Showing posts with label குறுந்தொகை. Show all posts
Showing posts with label குறுந்தொகை. Show all posts

Sunday, 16 March 2014

குறுந்தொகை...(4)

பாடல் - 5

நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே

- பதுமனார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப் பாடல். பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவனது பிரிவை ஆற்றாதவளாகிய தலைவி தன் தோழிக்குச் சொல்லியது.

பொருள்:

செறிந்த இருள் நிறைந்ததாக இந்த இடையிரவு இருக்கிறது. மனிதர்கள் பேசுதலை ஒழித்து இனிமையாகத் தூங்குகின்றனர். அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் வெறுப்பின்றித் தூங்குகின்றன. யான் ஒருத்தியே நிச்சயமாகத் தூங்காமல் இருக்கிறேன்.

நள் - செறிவு

யாமம் - இடையிரவு

மாக்கள் - மக்கள்

முனிவு -  வெறுப்பு/வருத்தம் (முனிவர்கள் என்று எப்படிப் பேர் வந்ததோ?)

நனந்தலை - அகன்ற இடம்

இங்கு மாக்கள் என்பதற்கு மக்கள் என்றும் பகுத்தறிவில்லாதோர் என்றும் பொருள் உள்ளது.

பகுத்தறிவில்லாதோர் என்ற பொருளில் கூட இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கலாம் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

அது சரியென்று தான் தோன்றுகிறது. பொதுவாக எல்லோரும் தூங்கும் போது, நமக்கு மட்டும் தூக்கம் வராவிட்டால் பயங்கர கடுப்பாக இருக்கும். எனக்கெல்லாம் அப்படித் தான். தூக்கம் வராத இரவுகளில் பக்கத்து பெட்டில் தூங்கும் வைஷ்ணவியை எழுப்பி விடணும் போல குறுகுறுப்பாக இருக்கும். 'அடிப்பாவி, இப்டி தூங்குறயேடி!' என்று தோணும்.

அது போல, தலைவிக்கும் தோணுது போல! "நான் ஒருத்தி இங்கு தலைவன் பிரிவால் தூங்காமல் கிடக்கிறேன். உங்களுக்கு என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு? முட்டாப்பயலுக! உலகம் முழுக்க முட்டாப்பயலுக!" என்கிறாள்.

பாடல் - 6:

வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.

- பெரும்பதுமனார்

பாடலின் களம்:
 
பாலைத்திணைப் பாடல். தலைவனும் தலைவியும் உடன்போக்கு (உடன்போக்குன்னா ஓடிப் போறது) போன போது, எதிரில் வந்தவர்கள் இவர்களைப் பார்த்து இரக்கப்பட்டுக் கூறியது.

விளக்கம்:

ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் போது கொட்டப்படும் பறையைப் போல, மேல் காற்றின் தாக்குதலால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெள்ளிய முதிர்ந்த காய்கள், மூங்கில் நிறைந்த பாலை நிலப்பரப்பில் சத்தத்துடன் விழுந்து கிடக்கிறது. அதில் வில்லை உடையவனாகியவனும் வீரக் கழல்கள் அணிந்தவனுமான தலைவனும், தோள் வளையணிந்த மெல்லிய அடிகள் கொண்ட சிலம்பு அணிந்த தலைவியும் செல்கிறார்கள். அவர்களைக் கடந்து செல்ல வருபவர்கள் அவர்களின் முகங்களின் பாவத்தாலும் தலைவி காலில் சிலம்பு இருப்பதாலும் அவர்களுக்கு இன்னும் மணமாகவில்லை என்று அறிந்து இந்தப் பாலை நிலத்தில் கடந்து செல்லும் அவர்களின் கஷ்டத்தினால் 'இந்த நல்லோர்கள் யாரோ? இரங்கத்தக்கவர்கள்' என்கிறார்கள்.

(ஹ்ம். உடன்போக்கும் அந்தக் காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. அப்படிப் போனவர்களைப் பார்த்து அவர்களுக்காக இரக்கமெல்லாம் கொள்கிறார்கள். இந்தக் காலத்தில் அது கூட அரசியலாகத் தான் ஆகிறது)

அதெப்படி தலைவி காலில் உள்ள சிலம்பை வைத்து அவர்களுக்கு மணமாகவில்லை என்று கண்டுபிடித்தார்களாம்? குட் கொஸ்டின். அதற்குப் பதில் இருக்கிறது.

அந்தக் காலத்தில் 'சிலம்பு கழி நோன்பு' என்றொரு சடங்கு இருந்ததாம். சின்ன வயதிலேயே பெண்களுக்குக் காலின் சிலம்பு அணிவித்து விடுவார்களாம். அதற்குப் பெயர் 'கன்னிமைச் சிலம்பாம்'. திருமணத்திற்கு முன்பு, மணமகள் வீட்டில் வைத்து அவள் காலிலிருக்கும் சிலம்பைக் கழற்றுவது ஒரு விழா போல நடக்குமாம். அதற்குப் பெயர் 'சிலம்பு கழி நோன்பு'. 

