Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, 6 April 2014

அப்பா! நீ ஜெயிச்சுட்ட!


வாவ்! எங்க காலெஜ்ல Graduation Day சமீபத்தில் நடந்தது போல! தம்பி தங்கைகள் எல்லாம் போட்டோ அப்லோட் பண்ணிருக்காங்க. பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னோட Graduation Day வுக்கு மனசு போகிறது.

2011இல் பட்டம் வாங்கினேன். அப்பா மட்டும் உடன் வந்திருந்தார். என் தங்கை அப்போ பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அம்மாவால் வர முடியவில்லை. ஊரிலிருந்து கிளம்பும் போது அது குறித்துப் பெரிய மன வருத்தம் இருக்கவில்லை. ஆனால் அங்கு என் நண்பர்களெல்லாம் அம்மா அப்பாவுடன் வந்த போது, என் அம்மாவும் வந்திருக்கலாமோ என்று தோணியது.

வரிசையாக நம்பர் பிரகாரம் சீட் போட்டு வைத்திருந்தார்கள். எப்பவும் எனக்கும் என் முந்தைய நம்பர்காரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டேயிருக்கும். கிட்டத்தட்ட 4 வருடங்கள் முழுவதும் லேப், எக்ஸாம், லொட்டு லொசுக்கு அனைத்திலும் ஒரே டீமில் இருந்த போதும் நட்பாய் ஒருகணமும் உணர்த்திடாத ஒருவன். அன்பாய்ப் புன்னகைத்ததில்லை. 'என்ன ரீடிங்?' என்பது தவிர லேப்பில் பெரிதாய் ஒன்றும் பேசியதில்லை. 4 வருட காலேஜ் வாழ்க்கை முழுமையும் எவனோ ஒருவன் என்ற கதியில் போனால் கூட பரவாயில்லை, முறைப்பும் முனைப்புமாய்ப் போன தருணங்களும் இருந்தன.

அதெல்லாம் Graduation Day அன்று போன இடம் தெரியவில்லை. பார்த்த மாத்திரத்தில் 'வாங்க, எப்போ வந்தீங்க' என்று சகஜமாய்ப் புன்னகைக்க முடிந்தது. வேலை, குடும்பம் என்று மேலோட்டமாய்க் கேட்க முடிந்தது. முடிந்து போன பிறந்த நாள்களுக்கும் இனி வரும் வெற்றிகளுக்கும் வாழ்த்துச் சொல்ல முடிந்தது. ஒரே வருடத்தில் பழைய கசப்புகள் எல்லாம் எப்படி மறந்ததோ? முதிர்ச்சி என்பது அவ்வளவு சீக்கிரத்தில் வந்து விடும் ஒன்றா என்ன! காலத்திற்கு எத்தனை கண்கள்? நேற்றுப் பார்த்த மனிதன் மறுநாள் எவ்வளவு வித்தியாசப்பட்டு நிற்கிறான்!

பேர் சொல்லி மேடைக்கு அழைத்தார்கள். போனேன். அவசர கதியில் ஒரு மென்புன்னகை. சர்டிஃபிகேட் அடங்கிய ஃபைல் கையில் பட்ட கணத்தில் உடம்பெல்லாம் ஒரு மெல்லிய நடுக்கம் விஸ்தரித்தது. அதையும் அந்தக் கேமரா படம் பிடித்திருக்குமா? இருக்காது. அறிவியல் சாதனங்களுக்கு மூளை உண்டு. இதயம் கிடையாது. இந்தப் பேப்பருக்காக, இந்த மேடைக்காக, இந்த தருணத்திற்காக எதையெல்லாம் கடந்து ஓடி, அடிபட்டு, மிதிபட்டு, இளைப்பாறி, ஜெயித்து......ஷப்பா......கண்கள் அப்பாவைத் தேடின. ஒரு ஓரத்தில் அப்பா கை தட்டிக் கொண்டிருந்தார். நிச்சயம் அவர் கண்கள் கலங்கியிருக்கும். வெறும் கண்ணீரா அது? ஒரு தலைமுறையின் கனவல்லவா?

மேடையை விட்டு இறங்கியதும் அப்பாவிடம் ஓடினேன். அடேயப்பா! அப்பா அமர்ந்திருந்த இடம் இவ்வளவு தூரமாகவா இருந்தது? ஒன்றும் பேசவில்லை. அப்பாவின் கையில் ஃபைலைக் கொடுத்தேன். இறுக்கமாய்க் கட்டிக் கொண்டேன். அழுத்தமாய் அவர் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தேன்.

"அப்பா! நீ ஜெயிச்சுட்டப்பா! நீ ஜெயிச்சுட்டப்பா! உன் மகள் இனி இன்ஜினியர்!

எந்த நாயும் "என்னத்த வச்சு படிக்கப் போடுவ?" என்று இனி கேட்காது.

"கடன் கட்ட முடியாட்டி கழுத்தில் துண்டப் போட்டு இழுப்பேன்", என்று சொல்லும் எந்த மேனேஜர் முன்னும் நீ தலை குனிய வேண்டியதில்லை.

"பொம்பளப் புள்ளயப் படிக்கப் போட்ற, ஊடாலயே காதல் கீதல்ன்னு ஓடிட்டா என்ன செய்வ? பார்த்துச் செய்யி", என்று என் கற்பை வார்த்தைகளால் சிதைக்கும் வாய்கள் இனி உன்னைப் பார்த்துத் திறக்க முடியாது.

இன்று முதல் நானொரு இன்ஜினியர். என் பேருக்குப் பின்னால் நீ மட்டும் தனியாளாய் நின்று வாங்கித் தந்த பட்டம். யாராலும் அழிக்க முடியாத ஒரு பட்டம். உன் உழைப்பனைத்தையும் உறிஞ்சி வைத்துக் காப்பாற்றி வைத்திருக்கும் பட்டம்.

இனி உன் தலைமுறை படித்த தலைமுறை.

கூலிக்காரன் மகள் ஒரு இன்ஜினியர்.

இனி என் தலைமுறை முழுக்கவும் மிக சாதாரணமாக இன்ஜினீயர்களும், டாக்டர்களும் இன்ன பிறவுமாக படித்த பட்டாளம் வரப் போகிறது.

உன்னைப் போல, அம்மா போல, இனி யாரும் தன் அம்மாவுக்காக, தம்பிக்காக என்று தன் படிப்பைத் தியாகம் பண்ண வேண்டியதில்லை.

உன்னைப் போல விபரம் தெரிந்த நாளிலிருந்து கடைசி வரைக்கும் ஓயாமல் ஓட வேண்டியதில்லை.

அப்பா! நீ நிச்சயமாய் ஜெயிச்சுட்ட!" - என்று அந்த அரங்கு அதிரக் கத்த வேண்டும் போல இருந்தது.

ஆனால் இதையெல்லாம் வார்த்தைகளில் சொல்லத் தான் வேண்டுமென்று என்ன அவசியம்? இதெல்லாம் புரியாமலா என் தலையில் கை வைத்து ஆசிர்வதித்துச் சொன்னீர்கள் 'சந்தோஷம்டா' என்று..

உள்ளம் கனிந்திருந்த நேரம் அது. ஒவ்வொரு தோழமைகளுடனும் அன்பைப் பகிர்ந்து கொண்டு, 'இனி பார்க்கவே முடியாதுல' என்ற நெருங்கிய நட்புகளின் கேள்விகளைக் கண்ணீரால் தவிர்த்துக் கொண்டு, அடுத்த வாய்ப்பு ஒன்று வரும் என்று பொய்ச் சமாதானம் கூறிக் கொண்டு, காட்டிய கடைசி டாட்டாவும், கிட்டிய கடைசி ஹக்கும்......ம்ஹும். காலத்தால் அழிக்க முடியாதவைகள் என்று சில தருணங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கின்றன.

ஏப்ரல் 1

                                  

ஹையா...ஹையா..நாளைக்கு ஏப்ரல் 1...............

போன வருஷம் ஏப்ரல் 1 திங்கட்கிழமை வந்தது.

அன்னைக்கு அப்பா (foster father) படு பிஸியா இருந்தார். சிங்கத்தைக் கவுக்க சரியான சமயம் இது தான்னு ப்ளானைப் போட்டேன்.

சாட்ல மூஞ்ஜியத் தூக்கி வச்சுட்டு...'அப்பா...வீட்ல எனக்கு மாப்ள பார்த்துட்டாங்க. அவருக்குச் சென்னைல வேலையாம்'ன்னேன்.

"ஓ! வாழ்த்துகள்டா. பையனப் பார்த்தியா? பிடிச்சுருக்கா..." - இது அப்பா..

"ம்ஹூம். பார்க்கல இன்னும். எனக்குப் பிடிக்கல. கல்யாணம் வேண்டாம். அப்பா கேக்க மாட்றாரு. சரி போய்த்தொலைங்கன்னு சரின்னு சொல்லிட்டேன்" - அப்டினு கப்ஸா வுட்டேன்.

அப்பா பதறிப் போயி, "என்னடா..ஒருக்கயாவது பார்க்க வேண்டாமா? பேச வேண்டாமா? ஏன் சரின்னு சொன்ன? ஒரெட்டு சென்னை வந்து பார்த்துப் போயிட வேண்டிது தானே? இல்லைன்னா, அப்பா ஆபிஸ்க்கு வரச் சொல்றியா? பார்க்கலாம்" -ன்னார்.

'ம்' - நான்

"என்ன? உம்ம்முன்னு இருக்கே? தேதி கூட ஃபிக்ஸ் பண்ணியாச்சா?" - அப்பா

"ம்ஹும். உங்க கிட்ட பேசிட்டும் பண்ணனும்ன்னாங்க"

"அப்பா ஒரு வாரம் சிங்கப்பூர் போறேனே. என்ன பண்றது?" - அப்பா

"சிங்கப்பூர்ல கல்யாணம் வச்சுக்கலாம்"

"கழுத! இன்னும் குழந்தையாவே இருக்கயே? சரி பையன் பேர் என்ன?" - அப்பா

"உண்டுவளந்தான்" - நான். (இப்பக் கூட எங்கப்பாருக்குச் சந்தேகம் வரல)

"ஊர்?"

"எங்கூர் தான்"

"ம்....நம்பர் இருக்கா?"

"ம்ஹும். மாப்ள போட்டோ அனுப்ச்சுருக்காங்க. பார்க்குறேங்களா?"

"ம்..அனுப்பு...."

அனுப்பினேன். (ஏப்ரல் ஃபூல் ன்னு ஒரு ஜோக்கர் போட்டோ)

"கழுத கழுத உத படப்போற" - அப்பா

"ஹி ஹி ஹீ...ஏப்ரல் ஃபூல் ஃபூல்..ஒண்ணாந்தேதி காப்பித் தூள் தூள்...."

