Sunday 27 January 2013

அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் – புத்தகவிமர்சனம்

அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்  |  avargal ulle irukirarkal  |  
மனம் மயங்கும் மாலை அது. சூரியனின் காய்ச்சலுக்கு மேகங்கள் போட்ட பத்தைப் போல் மெத்தென்று இருந்தது வானம்.

புதிதாய்க் கட்டிய தாலியின் மஞ்சள் வாசம் அவனுக்குள் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியிருக்க, காதலுடன் அவள் கைகோர்த்துக் கேட்டாள் – ‘என்னை நிஜமாவே பிடிச்சுருக்கா?’. எல்லாப் பெண்களும் தன் கணவனிடம் கேட்கும் அதே முதல் கேள்வி. ‘என்னடி கேள்வி இது! பைத்தியம்’-அன்பின் கணவன்.

மூச்சு இரைக்க இரைக்க ஓடித் தன் தம்பியை விரட்டிப் பிடித்தே விட்டாள். ‘டேய் அந்த மிட்டாய் என் பங்கு. உனக்கு தான் அப்பா அப்பவே குடுத்துட்டார்ல! ஒழுங்கு மரியாதையா என் கிட்ட இத குடுத்திரு’ என்றிரைந்தாள். வசமாக மாட்டி விட்டான் சுட்டிப்பையன்-ஆனாலும் குறும்புக்காரன்-ஒரே விழுங்காக விழுங்கிவிட்டான்.’போடா! பைத்தியக்காரா!’-இது அக்கா!

‘இதோ பார்! அந்த வேலையெல்லாம் சரிப்பட்டு வராது.வேற என் தகுதிக்குத் தக்கன வேலையிருந்தால் சொல்லு.முயற்சி பண்றேன்’-என்றவன் போனபிறகு ‘சரியான பைத்தியம்டா இந்தாளு!’ – நண்பனின் கணிப்பு.

‘இந்த உலகம் நான் வாழத் தகுதியற்றது.இதன் ஒவ்வொரு விழுமியங்களும் சாமானியனுக்கு எதிரானவை. நான் எதிர்நோக்கும் உலகம் வேறு.அங்கு ஆசைகளைவிட அன்பே பிரதானமாகயிருக்கும். என் இல்லத்தைப் பொருட்களைவிட உணர்வுகள் ஆட்சி செய்யும்.அதைத் தேடி ஓடுகிறேன்.உங்கள் மொழியில் உயிர்துறக்கிறேன்!’ – கடிதம் கண்டு சுற்றம் சொன்னது ‘அவருக்கென்ன பைத்தியமா!’

இப்படி ஒவ்வொரு ‘பைத்தியமா’ என்ற கேள்விக்குள்ளும் ஒவ்வொரு கதை இருக்கும்.அதைத் தான் விளக்க முயற்சிக்கிறது இந்தப் புத்தகம். ஜெயகாந்தன் என்னும் பேராளுமையின் கைவண்ணத்தில் ஜொலிக்கிறது. மூன்று அத்தியாயங்களாகப் பிரிகிறது. விகடனில் வெளியான ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’, தினமணிக்கதிரில் எழுதிய ‘சிலர் உள்ளே இருக்கிறார்கள்’ மற்றும் ‘நான் சந்தித்த இவர்கள்’ என்ற கட்டுரைகளின் தொகுப்பு.

மனநோயாளிகளின்–நம் பாஷையில் பைத்தியங்களின்-வாழ்வைப் படம்பிடித்திருக்கிறார்.எதனால் அவர்கள் இப்படி ஆனார்கள், எந்த மாதிரியான சூழ்நிலை அவர்களை இப்படி மாற்றியது,இதிலிருந்து அவர்கள் விடுபட முடிகிறதா, இவர்கள் இப்படி ஆனதற்குச் சமுதாயமும் ஒரு காரணமா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கிறது இந்த அத்தியாயத்தில். கண்ணியம் குறையாமல், அவர்களின் ஊர், பேர் தகவல்கள் வெளியிடாமல் சிறப்பாக எழுதியிருப்பது, ஆசிரியர் இதை ஒரு சமூகப்பணியெனச் சிரத்தை கொண்டு செய்திருப்பதற்கான சான்று.

போன அத்தியாயம் உள்ளே இருக்கும் பைத்தியங்கள் பற்றியது. அடுத்த அத்தியாயமான ‘சிலர் வெளியே இருக்கிறார்கள்’ என்பது வெளியிலிருக்கும் பைத்தியங்கள் பற்றியது. உள்ளே இருப்பவர்கள் செய்யும் அத்தனை செயல்களையும் வெளியே இருப்பவர்கள் செய்கிறார்கள்.ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவர்கள், தான் என்ன செய்கிறோமென்று தெரியாததால் பைத்தியமானவர்கள்.இவர்கள் எல்லாம் தெரிந்தும் செய்பவர்கள்.எல்லாரையும் சந்தேகப்படும்-சினிமா வாய்ப்பு தேடி அலையும் ஒருவர், எல்லாப் பெண்களும் தன்னை நேசிப்பதாய் நினைக்கும் ஒருவர், அடுத்தவர் தரும் காசிலேயே செம்மையாக வாழ்வோர், முதுமையின் பிடியில் அன்புக்கு ஏங்கும் தாத்தா, யார் இறப்புக்கும் ஒப்பாரி வைக்கும் அத்தை என்று சமூகத்தில் நாம் தினமும் பார்க்கும் அத்தனை மனிதர்களையும், அவர்தம் பைத்தியக்கார குணங்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.