இதற்கு நற்றிணை, சிலப்பதிகாரம், அகநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் reference ,கிடைக்கிறது.  உதாரணத்திற்குச் சில:

ஐங்குறுநூறு - பாடல் எண்: 399

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நன் மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென் வேல்
மை அற விளங்கிய கழல் அடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே.

உடன்போக்கு நிகழ்த்திய தலைவன்-தலைவியை, தலைவன் வீட்டில் ஏற்றுக் கொண்டு அவளுக்குச் செய்ய வேண்டிய சிலம்புகழி நோன்பை தலைவனின் தாய் செய்கிறாள். (But actually அது தலைவி வீட்டில் செய்ய வேண்டிய சடங்கு) அதைக் கண்டு வந்து சிலர், தலைவியின் தாயிடத்தில் சொல்கிறார்கள். அதற்கு அவள் 'வெற்றி பெற்ற வேலை உடைய, குற்றமற்றவனாகிய, பொய் கூறுவதில் வல்லவனான தலைவனின் தாயிடத்தே வதுவை மணத்தை நம் வீட்டில் செய்யும்படி சொன்னால் ஏதேனும் குற்றமாகுமா?' என்று வருத்தப்பட்டுச் சொல்கிறாள். அதாவது இவங்க வீட்டிலும் அவர்களை ஏற்றுக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதைச் சூசகமா சொல்கிறாளாம்! (யாருக்கெல்லாம் இங்க பாரதியின் சுட்டும் விழிச் சுடர் தான் பாட்டு ஞாபகத்துக்கு வருது? மீ ஃபர்ஸ்ட்!)

நற்றிணையில் 'சிலம்பு கழீஇய செல்வம் பிறர் உணக்கழிந்த என் ஆயிழை அடியே' என்று வருகிறது.

Saturday, 8 March 2014

பெண்ணே! பெண்ணே!


இந்த வருடம் (வரும் சனிக்கிழமை) 101-ஆவது சர்வதேச மகளிர் தினமாமே! நேற்றைக்குத் திடீரென்று ஒரு யோசனை. சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் எழுதிய பாடல்களைப் படித்து அதில் ஒரு ஆராய்ச்சி பண்ணி அட்ராசிட்டி பண்ணினால் என்ன என்று! ஆனாலும் இது 3 நாளுக்கு முன்னாடி புத்தியில் உரைத்தால் ஒரு பயனும் தராது. ஹ்ம். அடுத்து நேரம் கிடைக்கும் போது இதை முயற்சிக்கிறேன். இருந்தாலும் Better late than never என்ற கோட்பாட்டிற்கிணங்க முடிந்த வரைக்கும் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால்,  நான் செலெக்ட் பண்ணி வைத்திருக்கும் 5 பெண்பாற் புலவர்களின் ஒவ்வொரு sample பாடல்களைத் தெரிந்து கொள்வோம். அவர்கள்,

1. ஔவையார்
2. ஆண்டாள்
3. வெள்ளி வீதியார்
4. காக்கைப் பாடினியார்
5. காரைக்கால் அம்மையார்

Lets start the Dhamakka!


***

ஔவையார்

சங்ககால, இடைக்கால, சோழர் கால, சமய, பிற்கால(1 & 2) என்று 6 ஔவையார்கள் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். இங்கு நாம் பார்க்கப் போவது சங்ககால ஔவையார் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்று.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே



(புறநானூற்றுப் பாடல் எண் - 187 )

இந்தப் பாடலை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் வெப்சைட் ஹோம் பேஜில் தான் முதல் முறை பார்த்தேன். என்னெவென்று படித்துப் பார்த்தவுடன் நிரம்பவே பிடித்திருந்தது. நன்றிங்க முத்துலிங்கம் சார்.

விளக்கம்:

நிலமே! நீ ஓரிடத்தில் நாடாக இருக்கிறாய்! ஓரிடத்தில் காடாக இருக்கிறாய்! பள்ளமாக இருக்கிறாய்! மேடாகவும் இருக்கிறாய்! எது எவ்வாறாயினும் நல்லவர் உறையுமிடத்து நீ நல்ல நிலமாகவும், தீயவர் உறையுமிடத்து நீ தீய நிலமாகவும் இருக்கிறாய். உன்னில் உறைபவர்களை வைத்தே நீ உயர்வும் தாழ்வும் அடைகிறாய்! அது தவிர உனக்கென்று ஒரு நலமுமில்லை.

அவல் - பள்ளம்
மிசை - மேடு

இதை அப்டியே மாற்றி 2 பேர் சொல்றாங்க. ஔவ்ஸ் நிலத்திற்கு ஒரு இயல்புமில்லை, அங்கன யார் இருக்காங்களோ அவங்கள வச்சுத் தான் நன்னிலம் என்பதும் தீநிலம் என்பதும்ன்னு சொல்றாங்க. ஆனா வள்ளுவர் நிலத்தின் தன்மையால் அங்கு இருக்கும் நீரின் இயல்பு மாறுதுங்கறார். அதுவும் கரெக்ட் தான்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.