ஆனால் அப்பாவை ஏமாற்றிய ஒரு குழந்தையின் முட்டாள்தனமான சந்தோஷத்தை விட அதிக சந்தோஷம் அன்றிருந்தது. காரணம், என் அப்பாவின் அன்பை, அக்கறையை, எனக்காகப் பதறும் மனதை அதிக நெருக்கத்தில் தரிசித்த முதல் நாள் அது.

அப்பாவை ஒரு படி அதிகம் நேசிக்க ஆரம்பித்த முதல் நாள் எப்படி முட்டாள்கள் தினமாகும்? அன்பு தினமன்றோ அது?



Saturday, 29 March 2014

ஞாபகம் வருதே


நேத்து லஞ்ச் டைம்ல என் colleague கிட்ட 'குழந்தைகளுக்குப் பரிட்சை என்னைக்கு?' ன்னு பேசிட்டு இருந்தேன். குட்டிப் பசங்க தான் அவங்களுக்கு. 6 வது படிக்குற பையன் ஒண்ணு. 3வது ஒண்ணுன்னு நினைக்கிறேன். அதுக்குப் பதில் சொல்லிட்டுச் சொன்னாங்க 'பிள்ளைங்களை லீவுக்கு எங்க அனுப்புறதுன்னு தெரியலை'. நான் 'ஓ! பாட்டி வீடா? மாமா வீடான்னு கன்பியூசனா?' என்றேன். 'ச்சே! அதெல்லாம் இல்ல ராஜி. சின்னவளை ஸ்கேட்டிங் அனுப்பலாம்னு இருக்கேன். பெரியவன் தான் அதுக்கு ஒத்துக்க மாட்றான். அவன் தெருப் பசங்களோட விளையாடுரதுக்குத் தான் விரும்புறான். அதுக்காக அப்டி விட்ற முடியுமா?' என்றார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

நான் கோடை விடுமுறையில் என்ன செய்தேன் என்று மனம் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தது.

ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் ஒரு கோரிக்கை இருக்கும். டைப் ரைட்டிங், தையல், கூடை முடைதல் (அப்போவெல்லாம் கம்ப்யூட்டர் என்ற ஒன்று பற்றித் தெரியாது), ஹிந்தி கற்றல் இப்படி நிறைய. ஆனால் எல்லாமும் கோரிக்கையாக மட்டுமே நின்று போயிருக்கும். அதைச் செயலாக்க பொருளாதாரம் வாய்த்ததில்லை.

அதனால் கால்வாசிப் பொழுது நீதிக்கதைகளுடன் லைப்ரேரியில் தான் கழிந்திருக்கும். மீதிப் பொழுதில் தார் சுற்ற வேண்டும். எனக்கு என்றில்லை, பொதுவாகவே எஞ்சொட்டு நண்பர்களுக்கு இப்படித் தான் விடுமுறை கழியும்.

எங்கள் தறிகாரக் குடும்பங்களில் தார் சுற்றுவது என்பது இல்லத்தரசிகள், நடக்க முடியாமல் போன பாட்டி தாத்தாக்கள், பள்ளி படிக்க வாய்ப்பில்லாத பிள்ளைகள், கோடை விடுமுறையிலிருக்கும் குழந்தைகள் இவர்களுக்கு நேர்ந்து விடப்பட்ட வேலை.

ஒரு கழியில் 12 சட்டமோ என்னமோ இருக்கும். கழிக்கு இவ்வளவு ரூபாய் என்று கணக்கு(4 ரூபாயோ 5 ரூபாயோ துல்லியமாக நினைவிலில்லை). அந்த வருமானத்தை வைத்துத் தான் அடுத்த வருடத்திற்கு நோட்டுகள் வாங்க வேண்டும்.

அப்பொழுது என் அப்பா பட்டுத்தறி நெய்து கொண்டிருந்தார். அதற்குத் தார் சுற்ற வெளியில் தருவதில்லை. அம்மா தான் செய்வார். சம்மர் லீவில் அந்த வேலை எனக்கு. காட்டன் நூலை விட பட்டு நூலைத் தாராக சுற்றுவதில் கஷ்டங்ள் இருக்கும். காட்டன் என்றால் அதிகம் விரலை அறுக்காது. பட்டு பயங்கரமா அறுக்கும். அறுத்து ரத்தம் வருவதற்குள் நாம் சுதாகரிக்க வேண்டும். இல்லையென்றால் புடவையில் கறை பட்டுவிடும். இப்படிப் பல சாமர்த்தியங்கள் வேண்டும்.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. முதன்முதலாக விரலில் ரத்தமும் கண்ணில் கண்ணீருமாய் அப்பாவிடம் போய் நின்ற நாள். எனக்கு ஒன்றென்றால் அப்பாவால் தாங்கவே முடியாது. 'நீ இதெல்லாம் பண்ணாதே! அம்மாவுக்கு முடியாட்டி நானே சுத்திக்கறேன். போ போயி அந்தக் கதையைப் படிச்சு அப்பாவுக்குச் சொல்லு' என்பார். முழு லீவுக்காலமும் என் அப்பாவுடனேயே ஒட்டிக் கொண்டே திரிவேன்.

அப்புறம் கொஞ்சம் விவரம், வீட்டு நிலை தெரிய ஆரம்பிக்கவும், அவருக்குத் துணையாக 'நாடாப் போடப்' போய் விடுவேன். நாடா என்பது தறியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போகும் ஒரு குழல் போன்ற அமைப்பு. அதை வலது புறம் விட்டு இடது புறம் எடுக்க வேண்டும். அதே போல திரும்பவும் இடது-வலது என்று தொடரும். நாடாப் போட யாராவது இருந்தால் புடவை கொஞ்சம் வேகமாக வளரும். அதுவும் போக அப்பா பக்கத்திலேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொள்ளலாம். அவருடன் பேசிக் கொண்டே இருக்கலாம். அதற்காகவே நான் அதை விரும்புவேன்.

ஒரு பக்கம் ரேடியோ, ஒரு பக்கம் அப்பா. அவ்வளவு இனிமையாக இப்பொழுது கூட வாழ்க்கை இருக்கவில்லை. அப்பா ரொம்பவும் ஜாலியான ஆள். அவருக்கும் எனக்குமாய் பிடித்த பாட்டு எத்தனையிருக்கும்! அவர் ஒரு வரி, நான் ஒரு வரி என்று ஓராயிரம் பாட்டுக்களாவது பாடியிருப்போம். அவ்வளவு சந்தோசத்திலும் பக்கத்துத் தெருக்காரி தையல் கிளாஸ் போவதைப் பார்க்கும் போது, மனதில் சின்னதாய் ஒரு ஏக்கம் எழும்பி மங்கும். அன்னைக்கு மட்டும் பாட்டு சத்தம் வரவே செய்யாது.

ஒன்பதாம் வகுப்பு விடுமுறை என்று நினைக்கிறேன். அப்பொழுது ஒரு சம்பவம். தறியில் விசைக்கம்பு என்று ஒன்று இருக்கும். ஒரு தட்டையான கம்பில் ரெண்டு புறமும் முள் மாதிரி கூர்மையான குண்டூசிகள் குத்தியிருக்கும். அது தான் புடவையின் stiffnessக்கு உதவும். ஒவ்வொரு முழம் புடவை நெய்து விட்டும் அதை எடுத்துக் கொஞ்சம் தள்ளிக் குத்த வேண்டும். அப்படி ஒருமுறை அப்பா செய்யும் போது புடவைக்குப் பதில் தவறிப் போய் அவர் விரலில் குத்தி விட்டது. சலசலவென்று ரத்தம். வெள்ளைப்பட்டில் சிவப்பு பார்டர் புடவை அப்போ தறியில் கிடந்தது. நல்லவேளையாக புடவையில் தெறிக்கும் முன்னர் அப்பா கையை எடுத்து விட்டார். எனக்கு இரத்தத்தைப் பார்த்துப் பதறிப் போய் விட்டது. அப்பா கூலாகச் சொன்னார்: 'பார்த்தியா, அப்பா உன்னை ரத்தம் சிந்திப் படிக்க வைக்குறேன்'. அவர் சொன்னது என்னமோ விளையாட்டுப் பேசி என்னை சிரிக்க வைக்க வேண்டுமென்று தான். ஆனால் இது வரையிலான என் மிக நீண்ட அழுகைகளுள் அதுவும் ஒன்று. அந்தக் கலர் புடவையை எங்கு பார்த்தாலும் இன்னமும் எனக்கு இந்தச் சம்பவம் தான் ஞாபகம் வரும். அதன் பின் எனக்குக் கோடைக் கோரிக்கைகள் இருந்ததேயில்லை. "போன லீவுக்கே ஆசைப்பட்டல்ல! இந்த லீவுக்குப் போறியாடா? அப்பா, சங்கத்துல காசு கேட்டுப் பார்க்கட்டுமா?" என்பார். "இல்லப்பா. நான் அடுத்த கிளாசுக்கு வீட்ல இருந்து படிக்கப் போறேன். நேரமில்ல" என்று மறுத்து விடுவேன்.

காலையில் லைப்ரேரி, பகல் முழுக்கத் தறி, மாலையில் பாட்டி வீடு என்று இருந்த பொழுதுகள் கொடுத்த மகிழ்ச்சி கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. எது எதற்கோ ஏங்கியது உண்டு. ஆனால் ஒருமுறை கூட அன்புக்காக ஏங்கியதில்லை. அம்மா, அப்பா அருகில் இருக்க முடியவில்லை என்று ஏங்கியதேயில்லை.

நம் அப்பா-அம்மாக்களுக்கும் குழந்தைக்கு அந்த நேரத்தில் எது அவசியம் என்று புரிந்திருந்தது. குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்கத் தெரிந்திருந்தது. இந்தக் காலத்து இளம் பெற்றோர்களிடம் இது மிஸ்ஸிங். அவர்கள் குழந்தைகளை சூப்பர் மேனாக ஆக்கப் பார்க்கிறார்கள், அவர்கள் குழந்தைத்தனங்களை எல்லாம் கொன்று விட்டு!

Tuesday, 11 March 2014

Why 'Reading'?



My contribution for our Office's Internal Newsletter 'Awaaz' during the celebration of women's day.

***

Name of the hobby: Reading books

When did you start this Hobby (From how many years): From childhood. "MORE" over the past one and half years 

Inspiration to take up this Hobby: Mr. Maalan Narayanan

To explain this, a small introduction about Maalan is necessary. Maalan is a veteran journalist, wonderful writer, Editor of the weekly magazine named "PUTHIYA THALAIMURAI" and my charismatic mentor. He is the one who passionately writes and speaks for the development of the younger generation.

