Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Sunday, 9 February 2014

தோழிக்கு ஒரு கடிதம்: நூல் அறிமுகம் - அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

அன்புள்ள ராஜி,

இன்று ஒரே சிட்டிங்-இல் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தேன். அந்த அனுபவத்தை வார்த்தைகளில் வடிப்பதில் நான் நிச்சயம் தோற்றுத் தான் போவேன். இருந்தாலும் உன்னிடம் சில வார்த்தைகளிலாவது சொல்லித் தான் ஆக வேண்டும். புத்தகத்தைப் படித்து முடிக்க என்னவோ இரண்டரை மணி நேரம் தான் ஆகியது. ஆனால் இது சொல்லும் விஷயங்களைப் புரிந்து கொள்ளவும் கிரகிக்கவும் வருடங்கள் பிடிக்கும். ஏன், நம்மால் புரிந்து கொள்ளப்படாமலே கூட போகலாம். அப்படியானதொரு புத்தகம் இது.

புத்தகத்தின் பெயர்: அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

ஆசிரியர்: மிகைல் நைமி. தமிழில்: கவிஞர் புவியரசு

வெளியீடு: விஜயா பதிப்பகம்
                                                                     

இந்தப் புத்தகத்தை எந்த வகைக்குள் சேர்ப்பது என்பதில் எனக்குப் பெரும் குழப்பம் இருக்கிறது. இது நாவலா, கதையா, சித்தாந்த நூலா, உண்மைச் சம்பவமா, புனைவா? தெரியவில்லை. வேண்டுமென்றால் புரிந்து கொள்வதற்கு எளிதாக 'வாழ்க்கை குறித்தான தேடல்' எனச் சொல்வது ஓரளவு பொருந்தும்.

நைமி லெபனான் நாட்டு எழுத்தாளர். அவருக்கு ஊரை விட்டு ஓடி வந்து டீ பாரில் வேலை பார்த்த அம்மை முகத்தான் ஒருவனின் நாட்குறிப்பு கிடைக்கிறது. அதில் காணப்படும் சம்பவங்களும், எண்ணவோட்டங்களும், தேடல்களுமே இந்தப் புத்தகம். (The Pitted face என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம்)

எல்லாம் அறிந்தவர்களின் மொழி மௌனம் என்று ஓஷோ சொல்கிறார். இங்கு எல்லாம் தேடுபவர்களின் மொழியும் மௌனம் என்று அம்மை முகத்தான் வாயிலாக நமக்குத் தெரிகிறது.

தான் யார்? என்ற கேள்வியின் வழி, வாழ்க்கைக் கூறுகளைத் தனக்குள்- தன் மௌனத்திற்குள் - விவாதிக்கிறான், அம்மை முகத்தான்(இனி, அ.மு என வரும்).

"மற்றவர்கள் மகிழ்ச்சிப்படுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பது ஆச்சர்யமல்ல. மற்றவர்கள் துக்கப்படுவதும் தனக்குத் துக்கம் தரவில்லை" என்று உலகத்திலிருந்தும், "மனதைக் கொண்டிருக்கும் ஓர் உடலல்ல நான், மாறாக ஓர் உடலைக் கொண்டிருக்கும் மனம்" என்று தன்னிடமிருந்தும் தனித்து நிற்கிறான். எதன் மீதும் ஒரு பற்றில்லாமல், அதே நேரத்தில் அனைத்தையும் சமமாய் அன்பு பாவிக்கும் ஆத்மாவாக அ.முவின் எண்ணங்கள் இருக்கின்றன.

மனிதர்களின் மனத்தில் எல்லைக்கோட்டைப் போடும் தேசங்களின் பிரிவினை குறித்த அவனது சிந்தனை சாதாரணர்களுக்கு வாய்க்காது. நாடு என்ற வரையறைக்குள் நின்று கொள்ள அவன் தயாரில்லை. இந்த பிரபஞ்சம் முழுதும் அவனுக்கானது என்கிறான். அதே நேரத்தில் தன் ஆத்மாவும் உடலும் கூட தன்னுடையதில்லை, தன் இரத்தம், தசை, உணர்ச்சிகள் எல்லாவற்றிலும் உலகத்தவர் பங்கும் உள்ளது என்று சொல்வது என்ன அழகான சிந்தனை!

