Saturday 29 March 2014

சொல், ஒரு சொல்...(6)

புறநூனூற்றுப் பாடல்களில் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருந்த போது அந்தக் காலத்தைய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. அதில் கவனம் செலுத்திப் படித்தவற்றை இங்கு பதிகிறேன்.

அந்தக் காலத்தில் "ஐயவி புகைத்தல்" என்றொரு வழக்கம் இருந்திருக்கிறது.

ஐயவி என்றால் வெண்சிறுகடுகு. ie White Mustard (படத்தைப் பார்க்க)

                                     

கடுகு தாளிக்கும் போது கொஞ்சம் கவனமில்லாம இருந்தோம் என்றால் அதன் நெடி மூக்கைத் துளைத்து இருமலை வரவழைக்கும். வெண் கடுகு வாசமும் அப்படித் தான் இருக்குமென்று நம்புகிறேன். அதை ஏன் புகைய வைக்கிறார்கள்?

1) ஐயவி புகைப்பது என்பது ஒரு மங்கலச் சின்னமாய் இருந்திருக்கிறது. அப்படிச் செய்யும் போது எமன் நெருங்காமல் விலகி விடுவான் என்று ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால் போரில் புண்பட்ட வீரர்/அரசர்களின் வீடு/அரண்மனைகளில் ஐயவிப் புகை போட்டிருக்கிறார்கள்.

வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ?
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?


- புறநானூறுப் பாடல்: 296

பொருள்:
போர் செய்து விட்டு வந்த வீரர்களின் வீட்டுக் கூரையில் வேப்பமரக் கிளைகளை ஒடித்துச் செருகி வைத்திருக்கிறார்கள். காஞ்சிப்பண் பாடுகிறார்கள். நெய்யில் வெண்கடுகு போட்டு புகை வர வைக்கிறார்கள். எல்லா வீடுகளும் ஆரவரித்துக் கிடக்கின்றன. ஒரு வீட்டில் மட்டும் போருக்குப் போனவர் இன்னும் வரவில்லை. பகையரசனை சினந்து கொல்லாமல் திரும்ப மாட்டேன் என்று போர் புரிந்து கொண்டிருக்கிறாரா? அதனால் தான் அந்தப் பெரியோனின் தேர் இன்னும் வீடு திரும்பாமல் காலம் தாழ்த்துகிறதோ?

இதே போல, புறநூனூற்றின் 281ஆவது பாடலிலும் "ஐயவி சிதறி ஆம்பல் ஊதி" என்றும் வருகிறது.

2) ஐயவி புகைப்பது என்பது எதிரி நாட்டு மன்னனுடன் சமாதானத்திற்கு உடன்படுவதற்கு ஒரு அடையாளமாகவும் இருந்திருக்கிறது - வெள்ளைக் கொடி போல. (இங்கே நான் இன்னொன்னு சொல்லட்டுமா? 'வெள்ளைக் கொடிக்கு வேலை வந்து விட்டது மன்னா!' வெள்ளைக் கொடி பொதுவாக சமாதானத்திற்குச் சொல்கிறோம் இல்லையா! ஆனால் போர்க்களத்திற்குரிய உடையாக, அதாவது சண்டை போடுவதற்கு ஏற்ற உடையாக வெள்ளை உடை தான் இருந்திருக்கிறது. இதை சில புறநானூற்றுப் பாடல்களில் பார்க்கலாம். நம் ஒக்கூர் மாசாத்தியாரின் 'கெடுக சிந்தை கடிது இவள் துணிவே' பாடலில் தன் மகனைப் போருக்கு அனுப்பும் போது, தலையில் எண்ணெய் வைத்து வாரி, வெள்ளுடை தரித்து அனுப்பியதாய் வரும் -வெளிது விரித்து உடீஇ;  இன்னொரு பு.நா பாடலிலும் 'தூய வெள் அறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின்' என்று வரும். அறுவை - ஆடை)

சரி, Back to the point, சமாதானத்திற்கும் ஐயவிப்புகை அடையாளமாக இருந்திருக்கிறது. அதை ஒரு பாடலில் காணலாம்.

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை;


அதியமானின் படை வலிமையைப் பாராட்டும் பாடல் ஒன்றில் ஔவையார் மேற்கூறிய வரிகளை இயம்புகிறார். அதன் பொருள், நீயோ சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் அதைப் பொருட்படுத்தாது விரைந்து வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டு போகும் எமன் போன்றவன் என்பதாகும். (அதியமானின் வீரத்தைப் போற்றும் பாடல்கள் பெரும்பாலானவற்றில் ஔவ்ஸ் அவனை ஒரு போர் வெறி பிடித்தவனைப் போலவே சித்தரிக்கிறார். அதில் அவர் பெருமைப்படுகிறார். அவர் 'ஐய ஐய' என்கிறார். படிக்கும் நமக்குத் தான் 'ஐய்யய்ய' என்றிருக்கிறது. ஒரு பாட்டில் வரும். ஊர்ப்பொதுவில் இருக்கும் முரசில் காற்று வந்து அடித்த சத்தம் கேட்டு போர்ப்பறை தான் அது என்று போர் செய்யப் பொங்கி எழுவானாம். இது என்ன வீரமோ? இது பற்றித் தனியாகப் படிக்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்)

3) குழந்தை பெற்ற தாய்க்கும் ஐயவிப் புகை காட்டுவார்களாம்.

மணிமேகலை 'அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை, விரவிய மகளிர் ஏந்திய தூபம்' என்கிறது. 

4) கோவில்களில் பூஜைகளின் போதும் ஐயவி புகைக்கப்பட்டிருக்கிறது என்று பன்னிரெண்டாம் திருமுறையிலும் திருமுருகாற்றுப்படையிலும் குறிப்புகள் கிடைக்கின்றன.

5) சங்ககாலத்தை முடிச்சுக்குவோம். ஆக்சுவலி, வெண்கடுகின் மருத்துவக் குணங்கள் என்னன்னா, அதைக் கஸ்தூரி மஞ்சள் + சாம்பிராணியோட அரைத்து சுளுக்குக்குப் பற்றுப் போட்டா சீக்கிரம் குணமாகும். வெண்கடுகை அப்டீக்கா அரைச்சு அப்புனா வாதம், கை கால் வீக்கமெல்லாம் சரியாயிருமாம்.

ஔவை'யார்'?


நேத்து ஔவையார் பத்தி ஒரு கிசுகிசு சொல்றேன்னு சொன்னேன்ல? அது இது தான்.

நாலஞ்சு ஔவையார் இருந்தாங்கன்னு நமக்குத் தெரியும். சங்க கால ஔவையார், ஆத்திசூடி எழுதின ஔவையார், விநாயகர் அகவல் எழுதின ஔவையார் இப்படி இன்னும் 2 பேர்.

ஆனால் "ஔவையார்"ன்னு மனசுல நெனச்சதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்?

Of course, நரைத் தலையும், கையில் ஒரு குச்சியும், வெள்ளைச் சேலையும், ஓலைச் சுவடியும்..கிட்டத்தட்ட கே.பி.சுந்தராம்பாள் திருவிளையாடல் படத்தில் வந்தது போல ஒரு கேரக்டர் தானே ஞாபகத்துக்கு வரும்?