எளிமையிலும் மனம் பிறழாத மனிதர்கள், ஊருக்கு உதவுவதே லட்சியம் என்றிருக்கும் சாமானியர்கள், ஒற்றை ஆளாய் குடும்பத்தைத் தாங்கும் ஆயாக்கள், நல்ல காலம் வருமனென்ற நம்பிக்கையிலேயே காலத்தை ஓட்டும் குடும்பங்கள், விசுவாசம் பெரிதென்று வாழும் முந்தைய தலைமுறை உள்ளங்கள் ஆகிய நல்ல மனிதர்களின் பக்கங்களையும் ‘நான் சந்தித்த மனிதர்களில்’ எடுத்துரைத்திருப்பது புத்தகத்திற்கு கூடுதல் கனம் சேர்க்கிறது.

ஜெயகாந்தன் என்ற ஒரு விஷயமே போதும் இந்தப் புத்தகத்தை நம்பி வாங்குவற்கு. அவர் எப்பொழுதும் வாசகர்களை ஏமாற்றுவதில்லை-எனக்குத் தெரிந்தவரையில்! ஆனால் ஒன்று நிச்சயம்.இந்நூலைப் படித்த பின், தெருவில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் கண்டால், முந்தைய அருவெருப்பு நமக்கு வராது. குறைந்தபட்சம் ஏன் இந்த நிலைக்குப் போனார்கள் என்ற கேள்வியாவது எழும் 2 நிமிடம். இனி ‘பைத்தியம்’ என்ற வார்த்தையினை பிறரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் போது மனதில் ஒரு குற்றஉணர்வு எழும். அத்தகைய ஆற்றல் நிறைந்த புத்தகம் – ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’

ஆசிரியர்: திரு.ஜெயகாந்தன்
விலை: ரூ.50/-
பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம்

Sunday 20 January 2013

அவள் என் தேவதை


பன்னிரெண்டு மணி நேரப் பேருந்துப்பயணம் கூட அத்தனை கடினமில்லை. விடுதியிலிருந்து ‘தாயகம்’(!) திரும்புவதற்கு சாந்திநகர் பேருந்துநிலையம் வந்து சேர்வதற்குள் ஆறு கடல்கள், ஏழு மலைகள் தாண்ட, செய்யும் அத்தனை சாகசங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது-இந்த பாழாய்ப் போன பெங்களூரில். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாலைகளைக் கடந்து, அவசரமாய் உரசிச் செல்லும் கார்களிலிருந்து லாவகமாய் விலகி, ஆட்டோக்காரர்களிடம் சமாதான உடன்படிக்கை செய்து, வெள்ளிக்கிழமை மாலைகளில் பேருந்துநிலையம் வந்து சேர்வதற்குள் பர்ஸும் உசிரும் மெலிந்துபோய் விடுகிறது.

