வருடம், நேரத்தைக் கொஞ்சம் உருப்படியாகப் பயன்படுத்தியிருக்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது. அட்லீஸ்ட் பின் ஆறு மாதங்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால் இன்னும் முன்னேற்றம் வேண்டும். இது போதாது.

வேலையைப் பொருத்தமட்டில் சில ஏற்ற இறக்கங்கள் வந்து போய் விட்டது. Mistral, Renesas, Broadcom என்று அதிரடியாகச் சில மாற்றங்கள். எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லை. அது மார்க்கெட் நிலவரத்தாலும் கூட இருக்கலாம். சீரியஸான கவனம் வேண்டும் என்பது மண்டைக்குள் 2 மாதத்திற்கு முன்னமே உரைத்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் அல்லது செய்து தான் ஆக வேண்டும். இடையில் ஓரிரண்டு மாதங்கள் ரொம்பவும் மனது சோர்ந்து போயிருந்தது. இப்பொழுது அதைச் சரியாக்கியாயிற்று. பார்க்கலாம். திரும்பவும் அந்த 'கடுப்பிங்ஸ் ஆஃப் கம்போடியா' mode-க்குப் போக மாட்டேன் என நம்புவோம். அப்படிப் போனால் அம்புட்டும் போச்சு.

கோகிக்கு காலேஜ் கிடைத்தது இந்த வருடத்திய மிகப் பெரிய வெற்றி. அது வெறும் அவள் கனவு மட்டுமல்ல. ஒரு தலைமுறையின் கனவு. எதிர்பார்த்தற்கு அருகில் அவளுக்கு அமைந்து விட்டது குறித்து ஒரு மாதிரி மன நிறைவு தான்.

நினைத்து மகிழ நிறைய சம்பவங்கள் இருந்தாலும், போன வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் சோகங்கள் அதிகம். அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது, வீட்டுப் பிரச்சனை etc etc..சில சமயம் தனியாய் நின்று தாங்க வேண்டிய சூழல் கூட வந்து போனது. சுயகழிவிரக்கம் கொஞ்ச நாளைக்கு இருந்தது. அந்த சமயத்தில் அப்பா ஒருத்தர் மனதிலறைவது போல ஒரு வார்த்தை சொன்னார். 'My dear child! Are you a kid? you are a grown up woman. you should learn to handle problems on your own' சரியான சந்தர்ப்பத்தில் சொன்ன மிகச் சரியான வார்த்தை அது! அதன்பின் தேவையில்லாமல் யாரிடமும் மூக்கைச் சிந்தவில்லை. தைரியமாக இருப்பதாய் மனதை ஏமாற்றிக் கொண்டாவது காலத்தைத் தள்ளியாச்சு. அடுத்த வருடத்திலாவது அனைத்துப் பிரச்சனைகளும் முடிய வேண்டும் என்று கேட்கவில்லை. கொஞ்சம் வீரியம் குறைந்தால் கூட போதும். கொஞ்சம் நிம்மதியாய் மூச்சு விடுவேன்.

இந்த வருடம் செய்த நல்ல காரியம் என்று கணக்குப் போட்டால், கண்தானம், அப்பா பிறந்த நாளுக்கு உதவும் உள்ளங்களுக்குச் சின்னதாய் ஒரு நன்கொடை, கல்பனா சாவ்லா துளிர் கல்வி மையத்திற்குச் செய்த சில அறிவுப் பகிர்தல்கள்/motivation இவைகளைச் சொல்லலாம். துளிர் அமைப்பில் சில முயற்சிகள் எடுத்தேன். சில மனப் பிரச்சனைகளால் அதன் பக்கம் கவனம் குறைந்தது. அடுத்த வருடம் அவற்றை முடுக்கி விடவேண்டும். இந்த வருடம் உடல்தானம் pledge பண்ணி விட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். வீட்டில் பெர்மிஷன் வாங்கியாச்சு.

போன வருடத்துப் பிடிவாதங்களும் சிறுபிள்ளைத்தனங்களும் அப்படியே இருப்பது போலத் தான் தெரிகிறது. மனதுக்கு நெருக்கமானவர்களை miss பண்ணுவதை இன்றும் வார்த்தைகளில் சொல்வதை விட முதலில் கோபமாய் தான் வெளிப்படுத்த வருகிறது. இது எங்கு போய் முடியப் போகிறதோ என்ற கவலையும் இருக்கிறது. ம்ம்ஹும்..மாற்ற முடியவில்லை. புது வருடமாவது இதைக் கொஞ்சம் புரிய வைக்குமா பார்ப்போம்.

மொத்தத்தில் புது வருடம் மன நிம்மதியைத் தர வேண்டும். அது இருந்தால் சுறுசுறுப்பு தானாக வரும். சுறுசுறுப்பு இருந்தால் போதும், பட்டையைக் கிளப்பலாம். பார்ப்போம். என்னென்ன ரகசியங்களுடன் புது வருடம் பிறக்கப் போகிறது என்று!