( திருக்குறள் - சிற்றினஞ்சேராமை - குறள் எண்: 452 )

கலைஞர் உரை:


சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.

இன்னொரு குறளில்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


( திருக்குறள் - புகழ் - குறள் எண்: 239 )

கலைஞர் உரை: 

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

பாரதியார் 'நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம்' என்று சொல்கிறார்.

மூணு பேர் சொல்றதும் கரெக்ட் தான்! 


***

ஆண்டாள்

சூடித் தந்த சுடர்கொடியாள். இவள் தமிழுக்கும் காதலுக்கும் ஆண்டவன் மணாளனாய் ஆனது ஒன்றும் அதிசயமேயில்லை. அந்தத் தகுதி அவளுக்கு இருக்கிறது.

12 வைஷ்ணவ ஆழ்வார்களில் இவள் ஒருத்தியே பெண். மகளிர் தினத்தில் இவளைக் கொண்டாட இந்த ஒரு காரணம் நமக்குப் போதும் தானே!

திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் எழுதியது.

திருப்பாவையை மார்கழி மாதத்தில் பிரித்து மேய்ந்தோம். அதன் அழகு தான் நாச்சியார் திருமொழியைப் படிக்கச் சொல்லித் தூண்டியது. கொஞ்சமே கொஞ்சம் படித்தேன். பக்தி இலக்கியங்கள் மேல் அவ்வளவு ஈர்ப்பில்லை என்ற போதும், இவற்றை வெறும் பக்தி என்ற கட்டுக்குள் சுருக்கி வைக்க முடியாது. ஆண்டாள் தமிழின் அழகென்ன, சொல்லும் உவமைகள் என்ன, அதன் பின்னுள்ள உணர்ச்சி என்ன! அப்பப்பா! காதலனே ஆனாலும் இப்படியெல்லாம் நேசிக்க முடியுமா என்பது கேள்வியாய் எழுந்து வியப்பாய் உறைந்தது. அதனால் தான் "தெய்வீகக் காதல்" என்ற சொல்லாடல் வந்ததோ என்னவோ!

Coming to the main point , ஆண்டாள் பாடல்கள் அத்தனையும் அழகு என்றாலும், ஒரே ஒரு பாடலை இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

பாடல்:

என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன்
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே
பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப்
புண்ணியனை வரக் கூவாய்


- நாச்சியார் திருமொழி - குயிற் பத்து

(இந்தப் பாடலை "New India"வில் பாரதியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பார்)

விளக்கம்:

குயிலே! நாராயணனைக் காணாததால் ஏற்பட்ட தவிப்பால், எலும்புகள் உருகியது. வேல் போன்ற கண்களின் இமை மூடவில்லை. துன்பக் கடலில் புகுந்து, வைகுந்தன் என்ற ஒரு தோணி கிடைக்காது தடுமாறிக் கொண்டிருக்கிறேன். அன்பு உடையோரைப் பிரிவதால் உண்டாகும் துக்கத்தை நீயும் அறிவாய் தானே குயிலே! பொன்னாலான மேனியுடையவனும், கருடக் கொடியும் கொண்டவனான புண்ணியன் நாராயாணன் வரும்படி கூவுவாயாக!

இங்கு தவிப்பினால் எலும்பு உருகியது என்கிறாள்.

கம்பர் அன்பால் எலும்பு உருகுவதாய் எழுதியிருப்பார். ராமனை முதன்முதலில் கண்ணால் கண்ட போது, அனுமனுக்கு எலும்பு உருகியதாம்.

"ஐய! என் ஆக்கை, என்பு தோன்றல உருகின எனின், பிறிது எவனோ?" என்று கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு பாடலில் வரும்.

இன்னொரு இடத்தில், ராமனைக் கண்ட எல்லோருக்கும் எலும்பு உருகியது என்றும் ஒரு இடத்தில் சொல்கிறார்.

"மின் பொருவு தேரின்மிசை
வீரன் வரு போழ்தில்,
தன் பொருவு இல் கன்று தனி
தாவி வரல் கண்டாங்கு
அன்பு உருகு சிந்தையொடும்
ஆ உருகுமாபோல்,
என்பு உருகி, நெஞ்சு உருகி,
யார் உருககில்லார்?
"

மாணிக்கவாசரும் கூட "என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி" வணங்குகிறார்.

இங்கு எலும்பு உருகியது என்பதை நேரடியாகப் பொருள் கொள்ளக் கூடாது. எலும்பு உருகியது போல வலிமை தோன்றாமல் அன்பின் காரணமாக உடல் நெகிழ்ந்ததாம். அப்படி...

நேரடியாக அர்த்தம் பண்ணினா, அது எலும்புருக்கி நோய் ஆயிரும். அப்டினா ரிக்கெட்ஸ் நோய். எப்பவும் பள்ளித் தேர்வில் 2 மார்க் கேள்வியில் இந்தக் கேள்வி தவறாமல் வந்துரும். 


***

வெள்ளிவீதியார்

சங்ககாலப் புலவர். அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய தொகுப்புகளில் 13 பாடல்களை எழுதியுள்ளார்.