அன்றும் அதேபோல் ஒரு பேருந்துப்பயணம்.எனக்கென ஒதுக்கப்பட்ட  இருக்கையில் உட்கார்ந்த பின்புதான் ‘உஸ்’ஸென்று மூச்சுவிட முடிந்தது.அந்தப் பேருந்தில் அம்மா-அப்பா-6 வயதுக் குழந்தை கொண்ட ஒரு குடும்பம் ஏறியது.நசநசவென்று பேசிக்கொண்டிருந்த குழந்தை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.குழந்தைகளின் உலகம்தான் எத்தனை ரசிப்பிற்குரியது! அடுத்த நிறுத்தத்தில் ஏறிய நரை விழுந்து, தோல் சுருங்கிய மூதாட்டி ஒருவர் அந்தக் குழந்தைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தார். அவ்வளவுதான். அக்குழந்தையின் குதூகலம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. இந்தக் குழந்தை என்றில்லை, இக்காலத்துக் குழந்தைகள் பெரும்பாலும் மூத்த குடிமக்களிடம் இலகுவாகப் பழகுவதில்லை. ஏன் இந்த நிலை?தலைமுறை இடைவெளி காரணமா?வேலையின் பொருட்டு, திருமணமானது முதல் தனிக்குடித்தனமாகவே இருந்ததால் அவர்கள் பிள்ளைகளுக்குத் தாத்தா, பாட்டிகள் முக்கியத்துவம் தெரியவில்லையா?கார்ட்டூன் சேனல்களுக்கும் வீடியோ கேம்களுக்கும் இடையே தாத்தா, பாட்டிகளைக் கண்டுகொள்ள நேரமில்லையா?
என் குழந்தைப் பருவம் அப்படியில்லை.தாத்தாக்களும் பாட்டிகளும் நிறைந்த பருவமாய்த் தான் இருந்தது.கதை சொல்லும் பாட்டிகள், காமெடி பண்ணும் பாட்டிகள், கண்ணில் படுவோரையெல்லாம் வசைபாடும் பாட்டிகள், எப்பொழுதும் சோகமாகவே இருக்கும் பாட்டிகள், வயது தடையாயில்லாமல் மாடாய் உழைக்கும் பாட்டிகள், வம்புச் சண்டை பேசியே நேரம் போக்கும் பாட்டிகள் என்று பாட்டிகளில் தான் எத்தனை வகைகள்! என் (அம்மா)பாட்டி உமையாள் பார்வதி இவையெல்லாம் சேர்ந்த கலவை.அள்ளி முடித்த கொண்டையும் கொசுவம் வைத்த சேலையும் கட்டி அவள் இளவயதில் நடந்து வரும் அழகை இன்னும் பக்கத்துவீட்டுப் பெரியம்மா சொல்வார்.அவளைப் பற்றி ஏனோ எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.
என் சிறுவயதில் அத்தனை பிணைப்பு இருந்ததில்லை எனக்கும் என் பாட்டிக்குமிடையே! நான், என் தங்கை கோகி, என் மாமன்மார்கள் தவம், ரவி அனைவரும் ஒன்றாய்தான் வளர்ந்தோம்.ஒரு குறிப்பிட்ட வயது வரை நானும் என் தங்கையும் அவளுக்குப் பெரிய தலைவலியாகத் தான் இருந்திருந்தோம்.இரண்டும் பெண்பிள்ளைகளாய்ப் போனதில் அவளுக்கு உள்ளூர ஒரு வருத்தம் இருந்திருக்கலாம்.இல்லை நாங்கள் பண்ணும் சேட்டைகளில் மனம் சலித்துப்போய் இருக்கலாம்.நாங்கள் வளர வளர அவள் நேசமும் வளர்ந்து விட்டது.குறிப்பாக நான் பெரிய பெண்ணாய் ஆன பிறகு, என் மேல் எத்தனை பாசம் வைத்திருந்தாள்! சரியாக வேலை செய்வதெல்லாம் கிடையாது.எப்பவும் இதற்காக என் தாத்தாவிடம் திட்டு வாங்கிக்கொண்டிருப்பாள்.’காப்பி’ வாங்கி வர பத்து ருபாய் எடுத்துச் சென்றால் மீதி 6 ரூபாய் தாத்தாவிற்குத் திரும்பவே திரும்பாது எக்காலமும்.அப்படிச் சேர்த்துவைத்த காசுகள் எல்லாம் பழமோ, பூவோ ஏதோ ஒரு வடிவில் எங்களைத்தான் வந்தடையும்.வேண்டாமென்று எத்தனை முறை அம்மா சொன்னாலும் கண்டுகொள்ளவே மாட்டாள்.பண்டிகை நாள் என்றால் போதும் கடையில் கடன் சொல்லி பாவாடை சட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடுவாள்.சுடிதார் போட ஆரம்பித்தபின்பு தான் அந்த வழக்கம் குறைந்தது.
பாட்டிவீட்டில் விளையாடிவிட்டு 7 மணி ஆனதும் அங்கேயே தூங்கிவிடுவோம்.இரவு அப்பா தூக்கத்தில் எழுப்பி கூட்டிச்செல்ல வருவார்.அப்பாகூடத்தான் வீடு திரும்புவேன்.இருப்பினும் துணைக்கு வீடு வரை என் மாமனை அனுப்பி விடுவாள்.அவ்வளவு கரிசனம் இருக்கும் அவள் செய்கைகளில்.நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். போதாக்குறைக்கு கீழே விழுந்து கால் ஒடிந்து கிடந்தாள்-கடைசிக்காலங்களில்.அப்பொழுது நடந்த ஒரு சம்பவம் எங்களால் என்றுமே மறக்க முடியாதது.ஆஸ்பத்திரிச் செலவு, குடும்பச்செலவு என்று அந்த மாதம் சரியான பணக்கஷ்டம் எங்கள் இருவர் குடும்பத்திலும்.கடுகு டப்பா, அஞ்சரைப்பெட்டிகளில் சில்லறைக்காசு பதுக்கிவைக்கும் பழக்கம் என் பாட்டிக்கு இருந்தது(சிறுவயதில் அது தான் எங்கள் கருவூலம் – அம்மாவுக்குத் தெரியாத ஐஸ்களுக்கும், சோப்புநுரை டப்பாக்களுக்கும்).ஏதேச்சையாக அப்படித் தேடியதில் சிக்கியது ஒரு மஞ்சள் பையில் சில ரூபாய் நோட்டுக்கள்.எண்ணிப்பார்த்தோம் ஐநூறும் சொச்சமும் இருந்தது.6, 6 ருபாயாகச் சேமித்தாலும் இவ்வளவு வரும் வரை என்றைக்கும் பொறுத்திருக்க மாட்டாள்.கொஞ்சம் சேர்ந்ததும் ஏதாவது ஒரு பண்டம் வந்து விடும் வீடுதேடி.ஏன் இவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாய் என்ற கேள்விக்கு பதில் சொன்னாலே பார்க்காலாம். ‘ ராசிக்கு (அருப்புக்கோட்டையில் போன தலைமுறைக்கு நான் இன்னும் ‘ராசி’தான்.’ராஜி’ வராது அவர்களுக்கு) வயசு ஆகுதுல்ல,அதான் ஒரு நகை நட்டு செஞ்சு போடலாம்ன்னு ரொம்ப நாள் முன்னாடி இருந்தே சேர்த்துக்கிட்டு வரேன்’ – என்றாள். 500 ருபாய்க்கு நகை நட்டு வாங்க முடியும் என்று நம்பியிருந்தாள் போல! என்ன வெள்ளந்தியான மனது! அத்தனை கஷ்டத்திலும் தாத்தாவிற்குக் கூடத் தெரியாமல் சேர்த்துவைக்க வேண்டிய அவசியம் என்ன?இத்தனைக்கும் என் அப்பா இப்படியெல்லாம் ஒன்றும் என் அம்மா வீட்டிலிருந்து எதிர்பார்ப்பவர் இல்லை.எவ்வளவு பிரியம் வைத்திருந்தாள் என் மேல்! குழாயடியில் சண்டை எல்லாம் போடுபவள் தான்.ஆனால் குணக்காரி!
அவளின் கடைசிக்காலங்களை என்னால் மறக்கவே முடியாது.நீரிழிவு நோய் வந்தால்தான் போதுமே, மற்ற அத்தனை நோய்களையும் அதுவே இழுத்துவைத்து விடும். மாரடைப்பு, மூச்சுத் திணறல் என்று பல பிரச்சனைகளுக்காக மருத்துவமனை சென்று வந்திருக்கிறாள்.அபாயக் கண்டங்களையெல்லாம் தாண்டி பிழைத்து வந்து விடுவாள்-ஒவ்வொரு முறையும்.கால் ஒடிந்து நடக்க முடியாமல் போனது அவள் மனதில் சோர்வை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.அதன் பிறகு அவளுக்குள் ஒரு வெறுமையை என்னால் உணர முடிந்தது.தைரியம் சொல்லியும் கேலி பேசியும் நான் இருக்கும் நேரங்களில் எல்லாம் புன்னகையைக் கொண்டுவர முயன்றுகொண்டிருந்தேன்.

என் பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதி நாட்களில் – திருப்புதல் தேர்வு நடந்து கொண்டிருந்த நாட்களில் – எப்பொழுதும்போல் அவளுக்கு மூச்சுத்திணறல்.டியூசன் சென்டருக்கு பக்கத்திலுள்ள மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.’அடிக்கடி வருவதுதானே’ என்று சேர்க்கும்போது சாதாரணமாகத்தான் சேர்த்தோம்.போனமுறை போலல்லாது இந்த முறை ஆட்டோவாகட்டும் இரத்தமாகட்டும் எல்லாமே எந்த அலைச்சலுமின்றி இலகுவாகவே கிடைத்தது. நானும் கோகியும் பள்ளிமுடித்து மதியம் சென்று பார்த்தோம் (அம்மா, அப்பா அனைவரும் மருத்துவமனையில் இருந்தார்கள்).முந்தைய நாட்களை விட உடல்நலத்தில் முன்னேற்றம்  இருந்தது.சாப்பாடு வாய்க்கு விளங்கவில்லை என்று யார் சொன்னாலும் சாப்பிட மறுத்துக்கொண்டிருந்தாள்.என்னிடம் தட்டவில்லை.நான் தான் ஊட்டினேன்.அப்போதும் ‘விடு.நானாகவே சாப்பிடுகிறேன்’ என்று சொன்னவளை இழுத்து பிடித்து ஊட்டிக்கொண்டும் கிண்டல் பேசிக்கொண்டும் இருந்தோம்.பொக்கை வாய்ச் சிரிப்பு சிரிப்பாள். (லட்சுமி கடாட்சமாக இருக்கும் அந்தப் பொக்கைச் சிரிப்பு)அதற்காகவே அவளை வீண்வம்புக்கு இழுப்பது எங்கள் வழக்கம். வீட்டில் அனைவரும் அன்று மிக்க மகிழ்ச்சியில் இருந்தோம்.சரியாகி விடுவாள்.நாளை வீடு திரும்பிவிடலாம் என்று.மறுநாள் எனக்கு தாவரவியல் செய்முறைத்தேர்வு இருந்ததால் 4 மணிக்கு நானும் கோகியும் வீடு திரும்பி விட்டோம்.
இடையில் என்ன ஆனதோ தெரியாது 6 மணிக்கு எல்லாம் முடிந்து விட்டிருந்தது.கொஞ்ச நேரம் முன்பு சிரித்து விளையாடிய அந்த முகம் கலையிழந்து கிடந்தது.சில்லிட்ட அவள் கைகள் எனக்குள் ஏதோ பண்ணின.அப்பொழுது எனக்கு அழுகை வரவில்லை.அதிர்ச்சியாகத் தான் இருந்தது.அம்மா அழுத அழுகையைப் பார்த்து அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம். தவமும் ரவியும் என்ன ஆவார்கள் என்ற சோகம்.அம்மாவைச் சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயம்.இவையெல்லாம் சேர்த்து என்னை அழ விடவில்லை.எங்கள் குடும்பத்தில் என் நினைவு தெரிந்து நடந்த முதல் இற(ழ)ப்பு.அதிலிருந்து மீண்டு வர என் அம்மாவிற்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன.என் மாமா பையன் சந்தோஷ் பிறந்த பிறகுதான் அந்த இழப்பிலிருந்து முழுதாய் வெளிவந்தாள் எனலாம்.