One of his articles changed me completely. It is about the skills of younger generation. He wrote: "It tears my heart to know that one doesn't know about Bharathi even until the age of 30. Without knowing Bharathi, how can you learn about the depth of language and social views? This generation is 100 times smarter than me. If you would have read Bharathi's writings, how much more vigorous you would be!", as it continued.

After reading this how could I not to be reading Bharathi? Until then, I have been reading just whatever I got. After that I started to be selective in my reading materials. I can say, Maalan's words channelized my reading.
 

Why does this mean so much to you? - Few days ago, I wrote one imaginary suicide letter, just for fun.(You can see it on my blog. Link: http://rajeesankar.blogspot.in/2014/01/blog-post_1755.html) Maalan commented on it saying "Your feelings have been expressed properly. Your Writing style has aptly captured the emotion without exaggerating the feeling and gives a lively touch to it. The concealed writer has come out from Rajee. It is not Rajee's suicide attempt, it is the attempt to express her skills". These words are not only a positive feedback for my writing but also the highest blessings I have ever gotten from my master.

His appreciation make me happy and it is not easy to get it from him. In order to get it, I have to work a lot, have to think a lot, have to collect lot of information. So I started reading.

Also my reading habit is protecting my dreams from the flames of daily life. My dreams are what still keeps me alive! My dreams assure me that there is still happiness remains in my life. Giving up my dreams and living as an ordinary person, is not acceptable to me. So I started reading.

"Literature is not something to read for entertainment. It is connected with thought process. Language and Thought process have a traditional continuation to them, and therefore, there are pundits and mentees in Literature", as Maalan said. I would also like to become a successor . I wish to do my best for my language. So I started reading.

I wish to show my love beyond the barriers of nation, religion and language. Religion teaches this to some. Literature teaches the same to me.


 ***

Saturday, 8 March 2014

​உன்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று...!

                                 

​இன்று 101-ஆவது சர்வதேச மகளிர் தினமாம். அம்மாவிற்கு வாழ்த்துச் சொல்வோம் என்று காலையில் அழைத்தேன்.

'பிறந்த நாள் வாழ்த்து, பண்டிகை வாழ்த்து என்றால் பதிலுக்குச் சொல்லத் தெரியும். இதற்கு என்ன டி சொல்லணும்?' என்றாள்.

'சேம் டூ யூ'ன்னு சொல்லலாம் என்றேன்.

'சரி. இன்னைக்கு என்ன பண்ணணும்?' என்றாள்.

எத்தனை பெரிய கேள்வியை, எவ்வளவு சாதாரணமாகக் கேட்டு விட்டாள்?!

சரி. இன்னைக்கு என்ன தான் பண்ணணும்?

அநேகமாக எல்லா ஆபிஸிலும் lady employeeகளுக்கு பூ, சாக்லெட், உடல்நலம் பற்றிய உரையாடல் session நடந்திருக்கும்.

மால்களில் அழகு சாதனப் பொருட்களுக்கு ஏதேனும் சிறப்புச் சலுகைகள் தந்திருப்பார்கள்.

வார/மாதப் பத்திரிக்கைகள் 2,3 பக்கங்களுக்குப் பரபரப்பாகப் பெண்ணியம் பேசியிருக்கும். கூடவே ஆங்காங்கே குழந்தை வளர்ப்பும் வீட்டுப் பராமரிப்பும்.

இதெல்லாம் போதாதா என்கிறீர்களா? இன்றைக்குப் போதும். ஆனால் நாளையும் அவர்களைக் கொண்டாடும் மனம் இருக்கிறதா நம்மிடையே?

நாம் நிஜமாகவே பெண்மையைக் கொண்டாடுகிறோமா? அவளுக்குரிய இடத்தை மன நிறைவோடு அவளுக்குத் தந்திருக்கிறோமா?

ஆணுக்குப் பெண் சமம் என்பது ஆண் செய்யும் அனைத்தையும் பெண்களால் செய்ய முடியவேண்டும் என்பதல்ல. ஆணைப் போல பெண்ணையும் அறிவு ரீதியில் அணுக வேண்டும் என்பதே! அந்த இடத்திற்கு அருகிலாவது நாம் நெருங்கியிருக்கிறோமா?

இந்திய அளவில், 2001 ஆம் ஆண்டு 53.67%ஆக இருந்த பெண்களின் படிப்பறிவு விகிதம், 2010 ஆம் ஆண்டு 65.46%ஆக இருக்கிறது. 10ஆண்டுகளில் ஆண்களை விடப் பெண்களின் படிப்பறிவு விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்று அநேகமாக எல்லாத்துறைகளிலும் பெண்கள் புலமை பெற்று விளங்குகிறார்கள். கிராமங்களிலும் முன்பிருந்ததை விடக் கணிசமான அளவு பெண்கல்வி அதிகரித்து வருகிறது. ஆனால் இவையெல்லாம் வெகு சாதாரணமாக, இயல்பாக நடந்திருக்கிறதா? இன்னமும் போராட்டத்திற்குப் பின் தான் கிடைக்கிறதா?

நகரங்களில் பரவாயில்லை. ஆனால் வளர்நிலை நகரங்களிலும் கிராமங்களிலும் இன்னும் போராட்டமாகத் தான் இருக்கிறது - பெண்களுக்கு இல்லாவிட்டாலும், பெண்களைப் பெற்றவர்களுக்கு! அவ்விடங்களில் பெரும்பாலும் பெண்களைப் படிக்கப் போட்ட பெற்றோரிடம் சமுதாயம் எழுப்பும் கேள்வி 'பொண்ணப் படிக்கப் போட்டுட்ட? அதுக்குத் தக்கன மாப்ள பார்க்கணுமே? உன்னால முடியுமா?" என்பது தான். இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், ஒரு தயக்கத்திலேயோ, ஒரு குருட்டு நம்பிக்கையிலேயோ, பல பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யதார்த்தம். அந்தத் தைரியம் இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் தறிகாரியாக, தீப்பட்டித் தொழிலாளியாக, தினக்கூலியாகவே வாழ்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது. 

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், இப்பொழுதும் பெண்களின் படிப்பு என்பது அப்பா கையிலோ, மாமா கையிலோ தான் இருக்கிறது. நல்ல அப்பா வாய்க்கப் பெற்ற குழந்தைகள் படித்த தலைமுறையாகவும், அது கிடைக்கப் பெறாத குழந்தைகள் பாவப்பட்ட தலைமுறையாகவும், நம் முன்னே கிடக்கும் போது, எப்படிச் சொல்வது பெண்ணுக்கு உரித்தான இடத்தை நாம் தருகிறோம் என்று?!

பெண்கள் பாதுகாப்பின்மை என்பதை விடப் பெரிய அதிர்ச்சி தருவது அதற்கு ஆண்கள் தரும் காரணங்களும் தீர்வுகளும். பொதுவாக தப்பிழைத்தவனுக்குத் தண்டனையும் அறிவுரையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் வழங்குவது தான் வழக்கம். ஆனால் பெண்கள் பிரச்சனை என்றால் மட்டும் பாதிக்கப்பட்டவளுக்கே தண்டனையும், அறிவுரையும் வந்து சேர்கிறது. அவளுக்கு எது நேர்ந்தாலும் அதற்குக் காரணம் அவள் செயல்பாடுகள் தாம் என்று கண்ணை மூடிக் கொண்டு தீர்ப்பு எழுதிவிடும் நமக்கு அது குறித்த எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. அதிகாரப்பூர்வமாகப் பெண்களின் பணி நேரத்தையும் அவள் வெளியே நடமாடும் நேரத்தையும் முறைப்படுத்துதல் என்ற போர்வைக்குள் சிறைப்படுத்தவே செய்யும் மனமிருக்கிறதே ஒழிய, அதன் பின்னான காரணங்களோ, ஆணின் வக்கிரங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற விவாதங்களோ கூட எழவில்லை என்ற நிலையில் எப்படிச் சொல்வது பெண்ணுக்குரிய இடத்தை நாம் தருகிறோம் என்று?!

பெண்கள் ஸ்பெஷல் என்று என்ன நடந்தாலும் அது அழகு, குடும்பம், பராமரிப்பு, உடல்நலம் இவற்றை மட்டுமே தொடர்புபடுத்தியிருப்பது ஏன்? (பெரும்பாலான)பெண்களுக்கான பத்திரிக்கைகள் கூட இவற்றை மட்டுமே பேசுகின்றன. அரசியல் பேசினால் என்ன? பொருளாதாரம் பேசினால் என்ன? ஆளுமை குறித்துப் பேசினால் என்ன? சுயமரியாதையைச் சொன்னால் என்ன? ஏன், பெண்களுக்காக இயங்கும் எதுவுமே உணர்வுத் தளத்தில் மட்டுமே இயங்குகிறது? அறிவுத் தளத்தில் இயங்க வேண்டிய அவசியம் இன்னுமா புரியவில்லை? அவளை ஒரு குடும்பத்திற்கானவளாகப் பார்ப்பது நமக்கு எளிதாகயிருக்கிறது. ஏன் அவளை ஒரு தேசத்திற்கானவளாகப் பார்க்கவே முடியவில்லை?! இதெல்லாம் இப்படியிருக்கும் போது, எப்படிச் சொல்வது பெண்களைக் கொண்டாடுகிறோம் என்று?!

போன வாரம் வரைக்கும் பெண்சிசுக் கொலை பற்றி மிகப் பெரிய தாக்கம் மனதில் இருந்ததில்லை. (இன்னமும் தர்மபுரி பகுதிகளில் இருக்கிறது என்று கேள்விப்பட்டாலும் கூட) அது outdated ஆகி விட்டது என்று தான் நினைத்திருந்தேன். பெண் குழந்தை பிறந்தாலும் அதை யாரும் வேறாக நினைப்பதில்லை என்று நான் நம்பிக் கொண்டிருந்த அத்தனையும் போன வாரம் உடைந்து நொருங்கியது.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், என் ஊர் நகரமுமல்ல, கிராமமுமல்ல, வளர்நிலை நகரம் என்று கூடச் சொல்லலாம். எல்லா வசதிகளும் ஊருக்குள்ளேயே இருக்கும். அப்படியான ஒரு இடம் தான். வழக்கம் போல, எங்கள் வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் சொத்துத் தகராறு உண்டு. அடிக்கொரு முறை வாய்ச்சண்டையாகப் போய்விடுவதும் நடக்கும். போன வாரச் சண்டையில் எதிராளி (அப்படித் தானே சொல்ல வேண்டும்?) - என் சித்தப்பா முறை தான் - சொன்னார், என் அப்பா ஆண்மையற்றவராம். காரணம் என்ன தெரியுமா? அவருக்கு இரண்டுமே பெண் குழந்தைகளாம். இந்த வாதம் அறிவியல் ரீதியில் லாஜிக் அற்றது என்ற போதும் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அதிர்ச்சிக்குக் காரணம் அவர் அநாகரீகமான வார்த்தைகளை என் அப்பாவிடம் வீசியதனால் அல்ல. அந்த மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதே பிறவிப்பலனாகக் கொண்டு பிறந்திருக்கும் சிலரைக் கண்டு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பெண் குழந்தைகளை இகழ்ச்சிக்குக் குறியீடாகக் கூட ஒருவரால் காட்ட முடியுமா என்பது தான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்! நான் வளர்ந்த சூழ்நிலை இதை நம்ப மறுக்கச் சொல்கிறது. 