ஆனால் நம்ம சங்ககாலத்து ஔவையார் பாட்டி இல்ல. ஷி இஸ் எ பியூட்டி.

எப்டி சொல்றேன்னு கேக்குறீங்களா? எவிடன்ஸ் வச்சுருக்கேன்.

புறநானூற்றின் 89-ஆவது பாடலை அதுக்கு நாம பார்க்கணும்.


'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,

மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!

எறி கோல் அஞ்சா அரவின் அன்ன

சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளி பொரு தெண் கண் கேட்பின்,

'அது போர்' என்னும் என்னையும் உளனே'



பொருள்: 

“மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னைக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.

இங்க நாம கவனிக்க வேண்டியது, 'விறலி' என்ற வார்த்தையை. விறலி என்றால் 16 வயதுப் பெண் என்று அர்த்தம்.

எதிரி நாட்டு மன்னன் ஔவையாரை 'விறலி'ன்னு கூப்ட்ருக்கான். அதனால அவங்க அப்போ "16 வயதினிலே"வாக இருந்துருக்காங்க.

ஆனா பாருங்க, அந்த வயதில் அவங்க எதிரி நாட்டுக்குத் தூது போகும் அளவுக்கு வெளியுலக அறிவும் கவிதைப் புலமையும் கொண்டவங்களா இருந்துருக்காங்க. நாமள்லாம் 16 வயதில் என்ன பண்ணினோம்? பஞ்சு மிட்டாய் தான் சாப்ட்டுட்டு இருந்துருப்போம்.

இதனால சகலமானவருக்கும் சொல்ல வர்றது என்னன்னா, இனிமே ஔவையாரை நினைக்கும் போது, நோ நரை, நோ வெள்ளைச் சேலை. அழகா ரெட்டை ஜடை, கை நிறைய வளையல், தலை நிறைய மல்லிகைப்பூ, கலக்கல் தாவணி என்று நினைத்துக் கொள்ளுமாறு சங்கம் கட்டளையிடுகிறது.

நாளைக்கு வேற கிசுகிசு சொல்றேன். அதுவரைக்கும் விளம்பர இடைவேளை.

# கிசுகிசு கீதா

ஞாபகம் வருதே


நேத்து லஞ்ச் டைம்ல என் colleague கிட்ட 'குழந்தைகளுக்குப் பரிட்சை என்னைக்கு?' ன்னு பேசிட்டு இருந்தேன். குட்டிப் பசங்க தான் அவங்களுக்கு. 6 வது படிக்குற பையன் ஒண்ணு. 3வது ஒண்ணுன்னு நினைக்கிறேன். அதுக்குப் பதில் சொல்லிட்டுச் சொன்னாங்க 'பிள்ளைங்களை லீவுக்கு எங்க அனுப்புறதுன்னு தெரியலை'. நான் 'ஓ! பாட்டி வீடா? மாமா வீடான்னு கன்பியூசனா?' என்றேன். 'ச்சே! அதெல்லாம் இல்ல ராஜி. சின்னவளை ஸ்கேட்டிங் அனுப்பலாம்னு இருக்கேன். பெரியவன் தான் அதுக்கு ஒத்துக்க மாட்றான். அவன் தெருப் பசங்களோட விளையாடுரதுக்குத் தான் விரும்புறான். அதுக்காக அப்டி விட்ற முடியுமா?' என்றார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

நான் கோடை விடுமுறையில் என்ன செய்தேன் என்று மனம் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தது.

ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் ஒரு கோரிக்கை இருக்கும். டைப் ரைட்டிங், தையல், கூடை முடைதல் (அப்போவெல்லாம் கம்ப்யூட்டர் என்ற ஒன்று பற்றித் தெரியாது), ஹிந்தி கற்றல் இப்படி நிறைய. ஆனால் எல்லாமும் கோரிக்கையாக மட்டுமே நின்று போயிருக்கும். அதைச் செயலாக்க பொருளாதாரம் வாய்த்ததில்லை.

அதனால் கால்வாசிப் பொழுது நீதிக்கதைகளுடன் லைப்ரேரியில் தான் கழிந்திருக்கும். மீதிப் பொழுதில் தார் சுற்ற வேண்டும். எனக்கு என்றில்லை, பொதுவாகவே எஞ்சொட்டு நண்பர்களுக்கு இப்படித் தான் விடுமுறை கழியும்.

எங்கள் தறிகாரக் குடும்பங்களில் தார் சுற்றுவது என்பது இல்லத்தரசிகள், நடக்க முடியாமல் போன பாட்டி தாத்தாக்கள், பள்ளி படிக்க வாய்ப்பில்லாத பிள்ளைகள், கோடை விடுமுறையிலிருக்கும் குழந்தைகள் இவர்களுக்கு நேர்ந்து விடப்பட்ட வேலை.

ஒரு கழியில் 12 சட்டமோ என்னமோ இருக்கும். கழிக்கு இவ்வளவு ரூபாய் என்று கணக்கு(4 ரூபாயோ 5 ரூபாயோ துல்லியமாக நினைவிலில்லை). அந்த வருமானத்தை வைத்துத் தான் அடுத்த வருடத்திற்கு நோட்டுகள் வாங்க வேண்டும்.

அப்பொழுது என் அப்பா பட்டுத்தறி நெய்து கொண்டிருந்தார். அதற்குத் தார் சுற்ற வெளியில் தருவதில்லை. அம்மா தான் செய்வார். சம்மர் லீவில் அந்த வேலை எனக்கு. காட்டன் நூலை விட பட்டு நூலைத் தாராக சுற்றுவதில் கஷ்டங்ள் இருக்கும். காட்டன் என்றால் அதிகம் விரலை அறுக்காது. பட்டு பயங்கரமா அறுக்கும். அறுத்து ரத்தம் வருவதற்குள் நாம் சுதாகரிக்க வேண்டும். இல்லையென்றால் புடவையில் கறை பட்டுவிடும். இப்படிப் பல சாமர்த்தியங்கள் வேண்டும்.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. முதன்முதலாக விரலில் ரத்தமும் கண்ணில் கண்ணீருமாய் அப்பாவிடம் போய் நின்ற நாள். எனக்கு ஒன்றென்றால் அப்பாவால் தாங்கவே முடியாது. 'நீ இதெல்லாம் பண்ணாதே! அம்மாவுக்கு முடியாட்டி நானே சுத்திக்கறேன். போ போயி அந்தக் கதையைப் படிச்சு அப்பாவுக்குச் சொல்லு' என்பார். முழு லீவுக்காலமும் என் அப்பாவுடனேயே ஒட்டிக் கொண்டே திரிவேன்.