பெரும்பாலானாவை விட்டுச் சென்ற தலைவனை நினைத்து உருகி, மருகி எழுதிய பாடல்களாக இருக்கின்றன. அவருக்கு என்ன கஷ்டமோ!

அவரது பாடல்களுள் ஒன்று வித்தியாசமாக இருந்தது. தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களைச் சேர்த்து வைக்கத் தலைவன் வீட்டிலிருந்து சிலர் தலைவி வீட்டுக்கு வருகிறார்கள். இவர்கள் என்ன சொல்வார்களோ என்று தலைவி டென்ஷனாக இருக்கிறாள். அதைக் கண்டு தோழி, 'அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாத் தான் பேசிட்டு இருக்கானுவ!' என்று தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். அதற்குத் தலைவி பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கவென்று முதியோர் சிலர் உள்ளனர் என்று கூறி மகிழ்கிறாள். ஹ்ம். இதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் முதியோர்கள் தான் காதல் திருமணப் பேச்சுக்களை முறித்து வைப்பவர்களாக இருக்கிறார்கள். என்னத்தச் சொல்ல!

பாடல்:

அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
''நன்றுநன்று'' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே


- குறுந்தொகை - பாடல் எண்: 146

விளக்கம்:

தோழி! கேட்பாயாக! அவ்விடத்திலுள்ள நம்மைச் சேர்ந்த குழுவிலுள்ளவர்கள், தண்டைப் பிடித்த கையோடு, கிழிந்த கந்தல் துணி போல நரைத்தலையையும் உடைய பெரியவர்கள், நன்று நன்று என்று கூறும் தலைவன் கூட்டத்தாரோடு, இந்நாள் நீங்கள் இங்கு வரப் பெற்றமையால் பெருமையுடையதானதென்று முகமன் கூறுவர். நமது ஊரின்கண் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போரும் இருந்தனர்.

"வெண்தலைச் சிதவலர்" - வழுக்கைத் தலை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!

தலையில் கிழிந்த துணியைக் கவிழ்த்து வைத்தது மாதிரி, நரையுடன் வழுக்கையும் இருக்கிறதாம். (எர்வோமெர்டின் ஞாபகத்துக்கு வருதா?) க்ளாஸ்!

நம்ம ஔவையாரும் இந்தம்மாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் போல! ஔவ்ஸ் எழுதிய 'ஓங்கு மலைச் சிலம்பில்' என்ற அகநானூற்றுப் பாடலில் பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவனை வெள்ளி வீதியாரைப் போலப் போய்த் தேடப் போவதாய் எழுதுகிறார்.


***

காக்கைப்பாடினியார்

சங்ககாலப் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். 

ஒன்பதாம் வகுப்பில் ஒரு பாடல் வந்திருக்கும். அதைச் சொன்னால் எல்லாருக்கும் இவர் ஞாபகம் வந்து விடுவார். 

தாய் ஒருத்தி போருக்குத் தன் பச்சிளம் மகனை அனுப்புகிறாள். அவன் போரில் முதுகில் புண்பட்டு இறந்து விட்டான் என்று ஊரார் சொல்கிறார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அவள், அது மட்டும் உண்மையென்றால் அவன் பாலுண்ட முலைகளை வெட்டி எறிந்து விடுவேன் என்று ஆவேசத்துடன் கையில் வாளுடன் போர்க்களம் செல்கிறாள். அங்கு பிணங்களைப் புரட்டிப் பார்த்து தன் மகனைத் தேடுகிறாள். அவன் மார்பின் விழுப்புண் பட்டு செத்துக் கிடப்பதைக் கண்டு, அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியுற்றாள். 

இப்போ ஞாபகம் வந்துட்டா? எத்தனவாட்டி 5 மார்க் கேள்வியில் எழுதியிருப்போம். (இதே மாதிரி இன்னொரு பாட்டும் எனக்கும் ஞாபகம் வருது. கெடுக சிந்தை, கடிதிவள் துணிவே. அருமையான வீரப்பாடல். இதை எழுதியது ஓக்கூர் மாசாத்தியார்) 

காக்கை குறித்து இவர் எழுதிய குறுந்தொகைப் பாடலால் காக்கைப் பாடினியார் என்ற பெயர் பெற்றார். அந்தப் பாடல் கீழே!

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே


- குறுந்தொகை - பாடல் எண்: 210

களம்:

பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைமகன் திரும்பி வந்த பிறகு, 'தலைவியை நன்றாக ஆற்றுவித்தாய்' என்று தோழிக்கு நன்றி கூறுகிறான். அதற்குத் தோழி 'இதில் நான் செய்தது ஒன்றுமில்லை. விருந்தினர் வருவார் என்று தினமும் கரைந்த காக்கையினால் தான் என்னால் ஆற்றுப்படுத்த முடிந்தது' என்று தலைவனிடம் கூறியதாகப் பாடப்பட்ட பாடல்.