எதன் மீதும் பற்றுக் கொள்ளாதவனான அவனுக்குமே ஒரு கட்டத்தில் அந்த பாருக்கு வரும் சென்னா செரிப் என்பவருடன் ஒரு சின்ன இணக்கம் ஏற்படுகிறது. தன் அறையில் இருக்கும் பூனையையும் தோழனாய்ப் பாவிக்கும் மனமும் இருக்கிறது. நூலின் இந்த மாதிரியான இடங்கள் பெரும் சிந்தனைக்குரியவை. அவற்றை வார்த்தைகளில் விளக்கவே முடியாது.

வாழ்க்கை போர்க்களம் என்று சொல்லித் திரியும் நமக்கு அது உலைக்களமில்லையா என்று எதிர்வாதம் வைக்கிறான். போர்க்களங்கள் மரணத்தைக் கொண்டு செலுத்தும். உலைக்களங்கள் உலோகத்தின் அழுக்கையெல்லாம் களைந்து புதியவைகளைக் கொண்டு வருமல்லவா என்பது வாழ்க்கை குறித்த வேறுபட்ட, நுட்பமான கோணம்.

மொழி மனிதனுக்கானது. அவற்றை மனிதன் தான் ஆள வேண்டும். அது மனிதனை ஆளும் நிலை வரக்கூடாது என்கிறான்.

மரணத்திற்கும் அ.மு க்கும் மற்றும் அ.முவிற்கும் பூனைக்குமிடையே நிகழும் மரணம் பற்றிய உரையாடல்கள் அர்த்தம் நிறைந்தவை. அவற்றை முழுதாய்ப் புரிந்து கொள்ள எனக்கு முதிர்ச்சி பத்தாது. ஆனால் அவனது ஒரு கேள்வி மிகவும் முக்கியமானது. 'மரணத்துடன் ஏன் வேதனை தொடர்பு கொண்டதாக இருக்கிறது? வேதனையைத் தவிர, வேறு ஒரு படைத்தலைவன் மரணத்திடம் இருந்தால், அதனைக் கண்டு உலகம் இவ்வளவு அச்சப்படாது. இவ்வளவு வெறுப்புக் காட்டாது' என்கிறான். இதே கருத்தை எளிய நடையில், 'பிரச்சனை மரணமல்ல, வலிகள்' என்று மாலன் எழுதியிருப்பார்.

'உன் உயிலை எழுதிவிடு' - இந்த 3 வார்த்தைகளுக்குள் எவ்வளவு அர்த்தங்கள்!

இறுதியாக அவன் தன் உயிலைப் புழுக்களுக்கு எழுதி வைக்கிறான். நூலில் அந்த இடம், அடடா! அத்தனை அற்புதம்! பொதுவாக மனதைத் தொட்ட வரிகளுக்கு அடிக்கோடிட்டு வைப்பது என் வழக்கம். புத்தகம் இந்த ஐந்தாறு பக்கங்களுக்கு ரூல்டு நோட்டாகத் தான் மாறிப் போனது.

இறுதியில் ஒரு சின்ன முடிச்சுடன் நூல் முடிகிறது. அதெல்லாம் உண்மையா, புனைவா என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை. சொல்லப் போனால் அந்தத் தெளிவு தேவையுமில்லை.

மொத்தத்தில் இந்த நூல், வாழ்க்கையை - அதன் கூறுகளை - ஞானி மனநிலையில் ஆராய்கிறது. சில விஷயங்கள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சில கருத்துக்கள் அதன் அடர்த்தி காரணமாக முழுதாகப் புரிந்து கொள்ள முடியவிலலை. அது தவறில்லை. இது ஒரு இரவில் வாசித்து, படித்ததாய் முடித்து விடும் நூல் அல்ல. மாடு அசைபோடுவது போல், மெல்ல மெல்ல மனம் அசை போட்டுப் பார்க்க வேண்டிய பெட்டகம் இது. இன்று எனக்குப் புரியாதவைகள், அடுத்த வாசிப்பில் புரியலாம். முழுதாய்ப் புரிய முதிர்ந்த மனம் வேண்டும். அது நம் வாழ்நாளில் கிடைக்குமாயின் நாம் புண்ணியாத்மாக்கள்.