ஆனால் என்னால் இன்னும் அவள் இறப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.அவள் இருக்கும்வரை குடும்பம் கொண்டாட்டம் நிறைந்ததாக இருந்தது.கால் ஒடிந்து ஒரு பயனுமின்றிக் கிடந்தவள் தான்.ஆனால் அவள் இருக்கும் வரை குடும்பம் ஒரு கட்டுக்கோப்பாக இருந்தது.இன்று ஆளுக்கு ஒரு திசையில்!எத்தனை பண்டிகைகள்! எத்தனை மகிழ்ச்சிகள்! அவள் இருக்கும் போது.இன்று என்ன நிலை! ஒருவர்க்கொருவர் அன்பாய்ப் பிணைந்திருந்த நாட்கள் அவை!அவள் பொக்கைவாய்ச் சிரிப்பை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் – நண்பர்களின் பாட்டிகளிடத்தும், மருத்துவமனைகளின் காத்திருப்புப் பகுதிகளிலும், குழாயடிச் சண்டைகளிலும், கோயில் கருவறைகளிலும்.

இன்றும் பண்டிகை இருக்கிறது-அவள் தரும் பாவாடைகள் இல்லாமல்;அஞ்சரைப்பெட்டி இருக்கிறது–அந்த அன்புப்புதையல் இல்லாமல்;பசி நிறைந்த தூக்கம் இருக்கிறது–தூக்கத்தில் எழுப்பி அவள் தரும் பால்குவளை இல்லாமல்;வம்புப்பேச்சுகள் இருக்கிறது–அவள் பொக்கைவாய்ச் சிரிப்பில்லாமல்;இரவு நேர இல்லம் திரும்புதல்கள் இருக்கிறது–அவள் அக்கறைகள் இல்லாமல். அடுத்த மாதம் நினைவு தினம்.6 வருடங்கள் ஆகிவிட்டது-அவள் இல்லாமல் நாங்கள் வாழப்பழகி.
நம் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள் மறுபிறப்பில் வீட்டில் குழந்தைகளாகப் பிறப்பார்களாமே!நீ குழந்தையாக வேண்டாம்.அதே பொக்குவாய்ப் பாட்டியாகத் திரும்பி வா – குறைந்தபட்சம் கனவிலாவது!

Thursday 10 January 2013

பயணங்கள் முடிவதில்லை

சென்ற வாரம் புதிய தலைமுறை இதழில் மறுபக்கம் பகுதியில் வெளியான 'தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் பணியாளர்கள்' பற்றிய கட்டுரையைப் படித்தேன். ஓட்டுநர்கள், நடத்துனர்கள் படும் இன்னல்களை நல்லவிதமாக எடுத்துக்காட்டிய கட்டுரை அருமை. ஆனால் இவர்களின் மறுபக்கத்தையும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம் என்று தோன்றியது. ஏனோ இவர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் கொஞ்சம் கசப்பானது தான்.



போன தீபாவளிக்கு ஊருக்குப் போவதற்கு பெங்களூர் - தூத்துக்குடி SETC வண்டியில் online booking செய்திருந்தேன். அருப்புக்கோட்டை வழியாகத்தான் அந்த வண்டி செல்லும் என்பதால் அருப்புகோட்டை வரை புக் செய்திருந்தேன். என் கெட்ட நேரம். பெண்கள் இருக்கை எனக்குக் கிடைக்கவில்லை. தனியார் வண்டியிலும் இடம் கிடைப்பது அரிது என்பதால் வேறு வழியில்லாமல் 36-ஆம் எண் ஜன்னலோர இருக்கையில் புக் செய்தேன். நான் புக் செய்யும் போது என் பக்கத்துக்கு இருக்கை காலியாகத் தான் இருந்தது. எல்லாம் சுபம்.டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் ஊருக்கு இறக்கை கட்டிக் கொண்டு ஆனந்தமாகக் கிளம்பிய எனக்கு பேருந்தில் ஏறியதும் அதிர்ச்சி. பக்கத்துக்கு இருக்கையை ஒரு ஆண் புக் செய்திருந்தார். இருக்கையைக் கொஞ்சம் மாற்றச் சொல்லி நடத்துனரிடம் கேட்டதற்கு கேவலமாகத் திட்டி விட்டார். 'online-ல புக் பண்ணிட்டு வந்து என் உயிரை வாங்குது...போ..போய் உக்காரு...கொஞ்ச தூரம் போன பெறகு பார்ப்போம்' அது இதுன்னு திட்டு விட்டார்..சரி திட்டினால் கூட பரவாயில்லை..சீட் மாற்றி விட்டால் சரியென்று அமைதியாக இருந்தேன்.அடுத்த ஆப்பு அருப்புகோட்டை வடிவில். டிக்கெட் பரிசோதிக்கும் போது destination அருப்புக்கோட்டை என்று இருந்தது. அதைப் பார்த்ததுமே அவர் டென்ஷன் ஆகி விட்டார். என் ஒருத்திக்காக அருப்புக்கோட்டையிலெல்லாம் நின்று இறக்க வேண்டியிருக்கிறதாம்.இதனாலேயே தூத்துக்குடி செல்வதற்கு நேரம் ஆகி விடுகிறதாம்.'வந்துருவாளுங்க இம்சை பண்றதுக்கே.' மீண்டும் அதே திட்டு. என்னடா இது.யார் முகத்தில் இன்று முழித்தோம் என்று எரிச்சல் ஆகி விட்டது. 