எங்கள் மகிழ்ச்சி ஒன்றே தன் மகிழ்ச்சியென, எனக்கு எல்லாம் என் மகள் தான் -என்றிருக்கும் அப்பா என் சங்கர். சொல்லாத சொற்களின் அர்த்ததையும் புரிந்து கொண்டு தோள் கொடுத்து நிற்பவர் என் சங்கர். 

'பூரணமான வசதியிருந்தும் பெண்பிள்ளை இல்லாத வீடு ஒரு வீடா, வந்துட்டுப் போடா' என்று கெஞ்சிக் கெஞ்சி, நான் போகும் நேரமெல்லாம் என்னைத் தேவதை போல உணரச் செய்வார் என் சித்தப்பா.

'மலர் போலத் தூங்குவாள் என் மகள்' என்று என் உறக்கத்தில் கூட அவர் கண்பார்வைக்குள் என்னைக் காத்து நிற்கும் அன்பு நிறைந்த அப்பா எனக்குண்டு.

இப்படியெல்லாம் வளர்ந்த எனக்கு பெண் பிள்ளைகள் மேலிருக்கும் அந்தப் பங்காளியின் வார்த்தைகள் தூக்கி வாரிப் போட்டது. இத்தனைக்கும் அவருக்கும் ஒரு மகள் உண்டு. இரண்டாவது மகன். அந்தக் குழந்தையை நினைத்தால் எனக்குப் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. பெண் மட்டும் பெற்றவன் ஆண்மையற்றவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் அவர் வீட்டில் தன் தம்பிக்குக் கிடைக்கும் உரிமைகள் அவளுக்கு எப்படிக் கிடைக்கும்? வீட்டில் அடைத்து வைத்தால் மட்டும் தான் அடக்குமுறையா? இதுவும் பெண் அடக்குமுறை தானே?! பின் எப்படி சொல்வது பெண்கள் நாட்டின் கண்கள் என்று?!

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் வளர்ச்சிகள் இல்லாமலில்லை. ஆண்களைச் சாராமல் நிமிர்ந்து நிற்கும் வீரம் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. ஆணுக்கு பெண் அடிமையில்லை என்பது பெண்கள் மனதில் கனன்று கொண்டு தானிருக்கிறது. அவை தொடரட்டும். பெண்கள் வேண்டுவது 'ஐயோ பாவம்' என்ற சலுகைகள் அல்ல. நாங்கள் வேண்டுவதெல்லாம் வாய்ப்புகள். எங்களை நிரூபித்துக் கொள்ளும் வாய்ப்புகள். அவற்றை அடைய வழி செய்யும் சூழ்நிலைகள்.

கண்ணாடிப் பெட்டிக்குள் பூச்செடிகள் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அவற்றிற்குச் சுதந்திரம் கிடையாது. நாங்கள் வேண்டுவது கண்ணாடிப் பெட்டிகள் அல்ல. நிலைத்து நிற்கக் கொஞ்சம் நிலமும், ஊன்றி விட ஒரு கையும். புயலையும் மழையையும் சமாளிக்கும் திறன் எங்களுக்கு உண்டு. நம்புங்கள் இனியாவது.

மகளிர் தின வாழ்த்துகள்.

Sunday, 9 February 2014

சாகர் என்றால் கடல்


எனக்கொரு நண்பர் இருக்கிறார். சாகர் என்று பெயர். அவர் நட்பு கிடைத்தது என் வாழ்வின் அழகான தருணங்களுள் ஒன்று.

சாகர் டெல்லிவாலா. எப்படியும் 60+ வயதிருக்கும். அவர் ஒரு டாக்டர். பல மருத்துவ நிறுவனங்களில் Managing Director ஆக இருந்து விட்டு, ஒய்வுக்குப் பின், தன் மகன், மருமகள், பேரனுடன் இங்கே பெங்களூரில் தங்கியிருக்கிறார். அவர் எனக்கு Walking-mate(schoolmate, roommate போல). அதெப்படி, அருப்புக்கோட்டைக்கும் - டெல்லிக்கும் ஒரு இணக்கம் என்று நீங்கள் கேட்டால், அதற்கு ஒரு கதை இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அவர் என் அப்பா போல நிறம், நெற்றி, மூக்கு, ஹேர் ஸ்டைல் கொண்டவர். இவை போதாதா, அவர் மீது அன்பு கொள்வதற்கு!

அவருக்கும் இது தெரியும். அவர் மீது நான் கொண்ட நட்பு, என் அப்பா மீது கொண்ட பேரன்பில் சிதறிய மிச்ச சொச்சம் என்று! சில அல்லது பல நேரங்களில் அவரிடம் என் அப்பாவைத் தேடுவதுண்டு. ஆயிரம் தான் இருந்தாலும் என் அப்பாவுக்கு மாற்றாக வர முடியாது. அப்படி இருந்தாலும், என் அப்பாவின் நற்குணங்கள் கொஞ்சம் அவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் என் அப்பாவின் தோற்றத்தைக் கடன் வாங்கியிருப்பது என்பது என் நம்பிக்கை!

அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்கள். டெல்லியில் மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். என் அப்பாவை நான் அவரிடம் தேடுவது போல, சில சமயங்களில் தன் மகளை அவர் என்னிடம் தேடுவார். அட ராமா! அன்பு என்பது எப்படியாகப்பட்ட குணம் கொண்டது பாருங்கள்! எல்லைக் கோடுகளை அழித்து எவரோ இருவர் ஒரு புள்ளியில் அல்லது ஒரு உணர்வில் இணைகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது முட்டாள்தனமாக, என் அப்பா சொல்வது போல, அசட்டுத்தனமாக இருக்கும். ஆனால் அதனுள் இருக்கும் பரிபூரணம் எனக்கும் சாகர் அங்கிளுக்கும் மட்டும் புரியும்.

நாலைந்து நாட்களாக அவரைப் பார்க்கவில்லை. இடையில் எனக்குக் காய்ச்சலாக இருந்ததால், 2 நாட்கள் போகவில்லை. அவருக்காக கஷ்டப்பட்டுக் காய்ச்சலோடு போன நாட்களில் அவர் தாமதமாக வந்ததால் பார்க்க முடியவில்லை. கடவுள் கருணை, இன்று பார்த்தோம்.

நான்கு நாட்களாகப் பேசாதது அனைத்தையும் சேர்த்து வைத்துப் பேசினோம். முதல் நாள் போட்ட தும்மலிலிருந்து முந்தைய நாள் படித்த புத்தகம் வரை அவ்வளவையும் பேசியாகி விட்டது. அவரும் அது போலவே! ஜலதோஷத்தில் ஆரம்பித்து பிரணாப் முகர்ஜியில் போய் தான் முடித்தார்.

பேசும் போது இடையில் ஒரு வார்த்தை சொன்னார். கல்வெட்டில் பொறித்து வைத்துக் கொள்ளலாம்: 'எப்பேர்ப்பட்ட அப்பாக்களும் மகள்களுக்கு மென்மையானவர்கள் மை டியர்' என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

மேற்சொன்னவையெல்லாம் என் சாகர் அங்கிளின் அறிமுகம் மட்டுமே! ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு!

சாகர் அங்கிளுக்கு 'வாடா என் நல்ல பெண்ணே!' என்பதைத் தவிர வேறு தமிழ் தெரியாது. எனக்கு 'மேரே நாம் கியா ஹே' என்பதைத் தவிர வேறு இந்தி தெரியாது.

பலமொழிகள் கற்றுக் கொள்வதைப் பற்றி (ஆங்கிலத்தில்) பேசிக் கொண்டிருக்கும் போது கேட்டார்: "Baby! Do you know 'SUBRAMANYA BHARATHI'?" என்றார். எனக்கு ஒரு கணம் பூமி காலடியில் நழுவியது. 'என்ன கேட்டேங்க அங்கிள்?' என்றேன். அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டுத் தொடர்ந்தார். 'How many languages he knew?' என்று என்னமோ தொடர்ந்தார். நான் விழிகள் வியக்க அவர் வாயையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். 'What baby?' என்ற பிறகு தான் பிரக்ஞ்யே வந்தது.

தமிழ் என்பதே தெரியாத ஒருவருக்குப் பாரதி தெரிகிறது. அப்படியானால் தமிழர்கள் நமக்கு அவனைப் பற்றி எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? ஹ்ம்ம்..

சாகர் என்றால் கடல் என்று பொருள். உண்மை தான். என் சாகர் ஓர் அறிவுக் கடல். அது மட்டுமல்லாமல் அவர் அன்பிலும் கடல். கடலின் எல்லை கண்களுக்குப் புலப்படாது. நான் அதனுள்ளே போக முடியாது. கரையில் நின்றே ரசிக்க முடியும். ஆனால் அவர் அன்பலைகள் எனை வந்து போகும் ஓய்வில்லாமல். என் கரை நனைந்து கிடக்கும் சோர்வில்லாமல்.

அடச்சீ! இதென்ன அதிசயமா? அவர் அறிவும் அன்பும் எப்படி வந்ததாம்? என் அப்பாவின் தோற்றம் தந்ததல்லவா அது! இல்லையா பின்னே?!

தோழிக்கு ஒரு கடிதம்: நூல் அறிமுகம் - அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

அன்புள்ள ராஜி,

இன்று ஒரே சிட்டிங்-இல் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தேன். அந்த அனுபவத்தை வார்த்தைகளில் வடிப்பதில் நான் நிச்சயம் தோற்றுத் தான் போவேன். இருந்தாலும் உன்னிடம் சில வார்த்தைகளிலாவது சொல்லித் தான் ஆக வேண்டும். புத்தகத்தைப் படித்து முடிக்க என்னவோ இரண்டரை மணி நேரம் தான் ஆகியது. ஆனால் இது சொல்லும் விஷயங்களைப் புரிந்து கொள்ளவும் கிரகிக்கவும் வருடங்கள் பிடிக்கும். ஏன், நம்மால் புரிந்து கொள்ளப்படாமலே கூட போகலாம். அப்படியானதொரு புத்தகம் இது.