நான் முதலிலேயே சொன்னது போல, இந்த நூல் அனுபவம் குறித்து என் மனதில் எழுந்ததையெல்லாம் என்னால் வார்த்தைகளில் விளக்கும் பக்குவம் எனக்கு இருக்கவில்லை. அதையும் நைமியின் வரிகளிலேயே சொன்னால்,

'வெளிப்பாடு தான் நோக்கத்தைத் திருத்தி ஏமாற்றி விடுகிறது. நான் நினைத்தது இதுவல்ல'

அன்புடன்,
மகிழ்வதனா,
கற்பனையூர்
 

Saturday, 8 February 2014

தோழிக்கு ஒரு கடிதம்: நூல் அறிமுகம் - செடல்

அன்புள்ள ராஜி,

உன்னுடன் பேசி மாதக்கணக்காகி விட்டது. நலம் தானே?

விஷயம் வேறு ஒன்றுமில்லை. வழக்கம் போல, நான் படித்த புத்தகம் பற்றிச் சில வார்த்தைகளை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 10, 12 நாட்களாக ஓர் அருமையான புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். நேற்றுக் காலையில் தான் முழுவதும் முடித்தேன். கையோடு உனக்குக் கடிதமும் எழுதி விட்டால் தான் படித்தது முழுமை பெறும்.

புத்தகத்தின் பெயர்: "செடல்"
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்

                                                 

என்ன இது 'செடல்'? 'வித்தியாசமான பெயராக இருக்கிறதே' என்று உன் புருவங்கள் உச்சி தொட்டு இறங்கி வருவது எனக்குத் தெரிகிறது. செடல் என்றால் ராட்டினமாம். மெரீனா பீச்சில் பார்த்திருப்பாய்.

பொட்டுக்கட்டுதல் என்று அறியப்படும் தேவதாசி முறை பற்றி நீ அறிந்திருப்பாய். அப்படி பொட்டுக் கட்டி விடப்பட்ட தலித் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது.

கூத்தாடிக் குடும்பத்தைச் சேர்ந்த கோபால்-பூவரும்பு தம்பதிக்கு எட்டாவது மகளாகச் செடல் பிறக்கிறாள். மகனாக எதிர்பார்த்து மகளாகிப் போனதால் வேண்டாத பிள்ளையாக வளர்கிறாள். மழை தண்ணி பொழியாமல் அந்தக் கிராமம் வறண்டு கிடக்கிறது. அதற்குக் காரணம் பொட்டுக்கட்டி விடாதது தான் என்று சில "அறிவுஜீவிகள்" கண்டுபிடிக்கிறார்கள்.

பொதுவாக தலித் ஜாதியினரை, அதிலும் குறிப்பாக கூத்தாடிப் பரம்பரையைச் சேர்ந்த கன்னிப் பெண்களையோ அல்லது சிறுமிகளையோ தான் பொட்டுக் கட்டி விடுவார்களாம். அப்படிப் பொட்டுக் கட்டி விடப்பட்டவர்களுக்குத் திருமண வாழ்வு மறுக்கப்படுகிறது. அந்த ஊர்ச் செல்லியம்மன் கோவிலில் பள்ளுப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, திருவிழாவின் போது செல்லப் புள்ள ஆட்டம் எல்லாம் ஆட வேண்டுமாம். தங்கள் ஒரு கிராமத்துக்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள 18 கிராமங்களிலும் திருவிழாவிற்கு இவர்கள் தான் பள்ளுப் பாடி ஆரம்பிக்க வேண்டுமாம். அதுவும் போக, ஊரில் குழந்தைகள் பிறந்தால் தாலாட்டுப் பாடுவது, எழவு விழுந்தால் ஒப்பாரி வைப்பது, அம்மை நோய் கண்டவர்களுக்குப் பாடுவது போன்றவை அவர்களின் வேலைகள். அவர்களுக்குத் திருவிழாவின் போது, நெல், வரகு போன்ற தானியங்கள், துணிமணிகள், அரிசிச் சோறு போன்றவற்றை ஊர்க்காரர்கள் தர வேண்டுமாம். அது போல "விசேஷ" வீடுகளுக்குப் பாடப் போகும் போது, அந்தந்த வீட்டுக்காரர்கள் முடிந்ததைச் செய்வார்கள். இப்படித் தங்கள் ஒரு மகளாவது வயிறாற சாப்பிடட்டுமென்று தாங்களே முன்வந்து தங்கள் பிள்ளைகளை பொட்டுக் கட்டி விடுவார்களாம்.