விளக்கம்:

திண்மையுடைய தேரினைக் கொண்ட, நள்ளி என்னும் வேந்தனது காட்டில் வாழும் அண்டர்கள் வளர்க்கும் பல பசுக்களின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யும், தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்மையான நெல்லினால் சமைக்கப்பட்ட சுடுசோற்றையும், ஏழு கலத்தில் ஏந்தி வைத்துக் கொடுத்தாலும், என் தோழியாகிய தலைவியுடைய பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு விருந்தினர் வரக் கரைந்த காக்கைக்கு அப்பலியானது சிறிதேயாகும்.

வளை நெகிழ்தல், பசலை படர்தல் தெரியும். அதென்ன தோள் நெகிழ்தல்?

அகநானூற்றில் கூட 'சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ' என்று வருகிறது.

உறுப்பு நலனழிதலில் வள்ளுவரும் 'தொடியொடு தோள் நெகிழ நோவல்' என்கிறார். தோள் நெகிழ்தல் என்றால் மெலிதல் என்று அர்த்தமாகயிருக்கும் என நினைக்கிறேன்.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்னொரு காக்கைப்பாடினியார் இருந்தார். அவர் பெருங்காக்கைப் பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம் போன்ற கணித நூல்களை எழுதியவர்.

ஒரு உதாரணம்: வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் சொல்லுங்க பார்ப்போம்.

யெஸ்.. C = 2 * pi * r 

(pi = 22/7; r - ஆரம்)

இதை கா.பா எளிமையாகச் சொல்கிறார். 'விட்டமோர் ஏழு செய்துதிகைவர நான்கு சேர்த்து சட்டென இரட்டி செயின் திகைப்பன சுற்றுத்தானே' - So simple!


***

காரைக்கால் அம்மையார்

ஔவையார், ஆண்டாள், வெள்ளி வீதியார், காக்கைப் பாடினியார் வரிசையில் காரைக்கால் அம்மையாரையும் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் உண்டு.

  • மூன்று பெண் நாயன்மார்களில் முதல்வரும் மூத்தவரும்
  • ஈசன் வாயாலேயே அம்மையே என்று அழைக்கப்பட்டப் புகழுடையவர்
  • அந்தாதிப் பாடல்களை முதன்முதலில் இயற்றியவர்
  • பெண்ணுடலை விடுத்துப் பேய் உருவை விரும்பிப் பெற்றவர். சிவன் உறையும் கயிலாய மலையில் காலால் நடப்பது பாவம் என்பதால் தலைகீழாகக் கையால் நடந்து சென்றவர்

எனக்கு அவர் பற்றிச் சொல்கின்ற மாங்கனிக் கதையில் அவ்வளவு ஈர்ப்பில்லை என்ற போதும், டெடிகேஷன் என்பதன் முழு அர்த்தம் இவர் பாடல்களில் தொனிக்கும். அதை நாம் கொண்டாடித் தான் ஆக வேண்டும்.

அவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதியிலிருந்து ஒரு பாடல்:

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்

கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது

Sunday, 16 February 2014

குறுந்தொகை...(3)

பாடல் - 4

நோம், என் நெஞ்சே; நோம் என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே.

- காமஞ்சேர் குளத்தார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப் பாடல். தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள் என்று கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியது.

பொருள்:

(அடேங்கப்பா! இந்தப் பாடலுக்கு எகனைக்கு மொகனையாக ஏகப்பட்ட விளக்கங்கள். அதில் எனக்குச் சரியென்று தோன்றியதை இங்கே பதிகிறேன்)

என் நெஞ்சம் வருந்தும். என் நெஞ்சம் வருந்தும். கண் இமைகளைத் தீயச் செய்யும் கருவி போல, வெம்மையுடைய எனது கண்ணீரைத் தான் துடைத்து, அளவளாவுவதற்கு அமைந்த நம் தலைவர், இப்பொழுது மனம் பொருந்தாராய்ப் பிரிந்திருத்தலால், என் நெஞ்சம் வருந்தும்.

இந்தப் பாடலில் என்னவொரு அழகு! பொதுவாக நீர் என்பது தீயை அணைக்கும். இங்கே கண்களின் கண்ணீர் அவள் இமைகளைத் தீயிலிடுகிறதாம். என்ன அழகான கற்பனை! வாவ்!

இதே போல, அகநானூற்றுப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது. அது இதை விட ஒரு படி அழகு அதிகம்.

நறவின் சேயிதழ் அனைய ஆகி,  குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல் உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்,
வெய்ய உகுதர, வெரீஇ

குவளை மலர் போன்ற கரிய நிறம் கொண்டிருந்த கண்ணிமைகள், நறவம்பூவின் சிவந்த இதழ்களைப் போல செந்நிறமானதாம், அவள் கண்ணீரால். (நீளமாகச் சொல்லத் தேவையில்லை என்பதால் சுருக்கமான விளக்கம் எனக் கொள்க)

இன்னும் சில இடங்களில் இதே கருத்தையொட்டி, கருந்தடக் கண்ணின் இமைதீர் வெம்பனி முலைமுக நனைப்ப (பெருங்கதை), உற்று மை கலந்து கண்கள் வெம்பனி உகுத்த அன்றே (சீவகசிந்தாமணி),  கண் உகும் வெய்ய நீர் வெள்ளத்து மெள்ளச் சேறலால் (கம்பராமாயணம்) என்று வருகிறது.