புத்தகத்தின் பெயர்: அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

ஆசிரியர்: மிகைல் நைமி. தமிழில்: கவிஞர் புவியரசு

வெளியீடு: விஜயா பதிப்பகம்
                                                                     

இந்தப் புத்தகத்தை எந்த வகைக்குள் சேர்ப்பது என்பதில் எனக்குப் பெரும் குழப்பம் இருக்கிறது. இது நாவலா, கதையா, சித்தாந்த நூலா, உண்மைச் சம்பவமா, புனைவா? தெரியவில்லை. வேண்டுமென்றால் புரிந்து கொள்வதற்கு எளிதாக 'வாழ்க்கை குறித்தான தேடல்' எனச் சொல்வது ஓரளவு பொருந்தும்.

நைமி லெபனான் நாட்டு எழுத்தாளர். அவருக்கு ஊரை விட்டு ஓடி வந்து டீ பாரில் வேலை பார்த்த அம்மை முகத்தான் ஒருவனின் நாட்குறிப்பு கிடைக்கிறது. அதில் காணப்படும் சம்பவங்களும், எண்ணவோட்டங்களும், தேடல்களுமே இந்தப் புத்தகம். (The Pitted face என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம்)

எல்லாம் அறிந்தவர்களின் மொழி மௌனம் என்று ஓஷோ சொல்கிறார். இங்கு எல்லாம் தேடுபவர்களின் மொழியும் மௌனம் என்று அம்மை முகத்தான் வாயிலாக நமக்குத் தெரிகிறது.

தான் யார்? என்ற கேள்வியின் வழி, வாழ்க்கைக் கூறுகளைத் தனக்குள்- தன் மௌனத்திற்குள் - விவாதிக்கிறான், அம்மை முகத்தான்(இனி, அ.மு என வரும்).

"மற்றவர்கள் மகிழ்ச்சிப்படுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பது ஆச்சர்யமல்ல. மற்றவர்கள் துக்கப்படுவதும் தனக்குத் துக்கம் தரவில்லை" என்று உலகத்திலிருந்தும், "மனதைக் கொண்டிருக்கும் ஓர் உடலல்ல நான், மாறாக ஓர் உடலைக் கொண்டிருக்கும் மனம்" என்று தன்னிடமிருந்தும் தனித்து நிற்கிறான். எதன் மீதும் ஒரு பற்றில்லாமல், அதே நேரத்தில் அனைத்தையும் சமமாய் அன்பு பாவிக்கும் ஆத்மாவாக அ.முவின் எண்ணங்கள் இருக்கின்றன.

மனிதர்களின் மனத்தில் எல்லைக்கோட்டைப் போடும் தேசங்களின் பிரிவினை குறித்த அவனது சிந்தனை சாதாரணர்களுக்கு வாய்க்காது. நாடு என்ற வரையறைக்குள் நின்று கொள்ள அவன் தயாரில்லை. இந்த பிரபஞ்சம் முழுதும் அவனுக்கானது என்கிறான். அதே நேரத்தில் தன் ஆத்மாவும் உடலும் கூட தன்னுடையதில்லை, தன் இரத்தம், தசை, உணர்ச்சிகள் எல்லாவற்றிலும் உலகத்தவர் பங்கும் உள்ளது என்று சொல்வது என்ன அழகான சிந்தனை!

எதன் மீதும் பற்றுக் கொள்ளாதவனான அவனுக்குமே ஒரு கட்டத்தில் அந்த பாருக்கு வரும் சென்னா செரிப் என்பவருடன் ஒரு சின்ன இணக்கம் ஏற்படுகிறது. தன் அறையில் இருக்கும் பூனையையும் தோழனாய்ப் பாவிக்கும் மனமும் இருக்கிறது. நூலின் இந்த மாதிரியான இடங்கள் பெரும் சிந்தனைக்குரியவை. அவற்றை வார்த்தைகளில் விளக்கவே முடியாது.

வாழ்க்கை போர்க்களம் என்று சொல்லித் திரியும் நமக்கு அது உலைக்களமில்லையா என்று எதிர்வாதம் வைக்கிறான். போர்க்களங்கள் மரணத்தைக் கொண்டு செலுத்தும். உலைக்களங்கள் உலோகத்தின் அழுக்கையெல்லாம் களைந்து புதியவைகளைக் கொண்டு வருமல்லவா என்பது வாழ்க்கை குறித்த வேறுபட்ட, நுட்பமான கோணம்.

மொழி மனிதனுக்கானது. அவற்றை மனிதன் தான் ஆள வேண்டும். அது மனிதனை ஆளும் நிலை வரக்கூடாது என்கிறான்.

மரணத்திற்கும் அ.மு க்கும் மற்றும் அ.முவிற்கும் பூனைக்குமிடையே நிகழும் மரணம் பற்றிய உரையாடல்கள் அர்த்தம் நிறைந்தவை. அவற்றை முழுதாய்ப் புரிந்து கொள்ள எனக்கு முதிர்ச்சி பத்தாது. ஆனால் அவனது ஒரு கேள்வி மிகவும் முக்கியமானது. 'மரணத்துடன் ஏன் வேதனை தொடர்பு கொண்டதாக இருக்கிறது? வேதனையைத் தவிர, வேறு ஒரு படைத்தலைவன் மரணத்திடம் இருந்தால், அதனைக் கண்டு உலகம் இவ்வளவு அச்சப்படாது. இவ்வளவு வெறுப்புக் காட்டாது' என்கிறான். இதே கருத்தை எளிய நடையில், 'பிரச்சனை மரணமல்ல, வலிகள்' என்று மாலன் எழுதியிருப்பார்.

'உன் உயிலை எழுதிவிடு' - இந்த 3 வார்த்தைகளுக்குள் எவ்வளவு அர்த்தங்கள்!

இறுதியாக அவன் தன் உயிலைப் புழுக்களுக்கு எழுதி வைக்கிறான். நூலில் அந்த இடம், அடடா! அத்தனை அற்புதம்! பொதுவாக மனதைத் தொட்ட வரிகளுக்கு அடிக்கோடிட்டு வைப்பது என் வழக்கம். புத்தகம் இந்த ஐந்தாறு பக்கங்களுக்கு ரூல்டு நோட்டாகத் தான் மாறிப் போனது.

இறுதியில் ஒரு சின்ன முடிச்சுடன் நூல் முடிகிறது. அதெல்லாம் உண்மையா, புனைவா என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை. சொல்லப் போனால் அந்தத் தெளிவு தேவையுமில்லை.

மொத்தத்தில் இந்த நூல், வாழ்க்கையை - அதன் கூறுகளை - ஞானி மனநிலையில் ஆராய்கிறது. சில விஷயங்கள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சில கருத்துக்கள் அதன் அடர்த்தி காரணமாக முழுதாகப் புரிந்து கொள்ள முடியவிலலை. அது தவறில்லை. இது ஒரு இரவில் வாசித்து, படித்ததாய் முடித்து விடும் நூல் அல்ல. மாடு அசைபோடுவது போல், மெல்ல மெல்ல மனம் அசை போட்டுப் பார்க்க வேண்டிய பெட்டகம் இது. இன்று எனக்குப் புரியாதவைகள், அடுத்த வாசிப்பில் புரியலாம். முழுதாய்ப் புரிய முதிர்ந்த மனம் வேண்டும். அது நம் வாழ்நாளில் கிடைக்குமாயின் நாம் புண்ணியாத்மாக்கள்.

நான் முதலிலேயே சொன்னது போல, இந்த நூல் அனுபவம் குறித்து என் மனதில் எழுந்ததையெல்லாம் என்னால் வார்த்தைகளில் விளக்கும் பக்குவம் எனக்கு இருக்கவில்லை. அதையும் நைமியின் வரிகளிலேயே சொன்னால்,

'வெளிப்பாடு தான் நோக்கத்தைத் திருத்தி ஏமாற்றி விடுகிறது. நான் நினைத்தது இதுவல்ல'

அன்புடன்,
மகிழ்வதனா,
கற்பனையூர்
 

Saturday, 8 February 2014

தோழிக்கு ஒரு கடிதம்: நூல் அறிமுகம் - செடல்

அன்புள்ள ராஜி,

உன்னுடன் பேசி மாதக்கணக்காகி விட்டது. நலம் தானே?

விஷயம் வேறு ஒன்றுமில்லை. வழக்கம் போல, நான் படித்த புத்தகம் பற்றிச் சில வார்த்தைகளை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 10, 12 நாட்களாக ஓர் அருமையான புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். நேற்றுக் காலையில் தான் முழுவதும் முடித்தேன். கையோடு உனக்குக் கடிதமும் எழுதி விட்டால் தான் படித்தது முழுமை பெறும்.

புத்தகத்தின் பெயர்: "செடல்"
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்

                                                 

என்ன இது 'செடல்'? 'வித்தியாசமான பெயராக இருக்கிறதே' என்று உன் புருவங்கள் உச்சி தொட்டு இறங்கி வருவது எனக்குத் தெரிகிறது. செடல் என்றால் ராட்டினமாம். மெரீனா பீச்சில் பார்த்திருப்பாய்.

பொட்டுக்கட்டுதல் என்று அறியப்படும் தேவதாசி முறை பற்றி நீ அறிந்திருப்பாய். அப்படி பொட்டுக் கட்டி விடப்பட்ட தலித் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது.

கூத்தாடிக் குடும்பத்தைச் சேர்ந்த கோபால்-பூவரும்பு தம்பதிக்கு எட்டாவது மகளாகச் செடல் பிறக்கிறாள். மகனாக எதிர்பார்த்து மகளாகிப் போனதால் வேண்டாத பிள்ளையாக வளர்கிறாள். மழை தண்ணி பொழியாமல் அந்தக் கிராமம் வறண்டு கிடக்கிறது. அதற்குக் காரணம் பொட்டுக்கட்டி விடாதது தான் என்று சில "அறிவுஜீவிகள்" கண்டுபிடிக்கிறார்கள்.

