Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, 28 January 2015

'பெண் ஏன் அடிமையானாள்' - புத்தக விமர்சனம்

 

பெண் ஏன் அடிமையானாள்? by E.V.Ramasamy Periyar

 

'பெண் ஏன் அடிமையானாள்' என்பதை 10 அத்தியாயங்களில் விளக்குகிறார் பெரியார். கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் வேண்டும், விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை மற்றும் பெண்கள் விடுதலைக்கு 'ஆண்மை' அழிய வேண்டும் என்பன அந்த 10 அத்தியாயங்கள். 


பெரியாரிடம் நாம் லேசுபாசாக, சாந்தமாகச் சொல்லும் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அவருடையது எப்பொழுதும் கூர் கத்தி எழுத்து நடை. இந்தப் புத்தகமும் அப்படியே.


"கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்" என்றான் மகாகவி. அதனினும் ஒரு படி மேலே போய் "கற்பென்று" ஒன்றுமில்லை என்கிறார் பெரியார். காதல் குறித்த நமது புனிதங்களை அநாயசமாய் உடைத்துத் தள்ளுகிறார். அதற்கு அவர் காட்டும் உதாரணம் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. ஓர் அரசகுமாரி தோட்டத்தில் ஒருவனைப் பார்த்து காதல் கொள்கிறாள். அதன் பின் அவன் சேவகன் என்று தெரிய வருகிறது. அப்படியானால் அவன் மேல் அவள் கொண்ட காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாக வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகிறார். "எப்படிப்பட்ட காதலும் ஒரு சுயலட்சியத்தை, தனதிஷ்டத்தை - திருப்தியை கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை. ஆசையை விட, அன்பை விட, நட்பைவிட, காதல் என்பதாக வேறொன்றும் இல்லை." என்று சொல்லும் போது நமக்கு ஒரு jerk வந்த போதிலும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அதை மறுக்க முடியாது.


விதவை மறுமண எதிர்ப்பை "சமுதாயத் தற்கொலை" என்று வர்ணித்தவர் இவர் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். விதவைகள் வாழ் சூழல் இயற்கையானது அல்ல, எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதேயாகும் என்கிறார்.


சொத்துரிமை அத்தியாயம் இன்னமும் நமக்குத் தேவையானதாகவே இருக்கிறது. இவ்வளவு வளர்ந்து விட்ட சமுதாயத்திலும், கல்வி கற்ற சூழலிலும் கூட சொத்துரிமை பெண்களுக்கு அவ்வளவு எளிதாக இன்றும் கிடைப்பதில்லை.


கர்ப்பத்தையும் குழந்தைப் பேறு பற்றியும் அவரது கருத்துகள் நிச்சயமாய் ரொம்பவும் மார்டன். 1942-ல் எழுதிய புத்தகம். 72 ஆண்டுகள் ஆன பின்னும் அவர் எதிர்த்த/மாற்ற நினைத்தவைகளில் இன்னும் மாற்றமில்லையோ என்றே தோன்றுகிறது. என்ன, அவர் காலத்தில் பெண் மீதான இந்த அடக்குமுறை வெளிப்படையாக நடந்திருக்கும். இன்று அவைகள் அழகான wrapper-இல் போர்த்தப்பட்டு நடக்கின்றன. இனியாவது இவைகள் மாறட்டும். ஐயாவின் எழுத்துக்கள் அதனைச் செய்யட்டும்.

 

- goodreads-ல் எழுதியது

Sunday, 6 July 2014

சொல், ஒரு சொல்...(7)


சின்னப் பசங்களோட உலகம் அழகான ஃபேன்டஸி நிறைந்ததாக இருக்கும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் ஆச்சர்யமான பல செய்கைகள் அவர்கள் பழக்கமாக இருக்கும். அவர்களின் கற்பனை நீளும் தூரத்தைக் கடக்கப் பெரியவர்​களால் முடியாது. அதில் சின்னச் சின்ன விளையாட்டுக்களும் சிறிதும் பெரிதுமான மூட நம்பிக்கைகளும் ஒருபுறம் இருக்கும். அவற்றில் ஒன்று ரெட்டை வால் குருவியை ஒற்றைப்படை எண்ணிக்கையில் பார்க்கக் கூடாது என்பது. நான் படிக்கும் காலத்தில் ரொம்பவும் சீரியஸாக இதை நம்புவார்கள். ரெட்டைவால் குருவியை ஒற்றையாய்ப் பார்த்த அன்று ஏதாவது டெஸ்ட் இருந்தால் பயந்து சாகும் நண்பர்கள் எனக்குண்டு. மற்றொன்றைக் காணும்வரை அவர்கள் மனமெல்லாம் அதில் தானிருக்கும்.

அது போல 'ஐயோ', 'ஐய்யய்யோ' என்றெல்லாம் சொன்னால் கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் என்றொரு சம்பிரதாயம் சிறுவர்களையும் தாண்டி பெரியவர்களுக்குக் கூட இருப்பதுண்டு. 'ஐயோ' என்பது எமனின் மனைவி பெயராம். யாராவது 'ஐயோ' என்றால் 'தன் மனைவியை யார் அழைக்கிறார்கள்' என்று பார்க்க எமன் வந்து விடுவானாம். இதை பள்ளிப் பருவத்தில் என் தோழி சொல்லிய மாலை நேரம் இன்னமும் மனதுக்குள் இருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களில் எனக்குப் பொதுவாக நம்பிக்கை கிடையாது. அதனால் அன்றைக்கு பள்ளி முடிந்ததும் சைக்கிள் ஸ்டாண்டில் உட்கார்ந்து கொண்டு அது பற்றி பயங்கர ஆராய்ச்சி நடந்தது. 50 முறை 'ஐயோ' சொல்லி, 'நாளைக்குள் நான் இறந்து விட்டால் நீ ஜெயிச்ச! இல்லைன்னா நான் ஜெயிச்சேன்' என்று என் தோழியிடம் சவால் விட்டேன். 'வேணாம்டி வேணாம்டி ஐயோ சொல்லாதடி' என்று அவள் அப்படி அழுதாள். ஆசிரியரிடம் அடி வாங்கும் போது கூட 'போயா' என்று அசால்ட்டாக நிற்பவள் அழுததும் எனக்குமே உள்ளூர உதறல் தான். ஆனாலும் பெரிதாகச் சட்டம் பேசியாயிற்றே! 'அதெல்லாம் சும்மாடி ஒன்னும் ஆகாது' என்று அவளைச் சமாதானப்படுத்தி, 50 முறை 'ஐயோ' சொல்லி முடித்து வீட்டுக்குக் கிளம்பியாச்சு. அன்றைக்கு இரவெல்லாம் என் அப்பாவைக் கட்டிப் பிடித்துக்  கொண்டேன். ஒரே பயம். நான் இறந்து விட்டால் அம்மா எப்படியெல்லாம் அழுவாள் என்று மனதிற்குள் ஓடுகிறது. 'அம்மாவுக்காவது பரவாயில்ல, பாப்பா இருக்கா. அப்பா தான் பாவம்' என்று அவர் மேல் பரிதாபம் வேறு. இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

ஐயோ என்பதை எதிர்மறை வார்த்தையாகத் தான் நாம் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது ஆச்சர்யத்தைக் குறிக்கும் வார்த்தையும் கூட! புதிய தலைமுறையில் மாலன் தனது சீனப் பயணக் கட்டுரைக்கு 'ஐயோ' என்று தலைப்பிட்டிருந்தார். ஆச்சர்யமாகவும் புதிராகவும் இருந்தது. கம்பரின் 'மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ இவன் வடிவு' என்பதை மேற்கோள் காட்டி அவர் எழுதுகிறார்: "ஐயோ! அது அவலச் சொல் அல்ல. அச்சத்தில் உதிர்க்கின்ற சொல் அல்ல. ஆச்சர்யத்தை அறிவிக்கின்ற, வியப்பை வெளிப்படுத்தும் சொல்லும் அது தான். அது ஒரு பழந்தமிழ்ச் சொல். கம்பனின் காலம் 12-ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். அப்படியானால் அது சுமாராக 1000 ஆண்டுகளாகவேனும் தமிழில் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அந்தத் தமிழ்ச் சொல் சீன மொழியிலும் உள்ளது. இன்றும் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது அதே அர்த்தத்தில். அதாவது அச்சத்தில் பதற்றத்தில் தானாக வந்து விழும் சொல்லாக உதிர்கிறது, ஐயோ!"