அப்புறம் கொஞ்சம் விவரம், வீட்டு நிலை தெரிய ஆரம்பிக்கவும், அவருக்குத் துணையாக 'நாடாப் போடப்' போய் விடுவேன். நாடா என்பது தறியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போகும் ஒரு குழல் போன்ற அமைப்பு. அதை வலது புறம் விட்டு இடது புறம் எடுக்க வேண்டும். அதே போல திரும்பவும் இடது-வலது என்று தொடரும். நாடாப் போட யாராவது இருந்தால் புடவை கொஞ்சம் வேகமாக வளரும். அதுவும் போக அப்பா பக்கத்திலேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொள்ளலாம். அவருடன் பேசிக் கொண்டே இருக்கலாம். அதற்காகவே நான் அதை விரும்புவேன்.

ஒரு பக்கம் ரேடியோ, ஒரு பக்கம் அப்பா. அவ்வளவு இனிமையாக இப்பொழுது கூட வாழ்க்கை இருக்கவில்லை. அப்பா ரொம்பவும் ஜாலியான ஆள். அவருக்கும் எனக்குமாய் பிடித்த பாட்டு எத்தனையிருக்கும்! அவர் ஒரு வரி, நான் ஒரு வரி என்று ஓராயிரம் பாட்டுக்களாவது பாடியிருப்போம். அவ்வளவு சந்தோசத்திலும் பக்கத்துத் தெருக்காரி தையல் கிளாஸ் போவதைப் பார்க்கும் போது, மனதில் சின்னதாய் ஒரு ஏக்கம் எழும்பி மங்கும். அன்னைக்கு மட்டும் பாட்டு சத்தம் வரவே செய்யாது.

ஒன்பதாம் வகுப்பு விடுமுறை என்று நினைக்கிறேன். அப்பொழுது ஒரு சம்பவம். தறியில் விசைக்கம்பு என்று ஒன்று இருக்கும். ஒரு தட்டையான கம்பில் ரெண்டு புறமும் முள் மாதிரி கூர்மையான குண்டூசிகள் குத்தியிருக்கும். அது தான் புடவையின் stiffnessக்கு உதவும். ஒவ்வொரு முழம் புடவை நெய்து விட்டும் அதை எடுத்துக் கொஞ்சம் தள்ளிக் குத்த வேண்டும். அப்படி ஒருமுறை அப்பா செய்யும் போது புடவைக்குப் பதில் தவறிப் போய் அவர் விரலில் குத்தி விட்டது. சலசலவென்று ரத்தம். வெள்ளைப்பட்டில் சிவப்பு பார்டர் புடவை அப்போ தறியில் கிடந்தது. நல்லவேளையாக புடவையில் தெறிக்கும் முன்னர் அப்பா கையை எடுத்து விட்டார். எனக்கு இரத்தத்தைப் பார்த்துப் பதறிப் போய் விட்டது. அப்பா கூலாகச் சொன்னார்: 'பார்த்தியா, அப்பா உன்னை ரத்தம் சிந்திப் படிக்க வைக்குறேன்'. அவர் சொன்னது என்னமோ விளையாட்டுப் பேசி என்னை சிரிக்க வைக்க வேண்டுமென்று தான். ஆனால் இது வரையிலான என் மிக நீண்ட அழுகைகளுள் அதுவும் ஒன்று. அந்தக் கலர் புடவையை எங்கு பார்த்தாலும் இன்னமும் எனக்கு இந்தச் சம்பவம் தான் ஞாபகம் வரும். அதன் பின் எனக்குக் கோடைக் கோரிக்கைகள் இருந்ததேயில்லை. "போன லீவுக்கே ஆசைப்பட்டல்ல! இந்த லீவுக்குப் போறியாடா? அப்பா, சங்கத்துல காசு கேட்டுப் பார்க்கட்டுமா?" என்பார். "இல்லப்பா. நான் அடுத்த கிளாசுக்கு வீட்ல இருந்து படிக்கப் போறேன். நேரமில்ல" என்று மறுத்து விடுவேன்.

காலையில் லைப்ரேரி, பகல் முழுக்கத் தறி, மாலையில் பாட்டி வீடு என்று இருந்த பொழுதுகள் கொடுத்த மகிழ்ச்சி கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. எது எதற்கோ ஏங்கியது உண்டு. ஆனால் ஒருமுறை கூட அன்புக்காக ஏங்கியதில்லை. அம்மா, அப்பா அருகில் இருக்க முடியவில்லை என்று ஏங்கியதேயில்லை.

நம் அப்பா-அம்மாக்களுக்கும் குழந்தைக்கு அந்த நேரத்தில் எது அவசியம் என்று புரிந்திருந்தது. குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்கத் தெரிந்திருந்தது. இந்தக் காலத்து இளம் பெற்றோர்களிடம் இது மிஸ்ஸிங். அவர்கள் குழந்தைகளை சூப்பர் மேனாக ஆக்கப் பார்க்கிறார்கள், அவர்கள் குழந்தைத்தனங்களை எல்லாம் கொன்று விட்டு!

Sunday 16 March 2014

குறுந்தொகை...(4)

பாடல் - 5

நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே

- பதுமனார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப் பாடல். பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவனது பிரிவை ஆற்றாதவளாகிய தலைவி தன் தோழிக்குச் சொல்லியது.

பொருள்:

செறிந்த இருள் நிறைந்ததாக இந்த இடையிரவு இருக்கிறது. மனிதர்கள் பேசுதலை ஒழித்து இனிமையாகத் தூங்குகின்றனர். அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் வெறுப்பின்றித் தூங்குகின்றன. யான் ஒருத்தியே நிச்சயமாகத் தூங்காமல் இருக்கிறேன்.

நள் - செறிவு

யாமம் - இடையிரவு

மாக்கள் - மக்கள்

முனிவு -  வெறுப்பு/வருத்தம் (முனிவர்கள் என்று எப்படிப் பேர் வந்ததோ?)

நனந்தலை - அகன்ற இடம்

இங்கு மாக்கள் என்பதற்கு மக்கள் என்றும் பகுத்தறிவில்லாதோர் என்றும் பொருள் உள்ளது.

பகுத்தறிவில்லாதோர் என்ற பொருளில் கூட இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கலாம் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

அது சரியென்று தான் தோன்றுகிறது. பொதுவாக எல்லோரும் தூங்கும் போது, நமக்கு மட்டும் தூக்கம் வராவிட்டால் பயங்கர கடுப்பாக இருக்கும். எனக்கெல்லாம் அப்படித் தான். தூக்கம் வராத இரவுகளில் பக்கத்து பெட்டில் தூங்கும் வைஷ்ணவியை எழுப்பி விடணும் போல குறுகுறுப்பாக இருக்கும். 'அடிப்பாவி, இப்டி தூங்குறயேடி!' என்று தோணும்.

அது போல, தலைவிக்கும் தோணுது போல! "நான் ஒருத்தி இங்கு தலைவன் பிரிவால் தூங்காமல் கிடக்கிறேன். உங்களுக்கு என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு? முட்டாப்பயலுக! உலகம் முழுக்க முட்டாப்பயலுக!" என்கிறாள்.

பாடல் - 6:

வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.

- பெரும்பதுமனார்

பாடலின் களம்:
 
பாலைத்திணைப் பாடல். தலைவனும் தலைவியும் உடன்போக்கு (உடன்போக்குன்னா ஓடிப் போறது) போன போது, எதிரில் வந்தவர்கள் இவர்களைப் பார்த்து இரக்கப்பட்டுக் கூறியது.