பொதுவாக தலித் ஜாதியினரை, அதிலும் குறிப்பாக கூத்தாடிப் பரம்பரையைச் சேர்ந்த கன்னிப் பெண்களையோ அல்லது சிறுமிகளையோ தான் பொட்டுக் கட்டி விடுவார்களாம். அப்படிப் பொட்டுக் கட்டி விடப்பட்டவர்களுக்குத் திருமண வாழ்வு மறுக்கப்படுகிறது. அந்த ஊர்ச் செல்லியம்மன் கோவிலில் பள்ளுப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, திருவிழாவின் போது செல்லப் புள்ள ஆட்டம் எல்லாம் ஆட வேண்டுமாம். தங்கள் ஒரு கிராமத்துக்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள 18 கிராமங்களிலும் திருவிழாவிற்கு இவர்கள் தான் பள்ளுப் பாடி ஆரம்பிக்க வேண்டுமாம். அதுவும் போக, ஊரில் குழந்தைகள் பிறந்தால் தாலாட்டுப் பாடுவது, எழவு விழுந்தால் ஒப்பாரி வைப்பது, அம்மை நோய் கண்டவர்களுக்குப் பாடுவது போன்றவை அவர்களின் வேலைகள். அவர்களுக்குத் திருவிழாவின் போது, நெல், வரகு போன்ற தானியங்கள், துணிமணிகள், அரிசிச் சோறு போன்றவற்றை ஊர்க்காரர்கள் தர வேண்டுமாம். அது போல "விசேஷ" வீடுகளுக்குப் பாடப் போகும் போது, அந்தந்த வீட்டுக்காரர்கள் முடிந்ததைச் செய்வார்கள். இப்படித் தங்கள் ஒரு மகளாவது வயிறாற சாப்பிடட்டுமென்று தாங்களே முன்வந்து தங்கள் பிள்ளைகளை பொட்டுக் கட்டி விடுவார்களாம்.

கோபால்-பூவரும்பு சம்மதத்தையும் மீறி செடல் பொட்டுக் கட்டப்படுகிறாள். அதுவும் அவள் சிறுமியாக இருக்கும் போதே! தான் பொட்டுக் கட்டப்படுகிறோம் என்பதே அறியாதவளாக இருக்கிறாள். அவளைக் கோவிலுக்கருகில் ஒரு சிறு வீட்டில் போட்டு, ஒரு கிழவியின் கண்காணிப்பில் தனது தாய், தந்தை, உடன்பிறந்தவர்களிடமிருந்து பிரித்து வைக்கப்படுகிறாள். அங்கிருந்து ஆரம்பமாகிறது அவள் தனிமைப்பட்டு நிற்பது. நாவலின் கடைசி வரை எந்தப் பிடிமானமும் இல்லாமல் அவள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனிமைப்படுத்தப்படுகிறாள்.

செடலிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவள் பெற்றோர்கள் பிழைப்புத் தேடிக் கண்டிக்குச் சென்று விடுகிறார்கள். அது நாள் முதல், கிழவியின் வசைகளுக்கு ஆளாகி, அது தான் விதி என்று ஏற்றுக் கொண்டு காலம் கழிகிறது.

கிழவி இறந்த பின்னான இரக்கமற்ற ஒரு மழை நாளில் செடல் பெரிய பெண்ணாகிறாள். அப்பொழுது பார்த்து அவள் வீடும் இடிந்து விழுந்து விடுகிறது. அவள் சொந்தக்காரர்களிடம் புகலிடம் கிடைக்கவில்லை. அண்டிக் கொள்ள இடம் தேடி, அறங்காவலர், கோவில் பூசாரி போன்ற ஆதிக்கக்காரர்களின் வீடுகளில் அவள் அலைவது கொடுமை. கோவில் பூசாரியிடம், தான் பெரியவளாய் ஆகி விட்டதை அவள் சொல்லுமிடத்தைப் படிக்கும் போது, மனதில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட கனம் இருந்தது.

தனிமை எவ்வளவு கொடுமையானது ராஜி. எல்லாரும் இருந்தும், எல்லாமும் இருந்தும், இன்னும் ஒவ்வொரு மாத வலிகளின் போதும் அப்பாவின் அரவணைப்பு என்ற ஒன்று எவ்வளவு அவசியப்படுகிறது நமக்கு! எனக்கெல்லாம் அவர் போனை எடுக்கக் கொஞ்சம் கால தாமதம் ஆனாலும் மரணத்தின் வாயிற் கதவைத் தட்டி விட்டு வரும் துன்பமிருக்கும். நமக்கு எல்லோரும் இருந்துமே இப்படியென்றால், யாருமில்லாத, எதுவுமில்லாத செடல் என்ன பாடுபட்டிருப்பாள்! இதை எழுதும் போதே எனக்குக் கையெல்லாம் நடுங்குகிறது ராஜி.

அந்த நேரம் பார்த்து அவளின் சொந்தக்காரனான பொன்னன் தன்னுடன் அழைக்கிறான். விரக்தியில் யாருக்கும் தெரியாமல் பொன்னனுடன் அவன் கிராமத்தை நோக்கி நடக்கிறாள். இத்துடன் நாவலின் முதல் பகுதி முடிகிறது.

முதல் பகுதி முழுவதும் சிறுமியாய் இருந்த செடல், இரண்டாம் பகுதியில் இளம் பெண்ணாக ஆகிறாள். அவளோடு சேர்ந்து அவள் பிரச்சனைகளும் வளர்கிறது. தவிர்க்க முடியாத சூழலில், 'கூத்தாடி' பொன்னனுக்கு உதவப் போக, கூத்து அவளை விடாமல் பிடித்துக் கொள்கிறது, அடுத்தடுத்த கட்டங்களில். 'பொன்னன் செட்டு' என்ற பெயர் போய் 'செடல் செட்டு' என்றாகிறது - அவள் திறமையாலும், பெண் என்ற பெயரினாலும்.

சின்னச் செடியாய் இருக்கும் போதே, பிடுங்கிப் போட நேரம் பார்க்கும் உலகம், கனி விளைந்த மரமாய் இருக்கும் போது கையைக் கட்டிக் கொண்டிருக்குமா? ஆடவர்களின் கண்களிலிருந்தும், கைகளிலிருந்தும் அவளைக் காத்துக் கொள்ளப் பெரும் போராட்டமாக இருக்கிறது. அவள் தனிமையை, வறுமையை, பாதுகாப்பின்மையைக் குறி வைத்து எத்தனை கோட்டான்கள்! அவற்றிற்கு, தன் உடல் தேவைகளுக்கு, உணர்வு மயக்கங்களுக்கு அவள் பலியாகாமல் 'தன்னைக்' காத்து வந்தாலும் அவளை நோக்கி எய்யப்பட்ட வசை அம்புகள் எத்தனை, எத்தனை! படிக்கும் நமக்கே அயற்சியாக இருக்கிறது. இந்தப் பகுதியில் தொப்பளான், ஆரான், விட்டம், விருத்தாம்பாள் என நிறைய கேரக்டர்கள். பொன்னன் இறந்து, 'செடல் செட்டு' இரண்டாய்ப் பிரிந்த பின், அவள் சகோதரியும் மகனும் பழையபடி கிராமத்துக்கே அழைக்கிறார்கள். வேறு வழியின்றி அவர்களுடன் புறப்படுகிறாள். அதனுடன் இரண்டாம் அத்தியாயம் முடிவு பெறுகிறது.

மீண்டும் சொந்த மண்ணில் ஜாதி ஜனங்களோடு இருக்கலாம் என்று தவிப்பில் வரும் செடலுக்குக் கிடைப்பதென்னவோ புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே! வனமயிலின் மகன் பரஞ்சோதியுடன் ஒரு பிடிமானத்திற்கு ஏங்கி நிற்கும் போது, அவனும் மாதா கோவிலில் சேர்ந்து கொள்கிறான். கிறிஸ்துவத்தின் அறிமுகம் தலித் மக்களிடம் எந்தெந்த சூழ்நிலைகளில் உள்நுழைகிறது என்பது நாவலில் ஆங்கங்கே ஊடு பாவாய் ஓடியிருக்கிறது. இப்படி யாருமற்றவளாய் இருக்கும் போது, தன்னைப் போன்ற பொட்டுக் கட்டி விடப்பட்ட உடல் நலமில்லாத கூத்தாடியான பாஞ்சாலியுடன் அவளது வாழ்க்கை தொடர்கிறது. சில நாட்கள் அவளுக்கு ஆறுதலாக இருக்கலாம். அதன் பின் அவள் என்னாவாள்? அவளின் எதிர்காலம் என்னவாகும்? இந்த நாவலின் பல கேரக்டர்கள் அடிக்கடி சொல்வது போல், அவள் கண்ணை மூடிய பின், அவளைக் குழியில் தள்ள யார் இருப்பார்கள்? இது போன்ற கேள்விகளைக் கேட்காமல் கேட்டு முடிகிறது நாவல்.

செடல் - வாழ்க்கை முழுக்க வெறுமையைச் சுமந்து கொண்டிருப்பவள் கதை; சமுதாயப் பழக்க வழக்கம் என்ற பெயரில் அவள் வாழ்வைச் சீர்குலைத்த கதை; ஆதிக்க வெறி தலித் மக்களின் மேல் அளவின்றிப் பொழிந்த கதை;

நாவலின் மொழி நடை பல இடங்களில் மனதைப் பிசையும். களங்களைக்  காட்சிப்படுத்துதலில் இமையத்தின் திறமை இமய அளவு. கூத்துப் பாட்டுக்கள் இரண்டாம் பகுதியில் அதிகம் வருகிறது. அவை நம்மைப் போன்ற 'கூத்து' என்பதை அறியாத தலைமுறையினருக்கு வித்தியாசமாகவும் ரசனையாகவும் இருக்கிறது.

படித்துப் பார்! உன் இதயத்தின் கதவுகள் அனைத்தையும் இறுக மூடிக் கொண்டு படித்தாலும், ஒரு கணமேனும் உன்னை உருக்குலைய வைக்கும் அவள் படும் பாடு!

அன்புடன்,
மகிழ்வதனா,
கற்பனையூர்

Thursday, 23 January 2014

தாயகம் கடந்த தமிழ் - 2014


'தாயகம் கடந்த தமிழ்' மாநாடு பற்றிச் சில வார்த்தைகள்

மிக மிக அருமையான மாநாடு. மிகச் சிறந்த ஏற்பாடு. முதலில் இந்த மாதிரியான மாநாடு நம் காலத்தில் நடக்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றதற்கு நாம்(ன்) நல்ல உள்ளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனை சிறப்பு!

ஜனவரி 20, திங்கட்கிழமை மாலை தொடக்க விழா நடந்தது. உயர்நீதி மன்ற மாண்புமிகு நீதிபதி திரு.ராமசுப்ரமணியன் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தினார். முனைவர் ம.திருமலை மாநாட்டுக் கட்டுரைகளைக் கொண்ட, 'தாயகம் கடந்த தமிழ்' நூலை வெளியிட்டார். அன்றைய தினம் நம் மாலன் மற்றும் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் உரை நிகழ்த்தினர்.

அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க அமர்வுகள்.

முதலாம் அமர்வு: தாயகத்தைக் கடந்த தமிழ் இலக்கியங்கள் குறித்த ஓர் அறிமுகம். (இங்கு தாயகம் என வரையறை செய்யப்பட்டிருப்பது சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் ஈழ நாடும்)  சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பியத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான மிகச் சிறந்த ஓர் அறிமுகமாக இருந்தது. அவைகள் தோற்றம் முதல் தற்காலம் வரை என்னென்ன மாற்றங்கள் பெற்றிருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.