ஒரு வார்த்தைக்குள் என்னவெல்லாம் இருக்கிறது! இதைப் படித்த பிறகு தமிழ் இலக்கியத்தில் வேறு இடங்களில் எப்படி இந்தச் சொல் பயன்பட்டிருக்கிறது என்று பார்க்கும் ஆவலால் கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.

கம்பரைப் போலவே பாணர் ஆழ்வாரும் அழகை வர்ணிக்கும் போது 'ஐயோ'வைப் பயன்படுத்தியிருக்கிறார். "அரவின் அணை மிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!" என்றும் "நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!" என்றும் சொல்கிறார்.

பாணருக்கு இளைத்தவரா திருமங்கை ஆழ்வார்? அச்சோ பதிகம் என்றே ஒன்றை எழுதி விட்டார். 10 பாடல்கள் வருகின்றன. தன்னைப் பெண்ணாகப் பாவித்து நாராயணன் அழகில் மயங்கிப் பாடும் பாடல்கள் அத்தனையும். ஒவ்வொரு பாடலும் 'அச்சோ ஓர் அழகிய ஆ!' என்று முடிகிறது.

வைணவர்கள் மட்டும் தான் ஆச்சர்யப்படுவார்களா? சைவர்கள் கை என்ன பூப்பறிக்காவா போகும்? விடுவாரா மாணிக்கவாசகர்? அதே மாதிரி அச்சோ பதிகம். அதே மாதிரி 10 பாடல்கள். நாராயணின் அழகில் ஆழ்வார் சொக்குகிறார். சிவன் அருளில் நாயன்மார் சொக்குகிறார். 'எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!' படிக்க இலகுவாகவும் பக்தி ரசம் சொட்டும் பாடல்களுமாக இருப்பது 'எப்டித்தான்யா இப்டி எழுதினீங்க? அச்சோவே!' என்று கத்தணும் போல இருக்கிறது.

பெரியாழ்வார் திருமொழியில் தாலப் பருவம், அம்புலிப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், தளர்நடைப் பருவம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அச்சோப் பருவம் என்றும் ஒன்று வருகிறது. தாய் தனது குழந்தையை வாரி அணைத்துக் கொள்ள அழைக்கும் பருவம் தான் அச்சோப் பருவமாம். அதனால் அச்சோ என்பதை hug எனக் கொள்ளலாம்.

இவ்வளவு நேரம் பேசியது மேட்டர் இல்லை. இதிலிருந்து ஒரு புது வார்த்தை நான் கற்றுக் கொண்டேன். அது "பங்கி"

பங்கி என்றால் ஆண் தலைமுடியாம். 

பெரியாழ்ஸ் சொல்கிறார்: 

"செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல் 
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப 
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய 
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ 
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
"​

​பங்கி​..நல்லாருக்குல்ல?!

ஆண் தலைமுடிக்கு இன்னொரு பெயர் "சூளி" என்பதாம். ஆண் தலைமுடிக்கு ஒரு பெயர் இருந்தால் பெண் தலைமுடிக்கும் ஒரு பெயர் இருக்கும் தானே! அது "அளகம்". கம்பராமாயணத்தில் "அளகம் தரும் மதியின் பாகம்" என்று ஒரு வரி வரும். எழுத்தாளர் முத்துலிங்கம் கூட ஒரு கட்டுரையில் சூளி-அளகம் பற்றி எழுதியிருப்பார்.

எப்பேற்ப்பட்ட அழகு நம் மொழி! வியக்கிறேன்.​

Saturday, 29 March 2014

சொல், ஒரு சொல்...(6)

புறநூனூற்றுப் பாடல்களில் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருந்த போது அந்தக் காலத்தைய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. அதில் கவனம் செலுத்திப் படித்தவற்றை இங்கு பதிகிறேன்.

அந்தக் காலத்தில் "ஐயவி புகைத்தல்" என்றொரு வழக்கம் இருந்திருக்கிறது.

ஐயவி என்றால் வெண்சிறுகடுகு. ie White Mustard (படத்தைப் பார்க்க)

                                     

கடுகு தாளிக்கும் போது கொஞ்சம் கவனமில்லாம இருந்தோம் என்றால் அதன் நெடி மூக்கைத் துளைத்து இருமலை வரவழைக்கும். வெண் கடுகு வாசமும் அப்படித் தான் இருக்குமென்று நம்புகிறேன். அதை ஏன் புகைய வைக்கிறார்கள்?

1) ஐயவி புகைப்பது என்பது ஒரு மங்கலச் சின்னமாய் இருந்திருக்கிறது. அப்படிச் செய்யும் போது எமன் நெருங்காமல் விலகி விடுவான் என்று ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால் போரில் புண்பட்ட வீரர்/அரசர்களின் வீடு/அரண்மனைகளில் ஐயவிப் புகை போட்டிருக்கிறார்கள்.

வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ?
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?


- புறநானூறுப் பாடல்: 296

பொருள்:
போர் செய்து விட்டு வந்த வீரர்களின் வீட்டுக் கூரையில் வேப்பமரக் கிளைகளை ஒடித்துச் செருகி வைத்திருக்கிறார்கள். காஞ்சிப்பண் பாடுகிறார்கள். நெய்யில் வெண்கடுகு போட்டு புகை வர வைக்கிறார்கள். எல்லா வீடுகளும் ஆரவரித்துக் கிடக்கின்றன. ஒரு வீட்டில் மட்டும் போருக்குப் போனவர் இன்னும் வரவில்லை. பகையரசனை சினந்து கொல்லாமல் திரும்ப மாட்டேன் என்று போர் புரிந்து கொண்டிருக்கிறாரா? அதனால் தான் அந்தப் பெரியோனின் தேர் இன்னும் வீடு திரும்பாமல் காலம் தாழ்த்துகிறதோ?

இதே போல, புறநூனூற்றின் 281ஆவது பாடலிலும் "ஐயவி சிதறி ஆம்பல் ஊதி" என்றும் வருகிறது.

2) ஐயவி புகைப்பது என்பது எதிரி நாட்டு மன்னனுடன் சமாதானத்திற்கு உடன்படுவதற்கு ஒரு அடையாளமாகவும் இருந்திருக்கிறது - வெள்ளைக் கொடி போல. (இங்கே நான் இன்னொன்னு சொல்லட்டுமா? 'வெள்ளைக் கொடிக்கு வேலை வந்து விட்டது மன்னா!' வெள்ளைக் கொடி பொதுவாக சமாதானத்திற்குச் சொல்கிறோம் இல்லையா! ஆனால் போர்க்களத்திற்குரிய உடையாக, அதாவது சண்டை போடுவதற்கு ஏற்ற உடையாக வெள்ளை உடை தான் இருந்திருக்கிறது. இதை சில புறநானூற்றுப் பாடல்களில் பார்க்கலாம். நம் ஒக்கூர் மாசாத்தியாரின் 'கெடுக சிந்தை கடிது இவள் துணிவே' பாடலில் தன் மகனைப் போருக்கு அனுப்பும் போது, தலையில் எண்ணெய் வைத்து வாரி, வெள்ளுடை தரித்து அனுப்பியதாய் வரும் -வெளிது விரித்து உடீஇ;  இன்னொரு பு.நா பாடலிலும் 'தூய வெள் அறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின்' என்று வரும். அறுவை - ஆடை)

சரி, Back to the point, சமாதானத்திற்கும் ஐயவிப்புகை அடையாளமாக இருந்திருக்கிறது. அதை ஒரு பாடலில் காணலாம்.