கோபம், ஆத்திரம், இயலாமை எல்லாம் சேர்ந்து அழுகை தான் வந்தது அவர் பேச்சைக் கேட்டு.மன்னிக்கவும்..அது பேச்சல்ல.திட்டு.மனத்தைக் கஷ்டப்பட வைக்கும் கேவலமான முகபாவத்துடன் கூடிய சரியான வசை மாரி. நான் புக் செய்ததில் என்ன தவறென்று இன்னும் எனக்கு விளங்கவில்லை. 

2 இருக்கைகள் மட்டும் பெண்களுக்காக ஒதுக்கியிருக்கிரார்களே? 60 சீட் உள்ள பேருந்தில் இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் தான் தனியாக வருவார்கள் என்ற எண்ணமா நிர்வாகத்திற்கு? சரி அவர்கள் இருக்கைகள் கூட  அதிகம் ஒதுக்க வேண்டாம். சில தனியார் புக்கிங் சைட் போல பெண்கள் புக் பண்ணியிருந்தால் அங்கு ஆண்களால் புக் பண்ண முடியாத படி சாப்ட்வேர்-ஐ மாற்றலாம் தானே! அருப்புக்கோட்டையில் இறக்கி விட முடியாது என்றால் பின்னே எதற்காக destination-ல் அந்த option வருகிறது? அது வரவே இல்லை என்றால் நாங்கள் அருப்புக்கோட்டையில் நிறுத்தித்தான் ஆகவேண்டும் என்று சொல்லப் போகிறோமா? அந்த நடத்துனர் சொன்னது போல் online booking ஏன் வைத்தார்கள்? வைக்காமல் இருந்திருந்தால் அவர் 'உயிரை' நான் வாங்கிருக்க மாட்டேன் அல்லவா?
 

எவ்வளவு சந்தோசமாகத் செல்ல வேண்டிய பயணம் அவ்வளவு கொடுமையாக இருந்தது அன்று. தெய்வாதீனமாக என் அலுவலகத்தில் பணி புரியும் நண்பர் ஒருவரும் பெயரறியா தோழி ஒருவராலும் பெண்கள் இருக்கைக்கு மாறி உட்கார்ந்தேன். அத்துடனும் கொடுமை முடிந்த பாடில்லை. மதுரை வந்ததும் திடீரென்று என்னிடம் வந்து 'எறங்கு முதல்ல' என்றார். அருப்புக்கோட்டை தான் வரவில்லையே, எதற்கு இறங்க வேண்டும் என்று கேட்டதற்கு, திரும்பவும் அதே மாதிரி (திரும்பத் திரும்ப சொல்ற நீ பாணியில்!) 'எறங்கு முதல்ல'.எனக்கு பயங்கர பதற்றம் ஆகி விட்டது.அவர் கத்திய கத்தில் நானும் எனது லக்கேஜ் சகிதம் இறங்கி விட்டேன். ஆனாலும் எனக்கு பதற்றம் அடங்கிய பாடில்லை. பின் கெட்டதுக்குள்ளும் ஒரு நல்லதாய் வேறு ஒரு விளாத்திகுளம் SETC பேருந்தில் ஏற்றி விட்டார்.அதைச் சொல்லி என்னை இறங்கச் சொல்லியிருந்தால் நான் ஒன்றும் மாட்டேன் என்று சொல்லி விடப்போவதில்லை.எனக்குத் தேவை நான் ஊர் போய்ச் சேர்வது.அது எந்தப் பேருந்தில் இருந்தால் எனக்கென்ன? வீணாக ஏன் பதற்றப்படுத்த வேண்டும்? அந்தப் பதற்றம் ஒரு மணி நேரம் கழித்தும் கூட கொஞ்சமும் குறையவில்லை. அதனால் ஊரில் இறங்கும் போது  தடுமாறிக் கை காலில் புதையல் எடுத்தது தான் மிச்சம்! 

ஓட்டுநர்களே! நடத்துனர்களே! நாங்கள் ஒன்றும் எங்களிடம் அன்பைப் பொலியச் சொல்லி கேட்கவில்லை. குறைந்த பட்சம் இப்படி கண்ட கருமமாகத் திட்டுவதையாவது விட்டு விடுங்கள். யார் கண்டது! உங்களுக்கும் கூட ஒரு நாளில் உங்கள் மகளோ பேத்தியோ பெங்களூரிலோ சென்னையிலோ வேலையின் பொருட்டு தனியாகப் பயணம் செய்ய நேரலாம். அவளுக்கும் பெண்கள் இருக்கை கிடைக்காமல் உங்களைப் போன்ற ஏதோ ஒரு நடந்துனரின் வார்த்தைகளைக் கேட்டு கையைப் பிசைந்து செய்வதறியாது கண்ணீரும் விடலாம்!

இப்படிக்கு,
இத்தனை  நடந்தும் பொருளாதாரம் கையை கடிப்பதனால் பொங்கலுக்கும் SETC - யிலேயே டிக்கெட் போட்டு விட்டு இன்றிலிருந்தே என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கும் பிரஜை இராஜிசங்கர்.