இரண்டாம் அமர்வு: தாயகம் பெயர்தலில் இருந்த/இருக்கும் வலியையும் வாழ்வையும் இலக்கியங்களில் பதிவு செய்திருப்பது தொடர்பான அமர்வு. பொருள் தேடி தாயகத்தை விட்டுச் செல்வோர், அரசியல் நிர்பந்தம் காரணமாக தாயகத்தை விட்டுச் செல்வோர் என இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொண்டு, தலைப்பு குறித்த செழுமையான அறிமுகத்தோடு மாலன் தொடங்கி வைத்தார்.

மூன்றாம் அமர்வு: பெண்ணெழுத்து குறித்தான அமர்வு. பெண் எழுத்தாளர்களின் மொழி நடை, கருப்பொருள் தேர்வு, அவர்கள் முன்னுள்ள சவால்கள், உடைத்தெறிந்த/உடைபட வேண்டிய தடைகள் குறித்து ஆழமான பார்வையை முன்வைத்தது. இதில் அதிகம் ஈழ எழுத்துப் பின்புலம் இருந்தது சிறப்பு.

நான்காம் அமர்வு: தமிழ் வளர்ப்பில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் பற்றியது. முரசு அஞ்சல், செல்லினம் கண்டுபிடிப்பாளர் முத்து நெடுமாறன் அவர்களின் பேச்சு, பார்வையாளர்களை அதிகம் கவர்ந்திழுத்தது எனலாம். e-book, video enabled e-book, virtual university பற்றிய ஆழமான புரிதலைக் கொடுத்தது அடுத்தடுத்த பேச்சாளர்களின் கட்டுரைகள்.

ஐந்தாம் அமர்வு: ஊடகத்தில் தமிழ் மொழி பற்றியது. வானொலி, பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம் என்று அத்தனையிலும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது அழகு.

ஆறாம் அமர்வு: மொழிபெயர்ப்பு பற்றியது. தனிப்பட்ட முறையில் என்னை மிக மிக மிகக் கவர்ந்த அமர்வு இது எனலாம். மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் குறித்து எனக்கு நேற்று வரைக்கும் மிகப் பெரிய அபிமானம் இருந்ததில்லை. என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அப்படிப்பட்ட புத்தகங்களைக் கையால் தொடுவேன். கர கர மொழியாக இருக்கும் என்பது, அதைப் படிக்காமலேயே அல்லது சரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்காததால், எனக்குள் இருந்த எண்ணம். அதையெல்லாம் புரட்டுப் போட்டு விட்ட அமர்வு இது. ஆற்றல் வாய்ந்த அறிஞர்கள் அத்தனை பேரும். 'ஆ'வென்று என்னை மறந்து வியந்திருந்த அமர்வு இது.
ஏழாம் அமர்வு: தாயகத்திற்கப்பால் தமிழ்க்கல்வி பற்றியது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறுபட்ட நாடுகளில் தமிழ்ப்பள்ளி நடத்துபவர்கள் தங்கள் அனுபவத்தையும் சவால்களையும் சில கேள்விகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மேலே சொன்னவைகள் அனைத்தும் மாநாடு குறித்த மிகச் சிறிய overview.

400 முதல் 500 பேர் மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். இதில் கணிசமான அளவு இளைஞர்கள் இருந்தார்களா எப்படி எனத் தெரியவில்லை. நிறைய கல்லூரி மாணவர்கள் கண்ணில்பட்டார்கள். நிறைவு விழாவில் கருத்து கேட்கும் போது அவர்களிடமும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என்பது என் சின்ன மனக்குறை. இளைஞர்களை மையப்படுத்தி எப்பொழுதும் பேசியும் எழுதியும் வரும் மாலன், பேராசிரியர், படைப்பாளர்களிடம் கருத்துக் கேட்டது போல, ஒரு கல்லூரி மாணவரைப் பிடித்துக் கேட்டிருந்தால், இளைஞர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்திருக்க முடிந்திருக்கும். நேரமின்மை மட்டும் தான் இந்த விடுபடலுக்குக் காரணமாக இருந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே! பரவாயில்லை. அவர் வேறு ஏதேனும் வழிமுறைகள் மூலம் அவர்கள் கருத்தை அறிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

இந்த மாநாடு ஏன் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்கு என்னிடம் சில காரணங்கள் இருக்கின்றன. (இங்கு இளைஞர் என்பதை என்னைப் போன்ற அல்லது நான் பார்த்த வரைக்குமான இளைஞர்கள் எனக் கொள்க)

1. ஒரு நிகழ்வை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை நாம் இவர்களிடமிருந்து பயில வேண்டும். அமர்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்புகள், அடடா, அற்புதம். ஒரு பொருளின் கீழ் ஒட்டு மொத்த வகைகளையும் மையப்படுத்தி இருந்தது மிகச் சிறப்பு.

2. இலக்கியம் படிக்க ஆரம்பித்திருக்கும் இளைஞர்களுக்குப் பிற நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான ஒரு கழுகுப் பார்வையைக் கொடுத்தது.

3. புத்தகங்கள் என்பவை வெறும் கதையும் வார்த்தை விளையாட்டும் மட்டுமல்ல. அவை ஒரு சமூகத்தின் சிரிப்பு, கண்ணீர், துக்கம், போராட்டம், மௌனம், கோபம், பண்பாடு என்ற அத்தனையையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

4. மொழி வழிப் பிணைப்பு என்பது அரிதாகி வரும் இன்றைய ஐடி வாழ் சூழலில் அவை குறித்த அழகான சிந்தனைகளையும் பெருமிதத்தையும் தூண்டியிருக்கிறது.

5. திருவள்ளுவர், ஜெயகாந்தன், சுஜாதா எழுதியது மட்டும் கொண்டது எழுத்துலகம் அல்ல. அது அதை விடப் பெரிது மற்றும் ஆழமானது எனச் சிலர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

6. எந்தவொன்றும் காலத்திற்கும் அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், அது அறிவியல் வழி மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை. அந்த விதத்தில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் நம்மை அடுத்த தளத்திற்குச் சிந்திக்க வைக்கின்றன.

7. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று அவன் எளிதாகச் சொல்லி விட்டான். அதிலிருக்கும் சவால்களை அவர்கள் கூறக் கேட்டு, எனக்குத் தமிழின் மீது பற்று பிய்த்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்ப்பில் படும் பாட்டை முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறிய பின், அப்படிப்பட்ட அழகுத்தமிழை நாம் ஏன் இன்னமும் படிக்காமல் கிடக்கிறோம் என்ற குற்ற உணர்வு வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டுரையில் மாலன் சொல்வார்: 'தமிழைப் பற்றி மிகைப்படப் பேசியிருக்கிறோம். ஆனால் அதன் நயங்களை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தியிருக்கிறோமா?' என்று! அது உண்மை தான் போல! எப்படி இவ்வளவு நாள் இது நம் கண்ணில் படாமல் போனது? போன தலைமுறைகளின் தலையில் உரிமையாக ஒரு குட்டு வைத்தால் நான் கொஞ்சம் நிம்மதியடைவேன்.

8. இன்னொரு சிறு நெருடல். பேசிய பேச்சாளர்களில் நிறையப் பேர், இக்காலத்து இளைய தலைமுறையின் மீது ஒரு அவநம்பிக்கையில் இருப்பது போலத் தெரிந்தது. அவர்கள் எண்ணம் ஓரளவுக்கு உண்மைதான் என்ற போதும், சில நேரத்தில் சங்கடமாக இருந்தது. இவ்வளவு அவநம்பிக்கை தேவையில்லை! நாங்கள் முட்டாள்கள் இல்லை. தமிழ் படிக்க விருப்பமில்லாதவர்கள் இல்லை. எங்களுக்கு தமிழ் குறித்து, அதன் நயம் குறித்துத் தெரியவில்லை. அவ்வளவு தான். தமிழறிஞர்கள் நீங்கள் அதை எங்களுக்குப் புரிய வைப்பது உங்கள் கடமை. அதன் பின்னும் நாங்கள் திருந்தவில்லை என்றால் அது எங்கள் தலையெழுத்து. அதாவது தேசத்தின் தலையெழுத்து. ஆனால் நாங்கள் அவ்வளவு தூரம் வேர்களைத் தூற்றுபவர்கள் கிடையாது என்ற நம்பிக்கையுடன் எங்களைத் திட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு குட்டுக்கும் பின்னே எங்கள் மீதான வெறுப்புகள் வேண்டாம். நம்பிக்கை மட்டும் இருக்கட்டும் என்று மெல்லாமாய்க் கூறிக் கொண்டு ஓடி விடுகிறேன்.

மொத்தத்தில் மிக நல்ல வாய்ப்பு இது. மிகவும் சிறப்பாக அமைந்தது. மகிழ்வாகவும் அமைந்தது. அது சரி, மாலன் தொட்ட எது துலங்காமல் போனது, இது போவதற்கு! :)

Monday, 6 January 2014

தோழிக்கு ஒரு கடிதம் - நூல் அறிமுகம்: வனவாசம்

அன்புள்ள ராஜி,

உன்னிடம் சில விஷயங்கள் பேச வேண்டும். நேரிலோ, போனிலோ பேச முடியுமென்றாலும் நான் கடிதம் வழி பேசுவதையே அதிகம் விரும்புகிறேன். இங்கு தான் நீயும் நானும் மட்டும் இருப்போம். மற்றவைகளில் நம் சூழலும் நேரமும் ஒட்டுக் கேட்கும்.

நாம் அன்றைக்கு புத்தக வாசிப்பு பற்றிப் பேச ஆரம்பித்தது, கடிகாரத்தின் கண்டிப்பில் பாதியில் முடிக்கப்பட்டு விட்டது. இன்று அதை இரு நிமிடங்கள் தொடர விழைகிறேன்.

ராஜி, இரண்டு, மூன்று நாட்களாக கடுமையான மன அழுத்தம். அதிலிருந்து வெளிவர விரும்பி, என்னென்னவோ செய்து பார்த்தேன். அழுக்காய்க் கிடந்த அத்தனை துணிகளையும் பொறுமையாகத் துவைத்தேன். நேர்த்தியாக இருந்த அத்தனை உடைகளையும் கசக்கி, மீண்டும் அயர்ன் பண்ணி மடித்து வைத்தேன். கால் வலிக்க நடந்தேன். காது வலிக்கப் பாடல் கேட்டேன். கண்ணில் பட்டதையெல்லாம் படித்தேன். கடைசியில் அதில் கொஞ்சம் பலன் கிடைத்தது.

