Wednesday 1 January 2014

வாழ்தல்

வெயில் கால மழையின் முதல் சொட்டை உன் உள்ளங்கையில் ஏந்தியிருக்கிறாயா?

யாரென்றே தெரியாதவனின் குரலை மட்டும் காதலித்திருக்கிறாயா?

அப்பொழுது தான் உதிர்ந்த மலரின் மகரந்தம் மூக்கு நுனியில் ஒட்ட அதை முத்தமிட்டிருக்கிறாயா?

தனியிரவில் நீ படித்த ஒரு வாக்கியம் உன் உலகத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறதா?

அந்நியன் ஒருவனின் மரணத்திற்காக நீ தேம்பித் தேம்பி அழுததுண்டா?

கோபம் தலைக்கேறிய தீக்கணத்தில் நீ உதிர்த்த முதல் கெட்ட வார்த்தை இன்னும் நினைவிலிருக்கிறதா?

100 ரூபாயை சில்லறையாக மாற்றி, மொட்டை மாடியில் நின்று கொண்டு, நாலாபுறமும் தூக்கி வீச வேண்டும் என்ற ஆசை என்றாவது வந்ததுண்டா?

பயமாயிருக்கும் என்பது தெரிந்தும் அரைக் கண்களால் திகில் படங்கள் பார்த்திருக்கிறாயா?

தோளில் தூங்கிப் போன பக்கத்து இருக்கைப் பெண்ணின் குழந்தையை எழுப்பி விட மனமில்லாமல், உன் நிறுத்தம் தாண்டி இறங்கி நடந்திருக்கிறாயா?

ஆம் என்றால் சொல், நீ நிஜமாகவே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாய்!

No comments:

Post a Comment