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை;


அதியமானின் படை வலிமையைப் பாராட்டும் பாடல் ஒன்றில் ஔவையார் மேற்கூறிய வரிகளை இயம்புகிறார். அதன் பொருள், நீயோ சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் அதைப் பொருட்படுத்தாது விரைந்து வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டு போகும் எமன் போன்றவன் என்பதாகும். (அதியமானின் வீரத்தைப் போற்றும் பாடல்கள் பெரும்பாலானவற்றில் ஔவ்ஸ் அவனை ஒரு போர் வெறி பிடித்தவனைப் போலவே சித்தரிக்கிறார். அதில் அவர் பெருமைப்படுகிறார். அவர் 'ஐய ஐய' என்கிறார். படிக்கும் நமக்குத் தான் 'ஐய்யய்ய' என்றிருக்கிறது. ஒரு பாட்டில் வரும். ஊர்ப்பொதுவில் இருக்கும் முரசில் காற்று வந்து அடித்த சத்தம் கேட்டு போர்ப்பறை தான் அது என்று போர் செய்யப் பொங்கி எழுவானாம். இது என்ன வீரமோ? இது பற்றித் தனியாகப் படிக்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்)

3) குழந்தை பெற்ற தாய்க்கும் ஐயவிப் புகை காட்டுவார்களாம்.

மணிமேகலை 'அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை, விரவிய மகளிர் ஏந்திய தூபம்' என்கிறது. 

4) கோவில்களில் பூஜைகளின் போதும் ஐயவி புகைக்கப்பட்டிருக்கிறது என்று பன்னிரெண்டாம் திருமுறையிலும் திருமுருகாற்றுப்படையிலும் குறிப்புகள் கிடைக்கின்றன.

5) சங்ககாலத்தை முடிச்சுக்குவோம். ஆக்சுவலி, வெண்கடுகின் மருத்துவக் குணங்கள் என்னன்னா, அதைக் கஸ்தூரி மஞ்சள் + சாம்பிராணியோட அரைத்து சுளுக்குக்குப் பற்றுப் போட்டா சீக்கிரம் குணமாகும். வெண்கடுகை அப்டீக்கா அரைச்சு அப்புனா வாதம், கை கால் வீக்கமெல்லாம் சரியாயிருமாம்.

ஔவை'யார்'?


நேத்து ஔவையார் பத்தி ஒரு கிசுகிசு சொல்றேன்னு சொன்னேன்ல? அது இது தான்.

நாலஞ்சு ஔவையார் இருந்தாங்கன்னு நமக்குத் தெரியும். சங்க கால ஔவையார், ஆத்திசூடி எழுதின ஔவையார், விநாயகர் அகவல் எழுதின ஔவையார் இப்படி இன்னும் 2 பேர்.

ஆனால் "ஔவையார்"ன்னு மனசுல நெனச்சதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்?

Of course, நரைத் தலையும், கையில் ஒரு குச்சியும், வெள்ளைச் சேலையும், ஓலைச் சுவடியும்..கிட்டத்தட்ட கே.பி.சுந்தராம்பாள் திருவிளையாடல் படத்தில் வந்தது போல ஒரு கேரக்டர் தானே ஞாபகத்துக்கு வரும்?

ஆனால் நம்ம சங்ககாலத்து ஔவையார் பாட்டி இல்ல. ஷி இஸ் எ பியூட்டி.

எப்டி சொல்றேன்னு கேக்குறீங்களா? எவிடன்ஸ் வச்சுருக்கேன்.

புறநானூற்றின் 89-ஆவது பாடலை அதுக்கு நாம பார்க்கணும்.


'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,

மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!

எறி கோல் அஞ்சா அரவின் அன்ன

சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளி பொரு தெண் கண் கேட்பின்,

'அது போர்' என்னும் என்னையும் உளனே'



பொருள்: 

“மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னைக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.

இங்க நாம கவனிக்க வேண்டியது, 'விறலி' என்ற வார்த்தையை. விறலி என்றால் 16 வயதுப் பெண் என்று அர்த்தம்.

எதிரி நாட்டு மன்னன் ஔவையாரை 'விறலி'ன்னு கூப்ட்ருக்கான். அதனால அவங்க அப்போ "16 வயதினிலே"வாக இருந்துருக்காங்க.

ஆனா பாருங்க, அந்த வயதில் அவங்க எதிரி நாட்டுக்குத் தூது போகும் அளவுக்கு வெளியுலக அறிவும் கவிதைப் புலமையும் கொண்டவங்களா இருந்துருக்காங்க. நாமள்லாம் 16 வயதில் என்ன பண்ணினோம்? பஞ்சு மிட்டாய் தான் சாப்ட்டுட்டு இருந்துருப்போம்.

இதனால சகலமானவருக்கும் சொல்ல வர்றது என்னன்னா, இனிமே ஔவையாரை நினைக்கும் போது, நோ நரை, நோ வெள்ளைச் சேலை. அழகா ரெட்டை ஜடை, கை நிறைய வளையல், தலை நிறைய மல்லிகைப்பூ, கலக்கல் தாவணி என்று நினைத்துக் கொள்ளுமாறு சங்கம் கட்டளையிடுகிறது.

நாளைக்கு வேற கிசுகிசு சொல்றேன். அதுவரைக்கும் விளம்பர இடைவேளை.

# கிசுகிசு கீதா

Sunday, 16 March 2014

குறுந்தொகை...(4)

பாடல் - 5

நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே

- பதுமனார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப் பாடல். பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவனது பிரிவை ஆற்றாதவளாகிய தலைவி தன் தோழிக்குச் சொல்லியது.

பொருள்:

செறிந்த இருள் நிறைந்ததாக இந்த இடையிரவு இருக்கிறது. மனிதர்கள் பேசுதலை ஒழித்து இனிமையாகத் தூங்குகின்றனர். அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் வெறுப்பின்றித் தூங்குகின்றன. யான் ஒருத்தியே நிச்சயமாகத் தூங்காமல் இருக்கிறேன்.

நள் - செறிவு

யாமம் - இடையிரவு

மாக்கள் - மக்கள்

முனிவு -  வெறுப்பு/வருத்தம் (முனிவர்கள் என்று எப்படிப் பேர் வந்ததோ?)

நனந்தலை - அகன்ற இடம்

இங்கு மாக்கள் என்பதற்கு மக்கள் என்றும் பகுத்தறிவில்லாதோர் என்றும் பொருள் உள்ளது.

பகுத்தறிவில்லாதோர் என்ற பொருளில் கூட இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கலாம் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

அது சரியென்று தான் தோன்றுகிறது. பொதுவாக எல்லோரும் தூங்கும் போது, நமக்கு மட்டும் தூக்கம் வராவிட்டால் பயங்கர கடுப்பாக இருக்கும். எனக்கெல்லாம் அப்படித் தான். தூக்கம் வராத இரவுகளில் பக்கத்து பெட்டில் தூங்கும் வைஷ்ணவியை எழுப்பி விடணும் போல குறுகுறுப்பாக இருக்கும். 'அடிப்பாவி, இப்டி தூங்குறயேடி!' என்று தோணும்.

அது போல, தலைவிக்கும் தோணுது போல! "நான் ஒருத்தி இங்கு தலைவன் பிரிவால் தூங்காமல் கிடக்கிறேன். உங்களுக்கு என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு? முட்டாப்பயலுக! உலகம் முழுக்க முட்டாப்பயலுக!" என்கிறாள்.

பாடல் - 6:

வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.

- பெரும்பதுமனார்

பாடலின் களம்:
 
பாலைத்திணைப் பாடல். தலைவனும் தலைவியும் உடன்போக்கு (உடன்போக்குன்னா ஓடிப் போறது) போன போது, எதிரில் வந்தவர்கள் இவர்களைப் பார்த்து இரக்கப்பட்டுக் கூறியது.

