Saturday 29 March 2014

சொல், ஒரு சொல்...(6)

புறநூனூற்றுப் பாடல்களில் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருந்த போது அந்தக் காலத்தைய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. அதில் கவனம் செலுத்திப் படித்தவற்றை இங்கு பதிகிறேன்.

அந்தக் காலத்தில் "ஐயவி புகைத்தல்" என்றொரு வழக்கம் இருந்திருக்கிறது.

ஐயவி என்றால் வெண்சிறுகடுகு. ie White Mustard (படத்தைப் பார்க்க)

                                     

கடுகு தாளிக்கும் போது கொஞ்சம் கவனமில்லாம இருந்தோம் என்றால் அதன் நெடி மூக்கைத் துளைத்து இருமலை வரவழைக்கும். வெண் கடுகு வாசமும் அப்படித் தான் இருக்குமென்று நம்புகிறேன். அதை ஏன் புகைய வைக்கிறார்கள்?

1) ஐயவி புகைப்பது என்பது ஒரு மங்கலச் சின்னமாய் இருந்திருக்கிறது. அப்படிச் செய்யும் போது எமன் நெருங்காமல் விலகி விடுவான் என்று ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால் போரில் புண்பட்ட வீரர்/அரசர்களின் வீடு/அரண்மனைகளில் ஐயவிப் புகை போட்டிருக்கிறார்கள்.

வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ?
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?


- புறநானூறுப் பாடல்: 296

பொருள்:
போர் செய்து விட்டு வந்த வீரர்களின் வீட்டுக் கூரையில் வேப்பமரக் கிளைகளை ஒடித்துச் செருகி வைத்திருக்கிறார்கள். காஞ்சிப்பண் பாடுகிறார்கள். நெய்யில் வெண்கடுகு போட்டு புகை வர வைக்கிறார்கள். எல்லா வீடுகளும் ஆரவரித்துக் கிடக்கின்றன. ஒரு வீட்டில் மட்டும் போருக்குப் போனவர் இன்னும் வரவில்லை. பகையரசனை சினந்து கொல்லாமல் திரும்ப மாட்டேன் என்று போர் புரிந்து கொண்டிருக்கிறாரா? அதனால் தான் அந்தப் பெரியோனின் தேர் இன்னும் வீடு திரும்பாமல் காலம் தாழ்த்துகிறதோ?

இதே போல, புறநூனூற்றின் 281ஆவது பாடலிலும் "ஐயவி சிதறி ஆம்பல் ஊதி" என்றும் வருகிறது.

2) ஐயவி புகைப்பது என்பது எதிரி நாட்டு மன்னனுடன் சமாதானத்திற்கு உடன்படுவதற்கு ஒரு அடையாளமாகவும் இருந்திருக்கிறது - வெள்ளைக் கொடி போல. (இங்கே நான் இன்னொன்னு சொல்லட்டுமா? 'வெள்ளைக் கொடிக்கு வேலை வந்து விட்டது மன்னா!' வெள்ளைக் கொடி பொதுவாக சமாதானத்திற்குச் சொல்கிறோம் இல்லையா! ஆனால் போர்க்களத்திற்குரிய உடையாக, அதாவது சண்டை போடுவதற்கு ஏற்ற உடையாக வெள்ளை உடை தான் இருந்திருக்கிறது. இதை சில புறநானூற்றுப் பாடல்களில் பார்க்கலாம். நம் ஒக்கூர் மாசாத்தியாரின் 'கெடுக சிந்தை கடிது இவள் துணிவே' பாடலில் தன் மகனைப் போருக்கு அனுப்பும் போது, தலையில் எண்ணெய் வைத்து வாரி, வெள்ளுடை தரித்து அனுப்பியதாய் வரும் -வெளிது விரித்து உடீஇ;  இன்னொரு பு.நா பாடலிலும் 'தூய வெள் அறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின்' என்று வரும். அறுவை - ஆடை)

சரி, Back to the point, சமாதானத்திற்கும் ஐயவிப்புகை அடையாளமாக இருந்திருக்கிறது. அதை ஒரு பாடலில் காணலாம்.

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை;


அதியமானின் படை வலிமையைப் பாராட்டும் பாடல் ஒன்றில் ஔவையார் மேற்கூறிய வரிகளை இயம்புகிறார். அதன் பொருள், நீயோ சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் அதைப் பொருட்படுத்தாது விரைந்து வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டு போகும் எமன் போன்றவன் என்பதாகும். (அதியமானின் வீரத்தைப் போற்றும் பாடல்கள் பெரும்பாலானவற்றில் ஔவ்ஸ் அவனை ஒரு போர் வெறி பிடித்தவனைப் போலவே சித்தரிக்கிறார். அதில் அவர் பெருமைப்படுகிறார். அவர் 'ஐய ஐய' என்கிறார். படிக்கும் நமக்குத் தான் 'ஐய்யய்ய' என்றிருக்கிறது. ஒரு பாட்டில் வரும். ஊர்ப்பொதுவில் இருக்கும் முரசில் காற்று வந்து அடித்த சத்தம் கேட்டு போர்ப்பறை தான் அது என்று போர் செய்யப் பொங்கி எழுவானாம். இது என்ன வீரமோ? இது பற்றித் தனியாகப் படிக்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்)

3) குழந்தை பெற்ற தாய்க்கும் ஐயவிப் புகை காட்டுவார்களாம்.

மணிமேகலை 'அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை, விரவிய மகளிர் ஏந்திய தூபம்' என்கிறது. 

4) கோவில்களில் பூஜைகளின் போதும் ஐயவி புகைக்கப்பட்டிருக்கிறது என்று பன்னிரெண்டாம் திருமுறையிலும் திருமுருகாற்றுப்படையிலும் குறிப்புகள் கிடைக்கின்றன.

5) சங்ககாலத்தை முடிச்சுக்குவோம். ஆக்சுவலி, வெண்கடுகின் மருத்துவக் குணங்கள் என்னன்னா, அதைக் கஸ்தூரி மஞ்சள் + சாம்பிராணியோட அரைத்து சுளுக்குக்குப் பற்றுப் போட்டா சீக்கிரம் குணமாகும். வெண்கடுகை அப்டீக்கா அரைச்சு அப்புனா வாதம், கை கால் வீக்கமெல்லாம் சரியாயிருமாம்.

No comments:

Post a Comment