Friday 20 April 2012

பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் ( கதைக் கவிதை )



சாளரத்தின் வாசல் வழி சிட்டுக்களின் சலசலப்பு ;
காற்றில் கலந்து வரும் கனிந்த கீதம்;
பஞ்சணையில் படுத்துப் புரண்டு பார்க்கிறேன் ;
எழும்பச் சொல்லி விண்ணப்பிக்கின்றது விடிகாலைத் தேநீர் ;
எட்டுப் பேர் எட்டி நின்று சேவகம் செய்ய
எதிலும் மனமில்லாமல் விடிகிறது என் காலை;

வீடெங்கும் ஒளிர்கிறது பணத்தின் எதிரொளிப்பு
பார்த்தவுடன் பற்றிக் கொண்டது ஏதோவொரு உற்சாகம்
தங்கத்தை தடவிப் பார்த்துக் கொண்டே தாழ்வாரத்தில் நின்று பார்க்கிறேன்

கடல் சொன்ன ரகசியத்தை அவசரமாகக் கரைக்கு சொல்லும் கடலலைகள்
தந்தையின் தோள் கட்டிக்கொண்டு திருவிழாக் கடையை
வேடிக்கை பார்க்கும் விளையாட்டுப் பிள்ளையாய்க் கப்பல்கள்

விழிகள் விரித்து நான் வியந்திருக்க
கடல் என்ன சொன்னதோ சீற்றத்துடன் சீறி வந்தன சில்லென்ற அலைகள்
கரையை முத்தமிட்டே பழகிய முரட்டு அலைகள்
கரையையே விழுங்கும் அளவுக்கு சீறிப் பாய்ந்து வந்தது
கரை மேலென்ன இத்தனை காதலா என்று அதிர்ச்சியுடன் நான் நிற்க
சீற்றமிகு அலைகள் சினத்துடன் சிதைத்து விட்டது என் வீட்டையும்

செல்வமென்று நான் நினைத்த அனைத்தும் செல்லா இடம் நோக்கிச் சென்று விட்டது
உயிர் மட்டும் மிச்சமாய் நான் நிற்கிறேன் நாற்பதாயிரம் மைல் தாண்டி;

பகட்டாய் பணக்காரனாய் கண் விழித்தவன் இன்று
ஏழையாய் உறங்கப் போகிறேன்;
தொழிலால் ஏற்றத்தாழ்வு விளைத்த நான் இன்று
தொழிலின்றி நிற்கிறேன் நிராதரவாய்;

எதுவும் இல்லாத போது தெரிகிறது ஏழ்மையின் நிலைமை
பணத்தால் மனிதர்களை ஒதுக்கிய நான்
ஒதுங்கி நிற்கிறேன் எல்லாம் துறந்து ஊர் கரையில்;

ஜாதி மத பேதங்களை மறந்து விட்டேன்;
ஏற்றத் தாழ்வுகளை எரித்து விட்டேன்;
பணத்திமிரைப் புதைத்து விட்டேன்;
உழைக்க மட்டும் துணிந்த உடலோடு
நிற்கிறேன் - புது விடியலை நோக்கி

Friday 13 April 2012

கண்ணாடிக் கனவுகள் (கதைக் கவிதை)




பூ பழம் சகிதம் சுற்றம் சூழ வந்திருந்தாய் என் வீட்டுக்கு 
பச்சை வண்ண ராசிப் புடவை அணிந்து 
கையில் காபி கப்புடன் நெருங்கி வந்தேன்
இரண்டு நிமிடம் என் விழிகளுக்குள் உன்னை சிறைபிடித்தேன்
உனக்கும் அது விருப்பம் என்பதை புன்னகை மொழியில் புரிய வைத்தாய் 
உன் அம்மா அப்பாவும் அன்புடனே பார்த்தார்கள் 
'எங்க ராணிகேத்த ராசா தான் மாப்பிள்ளையும்'  பாட்டி இரைந்தாள் சற்று சத்தமாகவே 
வெட்கத்தின் விசை தாளாமல் ஓடி வந்து விட்டேன் என் தனியறைக்கு 
செல்போன் மணி அடிக்கும் போதெல்லாம் நீயாக இருப்பாயோ என்று ஆர்வமுடன் எடுத்தேன்
நாளை என்ன பரிசு தருவாய்?
நம் குழந்தைக்கு அழகான தமிழ்ப் பெயர் தான் வைக்க வேண்டும்!!
ஆயிரம் ஆயிரம் திட்டமிடுதல்கள் ..
அத்தனை கனவுகளுக்கும்  அடித்தளம் தர நீ வரவிருக்கும் நாளை எதிர்பார்த்திருந்தேன்
வந்தது என்னவோ தரகர் மட்டும் தான் - கையில் வேறு சில புகைப்படங்களுடன் 
அந்த பையன் வீட்ல பொண்ணு எல்லாருக்கும் பிடிச்சுருக்கு
கொடுக்கல் வாங்கல் மட்டும் ஒத்து வரல சார் 
இன்னொரு இடம் கை வசம் இருக்கு 
அருமையான இடம் 
நம்ம சக்திக்கு ஏத்த இடம்
நாளைக்கு வர சொல்லட்டுமா பொண்ணு பார்க்க?
அவருக்கு பழகிப் போயிருந்தது பார்ப்பதும் போவதும் 
இன்னும் என் மனதிற்கு பழக்கம் ஆகவில்லை - 
கனவுகள் கண்ணாடித் துகள்களாய் ஆன பிறகும் 

அடுத்து பார்க்க வரும் ராசாவை நோக்கி புன்னகை செய்ய... 

புத்தாண்டு புது வெற்றி ஆண்டு


புதுமைகள் பூக்கட்டும் 
புரட்சிகள் மலரட்டும்
வசந்தங்கள் வாழ்த்தட்டும்
வஞ்சகங்கள் ஒழியட்டும்
வெற்றிகள் நிறையட்டும் 
வெறுப்புகள் விலகட்டும் 
அமைதி பரவட்டும்
அன்பே தழைக்கட்டும்
தமிழினம் வெல்வதை பார்க்கட்டும் - இந்த தமிழ்ப் புத்தாண்டு...