விளக்கம்:

ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் போது கொட்டப்படும் பறையைப் போல, மேல் காற்றின் தாக்குதலால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெள்ளிய முதிர்ந்த காய்கள், மூங்கில் நிறைந்த பாலை நிலப்பரப்பில் சத்தத்துடன் விழுந்து கிடக்கிறது. அதில் வில்லை உடையவனாகியவனும் வீரக் கழல்கள் அணிந்தவனுமான தலைவனும், தோள் வளையணிந்த மெல்லிய அடிகள் கொண்ட சிலம்பு அணிந்த தலைவியும் செல்கிறார்கள். அவர்களைக் கடந்து செல்ல வருபவர்கள் அவர்களின் முகங்களின் பாவத்தாலும் தலைவி காலில் சிலம்பு இருப்பதாலும் அவர்களுக்கு இன்னும் மணமாகவில்லை என்று அறிந்து இந்தப் பாலை நிலத்தில் கடந்து செல்லும் அவர்களின் கஷ்டத்தினால் 'இந்த நல்லோர்கள் யாரோ? இரங்கத்தக்கவர்கள்' என்கிறார்கள்.

(ஹ்ம். உடன்போக்கும் அந்தக் காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. அப்படிப் போனவர்களைப் பார்த்து அவர்களுக்காக இரக்கமெல்லாம் கொள்கிறார்கள். இந்தக் காலத்தில் அது கூட அரசியலாகத் தான் ஆகிறது)

அதெப்படி தலைவி காலில் உள்ள சிலம்பை வைத்து அவர்களுக்கு மணமாகவில்லை என்று கண்டுபிடித்தார்களாம்? குட் கொஸ்டின். அதற்குப் பதில் இருக்கிறது.

அந்தக் காலத்தில் 'சிலம்பு கழி நோன்பு' என்றொரு சடங்கு இருந்ததாம். சின்ன வயதிலேயே பெண்களுக்குக் காலின் சிலம்பு அணிவித்து விடுவார்களாம். அதற்குப் பெயர் 'கன்னிமைச் சிலம்பாம்'. திருமணத்திற்கு முன்பு, மணமகள் வீட்டில் வைத்து அவள் காலிலிருக்கும் சிலம்பைக் கழற்றுவது ஒரு விழா போல நடக்குமாம். அதற்குப் பெயர் 'சிலம்பு கழி நோன்பு'. 

இதற்கு நற்றிணை, சிலப்பதிகாரம், அகநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் reference ,கிடைக்கிறது.  உதாரணத்திற்குச் சில:

ஐங்குறுநூறு - பாடல் எண்: 399

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நன் மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென் வேல்
மை அற விளங்கிய கழல் அடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே.

உடன்போக்கு நிகழ்த்திய தலைவன்-தலைவியை, தலைவன் வீட்டில் ஏற்றுக் கொண்டு அவளுக்குச் செய்ய வேண்டிய சிலம்புகழி நோன்பை தலைவனின் தாய் செய்கிறாள். (But actually அது தலைவி வீட்டில் செய்ய வேண்டிய சடங்கு) அதைக் கண்டு வந்து சிலர், தலைவியின் தாயிடத்தில் சொல்கிறார்கள். அதற்கு அவள் 'வெற்றி பெற்ற வேலை உடைய, குற்றமற்றவனாகிய, பொய் கூறுவதில் வல்லவனான தலைவனின் தாயிடத்தே வதுவை மணத்தை நம் வீட்டில் செய்யும்படி சொன்னால் ஏதேனும் குற்றமாகுமா?' என்று வருத்தப்பட்டுச் சொல்கிறாள். அதாவது இவங்க வீட்டிலும் அவர்களை ஏற்றுக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதைச் சூசகமா சொல்கிறாளாம்! (யாருக்கெல்லாம் இங்க பாரதியின் சுட்டும் விழிச் சுடர் தான் பாட்டு ஞாபகத்துக்கு வருது? மீ ஃபர்ஸ்ட்!)

நற்றிணையில் 'சிலம்பு கழீஇய செல்வம் பிறர் உணக்கழிந்த என் ஆயிழை அடியே' என்று வருகிறது.

Saturday, 8 March 2014

பெண்ணே! பெண்ணே!


இந்த வருடம் (வரும் சனிக்கிழமை) 101-ஆவது சர்வதேச மகளிர் தினமாமே! நேற்றைக்குத் திடீரென்று ஒரு யோசனை. சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் எழுதிய பாடல்களைப் படித்து அதில் ஒரு ஆராய்ச்சி பண்ணி அட்ராசிட்டி பண்ணினால் என்ன என்று! ஆனாலும் இது 3 நாளுக்கு முன்னாடி புத்தியில் உரைத்தால் ஒரு பயனும் தராது. ஹ்ம். அடுத்து நேரம் கிடைக்கும் போது இதை முயற்சிக்கிறேன். இருந்தாலும் Better late than never என்ற கோட்பாட்டிற்கிணங்க முடிந்த வரைக்கும் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால்,  நான் செலெக்ட் பண்ணி வைத்திருக்கும் 5 பெண்பாற் புலவர்களின் ஒவ்வொரு sample பாடல்களைத் தெரிந்து கொள்வோம். அவர்கள்,

1. ஔவையார்
2. ஆண்டாள்
3. வெள்ளி வீதியார்
4. காக்கைப் பாடினியார்
5. காரைக்கால் அம்மையார்

Lets start the Dhamakka!


***

ஔவையார்

சங்ககால, இடைக்கால, சோழர் கால, சமய, பிற்கால(1 & 2) என்று 6 ஔவையார்கள் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். இங்கு நாம் பார்க்கப் போவது சங்ககால ஔவையார் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்று.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே



(புறநானூற்றுப் பாடல் எண் - 187 )

இந்தப் பாடலை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் வெப்சைட் ஹோம் பேஜில் தான் முதல் முறை பார்த்தேன். என்னெவென்று படித்துப் பார்த்தவுடன் நிரம்பவே பிடித்திருந்தது. நன்றிங்க முத்துலிங்கம் சார்.

விளக்கம்:

நிலமே! நீ ஓரிடத்தில் நாடாக இருக்கிறாய்! ஓரிடத்தில் காடாக இருக்கிறாய்! பள்ளமாக இருக்கிறாய்! மேடாகவும் இருக்கிறாய்! எது எவ்வாறாயினும் நல்லவர் உறையுமிடத்து நீ நல்ல நிலமாகவும், தீயவர் உறையுமிடத்து நீ தீய நிலமாகவும் இருக்கிறாய். உன்னில் உறைபவர்களை வைத்தே நீ உயர்வும் தாழ்வும் அடைகிறாய்! அது தவிர உனக்கென்று ஒரு நலமுமில்லை.

அவல் - பள்ளம்
மிசை - மேடு

இதை அப்டியே மாற்றி 2 பேர் சொல்றாங்க. ஔவ்ஸ் நிலத்திற்கு ஒரு இயல்புமில்லை, அங்கன யார் இருக்காங்களோ அவங்கள வச்சுத் தான் நன்னிலம் என்பதும் தீநிலம் என்பதும்ன்னு சொல்றாங்க. ஆனா வள்ளுவர் நிலத்தின் தன்மையால் அங்கு இருக்கும் நீரின் இயல்பு மாறுதுங்கறார். அதுவும் கரெக்ட் தான்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.


( திருக்குறள் - சிற்றினஞ்சேராமை - குறள் எண்: 452 )

கலைஞர் உரை:


சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.

இன்னொரு குறளில்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


( திருக்குறள் - புகழ் - குறள் எண்: 239 )

கலைஞர் உரை: 

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

பாரதியார் 'நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம்' என்று சொல்கிறார்.

மூணு பேர் சொல்றதும் கரெக்ட் தான்! 


***

ஆண்டாள்

சூடித் தந்த சுடர்கொடியாள். இவள் தமிழுக்கும் காதலுக்கும் ஆண்டவன் மணாளனாய் ஆனது ஒன்றும் அதிசயமேயில்லை. அந்தத் தகுதி அவளுக்கு இருக்கிறது.