குறுந்தொகையின் 202 ஆவது பாடலிலும் இதே போல, முதலடியில் இரண்டு 'நோம் என் நெஞ்சே'வும் கடைசியிலும் 'நோம் என் நெஞ்சே'வும் வருகிறது. (மொத்தத்தில் தலைவர்கள் எல்லாம் தலைவிகளை நோகடிக்கத்தான் செய்யுறானுவ போல)

பாடல் - 5

அதுகொல் தோழி! காம நோயே?-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை
உடை திரைத்திவலை அரும்பும் தீம் நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே

- நரி வெரூஉத்தலையார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப்பாடல். தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள் என்று கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியது.

பொருள்:

தோழி! சேற்றில் தங்கியிருக்கும் நாரைகளைத் தன் இனிய நிழலால் உறங்க வைக்கிற புன்னை மரங்களை உடையதும், கரையை உடைக்கின்ற அலைகளில் இருந்து தெறிக்கும் துளிகளால் அரும்புகின்ற, கண்ணுக்கு இனிமையாகிய நீர்ப்பரப்பையும் கொண்ட, மெல்லிய கடற்கரை நாட்டுத்தலைவன் பிரிந்ததனால், பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள் இமை பொருந்துதலைச் செய்யவில்லை(அதாவது தூங்கவில்லை). காம நோய் என்பது இத்தன்மை கொண்டதா?

வதி - சேறு அல்லது கால்வாய் ( 'குருகு' எனச் சொல்லப்படும் நாரைகள் பொதுவாக சேறு கொண்ட புதர்களில் தங்குமாம். குருகு பற்றி சில நல்ல விளக்கங்கள் ஜெயமோகன் தளத்தில் இருக்கிறது. அதன் சுட்டி: http://www.jeyamohan.in/?p=16748)

குருகு - பொதுவான அர்த்தம் நாரை என்பது

திரை - அலை

திவலை - துளி

புலம்பு - கடற்கரை (புலம்பன் - தலைவன் ( நெய்தல் திணை என்பதால்))

ஒல்லா - பொருந்தாத


இது உரையில் இருக்கும் விளக்கம். இப்பாடலை நான் இப்படிக் கற்பனை பண்ணி ரசிக்கிறேன்.

குருகுவையும் தலைவியையும் அவள் ஒப்பிடுவது போல எனக்கு ஒரு கற்பனை.

தலைவனின் நாடு, கரையை உடைக்கின்ற அலைகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகளின் இனிமையால் நிறைந்திருக்கிறது. அது போல, தலைவன் உறைகின்ற அவளது மனது அவன் பிரிவால், நெஞ்சில் உண்டாகக் கூடிய அலைகளிலிருந்து தெறித்துக் கண்ணில் கண்ணீர்த்துளியாக இருக்கிறது. ஆனால் அவன் நாட்டில் அது இனிமையானதாகவும், இவளுக்கு இங்கே அது துயரம் தருவதாகவும் இருக்கிறது. ( கடல் அலைகள் vs நெஞ்சின் அலைகள். இதை நம்ம தலைவரும் சொல்லியிருக்கிறார். "நீலக் கடலலையோ நினது நெஞ்சின் அலைகளடி (எனக்கு ரொம்பப் பிடிச்ச பாரதி வரிகளுள் ஒன்று இது)" அலை தெறித்த துளி vs கண்ணீர்த்துளி)

அவன் நாட்டின்கண் இருக்கும் புன்னை மர நிழல்கள் நாரைகளைத் தூங்க வைக்கும் சுகம் தருகிறது. ஆனால் அவன் மீது இருக்கும் இவளது அன்போ, அவளைத் தூங்கவிடாமல் செய்கிறது. ( குருகு vs தலைவி )

இந்த மாதிரி கற்பனையில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் இப்படி நம்புகிறேன். இது பாடலின் அழகைத் தூக்கிக் காட்டுகிறது.

இந்த 'ஒல்லா' என்ற வார்த்தை 'கேட்சி'யாக இருக்கிறது அல்லவா!

திருக்குறளிலும் நிறைய இடங்களில் வருகிறது. அவற்றில் ஒன்று:

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. ( குறள் எண்: 870: அதிகாரம்: பகைமாட்சி)

(ஒல்லாவைத் தேடும் போது, வேறொன்று கண்ணில் பட்டது. மேலோட்டமாகத் தேடியதில், அதில் சில சுவாரஸ்யங்கள் இருக்கும் போலத் தெரிகிறது. அதை வாய்ப்பிருந்தால் அடுத்த ஞாயிறில் ஆழமாகப் படிப்போம் என்றிருக்கிறேன். அது ஒரு கில்பான்சி கிஜு கிஜா)

Sunday, 9 February 2014

குறுந்தொகை...(2)


பாடல் - 2

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது, கண்டது மொழிமோ:

பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,


செறி எயிற்று, அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?