கோபால்-பூவரும்பு சம்மதத்தையும் மீறி செடல் பொட்டுக் கட்டப்படுகிறாள். அதுவும் அவள் சிறுமியாக இருக்கும் போதே! தான் பொட்டுக் கட்டப்படுகிறோம் என்பதே அறியாதவளாக இருக்கிறாள். அவளைக் கோவிலுக்கருகில் ஒரு சிறு வீட்டில் போட்டு, ஒரு கிழவியின் கண்காணிப்பில் தனது தாய், தந்தை, உடன்பிறந்தவர்களிடமிருந்து பிரித்து வைக்கப்படுகிறாள். அங்கிருந்து ஆரம்பமாகிறது அவள் தனிமைப்பட்டு நிற்பது. நாவலின் கடைசி வரை எந்தப் பிடிமானமும் இல்லாமல் அவள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனிமைப்படுத்தப்படுகிறாள்.

செடலிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவள் பெற்றோர்கள் பிழைப்புத் தேடிக் கண்டிக்குச் சென்று விடுகிறார்கள். அது நாள் முதல், கிழவியின் வசைகளுக்கு ஆளாகி, அது தான் விதி என்று ஏற்றுக் கொண்டு காலம் கழிகிறது.

கிழவி இறந்த பின்னான இரக்கமற்ற ஒரு மழை நாளில் செடல் பெரிய பெண்ணாகிறாள். அப்பொழுது பார்த்து அவள் வீடும் இடிந்து விழுந்து விடுகிறது. அவள் சொந்தக்காரர்களிடம் புகலிடம் கிடைக்கவில்லை. அண்டிக் கொள்ள இடம் தேடி, அறங்காவலர், கோவில் பூசாரி போன்ற ஆதிக்கக்காரர்களின் வீடுகளில் அவள் அலைவது கொடுமை. கோவில் பூசாரியிடம், தான் பெரியவளாய் ஆகி விட்டதை அவள் சொல்லுமிடத்தைப் படிக்கும் போது, மனதில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட கனம் இருந்தது.

தனிமை எவ்வளவு கொடுமையானது ராஜி. எல்லாரும் இருந்தும், எல்லாமும் இருந்தும், இன்னும் ஒவ்வொரு மாத வலிகளின் போதும் அப்பாவின் அரவணைப்பு என்ற ஒன்று எவ்வளவு அவசியப்படுகிறது நமக்கு! எனக்கெல்லாம் அவர் போனை எடுக்கக் கொஞ்சம் கால தாமதம் ஆனாலும் மரணத்தின் வாயிற் கதவைத் தட்டி விட்டு வரும் துன்பமிருக்கும். நமக்கு எல்லோரும் இருந்துமே இப்படியென்றால், யாருமில்லாத, எதுவுமில்லாத செடல் என்ன பாடுபட்டிருப்பாள்! இதை எழுதும் போதே எனக்குக் கையெல்லாம் நடுங்குகிறது ராஜி.

அந்த நேரம் பார்த்து அவளின் சொந்தக்காரனான பொன்னன் தன்னுடன் அழைக்கிறான். விரக்தியில் யாருக்கும் தெரியாமல் பொன்னனுடன் அவன் கிராமத்தை நோக்கி நடக்கிறாள். இத்துடன் நாவலின் முதல் பகுதி முடிகிறது.

முதல் பகுதி முழுவதும் சிறுமியாய் இருந்த செடல், இரண்டாம் பகுதியில் இளம் பெண்ணாக ஆகிறாள். அவளோடு சேர்ந்து அவள் பிரச்சனைகளும் வளர்கிறது. தவிர்க்க முடியாத சூழலில், 'கூத்தாடி' பொன்னனுக்கு உதவப் போக, கூத்து அவளை விடாமல் பிடித்துக் கொள்கிறது, அடுத்தடுத்த கட்டங்களில். 'பொன்னன் செட்டு' என்ற பெயர் போய் 'செடல் செட்டு' என்றாகிறது - அவள் திறமையாலும், பெண் என்ற பெயரினாலும்.