12 வைஷ்ணவ ஆழ்வார்களில் இவள் ஒருத்தியே பெண். மகளிர் தினத்தில் இவளைக் கொண்டாட இந்த ஒரு காரணம் நமக்குப் போதும் தானே!

திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் எழுதியது.

திருப்பாவையை மார்கழி மாதத்தில் பிரித்து மேய்ந்தோம். அதன் அழகு தான் நாச்சியார் திருமொழியைப் படிக்கச் சொல்லித் தூண்டியது. கொஞ்சமே கொஞ்சம் படித்தேன். பக்தி இலக்கியங்கள் மேல் அவ்வளவு ஈர்ப்பில்லை என்ற போதும், இவற்றை வெறும் பக்தி என்ற கட்டுக்குள் சுருக்கி வைக்க முடியாது. ஆண்டாள் தமிழின் அழகென்ன, சொல்லும் உவமைகள் என்ன, அதன் பின்னுள்ள உணர்ச்சி என்ன! அப்பப்பா! காதலனே ஆனாலும் இப்படியெல்லாம் நேசிக்க முடியுமா என்பது கேள்வியாய் எழுந்து வியப்பாய் உறைந்தது. அதனால் தான் "தெய்வீகக் காதல்" என்ற சொல்லாடல் வந்ததோ என்னவோ!

Coming to the main point , ஆண்டாள் பாடல்கள் அத்தனையும் அழகு என்றாலும், ஒரே ஒரு பாடலை இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

பாடல்:

என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன்
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே
பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப்
புண்ணியனை வரக் கூவாய்


- நாச்சியார் திருமொழி - குயிற் பத்து

(இந்தப் பாடலை "New India"வில் பாரதியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பார்)

விளக்கம்:

குயிலே! நாராயணனைக் காணாததால் ஏற்பட்ட தவிப்பால், எலும்புகள் உருகியது. வேல் போன்ற கண்களின் இமை மூடவில்லை. துன்பக் கடலில் புகுந்து, வைகுந்தன் என்ற ஒரு தோணி கிடைக்காது தடுமாறிக் கொண்டிருக்கிறேன். அன்பு உடையோரைப் பிரிவதால் உண்டாகும் துக்கத்தை நீயும் அறிவாய் தானே குயிலே! பொன்னாலான மேனியுடையவனும், கருடக் கொடியும் கொண்டவனான புண்ணியன் நாராயாணன் வரும்படி கூவுவாயாக!

இங்கு தவிப்பினால் எலும்பு உருகியது என்கிறாள்.

கம்பர் அன்பால் எலும்பு உருகுவதாய் எழுதியிருப்பார். ராமனை முதன்முதலில் கண்ணால் கண்ட போது, அனுமனுக்கு எலும்பு உருகியதாம்.

"ஐய! என் ஆக்கை, என்பு தோன்றல உருகின எனின், பிறிது எவனோ?" என்று கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு பாடலில் வரும்.

இன்னொரு இடத்தில், ராமனைக் கண்ட எல்லோருக்கும் எலும்பு உருகியது என்றும் ஒரு இடத்தில் சொல்கிறார்.

"மின் பொருவு தேரின்மிசை
வீரன் வரு போழ்தில்,
தன் பொருவு இல் கன்று தனி
தாவி வரல் கண்டாங்கு
அன்பு உருகு சிந்தையொடும்
ஆ உருகுமாபோல்,
என்பு உருகி, நெஞ்சு உருகி,
யார் உருககில்லார்?
"

மாணிக்கவாசரும் கூட "என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி" வணங்குகிறார்.

இங்கு எலும்பு உருகியது என்பதை நேரடியாகப் பொருள் கொள்ளக் கூடாது. எலும்பு உருகியது போல வலிமை தோன்றாமல் அன்பின் காரணமாக உடல் நெகிழ்ந்ததாம். அப்படி...

நேரடியாக அர்த்தம் பண்ணினா, அது எலும்புருக்கி நோய் ஆயிரும். அப்டினா ரிக்கெட்ஸ் நோய். எப்பவும் பள்ளித் தேர்வில் 2 மார்க் கேள்வியில் இந்தக் கேள்வி தவறாமல் வந்துரும். 


***

வெள்ளிவீதியார்

சங்ககாலப் புலவர். அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய தொகுப்புகளில் 13 பாடல்களை எழுதியுள்ளார்.

பெரும்பாலானாவை விட்டுச் சென்ற தலைவனை நினைத்து உருகி, மருகி எழுதிய பாடல்களாக இருக்கின்றன. அவருக்கு என்ன கஷ்டமோ!

அவரது பாடல்களுள் ஒன்று வித்தியாசமாக இருந்தது. தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களைச் சேர்த்து வைக்கத் தலைவன் வீட்டிலிருந்து சிலர் தலைவி வீட்டுக்கு வருகிறார்கள். இவர்கள் என்ன சொல்வார்களோ என்று தலைவி டென்ஷனாக இருக்கிறாள். அதைக் கண்டு தோழி, 'அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாத் தான் பேசிட்டு இருக்கானுவ!' என்று தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். அதற்குத் தலைவி பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கவென்று முதியோர் சிலர் உள்ளனர் என்று கூறி மகிழ்கிறாள். ஹ்ம். இதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் முதியோர்கள் தான் காதல் திருமணப் பேச்சுக்களை முறித்து வைப்பவர்களாக இருக்கிறார்கள். என்னத்தச் சொல்ல!

பாடல்:

அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
''நன்றுநன்று'' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே


- குறுந்தொகை - பாடல் எண்: 146

விளக்கம்:

தோழி! கேட்பாயாக! அவ்விடத்திலுள்ள நம்மைச் சேர்ந்த குழுவிலுள்ளவர்கள், தண்டைப் பிடித்த கையோடு, கிழிந்த கந்தல் துணி போல நரைத்தலையையும் உடைய பெரியவர்கள், நன்று நன்று என்று கூறும் தலைவன் கூட்டத்தாரோடு, இந்நாள் நீங்கள் இங்கு வரப் பெற்றமையால் பெருமையுடையதானதென்று முகமன் கூறுவர். நமது ஊரின்கண் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போரும் இருந்தனர்.

"வெண்தலைச் சிதவலர்" - வழுக்கைத் தலை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!

தலையில் கிழிந்த துணியைக் கவிழ்த்து வைத்தது மாதிரி, நரையுடன் வழுக்கையும் இருக்கிறதாம். (எர்வோமெர்டின் ஞாபகத்துக்கு வருதா?) க்ளாஸ்!

நம்ம ஔவையாரும் இந்தம்மாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் போல! ஔவ்ஸ் எழுதிய 'ஓங்கு மலைச் சிலம்பில்' என்ற அகநானூற்றுப் பாடலில் பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவனை வெள்ளி வீதியாரைப் போலப் போய்த் தேடப் போவதாய் எழுதுகிறார்.


***

காக்கைப்பாடினியார்

சங்ககாலப் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். 

ஒன்பதாம் வகுப்பில் ஒரு பாடல் வந்திருக்கும். அதைச் சொன்னால் எல்லாருக்கும் இவர் ஞாபகம் வந்து விடுவார். 

தாய் ஒருத்தி போருக்குத் தன் பச்சிளம் மகனை அனுப்புகிறாள். அவன் போரில் முதுகில் புண்பட்டு இறந்து விட்டான் என்று ஊரார் சொல்கிறார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அவள், அது மட்டும் உண்மையென்றால் அவன் பாலுண்ட முலைகளை வெட்டி எறிந்து விடுவேன் என்று ஆவேசத்துடன் கையில் வாளுடன் போர்க்களம் செல்கிறாள். அங்கு பிணங்களைப் புரட்டிப் பார்த்து தன் மகனைத் தேடுகிறாள். அவன் மார்பின் விழுப்புண் பட்டு செத்துக் கிடப்பதைக் கண்டு, அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியுற்றாள். 