Saturday 5 January 2013

கும்மாளம்! கொண்டாட்டம்! கொடூரம்!


இந்த ஆண்டு ஆரம்பம் இனிமையாவே இருந்தது.எதிர்பார்த்த ஆசைகள் எதிர்பாரா நேரங்களில் நடந்து முடிந்த மகிழ்ச்சியுடன் எனது நாள் ஆரம்பமானது.நெருங்கிய நண்பர்களின் அழைப்புகள், உறவுகளின் வருகைகள், அண்டைஅயலாரின் புன்முருவல்கள், தயங்கித் தயங்கிச் சொன்ன வாழ்த்துக்கள் என்று மனம் முழுவதும் மஞ்சள் மலர்கள்
.
பழைய துன்பங்கள், சோகங்கள், இயலாமைகள் எல்லாம் மறைந்து நல்லதொரு நாளை பிறக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நிறைந்து கிடந்தது நிறையப்பேர்களின் ‘Happy New Year’-களுக்குள். என் குருநாதர் சொல்வதைப்போல் புதுக்காலண்டர் மாற்றி விடுவதால்மட்டும் புதிதாய் ஒன்றும் நடந்துவிடாது. நேற்றைகளின் தொடர்ச்சியாகத்தான் நாளைகள் இருக்கும்என்பது நமக்குத் தெரியும்.ஆனாலும் ஒரு நம்பிக்கைபுத்தாண்டு பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று!ஒவ்வொரு புத்தாண்டிலும் குறைந்தது 3 சபதங்களாவது(சில சிவகாமியின் சபதம் ரேஞ்சுக்குக்கூட இருக்கும்) எடுத்திருப்போம்.பெரும்பாலும் 2 மாதங்களுக்குமேல் அவை உயிருடனிருப்பதில்லை.ஆனாலும் அந்தச் சபதம் ஆண்டுக்கடைசி வரை நினைவிருக்கும்.’சே!இப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று நினைத்திருந்தோமே?இப்படிச் செய்திருக்கலாமோ?சரி விடு.அடுத்த வருடம் மாற்றி விடுவோம்!’ – இப்படிப் பலமாற்றிவிடுவோம்கள் இருக்கும் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு ஒவ்வொரு வருட நிறைவிலும்.அதிலும் ஒரு சுகமிருக்கத்தான் செய்கிறது.
                   
எப்போதும் எனக்கொரு எண்ணம் தோன்றுவதுண்டு.இந்நாளில் எல்லா மக்களும் இப்படித்தான் குதூகலித்திருப்பார்களா என்று.

என்ன சார் புத்தாண்டு.புடலங்கா ஆண்டு!அது வந்து என்ன மாறுதல் வந்து விடப் போகிறது?நல்ல நாள் பொல்ல நாள் என்றால் செலவு தான்!” என்று குறைபடும் கூட்டம் ஒருபுறமிருக்கும்.

இன்னைக்காவது அம்மா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச்சொன்னேன்.எங்க காது குடுத்துக் கேக்குறாரு அந்த மனுஷன்?”என்று சலிப்படையும் குடும்பத்தலைவிகள் ஒருபுறமிருப்பர்.

நேத்து நைட்டு போனவருங்க.இன்னும் வீடு திரும்பல.குடிச்சிட்டு எங்க விழுந்து கிடக்காரோ?சாதாரண நாள் என்றால் மெயின்ரோட்டுக் கடையில்தான் கிடப்பாரு.பையனைக் கூட்டிட்டுப் போயி தூக்கியாந்துருவேன்.புதுவருஷம்ன்னு எங்க போய்க் குடிச்சுட்டுக் கெடக்கோ?” – ஆள் முழுதாக வருவானோ மாட்டானோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருக்கும் மனைவிகள்.

ஏன் புத்தாண்டு என்றால் குடிகளும், விபத்துக்களும் சர்வசாதாரணமாய் நடந்து விடுகிறது நம் தேசத்தில்?பெரும்பாலான ஆண்கள்இளைஞர்களும் சரிமத்திய வயதானவர்களும் சரிபுதியஆண்டை மதுப்புட்டிகளுடந்தான் கொண்டாடுகின்றனர். அவரவர் சக்திக்கேற்றாற்போல் குடிக்கும் பழக்கம் இன்று இயல்பாகிவிட்டது.முன்பெல்லாம்நான் குடிப்பேன்என்று சொல்லும்போது ஒரு குற்றஉணர்வு இருக்கும்.இப்பொழுதெல்லாம் மதுக்கடைகளில் குடித்துக்கொண்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது ஒரு பேஷனாக இருக்கிறது இளைஞர்கள் மத்தியில்.இப்படிப்பட்ட புகைப்படங்களுக்கு நண்பர்கள்(இருபாலர்கள்) மத்தியில் அத்தனை வரவேற்பு!
                       