சின்னச் செடியாய் இருக்கும் போதே, பிடுங்கிப் போட நேரம் பார்க்கும் உலகம், கனி விளைந்த மரமாய் இருக்கும் போது கையைக் கட்டிக் கொண்டிருக்குமா? ஆடவர்களின் கண்களிலிருந்தும், கைகளிலிருந்தும் அவளைக் காத்துக் கொள்ளப் பெரும் போராட்டமாக இருக்கிறது. அவள் தனிமையை, வறுமையை, பாதுகாப்பின்மையைக் குறி வைத்து எத்தனை கோட்டான்கள்! அவற்றிற்கு, தன் உடல் தேவைகளுக்கு, உணர்வு மயக்கங்களுக்கு அவள் பலியாகாமல் 'தன்னைக்' காத்து வந்தாலும் அவளை நோக்கி எய்யப்பட்ட வசை அம்புகள் எத்தனை, எத்தனை! படிக்கும் நமக்கே அயற்சியாக இருக்கிறது. இந்தப் பகுதியில் தொப்பளான், ஆரான், விட்டம், விருத்தாம்பாள் என நிறைய கேரக்டர்கள். பொன்னன் இறந்து, 'செடல் செட்டு' இரண்டாய்ப் பிரிந்த பின், அவள் சகோதரியும் மகனும் பழையபடி கிராமத்துக்கே அழைக்கிறார்கள். வேறு வழியின்றி அவர்களுடன் புறப்படுகிறாள். அதனுடன் இரண்டாம் அத்தியாயம் முடிவு பெறுகிறது.

மீண்டும் சொந்த மண்ணில் ஜாதி ஜனங்களோடு இருக்கலாம் என்று தவிப்பில் வரும் செடலுக்குக் கிடைப்பதென்னவோ புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே! வனமயிலின் மகன் பரஞ்சோதியுடன் ஒரு பிடிமானத்திற்கு ஏங்கி நிற்கும் போது, அவனும் மாதா கோவிலில் சேர்ந்து கொள்கிறான். கிறிஸ்துவத்தின் அறிமுகம் தலித் மக்களிடம் எந்தெந்த சூழ்நிலைகளில் உள்நுழைகிறது என்பது நாவலில் ஆங்கங்கே ஊடு பாவாய் ஓடியிருக்கிறது. இப்படி யாருமற்றவளாய் இருக்கும் போது, தன்னைப் போன்ற பொட்டுக் கட்டி விடப்பட்ட உடல் நலமில்லாத கூத்தாடியான பாஞ்சாலியுடன் அவளது வாழ்க்கை தொடர்கிறது. சில நாட்கள் அவளுக்கு ஆறுதலாக இருக்கலாம். அதன் பின் அவள் என்னாவாள்? அவளின் எதிர்காலம் என்னவாகும்? இந்த நாவலின் பல கேரக்டர்கள் அடிக்கடி சொல்வது போல், அவள் கண்ணை மூடிய பின், அவளைக் குழியில் தள்ள யார் இருப்பார்கள்? இது போன்ற கேள்விகளைக் கேட்காமல் கேட்டு முடிகிறது நாவல்.

செடல் - வாழ்க்கை முழுக்க வெறுமையைச் சுமந்து கொண்டிருப்பவள் கதை; சமுதாயப் பழக்க வழக்கம் என்ற பெயரில் அவள் வாழ்வைச் சீர்குலைத்த கதை; ஆதிக்க வெறி தலித் மக்களின் மேல் அளவின்றிப் பொழிந்த கதை;

நாவலின் மொழி நடை பல இடங்களில் மனதைப் பிசையும். களங்களைக்  காட்சிப்படுத்துதலில் இமையத்தின் திறமை இமய அளவு. கூத்துப் பாட்டுக்கள் இரண்டாம் பகுதியில் அதிகம் வருகிறது. அவை நம்மைப் போன்ற 'கூத்து' என்பதை அறியாத தலைமுறையினருக்கு வித்தியாசமாகவும் ரசனையாகவும் இருக்கிறது.

படித்துப் பார்! உன் இதயத்தின் கதவுகள் அனைத்தையும் இறுக மூடிக் கொண்டு படித்தாலும், ஒரு கணமேனும் உன்னை உருக்குலைய வைக்கும் அவள் படும் பாடு!