இப்போ ஞாபகம் வந்துட்டா? எத்தனவாட்டி 5 மார்க் கேள்வியில் எழுதியிருப்போம். (இதே மாதிரி இன்னொரு பாட்டும் எனக்கும் ஞாபகம் வருது. கெடுக சிந்தை, கடிதிவள் துணிவே. அருமையான வீரப்பாடல். இதை எழுதியது ஓக்கூர் மாசாத்தியார்) 

காக்கை குறித்து இவர் எழுதிய குறுந்தொகைப் பாடலால் காக்கைப் பாடினியார் என்ற பெயர் பெற்றார். அந்தப் பாடல் கீழே!

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே


- குறுந்தொகை - பாடல் எண்: 210

களம்:

பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைமகன் திரும்பி வந்த பிறகு, 'தலைவியை நன்றாக ஆற்றுவித்தாய்' என்று தோழிக்கு நன்றி கூறுகிறான். அதற்குத் தோழி 'இதில் நான் செய்தது ஒன்றுமில்லை. விருந்தினர் வருவார் என்று தினமும் கரைந்த காக்கையினால் தான் என்னால் ஆற்றுப்படுத்த முடிந்தது' என்று தலைவனிடம் கூறியதாகப் பாடப்பட்ட பாடல்.

விளக்கம்:

திண்மையுடைய தேரினைக் கொண்ட, நள்ளி என்னும் வேந்தனது காட்டில் வாழும் அண்டர்கள் வளர்க்கும் பல பசுக்களின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யும், தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்மையான நெல்லினால் சமைக்கப்பட்ட சுடுசோற்றையும், ஏழு கலத்தில் ஏந்தி வைத்துக் கொடுத்தாலும், என் தோழியாகிய தலைவியுடைய பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு விருந்தினர் வரக் கரைந்த காக்கைக்கு அப்பலியானது சிறிதேயாகும்.

வளை நெகிழ்தல், பசலை படர்தல் தெரியும். அதென்ன தோள் நெகிழ்தல்?

அகநானூற்றில் கூட 'சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ' என்று வருகிறது.

உறுப்பு நலனழிதலில் வள்ளுவரும் 'தொடியொடு தோள் நெகிழ நோவல்' என்கிறார். தோள் நெகிழ்தல் என்றால் மெலிதல் என்று அர்த்தமாகயிருக்கும் என நினைக்கிறேன்.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்னொரு காக்கைப்பாடினியார் இருந்தார். அவர் பெருங்காக்கைப் பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம் போன்ற கணித நூல்களை எழுதியவர்.

ஒரு உதாரணம்: வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் சொல்லுங்க பார்ப்போம்.

யெஸ்.. C = 2 * pi * r 

(pi = 22/7; r - ஆரம்)

இதை கா.பா எளிமையாகச் சொல்கிறார். 'விட்டமோர் ஏழு செய்துதிகைவர நான்கு சேர்த்து சட்டென இரட்டி செயின் திகைப்பன சுற்றுத்தானே' - So simple!


***

காரைக்கால் அம்மையார்

ஔவையார், ஆண்டாள், வெள்ளி வீதியார், காக்கைப் பாடினியார் வரிசையில் காரைக்கால் அம்மையாரையும் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் உண்டு.

  • மூன்று பெண் நாயன்மார்களில் முதல்வரும் மூத்தவரும்
  • ஈசன் வாயாலேயே அம்மையே என்று அழைக்கப்பட்டப் புகழுடையவர்
  • அந்தாதிப் பாடல்களை முதன்முதலில் இயற்றியவர்
  • பெண்ணுடலை விடுத்துப் பேய் உருவை விரும்பிப் பெற்றவர். சிவன் உறையும் கயிலாய மலையில் காலால் நடப்பது பாவம் என்பதால் தலைகீழாகக் கையால் நடந்து சென்றவர்

எனக்கு அவர் பற்றிச் சொல்கின்ற மாங்கனிக் கதையில் அவ்வளவு ஈர்ப்பில்லை என்ற போதும், டெடிகேஷன் என்பதன் முழு அர்த்தம் இவர் பாடல்களில் தொனிக்கும். அதை நாம் கொண்டாடித் தான் ஆக வேண்டும்.

அவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதியிலிருந்து ஒரு பாடல்:

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்

கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது

Sunday, 16 February 2014

சொல், ஒரு சொல்!...(5)

சென்ற வாரம் உணங்குதல் பற்றிப் பேசும் போது, துணங்கைக் கூத்து பற்றி நம் மாலன் தொட்டுச் சென்றார். அது குறித்துத் தேடியவற்றில் சிலவற்றை இங்கே பதிகிறேன்.

சங்க காலத்தில் வழிபாட்டின் போதும், போர்க்காலங்களிலும், பொழுதுபோக்கிற்காகவும் பல வகைக் கூத்துக்கள் ஆடப்பட்டிருக்கின்றன. அவைகளுள் முக்கியமானவை மற்றும் பரவலானவை: குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, தழூஉ கூத்து, வெறியாடல் போன்றவை. இவை தவிர இன்னும் 11 ஆடல் வடிவங்களைச் சிலப்பதிகாரம் சொல்கிறது.(பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப் பதினோராடலும் பாட்டும் கொட்டும்’)

துணங்கைக் கூத்து எப்படி ஆடப்படுகிறது?

துணங்கைக் கூத்து என்பது முடக்கிய கைகளால் விலாவில் புடைத்து, தோள்களை உயர்த்தி ஆடப்பட்டது. "பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கை யாகும்என்று திருமுருகாற்றுப்படை சொல்கிறது.

வகைகள்:

பேய்த்துணங்கை, போர்த்துணங்கை, மகளிர்த் துணங்கை என்று வகைகள் இருக்கின்றன.

குரவையும் துணங்கையும்:

குரவையும் துணங்கையும் இணைய வைத்தே பேசப்படுகிறது. குரவை என்பது கைகளைக் கோர்த்தும், கைகளை உயர்த்தியும் ஆடப்படுகிறது. இதில் பேய்த்துணங்கை என்பது பின்தேர்க்குரவை எனவும், போர்த்துணங்கை என்பது முன்தேர்க்குரவை எனவும் சொல்கிறார்கள். (போருக்குப் போகும் மன்னனின் தேருக்கு முன் ஆடுவது முன்தேர்க்குரவையாகும். போரில் வென்ற பின் மன்னன் தேருக்குப் பின்னால் ஆடுவது பின்தேர்க்குரவையாகும்.)

பேய்த்துணங்கை பற்றி அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. போரில் வென்ற அரசனின் புகழ் பாடி அவனது தேர்களுக்குப் பின்னின்று நிழல் போலப் பேய்கள் குரவை ஆடும் என்று சொல்லப்படுகிறது. (மன்னன் ஊரும் மறமிகு மணித்தேர்ப் பின்னும் முன்னும் பேய்ஆ டின்று.) அது போல பேய்த்துணங்கையும் இருக்கலாம்.

பொதுவாக வழிபாட்டின் போதும், போரில் வென்ற களிப்பிலும் துணங்கைக் கூத்து ஆடப்படுகிறது. வழிபாட்டின் போது அதிகம் பெண்களும், வெற்றிக் களிப்பின் போது ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவதாக இருக்கிறது.

வழிபாட்டில்:

முந்தைய பதிவில் மாலன் quote செய்திருந்த திருவாய்மொழிப் பாடலில் இதைக் காணலாம்.

அணங்குக்கு அருமருந்து என்று,அங்குஓர்
    ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக்
    கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக்கழு தைஉதடு
    ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர்
    வேதம்வல் லாரையே.


இந்தப் பாடலின் பொருள்: "அந்தப் பெண்ணின் நோயைப் போக்கும் உரிய மருந்து என்று ஆட்டையும் கள்ளையும் மதித்து தோள் குலைய துணங்கை ஆடும் பெண்களே! காய்ந்த நெல் கெட அதைத் தின்கின்ற கழுதையின் உதடு அசைவதைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்? வேதத்தில் சிறந்தவர்களைப் போய் வணங்குங்கள்!"

