Wednesday 11 July 2012

அவளும் அவள்சார்ந்த இடமும்






கோவில்களில்மட்டும்  நுகர்ந்து பழகியிருந்த 
புனிதவாசனை பரவிக்கிடந்தது அவள் அறையில்;
என்னவென்று சென்று பார்த்தேன் 
என் தேவதை உடைமாற்றியிருந்தாள்;

எழுதாமல் ஊடல் செய்துகொண்டிருந்த பேனாவிற்கு 
இதழ்சிகிச்சை செய்து எழுத வைக்கிறாள்;
இதைத்தான் எதிர்பார்த்தேனென்று அவள் 
கைவிரல்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறது;

ஜன்னல் கம்பிகளுக்குள் தகராறு 
அங்கேபாரேன் அழகியபூச்செடி என்றவளை
நேற்றிரவு சேகரித்த மழைத்துளிகளால் 
கன்னம் நனைத்து மகிழ்ந்திடத் துடிக்கிறது;

அழகனைத்தையும் அடைந்துவிட்ட மமதையில்
ஆட்டம் காட்டுகிறது உன் அறைப்படுக்கை
நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் 
என்று ஏங்கச் செய்து விடுகிறது!!

எவ்ளோநேரம் வா போகலாமென்கிறாய் 
என் சிதறிய இதயத்தை சேகரித்துக் கொண்டு 
ஒன்றுமறியா  உன் உயிர் நண்பனாய் வெளியே வர 
இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டுமடி எனக்கு..

No comments:

Post a Comment