- இறையனார்

விளக்கம்:

இதுவும் முதல் பாடலைப் போல குறிஞ்சித் திணைப் பாடல். தலைவியின் வெட்கம் போக்கும் பொருட்டு தலைவன் அவள் கூந்தல் மணத்தின் இனிமையை அள்ளி விடும் பாடல்.

பூக்களின் மகரந்தத்தை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய வண்டே! நீ என் நிலத்து வண்டாதலால், நான் விரும்பியதைச் சொல்லாமல், நீ கண்ட உண்மையைச் சொல்! என்னுடன் நெருக்கமான நட்பு கொண்ட மயில் போன்ற, நெருங்கிய பல்வரிசைகளையுடைய இளம்பெண்ணின் கூந்தலைப் போல, நறுமணமிக்க பூக்கள் உள்ளனவா? நீ அறிவாயா?

கொங்கு - பூக்களின் மகரந்தம் / தேன்

தேர் - தேர்ந்தெடுத்து

அஞ்சிறை - அம் சிறை; அம் - அழகிய; சிறை - சிறகு

காமம் - விருப்பம்

பயிலியது - பழக்கம் கொண்ட

கெழீஇய - நெருங்கிய

எயிறு - பல்

நறியவும் - நறுமணமும்

இந்தப் பாடலை எழுதியவர் இறையனார்.

இதை எங்கேயோ கேட்டது போல இருக்குமே! யெஸ். திருவிளையாடல் படத்தில், நாகேஷ் - சிவாஜி சீன். ஐ ஆம் சாரி. திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் தருமிக்கு எழுதிக் கொடுக்கும் பாடல். (copyright குறித்து ஹன்ஸா மேம் பதிவு போடும் போதெல்லாம் எனக்கு இந்தப் பாடல் மனதில் வந்து போகும்) அதனால், இங்கு இறையனார் என்பவர் அந்தச் சிவபெருமான் தான் எனக் கொள்க. அதற்கு ஆதாரம் திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்த வரி: "தென்ன வன்குல தெய்வமாகிய,மன்னர்கொங்குதேர் வாழ்க்கை யின்றமிழ், சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார், இன்ன றீர்ந்தவ னிறைஞ்சி வாங்கினான்’’

இதே கருத்தொத்து திருக்குறளின் காமத்துப்பால்-களவியல் பகுதியில் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் ஒரு குறள் வருகிறது.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ள் இவட்கு
. (1113ஆவது குறள்)

பாடல் - 3:

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.



- தேவகுலத்தார்

விளக்கம்:

இந்தப் பாடலின் களம்: தலைவன் தலைவிக்காக வேலிக்கு அந்தப் புறத்தில் காத்துக் கொண்டு நிற்கிறான். தலைவியை அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் அவள் அன்பை அவன் முழுதாக உணர்ந்து கொள்ள வேண்டுமென்றும் எண்ணிய தலைவியின் தோழி (ஹ்ம்...'காவலன்' படம் பார்த்திருக்கீகளா?), அவர்கள் காதலைக் இழித்துப் பேசுகிறாள். அதைக் கேட்டுத் தலைவி பொறுக்க முடியாமல் தன் காதலை உயர்வாகக் கூறுகிறாள். அது தலைவனுக்கும் கேட்கிறது. இதுவும் குறிஞ்சித்திணைப் பாடலே!

மலைப்பக்கத்தில் உள்ள, கருமை நிறத்த கொம்புகளை உடைய குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனைச் சேகரித்து வைக்கும் பெரிய வண்டுகள் நிறைந்த நாட்டை உடைய தலைவனோடு நான் கொண்ட நட்பானது(காதலானது) நிலத்தை விடப் பெரியது. வானை விட உயர்ந்தது. கடலின் ஆழத்தை விட அளவில் பெரியது.

( சாதாரணத் தேன் இல்லையாம். 12 வருடங்களுக்கு ஒருக்கா பூக்கும் குறிஞ்சிப் பூக்களின் தேனைச் சேகரித்து வைக்கும் நாடாம்! அது மாதிரி 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி'யாம். சும்மா எல்லாப் பூவிலும் போயெல்லாம் மகரந்தத்தை உண்ணாதாம். நல்ல பூக்களாகத் 'தேர்ந்தெடுத்து' உண்ணுமாம்! அம்புட்டு கவுரதையா வாழுறாகளாம்! சக்க! சக்க! சக்க! )
 

Sunday, 2 February 2014

குறுந்தொகை...(1)

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை படித்ததற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அது போல அடுத்த சுற்று ஞாயிறுதோறும் இன்னும் சில மரபு இலக்கியங்கள் படிக்கலாம் என்று எங்கள் குழுவில் முடிவு செய்திருக்கிறோம். ஆளுக்கு ஒரு இலக்கியத்தைத் தேர்வு செய்து படிக்கலாம் என்பது திட்டம். அதில் நான் தேர்வு செய்திருப்பது "குறுந்தொகை".

முதலில் குறுந்தொகை குறித்து ஒரு பறவைப்பார்வை பார்ப்போம்.