இங்கு வழிபாட்டின் போது பெண்கள் ஆடிய மகளிர்த் துணங்கைக் காணலாம்.

//ஆடும் கள்ளும் பராய்// ஆடு எதற்கு வந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் கூத்தின் போது கள் குடித்தாடும் வழக்கம் அப்போது(ம்) இருந்தது.
​​

​"​திண்டிமில் வன்பரதவர் 
 
வெப்புடைய மட்டுண்டு 
தண்குரவைச் சீர்தூங்குந்து
"​ - என்று புறநானூறு சொல்கிறது. (மட்டுண்டு - மதுவுண்டு)

போரில்:

குண்டு கண் அகழிய மதில் பல கடந்து

பண்டு பண்டுந்தாம் உள் அழித்துண்ட

நாடு கெழு தாயத்து நனந்தலை அருப்பத்துக்

கதவம் காக்கும் கணை ஏழு அன்ன

நிலம்பெறு திணி தோள் உயர ஓச்சிப்

பிணம் பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடி
” – பதிற்றுப்பத்து

இப்பாடலின் பொருள்: “ஆழ்ந்த அகழிகளையுடைய மதில்கள் பலவற்றைக் கைப்பற்றிக் கடந்து சென்று, உட்புகுந்து அழித்து, நாடாட்சிக்கு உரியதாக அமைந்த, அகன்ற உள்ளிடத்தையுடைய அரண்களின், வாயில் கதவு வலிமையுடையதாகக் காக்கும் கணைய மரத்தை ஒப்ப, பகைவர்களின் நாடுகளைப் பெறும் திண்ணிய தோள்களை உயரத் தூக்கி வீசி, பிணங்கள் குவிந்து கிடக்கும் போர்க்களத்திலே முன்னே பல காலங்களில் பன்முறை துணங்கைக் கூத்தினை ஆடி”

போர் வெற்றி தவிர்த்து பக்திக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பெண்கள் துணங்கை ஆடினாலும், அதில் தலைக்கை கொடுத்தல் என்று ஆணுக்கும் பங்கு இருக்கிறதாம். தலைக்கை அல்லது முதற்கை கொடுத்தல் என்றால் பெண்ணின் கையைப் பற்றி ஆடுதல் அல்லது தழுவிக் கொண்டு ஆடுதல். 

குறுந்தொகையின் மருத நிலப்பாடலில் தலைவியை அயலார் வந்து மணமுடிக்க விரும்பிய போது, தன் தலைவன் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தும் பாடலில் இப்படி வருகிறது.

மள்ளர் குழீஇய விழவி னானும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டும் காணேன் மாண்டக் கோனை

யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த

பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே


பொருள்: “மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனாகிய தலைவனை, வீர்ர் கூடியுள்ள சேரி விழாவின்கண்ணும், மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின்கண்ணும் ஆகிய எவ்விடத்தும் காணவில்லை. நானும் ஒரு ஆடுகின்ற களத்திற்குரிய மகளே! தந்தங்களை அறுத்துச் செய்த வளையல்கள் தன் பிரிவினால் நெகிழுமாறு செய்த பெருமைமிக்க தலைவனும் ஓர் ஆடுகின்ற களத்திற்குரிய மகனே!

அதாவது என்னோடு துணங்கை ஆடிய தலைவன் ஒருவன் உள்ளான் என்று அவள்(ஆதிமந்தி) சொல்வதாய் உரையாசிரியர் சொல்கிறார். “மகளிர் விழாக் காலத்தே துணங்கை ஆடுதலும் ஆடவர் அவர்கட்கு முதற்கை கொடுத்தலும் பண்டை வழக்கங்கள்” என்றும் சொல்கிறார். 

குரவை, துணங்கை போல, வெறியாட்டு என்ற ஒன்றும் வெரி குட்டான கூத்து. சிவபெருமான் அல்லது முருகன் அருள் வந்து வேகமாக ஆடுவது. வேலன் வெறியாட்டு என்று பல இலக்கியங்களில் வரும். பொன்னியின் செல்வனில் கூட, வந்தியும் ஆதித்தனும் பழுவேட்டையர் அரண்மனையில் இருக்கும் போது, வேலன் வெறியாட்டு கூத்து நடக்கும் நிகழ்ச்சி வருவது போல ஒரு மங்கல் ஞாபகம். (ஸாரி, பொன்னியின் செல்வனை refer பண்ண நேரமில்லை. அதைத் தொட்டால் கீழே வைக்க விடாது.)

குறுந்தொகை...(3)

பாடல் - 4

நோம், என் நெஞ்சே; நோம் என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே.

- காமஞ்சேர் குளத்தார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப் பாடல். தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள் என்று கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியது.

பொருள்:

(அடேங்கப்பா! இந்தப் பாடலுக்கு எகனைக்கு மொகனையாக ஏகப்பட்ட விளக்கங்கள். அதில் எனக்குச் சரியென்று தோன்றியதை இங்கே பதிகிறேன்)

என் நெஞ்சம் வருந்தும். என் நெஞ்சம் வருந்தும். கண் இமைகளைத் தீயச் செய்யும் கருவி போல, வெம்மையுடைய எனது கண்ணீரைத் தான் துடைத்து, அளவளாவுவதற்கு அமைந்த நம் தலைவர், இப்பொழுது மனம் பொருந்தாராய்ப் பிரிந்திருத்தலால், என் நெஞ்சம் வருந்தும்.

இந்தப் பாடலில் என்னவொரு அழகு! பொதுவாக நீர் என்பது தீயை அணைக்கும். இங்கே கண்களின் கண்ணீர் அவள் இமைகளைத் தீயிலிடுகிறதாம். என்ன அழகான கற்பனை! வாவ்!

இதே போல, அகநானூற்றுப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது. அது இதை விட ஒரு படி அழகு அதிகம்.

நறவின் சேயிதழ் அனைய ஆகி,  குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல் உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்,
வெய்ய உகுதர, வெரீஇ

குவளை மலர் போன்ற கரிய நிறம் கொண்டிருந்த கண்ணிமைகள், நறவம்பூவின் சிவந்த இதழ்களைப் போல செந்நிறமானதாம், அவள் கண்ணீரால். (நீளமாகச் சொல்லத் தேவையில்லை என்பதால் சுருக்கமான விளக்கம் எனக் கொள்க)

இன்னும் சில இடங்களில் இதே கருத்தையொட்டி, கருந்தடக் கண்ணின் இமைதீர் வெம்பனி முலைமுக நனைப்ப (பெருங்கதை), உற்று மை கலந்து கண்கள் வெம்பனி உகுத்த அன்றே (சீவகசிந்தாமணி),  கண் உகும் வெய்ய நீர் வெள்ளத்து மெள்ளச் சேறலால் (கம்பராமாயணம்) என்று வருகிறது.

குறுந்தொகையின் 202 ஆவது பாடலிலும் இதே போல, முதலடியில் இரண்டு 'நோம் என் நெஞ்சே'வும் கடைசியிலும் 'நோம் என் நெஞ்சே'வும் வருகிறது. (மொத்தத்தில் தலைவர்கள் எல்லாம் தலைவிகளை நோகடிக்கத்தான் செய்யுறானுவ போல)

பாடல் - 5

அதுகொல் தோழி! காம நோயே?-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை
உடை திரைத்திவலை அரும்பும் தீம் நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே

- நரி வெரூஉத்தலையார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப்பாடல். தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள் என்று கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியது.

பொருள்:

தோழி! சேற்றில் தங்கியிருக்கும் நாரைகளைத் தன் இனிய நிழலால் உறங்க வைக்கிற புன்னை மரங்களை உடையதும், கரையை உடைக்கின்ற அலைகளில் இருந்து தெறிக்கும் துளிகளால் அரும்புகின்ற, கண்ணுக்கு இனிமையாகிய நீர்ப்பரப்பையும் கொண்ட, மெல்லிய கடற்கரை நாட்டுத்தலைவன் பிரிந்ததனால், பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள் இமை பொருந்துதலைச் செய்யவில்லை(அதாவது தூங்கவில்லை). காம நோய் என்பது இத்தன்மை கொண்டதா?