விளக்கம்:

ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் போது கொட்டப்படும் பறையைப் போல, மேல் காற்றின் தாக்குதலால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெள்ளிய முதிர்ந்த காய்கள், மூங்கில் நிறைந்த பாலை நிலப்பரப்பில் சத்தத்துடன் விழுந்து கிடக்கிறது. அதில் வில்லை உடையவனாகியவனும் வீரக் கழல்கள் அணிந்தவனுமான தலைவனும், தோள் வளையணிந்த மெல்லிய அடிகள் கொண்ட சிலம்பு அணிந்த தலைவியும் செல்கிறார்கள். அவர்களைக் கடந்து செல்ல வருபவர்கள் அவர்களின் முகங்களின் பாவத்தாலும் தலைவி காலில் சிலம்பு இருப்பதாலும் அவர்களுக்கு இன்னும் மணமாகவில்லை என்று அறிந்து இந்தப் பாலை நிலத்தில் கடந்து செல்லும் அவர்களின் கஷ்டத்தினால் 'இந்த நல்லோர்கள் யாரோ? இரங்கத்தக்கவர்கள்' என்கிறார்கள்.

(ஹ்ம். உடன்போக்கும் அந்தக் காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. அப்படிப் போனவர்களைப் பார்த்து அவர்களுக்காக இரக்கமெல்லாம் கொள்கிறார்கள். இந்தக் காலத்தில் அது கூட அரசியலாகத் தான் ஆகிறது)

அதெப்படி தலைவி காலில் உள்ள சிலம்பை வைத்து அவர்களுக்கு மணமாகவில்லை என்று கண்டுபிடித்தார்களாம்? குட் கொஸ்டின். அதற்குப் பதில் இருக்கிறது.

அந்தக் காலத்தில் 'சிலம்பு கழி நோன்பு' என்றொரு சடங்கு இருந்ததாம். சின்ன வயதிலேயே பெண்களுக்குக் காலின் சிலம்பு அணிவித்து விடுவார்களாம். அதற்குப் பெயர் 'கன்னிமைச் சிலம்பாம்'. திருமணத்திற்கு முன்பு, மணமகள் வீட்டில் வைத்து அவள் காலிலிருக்கும் சிலம்பைக் கழற்றுவது ஒரு விழா போல நடக்குமாம். அதற்குப் பெயர் 'சிலம்பு கழி நோன்பு'. 

இதற்கு நற்றிணை, சிலப்பதிகாரம், அகநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் reference ,கிடைக்கிறது.  உதாரணத்திற்குச் சில:

ஐங்குறுநூறு - பாடல் எண்: 399

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நன் மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென் வேல்
மை அற விளங்கிய கழல் அடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே.

உடன்போக்கு நிகழ்த்திய தலைவன்-தலைவியை, தலைவன் வீட்டில் ஏற்றுக் கொண்டு அவளுக்குச் செய்ய வேண்டிய சிலம்புகழி நோன்பை தலைவனின் தாய் செய்கிறாள். (But actually அது தலைவி வீட்டில் செய்ய வேண்டிய சடங்கு) அதைக் கண்டு வந்து சிலர், தலைவியின் தாயிடத்தில் சொல்கிறார்கள். அதற்கு அவள் 'வெற்றி பெற்ற வேலை உடைய, குற்றமற்றவனாகிய, பொய் கூறுவதில் வல்லவனான தலைவனின் தாயிடத்தே வதுவை மணத்தை நம் வீட்டில் செய்யும்படி சொன்னால் ஏதேனும் குற்றமாகுமா?' என்று வருத்தப்பட்டுச் சொல்கிறாள். அதாவது இவங்க வீட்டிலும் அவர்களை ஏற்றுக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதைச் சூசகமா சொல்கிறாளாம்! (யாருக்கெல்லாம் இங்க பாரதியின் சுட்டும் விழிச் சுடர் தான் பாட்டு ஞாபகத்துக்கு வருது? மீ ஃபர்ஸ்ட்!)

நற்றிணையில் 'சிலம்பு கழீஇய செல்வம் பிறர் உணக்கழிந்த என் ஆயிழை அடியே' என்று வருகிறது.

Tuesday 11 March 2014

Why 'Reading'?



My contribution for our Office's Internal Newsletter 'Awaaz' during the celebration of women's day.

***

Name of the hobby: Reading books

When did you start this Hobby (From how many years): From childhood. "MORE" over the past one and half years 

Inspiration to take up this Hobby: Mr. Maalan Narayanan

To explain this, a small introduction about Maalan is necessary. Maalan is a veteran journalist, wonderful writer, Editor of the weekly magazine named "PUTHIYA THALAIMURAI" and my charismatic mentor. He is the one who passionately writes and speaks for the development of the younger generation.

One of his articles changed me completely. It is about the skills of younger generation. He wrote: "It tears my heart to know that one doesn't know about Bharathi even until the age of 30. Without knowing Bharathi, how can you learn about the depth of language and social views? This generation is 100 times smarter than me. If you would have read Bharathi's writings, how much more vigorous you would be!", as it continued.

After reading this how could I not to be reading Bharathi? Until then, I have been reading just whatever I got. After that I started to be selective in my reading materials. I can say, Maalan's words channelized my reading.
 

Why does this mean so much to you? - Few days ago, I wrote one imaginary suicide letter, just for fun.(You can see it on my blog. Link: http://rajeesankar.blogspot.in/2014/01/blog-post_1755.html) Maalan commented on it saying "Your feelings have been expressed properly. Your Writing style has aptly captured the emotion without exaggerating the feeling and gives a lively touch to it. The concealed writer has come out from Rajee. It is not Rajee's suicide attempt, it is the attempt to express her skills". These words are not only a positive feedback for my writing but also the highest blessings I have ever gotten from my master.

His appreciation make me happy and it is not easy to get it from him. In order to get it, I have to work a lot, have to think a lot, have to collect lot of information. So I started reading.

Also my reading habit is protecting my dreams from the flames of daily life. My dreams are what still keeps me alive! My dreams assure me that there is still happiness remains in my life. Giving up my dreams and living as an ordinary person, is not acceptable to me. So I started reading.

"Literature is not something to read for entertainment. It is connected with thought process. Language and Thought process have a traditional continuation to them, and therefore, there are pundits and mentees in Literature", as Maalan said. I would also like to become a successor . I wish to do my best for my language. So I started reading.

I wish to show my love beyond the barriers of nation, religion and language. Religion teaches this to some. Literature teaches the same to me.


 ***

Saturday 8 March 2014

பெண்ணே! பெண்ணே!


