Thursday 28 June 2012

சொல்லிவிடு நிலவே


சொல்லிவிடு நிலவே!
அணுஅணுவாய் ஆவி பிரிந்திருக்க
நொடிக்கொருமுறை இறக்கிறாள் என்று;


சொல்லிவிடு நிலவே!
பிள்ளைபோல் துள்ளித் திரிந்தவள்
பிறர் கண்ணில் படுவதில்லை என்று;

சொல்லிவிடு நிலவே!
அவர்பெயர் உச்சரித்த இதழ்களுக்கு
பிறர்பெயர் தெரியவில்லை என்று;

சொல்லிவிடு நிலவே!
காதலினைத் தாங்கிய இதயத்திற்கு
பிரிவினைத்தாங்க பலமில்லை என்று;

சொல்லிவிடு நிலவே!
மணமுடிக்க வற்புறுத்திய உறவுகளிடம்
பிணமாய்போக ஒத்துக்கொண்டாள் என்று;

சொல்லிவிடு நிலவே!
கண்ணாய் வளர்த்த பெற்றோர்களுக்கே
கன்னியவள் கபடமானாள் என்று;

சொல்லிவிடு நிலவே!
அவர் ரசித்த விழிகளுக்கு
கண்ணீர்தவிர வேறு கதியில்லை என்று;

சொல்லிவிடு நிலவே!
விட்டுச்செல்லும் உயிரைக் கட்டிவைப்பது
காதலரவர் பொறுப்பு என்று;

No comments:

Post a Comment