வதி - சேறு அல்லது கால்வாய் ( 'குருகு' எனச் சொல்லப்படும் நாரைகள் பொதுவாக சேறு கொண்ட புதர்களில் தங்குமாம். குருகு பற்றி சில நல்ல விளக்கங்கள் ஜெயமோகன் தளத்தில் இருக்கிறது. அதன் சுட்டி: http://www.jeyamohan.in/?p=16748)

குருகு - பொதுவான அர்த்தம் நாரை என்பது

திரை - அலை

திவலை - துளி

புலம்பு - கடற்கரை (புலம்பன் - தலைவன் ( நெய்தல் திணை என்பதால்))

ஒல்லா - பொருந்தாத


இது உரையில் இருக்கும் விளக்கம். இப்பாடலை நான் இப்படிக் கற்பனை பண்ணி ரசிக்கிறேன்.

குருகுவையும் தலைவியையும் அவள் ஒப்பிடுவது போல எனக்கு ஒரு கற்பனை.

தலைவனின் நாடு, கரையை உடைக்கின்ற அலைகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகளின் இனிமையால் நிறைந்திருக்கிறது. அது போல, தலைவன் உறைகின்ற அவளது மனது அவன் பிரிவால், நெஞ்சில் உண்டாகக் கூடிய அலைகளிலிருந்து தெறித்துக் கண்ணில் கண்ணீர்த்துளியாக இருக்கிறது. ஆனால் அவன் நாட்டில் அது இனிமையானதாகவும், இவளுக்கு இங்கே அது துயரம் தருவதாகவும் இருக்கிறது. ( கடல் அலைகள் vs நெஞ்சின் அலைகள். இதை நம்ம தலைவரும் சொல்லியிருக்கிறார். "நீலக் கடலலையோ நினது நெஞ்சின் அலைகளடி (எனக்கு ரொம்பப் பிடிச்ச பாரதி வரிகளுள் ஒன்று இது)" அலை தெறித்த துளி vs கண்ணீர்த்துளி)

அவன் நாட்டின்கண் இருக்கும் புன்னை மர நிழல்கள் நாரைகளைத் தூங்க வைக்கும் சுகம் தருகிறது. ஆனால் அவன் மீது இருக்கும் இவளது அன்போ, அவளைத் தூங்கவிடாமல் செய்கிறது. ( குருகு vs தலைவி )

இந்த மாதிரி கற்பனையில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் இப்படி நம்புகிறேன். இது பாடலின் அழகைத் தூக்கிக் காட்டுகிறது.

இந்த 'ஒல்லா' என்ற வார்த்தை 'கேட்சி'யாக இருக்கிறது அல்லவா!

திருக்குறளிலும் நிறைய இடங்களில் வருகிறது. அவற்றில் ஒன்று:

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. ( குறள் எண்: 870: அதிகாரம்: பகைமாட்சி)

(ஒல்லாவைத் தேடும் போது, வேறொன்று கண்ணில் பட்டது. மேலோட்டமாகத் தேடியதில், அதில் சில சுவாரஸ்யங்கள் இருக்கும் போலத் தெரிகிறது. அதை வாய்ப்பிருந்தால் அடுத்த ஞாயிறில் ஆழமாகப் படிப்போம் என்றிருக்கிறேன். அது ஒரு கில்பான்சி கிஜு கிஜா)

Sunday, 9 February 2014

சொல், ஒரு சொல்!...(4)

இன்றைய சொல்: "உணங்கு"

உணங்குதல் என்றால் உலர்தல், மனம் வாடுதல்

மேற்கோள்கள்:

1. பட்டினப்பாலை - நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்

அகல் நகர் வியன் முற்றத்து
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனம் குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும்பல் குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு

2. அதே பட்டினப்பாலையில் 'நிலவு அடைந்த இருள் போல, வலை உணங்கும் மணல் முன்றில்' என்றும் வருகிறது.

3. நற்றிணை - உணங்கு திறன் நோக்கி

முற்றா மஞ்சள் பசும்புறங் கடுப்பச்
சுற்ரிய பிணர சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிப்
புன்னையங் கொழுநிழல் முன்னுய்த்துப் பரப்புந்
துறைநணி யிருந்த பாக்கமும் உறைநனி
இனிதுமன் அளிதோ தானே துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

4. பதிற்றுப்பத்து - கான் உணங்கு கடு நெறி

முகநூலில் பகிர்வுக்குப் பின் பிற்சேர்க்கை:

மாலன்: திருக்குறளிலும் ’உணங்கு’ உண்டு. உணக்கு என்று எழுதுவார் வள்ளுவர். தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் (குறள் 1037) பலம் வீசை மணங்கு என்பவை பழையகாலத்து அளவுகள்.பலம் என்பது சுமாராக 35 கிராம்.தொடி என்பது பலத்தைக் குறிப்பதற்கு இன்னொரு சொல்.ஒரு பலம் புழுதி (மேல் மண்) நன்றாகப் பொடிந்து கால் பலம் ஆகும் அள்விற்கு உழவு செய்து நிலத்தை காயப்போட்டால் (உலர்த்தினால், உணங்கு செய்தால்) அந்த நிலத்தில் ஒரு பிடி உரம் கூடப் போடாமல் பயிர் செய்யலாம் என்கிறார் வள்ளுவர்.

லாவண்யா: "இடிக்கும் கேளிர் நும் குறை ஆகநிறுக்கல் ஆற்றினோ நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.


இப்படியும் ஒரு பாடல் இருக்கு தோழி. வெண்ணெய் உருகி வழிவதை சொல்லி இருக்காங்க, அது வெண்ணையின் இயல்பே என்றாலும் ஒரு துயரத்தோடும் ஒப்பிடலாம், இந்த பாடலில் தொனி அதுவே.


இராஜி: முந்தைய இடங்களிலெல்லாம் 'உலர்ந்த' என்று பொருளில் வந்தது, இங்கு உருகிய என்று வருகிறது. (செயலறுதல் என்று கூடச் சொல்லலாம். உணங்குதலுக்கு அப்படி ஒரு அர்த்தம் அகராதி சொல்கிறது)
வெப்பத்தில் உருகிய வெண்ணையைப் படித்ததும், சமீபத்தில் படித்த ஒரு கம்ப ராமாயணப் பாடல் நினைவு வருகிறது. சூர்ப்பனகையின் காதல் வெறியை இதே வார்த்தைகளில் கம்பர் சொல்லியிருப்பார்.

//
கைகளால், தன் கதிர் இளங் கொங்கைமேல்,
ஐய தண் பனி அள்ளினள், அப்பினாள்;
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால்
//


மாலன்:
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் உணக்கில்லாதோர் வித்து என்று ஒரு வரி எழுதுவார். அதாவது உலர்ந்து போகாத விதை. உலராத விதைதான். ஆனால் மழை இல்லாததால் முளைக்காமல் கிடந்தேன். நீ மழையாக வந்து கருணை காட்டினாய் என்கிறார். இது சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பாடியது: 

பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கிலாததோர் இன்பமே வரும்
துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமை
என் வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.


வைணவத்திற்குப் போனால், திருவாய்மொழியில் உணங்கல் கெடக்கழு தைஉதடு ஆட்டம்கண்டு என்பயன்? என்று ஒரு வரி உண்டு. உலர்ந்த நெல்லைத் தின்கிற கழுதையின் உதடுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் என்ன பயன் என்று அர்த்தம். உலர்ந்த நெல்லைத் தின்னும் கழுதையின் உதடு எப்படிஆடும் என்று ஒரு நாள் உதைக்காத கழுதைக்குப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும். இது துணங்கைக் கூத்து என்ற ஒன்றைப்பற்றிய குறிப்பும் கூட. துணங்கைக் கூத்து என்றால் என்ன என்று நேரம் கிடைக்கும் போது கதைக்கலாம்.