இந்த வருடம் (வரும் சனிக்கிழமை) 101-ஆவது சர்வதேச மகளிர் தினமாமே! நேற்றைக்குத் திடீரென்று ஒரு யோசனை. சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் எழுதிய பாடல்களைப் படித்து அதில் ஒரு ஆராய்ச்சி பண்ணி அட்ராசிட்டி பண்ணினால் என்ன என்று! ஆனாலும் இது 3 நாளுக்கு முன்னாடி புத்தியில் உரைத்தால் ஒரு பயனும் தராது. ஹ்ம். அடுத்து நேரம் கிடைக்கும் போது இதை முயற்சிக்கிறேன். இருந்தாலும் Better late than never என்ற கோட்பாட்டிற்கிணங்க முடிந்த வரைக்கும் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால்,  நான் செலெக்ட் பண்ணி வைத்திருக்கும் 5 பெண்பாற் புலவர்களின் ஒவ்வொரு sample பாடல்களைத் தெரிந்து கொள்வோம். அவர்கள்,

1. ஔவையார்
2. ஆண்டாள்
3. வெள்ளி வீதியார்
4. காக்கைப் பாடினியார்
5. காரைக்கால் அம்மையார்

Lets start the Dhamakka!


***

ஔவையார்

சங்ககால, இடைக்கால, சோழர் கால, சமய, பிற்கால(1 & 2) என்று 6 ஔவையார்கள் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். இங்கு நாம் பார்க்கப் போவது சங்ககால ஔவையார் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்று.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே



(புறநானூற்றுப் பாடல் எண் - 187 )

இந்தப் பாடலை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் வெப்சைட் ஹோம் பேஜில் தான் முதல் முறை பார்த்தேன். என்னெவென்று படித்துப் பார்த்தவுடன் நிரம்பவே பிடித்திருந்தது. நன்றிங்க முத்துலிங்கம் சார்.

விளக்கம்:

நிலமே! நீ ஓரிடத்தில் நாடாக இருக்கிறாய்! ஓரிடத்தில் காடாக இருக்கிறாய்! பள்ளமாக இருக்கிறாய்! மேடாகவும் இருக்கிறாய்! எது எவ்வாறாயினும் நல்லவர் உறையுமிடத்து நீ நல்ல நிலமாகவும், தீயவர் உறையுமிடத்து நீ தீய நிலமாகவும் இருக்கிறாய். உன்னில் உறைபவர்களை வைத்தே நீ உயர்வும் தாழ்வும் அடைகிறாய்! அது தவிர உனக்கென்று ஒரு நலமுமில்லை.

அவல் - பள்ளம்
மிசை - மேடு

இதை அப்டியே மாற்றி 2 பேர் சொல்றாங்க. ஔவ்ஸ் நிலத்திற்கு ஒரு இயல்புமில்லை, அங்கன யார் இருக்காங்களோ அவங்கள வச்சுத் தான் நன்னிலம் என்பதும் தீநிலம் என்பதும்ன்னு சொல்றாங்க. ஆனா வள்ளுவர் நிலத்தின் தன்மையால் அங்கு இருக்கும் நீரின் இயல்பு மாறுதுங்கறார். அதுவும் கரெக்ட் தான்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.


( திருக்குறள் - சிற்றினஞ்சேராமை - குறள் எண்: 452 )

கலைஞர் உரை:


சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.

இன்னொரு குறளில்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


( திருக்குறள் - புகழ் - குறள் எண்: 239 )

கலைஞர் உரை: 

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

பாரதியார் 'நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம்' என்று சொல்கிறார்.

மூணு பேர் சொல்றதும் கரெக்ட் தான்! 


***

ஆண்டாள்

சூடித் தந்த சுடர்கொடியாள். இவள் தமிழுக்கும் காதலுக்கும் ஆண்டவன் மணாளனாய் ஆனது ஒன்றும் அதிசயமேயில்லை. அந்தத் தகுதி அவளுக்கு இருக்கிறது.

12 வைஷ்ணவ ஆழ்வார்களில் இவள் ஒருத்தியே பெண். மகளிர் தினத்தில் இவளைக் கொண்டாட இந்த ஒரு காரணம் நமக்குப் போதும் தானே!

திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் எழுதியது.

திருப்பாவையை மார்கழி மாதத்தில் பிரித்து மேய்ந்தோம். அதன் அழகு தான் நாச்சியார் திருமொழியைப் படிக்கச் சொல்லித் தூண்டியது. கொஞ்சமே கொஞ்சம் படித்தேன். பக்தி இலக்கியங்கள் மேல் அவ்வளவு ஈர்ப்பில்லை என்ற போதும், இவற்றை வெறும் பக்தி என்ற கட்டுக்குள் சுருக்கி வைக்க முடியாது. ஆண்டாள் தமிழின் அழகென்ன, சொல்லும் உவமைகள் என்ன, அதன் பின்னுள்ள உணர்ச்சி என்ன! அப்பப்பா! காதலனே ஆனாலும் இப்படியெல்லாம் நேசிக்க முடியுமா என்பது கேள்வியாய் எழுந்து வியப்பாய் உறைந்தது. அதனால் தான் "தெய்வீகக் காதல்" என்ற சொல்லாடல் வந்ததோ என்னவோ!

Coming to the main point , ஆண்டாள் பாடல்கள் அத்தனையும் அழகு என்றாலும், ஒரே ஒரு பாடலை இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

பாடல்:

என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன்
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே
பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப்
புண்ணியனை வரக் கூவாய்


- நாச்சியார் திருமொழி - குயிற் பத்து

(இந்தப் பாடலை "New India"வில் பாரதியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பார்)

விளக்கம்:

குயிலே! நாராயணனைக் காணாததால் ஏற்பட்ட தவிப்பால், எலும்புகள் உருகியது. வேல் போன்ற கண்களின் இமை மூடவில்லை. துன்பக் கடலில் புகுந்து, வைகுந்தன் என்ற ஒரு தோணி கிடைக்காது தடுமாறிக் கொண்டிருக்கிறேன். அன்பு உடையோரைப் பிரிவதால் உண்டாகும் துக்கத்தை நீயும் அறிவாய் தானே குயிலே! பொன்னாலான மேனியுடையவனும், கருடக் கொடியும் கொண்டவனான புண்ணியன் நாராயாணன் வரும்படி கூவுவாயாக!

இங்கு தவிப்பினால் எலும்பு உருகியது என்கிறாள்.

கம்பர் அன்பால் எலும்பு உருகுவதாய் எழுதியிருப்பார். ராமனை முதன்முதலில் கண்ணால் கண்ட போது, அனுமனுக்கு எலும்பு உருகியதாம்.

"ஐய! என் ஆக்கை, என்பு தோன்றல உருகின எனின், பிறிது எவனோ?" என்று கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு பாடலில் வரும்.

இன்னொரு இடத்தில், ராமனைக் கண்ட எல்லோருக்கும் எலும்பு உருகியது என்றும் ஒரு இடத்தில் சொல்கிறார்.

"மின் பொருவு தேரின்மிசை
வீரன் வரு போழ்தில்,
தன் பொருவு இல் கன்று தனி
தாவி வரல் கண்டாங்கு
அன்பு உருகு சிந்தையொடும்
ஆ உருகுமாபோல்,
என்பு உருகி, நெஞ்சு உருகி,
யார் உருககில்லார்?
"

மாணிக்கவாசரும் கூட "என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி" வணங்குகிறார்.

இங்கு எலும்பு உருகியது என்பதை நேரடியாகப் பொருள் கொள்ளக் கூடாது. எலும்பு உருகியது போல வலிமை தோன்றாமல் அன்பின் காரணமாக உடல் நெகிழ்ந்ததாம். அப்படி...