இதையெல்லாம் பார்க்கும்போது இளையசமுதாயம் எதைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்வி ழுகிறது. முன்பு தவறெனத் தெரிந்து செய்தவர்கள் இன்று எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் அதைச் செய்கிறார்கள்.’நான் என்ன தொடர் குடிகாரனா? சும்மா ஒரு ஜாலிக்கு அவ்வப்போது குடிக்கிறேன்,இதெலென்ன தப்பு!’-என்றுமொரு  வாதம்.
இன்றைய தலைமுறை மிகவும் சுறுசுறுப்பு மிக்கது.எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆவல் பெருகியிருக்கிறது.அது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, போதைப்பொருளாக இருந்தாலும் சரி.எப்படியிருக்குமெனப் பார்த்துவிடும் ஆவல் பொதுவாக 16 முதல் 25 வயதுள்ள இளைஞர்களுக்கு அதிகம்.இப்படிச்சும்மாஆரம்பிக்கப்பட்ட பழக்கங்கள் நாளடைவில் அவர்களை முழுவதும் ஆட்கொண்டு விடுகிறது. (திருமணமென்றாலும்தண்ணிப்பார்ட்டி’.காதல் பிரிந்தாலும்தண்ணிப்பார்ட்டி’.என்ன லாஜிக்கோ?)‘களவும் கற்று மற!’ என்ற வாசகத்தில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை.இன்று குடிப்பது என்பது ஒரு ‘status symbol’. குடிப்பவன் நாகரிகம் தெரிந்தவன்.குடிக்காதவன் பட்டிக்காட்டான்.
                   
புத்தாண்டு பிறந்தாலே உள்ளூர்ப் புரோட்டாக்கடைகளுக்கும், நகர உணவு விடுதிகளுக்கும், நட்சத்திர ஹோட்டல்களுக்கும் நல்ல லாபம். ஹோட்டல்காரர்களின் ‘குடி’யைக் காக்கும் கருணை மிக்க ‘குடி’காரர்கள்.சென்னையில் ஒரு ஹோட்டலின் புத்தாண்டுக் கொண்டாட்ட விளம்பரம். தலைக்கு 5000 ரூபாய். குழந்தைகள் என்றால் 1500 ரூபாய்(புத்தாண்டுத் தள்ளுபடி).9 மணியிலிருந்து விடிய விடிய நிகழ்ச்சிகள். பக்கத்தில் பல வண்ணங்களில் சிறியதும் பெரியதுமான மதுப்புட்டிகள். அடக்கொடுமையே! குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தோடு சென்று குடித்துவிட்டு ஆடுவது ஒரு கொண்டாட்டமா?இவை போன்ற விளம்பரங்ளையெல்லாம் இன்று சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் சரியென மக்கள் அங்கீகரித்துவிட்டார்களா?ஏன் இவைகண்டு நமக்கு ஒரு அறுவெறுப்பு தோன்றவில்லை?
                    
குடிப்பது எத்தனை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது தனக்கும் சமுதாயத்திற்கும்!உடல்நோய்கள், விபத்துக்கள், பாலியல் குற்றங்கள் என்று.உடல்நோயைப் பற்றி இங்கு பேசப்போவதில்லை.அது அவனவன் பாடு.வாழ வேண்டும் என்று நினைத்தால் குடியைவிட்டு இருக்கட்டும்.ஒருவன் தன்னை மட்டும் அழித்துக்கொள்ளவே உரிமை உள்ளது.என்ன தைரியத்தில் அல்லது உரிமையில் அவன் சமுதாயத்தை வதைக்கிறான்?

கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி, ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் குடிபோதையினால் பிரதான சாலைகளில் சிறியதோ பெரியதோ குறைந்தபட்சம் ஒரு விபத்தாவது ஏற்பட்டுவிடுகிறது.இவையெல்லாம் தேவைதானா?என்ன கிடைத்துவிடப்போகிறது இந்தக்குடியினால்?நம் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடப் போகிறதா?வருமானம் அதிகமாகிவிடப் போகிறதா?நீண்ட நாட்களாகக் காதலை ஏற்றுக்கொள்ளாதிருக்கும் எதிர்வீட்டுப்பெண் சம்மதம் சொல்லிவிடப் போகிறாளா?ஒருவேளை பிரச்சனைகளைச் சிறிதுநேரம் மறக்கலாம்.ஆனால் அது கனவுலகம்.போதை தெளிந்ததும் பிரச்சனைகள் அப்படியேதான் இருக்கும்.பூனை, தனக்கு ஏதாவது ஆபத்து நேரும்போது கொஞ்சநேரம் போராடிப் பார்க்குமாம்.ஆபத்து நெருங்கிவிட்டால் தன் கண்களை மூடிக்கொள்வதன் மூலம் ஆபத்திலிருந்து விலகிவிட்டதாக நினைக்குமாம்.இப்படிதான் பூனை உத்தியுடன் நம்மில் பலர் இருக்கின்றோம்.பிரச்சனைகளைச் சமாளிக்க இருக்கும்வழி, கண்ணை மூடிக்கொள்வதல்ல-பிரச்சனைகளுக்கான காரணத்தையும் கையாளும் வழிமுறைகளையும் ஆராய்வது.

யோசிப்போம் இளையதலைமுறையே! நிறைய தேடுவோம். தேடல்களில்தான் வாழ்க்கை இருக்கிறது.அதை ஆழ்ந்த அறிவின் வெளிச்சத்தில் தேடுவோம்.மதுப்புட்டிகளின் நாற்றங்களில் வேண்டாம்!