அன்புடன்,
மகிழ்வதனா,
கற்பனையூர்

Monday, 6 January 2014

தோழிக்கு ஒரு கடிதம் - நூல் அறிமுகம்: வனவாசம்

அன்புள்ள ராஜி,

உன்னிடம் சில விஷயங்கள் பேச வேண்டும். நேரிலோ, போனிலோ பேச முடியுமென்றாலும் நான் கடிதம் வழி பேசுவதையே அதிகம் விரும்புகிறேன். இங்கு தான் நீயும் நானும் மட்டும் இருப்போம். மற்றவைகளில் நம் சூழலும் நேரமும் ஒட்டுக் கேட்கும்.

நாம் அன்றைக்கு புத்தக வாசிப்பு பற்றிப் பேச ஆரம்பித்தது, கடிகாரத்தின் கண்டிப்பில் பாதியில் முடிக்கப்பட்டு விட்டது. இன்று அதை இரு நிமிடங்கள் தொடர விழைகிறேன்.

ராஜி, இரண்டு, மூன்று நாட்களாக கடுமையான மன அழுத்தம். அதிலிருந்து வெளிவர விரும்பி, என்னென்னவோ செய்து பார்த்தேன். அழுக்காய்க் கிடந்த அத்தனை துணிகளையும் பொறுமையாகத் துவைத்தேன். நேர்த்தியாக இருந்த அத்தனை உடைகளையும் கசக்கி, மீண்டும் அயர்ன் பண்ணி மடித்து வைத்தேன். கால் வலிக்க நடந்தேன். காது வலிக்கப் பாடல் கேட்டேன். கண்ணில் பட்டதையெல்லாம் படித்தேன். கடைசியில் அதில் கொஞ்சம் பலன் கிடைத்தது.

புத்தகங்கள் போதை என்பதில் எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இருந்ததில்லை. போதை பாதை காட்டாது, மாறாக அவற்றை மறைக்கும். ஆனால் புத்தகங்கள் அப்படியல்ல. அவை ஒரு வகைத் தியானம் என்று சொல்லலாம். எவ்வளவு மனப் பிரச்சனைகளின் ஊடேயும், நிகழ் உலகத்திலிருந்து நம்மைக் கடத்திச் சென்று, வேறொரு உலகத்தில் நம்மைக் குவிக்க வைக்கும். புத்தகங்கள் - ஆள் மயக்கி! அவைகளுக்குக் காலை மாலை பேதம் கிடையாது. எப்பொழுது திறந்தாலும் அதே வாசனை. அதே போதனை.

அப்படியானதொரு புத்தகத்தைத் தான் இந்த வார விடுமுறையில் படித்தேன். பழைய பாடல்கள் குறித்து நாம் சிலாகித்தும் விமர்சித்தும் பேசிய இரவுகள் இன்னும் மனதில் இருந்து விடியவில்லை. 'அவனிடம் நான் சொன்னேன் என் அஞ்சுதலை. அந்த அண்ணலே, தந்து வைத்தான் ஆறுதலை' - எப்படி மறக்க முடியும் ராஜி இந்த வரிகளை?

ஆம், அந்த வரிகளுக்கு உரிமையாளன் கண்ணதாசன் சுயசரிதையாகிய 'வனவாசம்' தான் அது! 'கண்ணதாசனிடம் தமிழ் நில் என்றால் நிற்கும். உட்கார் என்றால் உட்காரும்' என்று அந்தக் 'காவியத்தாயின் இளைய மகனை'ப் பற்றி என் பிரியத்திற்குரியவர் பேச்சில் கேட்டேன். கண்ணதாசன் திரைப்படப் பாடல்களைத் தாண்டி, அவரைப் படிக்க நான் ஆசைப்பட்டேன். அதன் தொடக்கமாக 'வனவாசத்தை' எடுத்தேன். நீ கேட்கலாம். எழுதியதைப் படிக்காமல், எழுதுபவனைப் படித்து என்ன பிரயோஜனம் என்று! என் பார்வையில், எழுதுபவனைத் துதிக்கவோ தூற்றவோ வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தப்பில்லை. அவனைப் பற்றித் தெரிந்து கொண்டால், அவன் வாழ்ந்த காலத்திய சூழல் பற்றித் தெரிந்து கொண்டால், அவன் எழுத்துக்களை முழுதாகப் புரிந்து கொள்ள முடியும். எழுத்துகளின் பின் உள்ள நேர்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தப் புத்தகம் இரைச்சலான சுய தம்பட்டமாக இல்லாமல், வறண்ட சோக கீதமாக இல்லாமல், எளிமையாக 'இது தான் நடந்தது' என்ற பாணியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இப்படி நடந்தது? அது சரியா தவறா? அதற்கான விவாதங்கள், ஒப்புதல்கள், மன்னிப்புகள் எங்கேயும் இல்லாதது இந்நூலைச் சிறப்பிக்கிறது. நூல் முழுக்க, 'நான்' என்று எழுதாமல் 'அவன்' என்று எழுதியிருப்பது படிப்பவனுக்கு ஒரு இலகுத்தன்மையைத் தருகிறது.