நேரடியாக அர்த்தம் பண்ணினா, அது எலும்புருக்கி நோய் ஆயிரும். அப்டினா ரிக்கெட்ஸ் நோய். எப்பவும் பள்ளித் தேர்வில் 2 மார்க் கேள்வியில் இந்தக் கேள்வி தவறாமல் வந்துரும். 


***

வெள்ளிவீதியார்

சங்ககாலப் புலவர். அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய தொகுப்புகளில் 13 பாடல்களை எழுதியுள்ளார்.

பெரும்பாலானாவை விட்டுச் சென்ற தலைவனை நினைத்து உருகி, மருகி எழுதிய பாடல்களாக இருக்கின்றன. அவருக்கு என்ன கஷ்டமோ!

அவரது பாடல்களுள் ஒன்று வித்தியாசமாக இருந்தது. தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களைச் சேர்த்து வைக்கத் தலைவன் வீட்டிலிருந்து சிலர் தலைவி வீட்டுக்கு வருகிறார்கள். இவர்கள் என்ன சொல்வார்களோ என்று தலைவி டென்ஷனாக இருக்கிறாள். அதைக் கண்டு தோழி, 'அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாத் தான் பேசிட்டு இருக்கானுவ!' என்று தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். அதற்குத் தலைவி பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கவென்று முதியோர் சிலர் உள்ளனர் என்று கூறி மகிழ்கிறாள். ஹ்ம். இதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் முதியோர்கள் தான் காதல் திருமணப் பேச்சுக்களை முறித்து வைப்பவர்களாக இருக்கிறார்கள். என்னத்தச் சொல்ல!

பாடல்:

அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
''நன்றுநன்று'' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே


- குறுந்தொகை - பாடல் எண்: 146

விளக்கம்:

தோழி! கேட்பாயாக! அவ்விடத்திலுள்ள நம்மைச் சேர்ந்த குழுவிலுள்ளவர்கள், தண்டைப் பிடித்த கையோடு, கிழிந்த கந்தல் துணி போல நரைத்தலையையும் உடைய பெரியவர்கள், நன்று நன்று என்று கூறும் தலைவன் கூட்டத்தாரோடு, இந்நாள் நீங்கள் இங்கு வரப் பெற்றமையால் பெருமையுடையதானதென்று முகமன் கூறுவர். நமது ஊரின்கண் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போரும் இருந்தனர்.

"வெண்தலைச் சிதவலர்" - வழுக்கைத் தலை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!

தலையில் கிழிந்த துணியைக் கவிழ்த்து வைத்தது மாதிரி, நரையுடன் வழுக்கையும் இருக்கிறதாம். (எர்வோமெர்டின் ஞாபகத்துக்கு வருதா?) க்ளாஸ்!

நம்ம ஔவையாரும் இந்தம்மாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் போல! ஔவ்ஸ் எழுதிய 'ஓங்கு மலைச் சிலம்பில்' என்ற அகநானூற்றுப் பாடலில் பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவனை வெள்ளி வீதியாரைப் போலப் போய்த் தேடப் போவதாய் எழுதுகிறார்.


***

காக்கைப்பாடினியார்

சங்ககாலப் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். 

ஒன்பதாம் வகுப்பில் ஒரு பாடல் வந்திருக்கும். அதைச் சொன்னால் எல்லாருக்கும் இவர் ஞாபகம் வந்து விடுவார். 

தாய் ஒருத்தி போருக்குத் தன் பச்சிளம் மகனை அனுப்புகிறாள். அவன் போரில் முதுகில் புண்பட்டு இறந்து விட்டான் என்று ஊரார் சொல்கிறார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அவள், அது மட்டும் உண்மையென்றால் அவன் பாலுண்ட முலைகளை வெட்டி எறிந்து விடுவேன் என்று ஆவேசத்துடன் கையில் வாளுடன் போர்க்களம் செல்கிறாள். அங்கு பிணங்களைப் புரட்டிப் பார்த்து தன் மகனைத் தேடுகிறாள். அவன் மார்பின் விழுப்புண் பட்டு செத்துக் கிடப்பதைக் கண்டு, அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியுற்றாள். 

இப்போ ஞாபகம் வந்துட்டா? எத்தனவாட்டி 5 மார்க் கேள்வியில் எழுதியிருப்போம். (இதே மாதிரி இன்னொரு பாட்டும் எனக்கும் ஞாபகம் வருது. கெடுக சிந்தை, கடிதிவள் துணிவே. அருமையான வீரப்பாடல். இதை எழுதியது ஓக்கூர் மாசாத்தியார்) 

காக்கை குறித்து இவர் எழுதிய குறுந்தொகைப் பாடலால் காக்கைப் பாடினியார் என்ற பெயர் பெற்றார். அந்தப் பாடல் கீழே!

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே


- குறுந்தொகை - பாடல் எண்: 210

களம்:

பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைமகன் திரும்பி வந்த பிறகு, 'தலைவியை நன்றாக ஆற்றுவித்தாய்' என்று தோழிக்கு நன்றி கூறுகிறான். அதற்குத் தோழி 'இதில் நான் செய்தது ஒன்றுமில்லை. விருந்தினர் வருவார் என்று தினமும் கரைந்த காக்கையினால் தான் என்னால் ஆற்றுப்படுத்த முடிந்தது' என்று தலைவனிடம் கூறியதாகப் பாடப்பட்ட பாடல்.

விளக்கம்:

திண்மையுடைய தேரினைக் கொண்ட, நள்ளி என்னும் வேந்தனது காட்டில் வாழும் அண்டர்கள் வளர்க்கும் பல பசுக்களின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யும், தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்மையான நெல்லினால் சமைக்கப்பட்ட சுடுசோற்றையும், ஏழு கலத்தில் ஏந்தி வைத்துக் கொடுத்தாலும், என் தோழியாகிய தலைவியுடைய பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு விருந்தினர் வரக் கரைந்த காக்கைக்கு அப்பலியானது சிறிதேயாகும்.

வளை நெகிழ்தல், பசலை படர்தல் தெரியும். அதென்ன தோள் நெகிழ்தல்?

அகநானூற்றில் கூட 'சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ' என்று வருகிறது.

உறுப்பு நலனழிதலில் வள்ளுவரும் 'தொடியொடு தோள் நெகிழ நோவல்' என்கிறார். தோள் நெகிழ்தல் என்றால் மெலிதல் என்று அர்த்தமாகயிருக்கும் என நினைக்கிறேன்.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்னொரு காக்கைப்பாடினியார் இருந்தார். அவர் பெருங்காக்கைப் பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம் போன்ற கணித நூல்களை எழுதியவர்.

ஒரு உதாரணம்: வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் சொல்லுங்க பார்ப்போம்.

யெஸ்.. C = 2 * pi * r 

(pi = 22/7; r - ஆரம்)

இதை கா.பா எளிமையாகச் சொல்கிறார். 'விட்டமோர் ஏழு செய்துதிகைவர நான்கு சேர்த்து சட்டென இரட்டி செயின் திகைப்பன சுற்றுத்தானே' - So simple!