புத்தகங்கள் போதை என்பதில் எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இருந்ததில்லை. போதை பாதை காட்டாது, மாறாக அவற்றை மறைக்கும். ஆனால் புத்தகங்கள் அப்படியல்ல. அவை ஒரு வகைத் தியானம் என்று சொல்லலாம். எவ்வளவு மனப் பிரச்சனைகளின் ஊடேயும், நிகழ் உலகத்திலிருந்து நம்மைக் கடத்திச் சென்று, வேறொரு உலகத்தில் நம்மைக் குவிக்க வைக்கும். புத்தகங்கள் - ஆள் மயக்கி! அவைகளுக்குக் காலை மாலை பேதம் கிடையாது. எப்பொழுது திறந்தாலும் அதே வாசனை. அதே போதனை.

அப்படியானதொரு புத்தகத்தைத் தான் இந்த வார விடுமுறையில் படித்தேன். பழைய பாடல்கள் குறித்து நாம் சிலாகித்தும் விமர்சித்தும் பேசிய இரவுகள் இன்னும் மனதில் இருந்து விடியவில்லை. 'அவனிடம் நான் சொன்னேன் என் அஞ்சுதலை. அந்த அண்ணலே, தந்து வைத்தான் ஆறுதலை' - எப்படி மறக்க முடியும் ராஜி இந்த வரிகளை?

ஆம், அந்த வரிகளுக்கு உரிமையாளன் கண்ணதாசன் சுயசரிதையாகிய 'வனவாசம்' தான் அது! 'கண்ணதாசனிடம் தமிழ் நில் என்றால் நிற்கும். உட்கார் என்றால் உட்காரும்' என்று அந்தக் 'காவியத்தாயின் இளைய மகனை'ப் பற்றி என் பிரியத்திற்குரியவர் பேச்சில் கேட்டேன். கண்ணதாசன் திரைப்படப் பாடல்களைத் தாண்டி, அவரைப் படிக்க நான் ஆசைப்பட்டேன். அதன் தொடக்கமாக 'வனவாசத்தை' எடுத்தேன். நீ கேட்கலாம். எழுதியதைப் படிக்காமல், எழுதுபவனைப் படித்து என்ன பிரயோஜனம் என்று! என் பார்வையில், எழுதுபவனைத் துதிக்கவோ தூற்றவோ வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தப்பில்லை. அவனைப் பற்றித் தெரிந்து கொண்டால், அவன் வாழ்ந்த காலத்திய சூழல் பற்றித் தெரிந்து கொண்டால், அவன் எழுத்துக்களை முழுதாகப் புரிந்து கொள்ள முடியும். எழுத்துகளின் பின் உள்ள நேர்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தப் புத்தகம் இரைச்சலான சுய தம்பட்டமாக இல்லாமல், வறண்ட சோக கீதமாக இல்லாமல், எளிமையாக 'இது தான் நடந்தது' என்ற பாணியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இப்படி நடந்தது? அது சரியா தவறா? அதற்கான விவாதங்கள், ஒப்புதல்கள், மன்னிப்புகள் எங்கேயும் இல்லாதது இந்நூலைச் சிறப்பிக்கிறது. நூல் முழுக்க, 'நான்' என்று எழுதாமல் 'அவன்' என்று எழுதியிருப்பது படிப்பவனுக்கு ஒரு இலகுத்தன்மையைத் தருகிறது.

கண்ணதாசன் முன்னுரையிலேயே சொல்லியிருக்கிறார்: 'எப்படி வாழ வேண்டும்? என்பதற்கு இது நூலல்ல! எப்படி வாழக்கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி' என்று.

அவர் பிறப்பு, வளர்ப்பு என்று பெரிதாக ஒன்றும் விளக்காமல் நேரடியாக வேலை தேடிச் செல்வதில் ஆரம்பித்து, அவர் பட்ட கஷ்டங்கள், அடைந்த வாய்ப்புகள், நழுவல்கள், தவறுகள், கட்சியில் சேர்ந்தது என்று ஒரு நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்துடன் விரிகிறது. கவிஞரின் மொழி நடை அத்தனை அருமை!

அவர் மேற்கோள் காட்டும் உதாரணங்கள், ஆங்காங்கே வரும் பொதுவுடமைக் கருத்துகள் அனைத்தும் அழகு!

உதாரணத்திற்கு உனக்காக சில:
---
எவ்வளவு மகிழ்கிறார்கள்! கவலை இருக்கிறதோ, இல்லையோ பசி இல்லை! அது இருந்தால் காதல் இவ்வளவு உற்சாகமாக இருக்காது!

நாலணா முள்ளங்கியை ஐந்தணா ஆக்கினான். ஓரணா கீரை தானாகவே ஒன்றரை அணா ஆயிற்று. இப்படி எல்லாக் காய்கறிகளும் அவனுக்காகத் தங்கள் விலையை உயர்த்திக் கொண்டன.

நடத்தப்படும் படகு கரை வரை சேர்கிறது. சிதறி விழும் கட்டையும் காலங்கடந்தாவது கரைக்கு வந்து விடுகிறது. முடியுமானால் படகாவோம். இல்லையென்றால் கட்டையாவோம். என்றேனும் ஒருநாள் கரை சேர்வோம் என்று அவன் நம்பினான்.

சட்டையில்லாத திறந்தமேனி, முதன்முறையாக போலீஸ் காவலுக்கு ஆளானது

நெடுநேரம் தூங்குகிறவனையே செத்துவிட்டவனாக நினைத்துக் கொத்தித் தின்னும் கழுகுகள், உண்மையிலேயே செத்துவிட்டவனை உடனே கொத்தித் தின்றுவிடலாம்.

4 பேருக்கும் ஒரே மாதிரித் துயரம் வரும் போது அவர்கள் நண்பர்களானார்கள். 4 பேருக்கும் ஒரே மாதிரியான ஆசை வந்துவிட்டதல்லவா? அவர்கள் பகைவர்களானார்கள்.
---
பத்தாண்டுகள் அவர் தி.மு.க கட்சியில் இருந்ததைத் தான் வனவாசம் என்கிறார். அண்ணா பேச்சினால் கவரப்பட்டு, கட்சிக்குள் வருகிறார். கருணாநிதியுடனான ஆரம்ப கால நட்பு, அண்ணா மீது கொண்ட பக்தி எப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கசந்து கட்சியை விட்டு அவரை விலக்குகிறது என்பதை கூடுமானவரை, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்திலேயே சொல்லியிருக்கிறார்.

போகிற போக்கில் நேற்றைய & இன்றைய முக்கியத்தலைவர்களை வெளிப்படையாகவே வசை பாடியிருப்பது பகீர் என்றிருந்தது. நிஜமாகவே இப்படியெல்லாம் இருந்தார்களா, கண்ணதாசன் சொல்வது உண்மை தானா என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அவை குறித்தான தேடல்களை எனக்குள் தொடங்கி வைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். சில இடங்களில் 'இப்படியுமா இருக்கும் அரசியல்?' என்று வாய் விட்டே சொல்ல வைக்கிறார்.

ஒரு கழுகுப் பார்வையில் கண்ணதாசனைப் பார்த்தால், அவர் சாதாரண மனிதராகவே இருந்திருக்கிறார். பிரத்யேக குணங்கள் என்று பெரிதாக ஒன்றுமில்லை. வேலைக்காகச் சிபாரிசுக்கு அலைந்தது, வேலையைப் பொசுக்கென்று ராஜினாமா செய்து விட்டு வருவது, காசில்லா விட்டால் தண்ணீரைக் குடித்துக் கொண்டு தனியாகக் கிடப்பது, காசு கையில் வந்தால், நணபர்களுடன் மது அருந்திக் களிப்பது, விலைமாதர் வீடுகளுக்குச் செல்வது என்று எல்லாமும் ஒரு சராசரியின் குணம்.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி நூல் ஆரம்பம் முதல் முடியும் வரை எனக்குப் புரிந்தது, எந்த இடத்திலும் எந்தத் துன்பத்திலும் எத்தனை அவமானத்திலும் அவர் தன் எழுத்தை நம்பினார். எதையும் நாளைக்கென்று எடுத்து வைக்காமல், போனது போன வழியில் போயிருக்கிறார். பிரியத்திற்காக, நட்பிற்காக எதையும் யோசிக்காமல் சில சரியான/தவறான செயல்களைச் செய்திருக்கிறார். அவையனைத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார் தைரியமாக. இவையனைத்தும் சாதாரணனின் செயல்கள் இல்லை. அந்த நம்பிக்கையும் வலிமையும் தான் அவரைக் கவியரசு ஆக்கியதோ, என்னமோ!

மும்முனைப் போராட்டத்தின் போது அவர் சிறையிருந்த நாட்கள், அவரின் பாவமன்னிப்பு கட்டுரை, அ ஆ இ ஈ உலகத்தை அழித்த கதை, சம்பத் - அண்ணாவிற்கிடையேயான பேச்சுவார்த்தை போன்ற இடங்கள் கண்களை புத்தகத்தை விட்டு எடுக்காமல் படிக்க வைத்த பகுதிகள். அதிலும் அந்த அ ஆ இ ஈ கதை..'அம்மாடி! கவிஞரே! காலைக் காட்டுமய்யா! வெறும் முத்தையாவா? முத்தைய்யா நீவிர்'

சில இடங்களில் முகச்சுளிப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. முழுக்க முழுக்கக் கருணாநிதியை வசை பாடியே இருக்கிறது. அவரைத் தவறான கோணத்திலேயே காட்டியிருக்கிறது. அவற்றை எல்லாம் 'கண்ணதாசன் சொல்கிறார்' என்ற ஒரு காரணத்திற்காக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. அவைகள் வன்மத்தால் வந்த வார்த்தைகளா, நிஜமாகவே அவர் அப்படித் தானா என்பதை அடுத்தடுத்துத் தேடுவோம்.

1961 ஏப்ரல் 9 ஆம் தேதி கட்சியிலிருந்து விலகுகிறார். அதனுடன் நூல் முடிகிறது.

இதன் பின்னான பகுதிகள், மனவாசம் என்ற நூலில் வருகிறதாம்! விரைவில் அதையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நீயும் படித்துப் பார் ராஜி. Better late than never!

இது நூல் விமர்சனம் இல்லை. விமர்சிக்கும் அளவுக்கு நான் வளரவுமில்லை. என் பார்வையில், நான் புரிந்து கொண்டதில் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். உனக்கும் மற்றவர்களுக்கும் இது வேறுபடலாம். மீண்டும் அடுத்த வாரம் ஏதாவது படித்தால் அந்த அனுபவத்தைப் பகிர்கிறேன். அதுவரை, டாட்டா. டேக் கேர் ராஜி.

அன்புத்தோழி,
மகிழ்வதனா
கனவுபுரம்,
கற்பனையூர்