கண்ணதாசன் முன்னுரையிலேயே சொல்லியிருக்கிறார்: 'எப்படி வாழ வேண்டும்? என்பதற்கு இது நூலல்ல! எப்படி வாழக்கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி' என்று.

அவர் பிறப்பு, வளர்ப்பு என்று பெரிதாக ஒன்றும் விளக்காமல் நேரடியாக வேலை தேடிச் செல்வதில் ஆரம்பித்து, அவர் பட்ட கஷ்டங்கள், அடைந்த வாய்ப்புகள், நழுவல்கள், தவறுகள், கட்சியில் சேர்ந்தது என்று ஒரு நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்துடன் விரிகிறது. கவிஞரின் மொழி நடை அத்தனை அருமை!

அவர் மேற்கோள் காட்டும் உதாரணங்கள், ஆங்காங்கே வரும் பொதுவுடமைக் கருத்துகள் அனைத்தும் அழகு!

உதாரணத்திற்கு உனக்காக சில:
---
எவ்வளவு மகிழ்கிறார்கள்! கவலை இருக்கிறதோ, இல்லையோ பசி இல்லை! அது இருந்தால் காதல் இவ்வளவு உற்சாகமாக இருக்காது!

நாலணா முள்ளங்கியை ஐந்தணா ஆக்கினான். ஓரணா கீரை தானாகவே ஒன்றரை அணா ஆயிற்று. இப்படி எல்லாக் காய்கறிகளும் அவனுக்காகத் தங்கள் விலையை உயர்த்திக் கொண்டன.

நடத்தப்படும் படகு கரை வரை சேர்கிறது. சிதறி விழும் கட்டையும் காலங்கடந்தாவது கரைக்கு வந்து விடுகிறது. முடியுமானால் படகாவோம். இல்லையென்றால் கட்டையாவோம். என்றேனும் ஒருநாள் கரை சேர்வோம் என்று அவன் நம்பினான்.

சட்டையில்லாத திறந்தமேனி, முதன்முறையாக போலீஸ் காவலுக்கு ஆளானது

நெடுநேரம் தூங்குகிறவனையே செத்துவிட்டவனாக நினைத்துக் கொத்தித் தின்னும் கழுகுகள், உண்மையிலேயே செத்துவிட்டவனை உடனே கொத்தித் தின்றுவிடலாம்.

4 பேருக்கும் ஒரே மாதிரித் துயரம் வரும் போது அவர்கள் நண்பர்களானார்கள். 4 பேருக்கும் ஒரே மாதிரியான ஆசை வந்துவிட்டதல்லவா? அவர்கள் பகைவர்களானார்கள்.
---
பத்தாண்டுகள் அவர் தி.மு.க கட்சியில் இருந்ததைத் தான் வனவாசம் என்கிறார். அண்ணா பேச்சினால் கவரப்பட்டு, கட்சிக்குள் வருகிறார். கருணாநிதியுடனான ஆரம்ப கால நட்பு, அண்ணா மீது கொண்ட பக்தி எப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கசந்து கட்சியை விட்டு அவரை விலக்குகிறது என்பதை கூடுமானவரை, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்திலேயே சொல்லியிருக்கிறார்.

