Wednesday 1 January 2014

காலங்கள் மாறலாம்

வழக்கம் போல இன்றும் காலை வாக்கிங். அதே பூங்கா. சற்றே அதிகபட்ச குளிரில் காது நிறைக்கப் பாடல் கேட்டால் மனம் நிறைந்து வழியும். எனக்குப் பிடித்தமான 'கண்ணுக்கு மையழகு' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதில் ஒரு வரி இப்படி வரும்: 'இளமைக்கு நடையழகு. முதுமைக்கு நரையழகு' என்று.

அந்த வரிகளுக்கேற்ற அழகான சூழ்நிலை அதுவென்று பட்டது. இளைஞர்கள், முதியவர்கள், குழந்த
ைகள் என்று எல்லாத் தரப்பினரையும்
அந்த நேரத்தில் பார்க்க முடியும்.

எனக்கு முன்னே ஒரு முதியவர் சென்று கொண்டிருந்தார். 70 - 80 க்குள் வயது இருக்கும் என்று அவர் தலை முடியும், நடையும் காட்டியது. முதுமைக்கு நரை அழகு தானோ என்று அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டே அவர் பின்னால் நான்கடி இடைவெளியில் நான் நடந்து கொண்டிருந்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென்று குப்புற விழுந்து விட்டார். ஏதாவது உடம்புக்குத் திடீரென வந்து விழுந்தாரா, கால் இடறி விழுந்தாரா என்று தெரியவில்லை. ஓடிப் போய் அவரைத் தூக்கி உட்கார வைத்து, உதவியென்று போட்ட  கூச்சலில் ஏழெட்டுத் தாத்தாமார்கள் அந்த இடத்தை நோக்கி வந்தார்கள்.

அவருக்கு மூக்கில் செம அடி.  ரத்தம் அதிகமாய் வந்தது. தண்ணீர் கொடுத்து, சின்ன முதல் உதவிகள் செய்த பின், ஓரளவுக்குச் சரியானார். வண்டி வைத்திருந்த மற்றொருவர் அவரை வீட்டில் விட அழைத்துச் சென்று விட்டார்.

அந்தப் பெரியவர் முகத்தில், அவர் கிளம்பிய போது, அப்படியொரு பயமும் சங்கடமும் தெரிந்தது. சுற்றியுள்ள மற்ற தாத்தாக்களில் இருவர் முகத்திலும் ஒரு பெருங்கவலை வந்து மறைந்ததைப் பார்க்க முடிந்தது. அதில் ஒருவர், என்ன நினைத்தாரோ, ஆக்டிவாக நடந்து கொண்டிருந்தவர் பேசாமல் போய், அருகிருந்த பெஞ்சில் அமர்ந்து விட்டார்.

முதுமை என்பது உண்மையிலேயே பெரும் கொடுமை தானோ? கொடிது கொடிது முதுமை கொடிது என்பது நிஜம் தானோ?

இது போன்ற பூங்காக்களைக் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் தெரியும். எல்லா வயதினரும் வரும் இடம். குட்டிப் பாப்பாக்கள் தன் பெற்றோரின் கையைப் பிடித்து 'தத்தக்கா புத்தக்கா' என்று நடப்பது கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் பெற்றோர் பேச்சைக் கேட்காமல் போவோர் வருவோர் கால்களுக்குள் புகுந்து ஓடும். கல்லூரி வயதினர் ஒரு கூட்டமாய் வருவார்கள். ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு, நடுவில் ஒரு ஐபோன். அவ்வளவு தான்! அதன்பின், அவர்கள் உலகத்தில் நமக்கு இடமில்லை. என்னைப் போல ரெண்டும் கெட்ட வயதினர், சாசுவாதமாகக் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு தற்காலிகச் செவிடர்களாவோம். ஆன்ட்டிமார்கள் குட்டிக்குட்டிக் கூட்டங்களாக பேசிக் கொண்டே நடப்பார்கள். இந்த 70 - 80 பெரியவர்கள் மட்டும் எப்பவும் ஒரு துணையுடன் தான் வருவார்கள். அந்தத் துணை பெரும்பாலும் கணவன்/மனைவியாகவோ, பக்கத்து வீட்டுக்காராகவோ, பேரன்/பேத்தியாகவோ, அட்லீஸ்ட் அவர்கள் செல்ல நாய்க்குட்டியாகவோ இருக்கும். அது ஏன்?

முதுமையை எதிர்கொள்வதற்கு மிகப் பெரிய மனோபலம் தேவைப்படத்தான் செய்கிறது. அவற்றை அந்தத் துணைகள் தருமென்ற கற்பனைகள் அல்லது நம்பிக்கைகள் அவர்கள் வாழ்வை நகர்த்திச் செல்கிறது, தினம் தினம். அவை ஒரு நாள் உடையும் போது, அந்த இடத்தை நிரப்பும் உறவுகள் அவர்களுக்குப் பெரும்பாலும் எஞ்சியிருப்பதில்லை என்பது இந்தக் கால வாழியல் யதார்த்தம்.

'காலா என் காலருகில் வாடா! சற்றே மிதிக்கிறேன்' என்று சொல்வது சாதாரணனால் சாத்தியமா? மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதுமைக்கு எத்தனை பயங்கள் இருக்கும்? அவர்கள் மனதில் எத்தனை வலிகள் இருக்கும்? மன வலி(மை)யை உடல்வலி வெல்லும் நாளில் அவர்கள் உலகம் சுருங்கிப் போகும். அதன் வெற்றுப் புலம்பல்களும், வீண் பயங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது ஒரு வலுவான அடுத்த தலைமுறையின் கடமை.

கனவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாய், கைக் கடிகாரம் காட்டியது. கையில் அவர் ரத்தம் பிசுபிசுத்தது. என் இதழ் அரை சென்டிமீட்டர் விரிந்து சுருங்கியது. அதன் அர்த்தம் எனக்கு மட்டும் புரிந்த ஒன்று!

No comments:

Post a Comment