***

காரைக்கால் அம்மையார்

ஔவையார், ஆண்டாள், வெள்ளி வீதியார், காக்கைப் பாடினியார் வரிசையில் காரைக்கால் அம்மையாரையும் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் உண்டு.

  • மூன்று பெண் நாயன்மார்களில் முதல்வரும் மூத்தவரும்
  • ஈசன் வாயாலேயே அம்மையே என்று அழைக்கப்பட்டப் புகழுடையவர்
  • அந்தாதிப் பாடல்களை முதன்முதலில் இயற்றியவர்
  • பெண்ணுடலை விடுத்துப் பேய் உருவை விரும்பிப் பெற்றவர். சிவன் உறையும் கயிலாய மலையில் காலால் நடப்பது பாவம் என்பதால் தலைகீழாகக் கையால் நடந்து சென்றவர்

எனக்கு அவர் பற்றிச் சொல்கின்ற மாங்கனிக் கதையில் அவ்வளவு ஈர்ப்பில்லை என்ற போதும், டெடிகேஷன் என்பதன் முழு அர்த்தம் இவர் பாடல்களில் தொனிக்கும். அதை நாம் கொண்டாடித் தான் ஆக வேண்டும்.

அவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதியிலிருந்து ஒரு பாடல்:

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்

கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது

​உன்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று...!

                                 

​இன்று 101-ஆவது சர்வதேச மகளிர் தினமாம். அம்மாவிற்கு வாழ்த்துச் சொல்வோம் என்று காலையில் அழைத்தேன்.

'பிறந்த நாள் வாழ்த்து, பண்டிகை வாழ்த்து என்றால் பதிலுக்குச் சொல்லத் தெரியும். இதற்கு என்ன டி சொல்லணும்?' என்றாள்.

'சேம் டூ யூ'ன்னு சொல்லலாம் என்றேன்.

'சரி. இன்னைக்கு என்ன பண்ணணும்?' என்றாள்.

எத்தனை பெரிய கேள்வியை, எவ்வளவு சாதாரணமாகக் கேட்டு விட்டாள்?!

சரி. இன்னைக்கு என்ன தான் பண்ணணும்?

அநேகமாக எல்லா ஆபிஸிலும் lady employeeகளுக்கு பூ, சாக்லெட், உடல்நலம் பற்றிய உரையாடல் session நடந்திருக்கும்.

மால்களில் அழகு சாதனப் பொருட்களுக்கு ஏதேனும் சிறப்புச் சலுகைகள் தந்திருப்பார்கள்.

வார/மாதப் பத்திரிக்கைகள் 2,3 பக்கங்களுக்குப் பரபரப்பாகப் பெண்ணியம் பேசியிருக்கும். கூடவே ஆங்காங்கே குழந்தை வளர்ப்பும் வீட்டுப் பராமரிப்பும்.

இதெல்லாம் போதாதா என்கிறீர்களா? இன்றைக்குப் போதும். ஆனால் நாளையும் அவர்களைக் கொண்டாடும் மனம் இருக்கிறதா நம்மிடையே?

நாம் நிஜமாகவே பெண்மையைக் கொண்டாடுகிறோமா? அவளுக்குரிய இடத்தை மன நிறைவோடு அவளுக்குத் தந்திருக்கிறோமா?

ஆணுக்குப் பெண் சமம் என்பது ஆண் செய்யும் அனைத்தையும் பெண்களால் செய்ய முடியவேண்டும் என்பதல்ல. ஆணைப் போல பெண்ணையும் அறிவு ரீதியில் அணுக வேண்டும் என்பதே! அந்த இடத்திற்கு அருகிலாவது நாம் நெருங்கியிருக்கிறோமா?

இந்திய அளவில், 2001 ஆம் ஆண்டு 53.67%ஆக இருந்த பெண்களின் படிப்பறிவு விகிதம், 2010 ஆம் ஆண்டு 65.46%ஆக இருக்கிறது. 10ஆண்டுகளில் ஆண்களை விடப் பெண்களின் படிப்பறிவு விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்று அநேகமாக எல்லாத்துறைகளிலும் பெண்கள் புலமை பெற்று விளங்குகிறார்கள். கிராமங்களிலும் முன்பிருந்ததை விடக் கணிசமான அளவு பெண்கல்வி அதிகரித்து வருகிறது. ஆனால் இவையெல்லாம் வெகு சாதாரணமாக, இயல்பாக நடந்திருக்கிறதா? இன்னமும் போராட்டத்திற்குப் பின் தான் கிடைக்கிறதா?

நகரங்களில் பரவாயில்லை. ஆனால் வளர்நிலை நகரங்களிலும் கிராமங்களிலும் இன்னும் போராட்டமாகத் தான் இருக்கிறது - பெண்களுக்கு இல்லாவிட்டாலும், பெண்களைப் பெற்றவர்களுக்கு! அவ்விடங்களில் பெரும்பாலும் பெண்களைப் படிக்கப் போட்ட பெற்றோரிடம் சமுதாயம் எழுப்பும் கேள்வி 'பொண்ணப் படிக்கப் போட்டுட்ட? அதுக்குத் தக்கன மாப்ள பார்க்கணுமே? உன்னால முடியுமா?" என்பது தான். இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், ஒரு தயக்கத்திலேயோ, ஒரு குருட்டு நம்பிக்கையிலேயோ, பல பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யதார்த்தம். அந்தத் தைரியம் இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் தறிகாரியாக, தீப்பட்டித் தொழிலாளியாக, தினக்கூலியாகவே வாழ்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது. 

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், இப்பொழுதும் பெண்களின் படிப்பு என்பது அப்பா கையிலோ, மாமா கையிலோ தான் இருக்கிறது. நல்ல அப்பா வாய்க்கப் பெற்ற குழந்தைகள் படித்த தலைமுறையாகவும், அது கிடைக்கப் பெறாத குழந்தைகள் பாவப்பட்ட தலைமுறையாகவும், நம் முன்னே கிடக்கும் போது, எப்படிச் சொல்வது பெண்ணுக்கு உரித்தான இடத்தை நாம் தருகிறோம் என்று?!

பெண்கள் பாதுகாப்பின்மை என்பதை விடப் பெரிய அதிர்ச்சி தருவது அதற்கு ஆண்கள் தரும் காரணங்களும் தீர்வுகளும். பொதுவாக தப்பிழைத்தவனுக்குத் தண்டனையும் அறிவுரையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் வழங்குவது தான் வழக்கம். ஆனால் பெண்கள் பிரச்சனை என்றால் மட்டும் பாதிக்கப்பட்டவளுக்கே தண்டனையும், அறிவுரையும் வந்து சேர்கிறது. அவளுக்கு எது நேர்ந்தாலும் அதற்குக் காரணம் அவள் செயல்பாடுகள் தாம் என்று கண்ணை மூடிக் கொண்டு தீர்ப்பு எழுதிவிடும் நமக்கு அது குறித்த எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. அதிகாரப்பூர்வமாகப் பெண்களின் பணி நேரத்தையும் அவள் வெளியே நடமாடும் நேரத்தையும் முறைப்படுத்துதல் என்ற போர்வைக்குள் சிறைப்படுத்தவே செய்யும் மனமிருக்கிறதே ஒழிய, அதன் பின்னான காரணங்களோ, ஆணின் வக்கிரங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற விவாதங்களோ கூட எழவில்லை என்ற நிலையில் எப்படிச் சொல்வது பெண்ணுக்குரிய இடத்தை நாம் தருகிறோம் என்று?!