போகிற போக்கில் நேற்றைய & இன்றைய முக்கியத்தலைவர்களை வெளிப்படையாகவே வசை பாடியிருப்பது பகீர் என்றிருந்தது. நிஜமாகவே இப்படியெல்லாம் இருந்தார்களா, கண்ணதாசன் சொல்வது உண்மை தானா என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அவை குறித்தான தேடல்களை எனக்குள் தொடங்கி வைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். சில இடங்களில் 'இப்படியுமா இருக்கும் அரசியல்?' என்று வாய் விட்டே சொல்ல வைக்கிறார்.

ஒரு கழுகுப் பார்வையில் கண்ணதாசனைப் பார்த்தால், அவர் சாதாரண மனிதராகவே இருந்திருக்கிறார். பிரத்யேக குணங்கள் என்று பெரிதாக ஒன்றுமில்லை. வேலைக்காகச் சிபாரிசுக்கு அலைந்தது, வேலையைப் பொசுக்கென்று ராஜினாமா செய்து விட்டு வருவது, காசில்லா விட்டால் தண்ணீரைக் குடித்துக் கொண்டு தனியாகக் கிடப்பது, காசு கையில் வந்தால், நணபர்களுடன் மது அருந்திக் களிப்பது, விலைமாதர் வீடுகளுக்குச் செல்வது என்று எல்லாமும் ஒரு சராசரியின் குணம்.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி நூல் ஆரம்பம் முதல் முடியும் வரை எனக்குப் புரிந்தது, எந்த இடத்திலும் எந்தத் துன்பத்திலும் எத்தனை அவமானத்திலும் அவர் தன் எழுத்தை நம்பினார். எதையும் நாளைக்கென்று எடுத்து வைக்காமல், போனது போன வழியில் போயிருக்கிறார். பிரியத்திற்காக, நட்பிற்காக எதையும் யோசிக்காமல் சில சரியான/தவறான செயல்களைச் செய்திருக்கிறார். அவையனைத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார் தைரியமாக. இவையனைத்தும் சாதாரணனின் செயல்கள் இல்லை. அந்த நம்பிக்கையும் வலிமையும் தான் அவரைக் கவியரசு ஆக்கியதோ, என்னமோ!

மும்முனைப் போராட்டத்தின் போது அவர் சிறையிருந்த நாட்கள், அவரின் பாவமன்னிப்பு கட்டுரை, அ ஆ இ ஈ உலகத்தை அழித்த கதை, சம்பத் - அண்ணாவிற்கிடையேயான பேச்சுவார்த்தை போன்ற இடங்கள் கண்களை புத்தகத்தை விட்டு எடுக்காமல் படிக்க வைத்த பகுதிகள். அதிலும் அந்த அ ஆ இ ஈ கதை..'அம்மாடி! கவிஞரே! காலைக் காட்டுமய்யா! வெறும் முத்தையாவா? முத்தைய்யா நீவிர்'

சில இடங்களில் முகச்சுளிப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. முழுக்க முழுக்கக் கருணாநிதியை வசை பாடியே இருக்கிறது. அவரைத் தவறான கோணத்திலேயே காட்டியிருக்கிறது. அவற்றை எல்லாம் 'கண்ணதாசன் சொல்கிறார்' என்ற ஒரு காரணத்திற்காக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. அவைகள் வன்மத்தால் வந்த வார்த்தைகளா, நிஜமாகவே அவர் அப்படித் தானா என்பதை அடுத்தடுத்துத் தேடுவோம்.

1961 ஏப்ரல் 9 ஆம் தேதி கட்சியிலிருந்து விலகுகிறார். அதனுடன் நூல் முடிகிறது.

இதன் பின்னான பகுதிகள், மனவாசம் என்ற நூலில் வருகிறதாம்! விரைவில் அதையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நீயும் படித்துப் பார் ராஜி. Better late than never!

இது நூல் விமர்சனம் இல்லை. விமர்சிக்கும் அளவுக்கு நான் வளரவுமில்லை. என் பார்வையில், நான் புரிந்து கொண்டதில் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். உனக்கும் மற்றவர்களுக்கும் இது வேறுபடலாம். மீண்டும் அடுத்த வாரம் ஏதாவது படித்தால் அந்த அனுபவத்தைப் பகிர்கிறேன். அதுவரை, டாட்டா. டேக் கேர் ராஜி.

அன்புத்தோழி,
மகிழ்வதனா
கனவுபுரம்,
கற்பனையூர்