குறுந்தொகை எட்டுத்தொகை (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு) நூல்களுள் ஒன்று. மொத்தல் 401 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை 206 புலவர்கள் பாடியுள்ளனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை முதலிய ஐந்திணைகள் குறித்தும் பாடப்படும் அகப்பாடல்களின் தொகுப்பு. இதில் வருணணைகள் குறைந்தும் உணர்வுகள் மிகுந்தும் காணப்படுகிறதாம்.

முதல் பாடல் கடவுள் வாழ்த்து:

தாமரை புரையும் காமர் சேவடி
பவளத்து அன்ன மேனி, திகழ் ஒளி
குன்றி ஏய்க்கும் குடுக்கை, குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்,
சேவல்அம் கொடியோன் காப்ப,
ஏம வைகல் எய்தின்றால் உலகே

- பாரதம் பாடிய பெருந்தேவனார்

பொருள்:

தாமரை மலரை ஒத்த அழகு பொருந்திய செந்நிற அடிகளையுடையவனும், பவளம் போன்ற மேனி உடையவனும், விளங்கா நின்ற ஒளியையும், குன்றிமணி போன்ற சிவந்த ஆடையை அணிபவனும், குன்று நடுவில் பிளக்குமாறு எறிந்த அழகிய, ஒளி வீசுகின்ற நெடிய வேலை உடையவனும், சேவல் கொடியைக் கொண்டவனுமாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இன்பம் நிறைந்த நாட்களைக் கொண்டு விளங்குகிறது.

புரை - ஒத்த, பொருந்திய
அம் - அழகு
பக - பிளந்த (பகுத்தல் என்பதிலிருந்து 'பக')
ஏமம் - இன்பம்
வைகல் - நாள்

இந்த கடவுள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவர் 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். மகாபாரதத்தை வெண்பா வடிவில் 12000 பாடல்களில் எழுதியுள்ளாராம். ஆனால் 830 பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறதாம்.

பாடல் - 1

செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

(தோழி கையுறை மறுத்தது)

- திப்புத்தோளார்

விளக்கம்:

போர்க்களம் இரத்தத்தால் செந்நிறம் அடைய, அசுரர்களைக் கொன்று அழித்த செங்கோல் அம்பையும், (போர்க்களத்தில் பகைவர்களைக் குத்திக் கிழித்ததால்) சிவந்த தந்தங்களைக் கொண்ட யானையையும், தோள்வளை அணிந்திருப்பவனுமாகிய முருகக்கடவுளுக்குரிய இம்மலையானது கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் இரத்த நிறமுடைய காந்தள் மலர்களை உடையது.

அவுணர் - அசுரர்
கோடு - தந்தம்
தொடி - தோள்வளை
சேஎய் - முருகன் 

சே என்றால் செந்நிறம். எய் என்றால் அம்பு. இவை இரண்டும் உடையவன் முருகன். பொதுவாக முருகனைக் குறித்துச் சொல்லும் போதெல்லாம் செந்நிறத்தைச் சொல்வார்கள். (அபிராமி அந்தாதியின் முதற்பாடலில் இது போல செங்கதிர், உச்சித்திலகம், மாணிக்கம், மாதுளம்பூ, தாமரை, குங்குமம் என்று செந்நிறங்களை வரிசையாகச் சக்திக்கு உவமைப்படுத்திச் சொல்லியிருப்பார்)

இந்தப் பாடலின் களம் குறிஞ்சி நிலம். அதன் கடவுள் முருகன். 

தலைவன், செங்காந்தள் மலரைக் கொண்டு வந்து கொடுக்கிறான்.(அப்படித் தருவதை அந்தக் காலத்தில் கையுறை என்கிறார்கள். நம் பாஷையில் அது 'ஐஸ்' வைப்பது). அதற்கு நம் தலைவி அடப் போடா இவனே, சும்மா ஒரு காந்தள் பூவைக் கொண்டு வந்து கொடுத்து ஃபிலிம் காட்டாதே! எங்கள் மலையில் இந்த மாதிரி கொத்துக் கொத்தாக் கெடக்கு! இந்த மாதிரி டபாய்க்குற வேலையை விட்டுட்டு ஒழுங்கு மரியாதையா வந்து கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறாள். 

அதிலும் அவள் அலட்சியப்படுத்தும் அழகைப் பாருங்களேன்! அவன் ஒரு காந்தள் பூவைக் கொண்டு வர்றான். அது சிவப்பு நிறம் கொண்டது. அதை அலட்சியப்படுத்த எவ்வளவு செந்நிறத்தை அவள் வரிசையாய்ச் சொல்கிறாள் பாருங்கள். போர்க்களத்தின் இரத்த நிறம், அம்பு, யானைத் தந்தத்தில் படிந்த இரத்த நிறம், சேவற்கொடி எல்லாவற்றையும் சொல்லி விட்டு, "கொத்து கொத்தாக" அவங்க மலையில் காந்தள் பூ இருக்குதாம்.எப்படியொரு ரிவீட்டு! அழகுடி ராசாத்தி!