பெண்கள் ஸ்பெஷல் என்று என்ன நடந்தாலும் அது அழகு, குடும்பம், பராமரிப்பு, உடல்நலம் இவற்றை மட்டுமே தொடர்புபடுத்தியிருப்பது ஏன்? (பெரும்பாலான)பெண்களுக்கான பத்திரிக்கைகள் கூட இவற்றை மட்டுமே பேசுகின்றன. அரசியல் பேசினால் என்ன? பொருளாதாரம் பேசினால் என்ன? ஆளுமை குறித்துப் பேசினால் என்ன? சுயமரியாதையைச் சொன்னால் என்ன? ஏன், பெண்களுக்காக இயங்கும் எதுவுமே உணர்வுத் தளத்தில் மட்டுமே இயங்குகிறது? அறிவுத் தளத்தில் இயங்க வேண்டிய அவசியம் இன்னுமா புரியவில்லை? அவளை ஒரு குடும்பத்திற்கானவளாகப் பார்ப்பது நமக்கு எளிதாகயிருக்கிறது. ஏன் அவளை ஒரு தேசத்திற்கானவளாகப் பார்க்கவே முடியவில்லை?! இதெல்லாம் இப்படியிருக்கும் போது, எப்படிச் சொல்வது பெண்களைக் கொண்டாடுகிறோம் என்று?!

போன வாரம் வரைக்கும் பெண்சிசுக் கொலை பற்றி மிகப் பெரிய தாக்கம் மனதில் இருந்ததில்லை. (இன்னமும் தர்மபுரி பகுதிகளில் இருக்கிறது என்று கேள்விப்பட்டாலும் கூட) அது outdated ஆகி விட்டது என்று தான் நினைத்திருந்தேன். பெண் குழந்தை பிறந்தாலும் அதை யாரும் வேறாக நினைப்பதில்லை என்று நான் நம்பிக் கொண்டிருந்த அத்தனையும் போன வாரம் உடைந்து நொருங்கியது.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், என் ஊர் நகரமுமல்ல, கிராமமுமல்ல, வளர்நிலை நகரம் என்று கூடச் சொல்லலாம். எல்லா வசதிகளும் ஊருக்குள்ளேயே இருக்கும். அப்படியான ஒரு இடம் தான். வழக்கம் போல, எங்கள் வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் சொத்துத் தகராறு உண்டு. அடிக்கொரு முறை வாய்ச்சண்டையாகப் போய்விடுவதும் நடக்கும். போன வாரச் சண்டையில் எதிராளி (அப்படித் தானே சொல்ல வேண்டும்?) - என் சித்தப்பா முறை தான் - சொன்னார், என் அப்பா ஆண்மையற்றவராம். காரணம் என்ன தெரியுமா? அவருக்கு இரண்டுமே பெண் குழந்தைகளாம். இந்த வாதம் அறிவியல் ரீதியில் லாஜிக் அற்றது என்ற போதும் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அதிர்ச்சிக்குக் காரணம் அவர் அநாகரீகமான வார்த்தைகளை என் அப்பாவிடம் வீசியதனால் அல்ல. அந்த மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதே பிறவிப்பலனாகக் கொண்டு பிறந்திருக்கும் சிலரைக் கண்டு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பெண் குழந்தைகளை இகழ்ச்சிக்குக் குறியீடாகக் கூட ஒருவரால் காட்ட முடியுமா என்பது தான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்! நான் வளர்ந்த சூழ்நிலை இதை நம்ப மறுக்கச் சொல்கிறது. 

எங்கள் மகிழ்ச்சி ஒன்றே தன் மகிழ்ச்சியென, எனக்கு எல்லாம் என் மகள் தான் -என்றிருக்கும் அப்பா என் சங்கர். சொல்லாத சொற்களின் அர்த்ததையும் புரிந்து கொண்டு தோள் கொடுத்து நிற்பவர் என் சங்கர். 

'பூரணமான வசதியிருந்தும் பெண்பிள்ளை இல்லாத வீடு ஒரு வீடா, வந்துட்டுப் போடா' என்று கெஞ்சிக் கெஞ்சி, நான் போகும் நேரமெல்லாம் என்னைத் தேவதை போல உணரச் செய்வார் என் சித்தப்பா.

'மலர் போலத் தூங்குவாள் என் மகள்' என்று என் உறக்கத்தில் கூட அவர் கண்பார்வைக்குள் என்னைக் காத்து நிற்கும் அன்பு நிறைந்த அப்பா எனக்குண்டு.

இப்படியெல்லாம் வளர்ந்த எனக்கு பெண் பிள்ளைகள் மேலிருக்கும் அந்தப் பங்காளியின் வார்த்தைகள் தூக்கி வாரிப் போட்டது. இத்தனைக்கும் அவருக்கும் ஒரு மகள் உண்டு. இரண்டாவது மகன். அந்தக் குழந்தையை நினைத்தால் எனக்குப் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. பெண் மட்டும் பெற்றவன் ஆண்மையற்றவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் அவர் வீட்டில் தன் தம்பிக்குக் கிடைக்கும் உரிமைகள் அவளுக்கு எப்படிக் கிடைக்கும்? வீட்டில் அடைத்து வைத்தால் மட்டும் தான் அடக்குமுறையா? இதுவும் பெண் அடக்குமுறை தானே?! பின் எப்படி சொல்வது பெண்கள் நாட்டின் கண்கள் என்று?!

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் வளர்ச்சிகள் இல்லாமலில்லை. ஆண்களைச் சாராமல் நிமிர்ந்து நிற்கும் வீரம் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. ஆணுக்கு பெண் அடிமையில்லை என்பது பெண்கள் மனதில் கனன்று கொண்டு தானிருக்கிறது. அவை தொடரட்டும். பெண்கள் வேண்டுவது 'ஐயோ பாவம்' என்ற சலுகைகள் அல்ல. நாங்கள் வேண்டுவதெல்லாம் வாய்ப்புகள். எங்களை நிரூபித்துக் கொள்ளும் வாய்ப்புகள். அவற்றை அடைய வழி செய்யும் சூழ்நிலைகள்.

கண்ணாடிப் பெட்டிக்குள் பூச்செடிகள் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அவற்றிற்குச் சுதந்திரம் கிடையாது. நாங்கள் வேண்டுவது கண்ணாடிப் பெட்டிகள் அல்ல. நிலைத்து நிற்கக் கொஞ்சம் நிலமும், ஊன்றி விட ஒரு கையும். புயலையும் மழையையும் சமாளிக்கும் திறன் எங்களுக்கு உண்டு. நம்புங்கள் இனியாவது.

மகளிர் தின வாழ்த்துகள்.