Showing posts with label மாலன். Show all posts
Showing posts with label மாலன். Show all posts

Sunday, 6 July 2014

சொல், ஒரு சொல்...(7)


சின்னப் பசங்களோட உலகம் அழகான ஃபேன்டஸி நிறைந்ததாக இருக்கும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் ஆச்சர்யமான பல செய்கைகள் அவர்கள் பழக்கமாக இருக்கும். அவர்களின் கற்பனை நீளும் தூரத்தைக் கடக்கப் பெரியவர்​களால் முடியாது. அதில் சின்னச் சின்ன விளையாட்டுக்களும் சிறிதும் பெரிதுமான மூட நம்பிக்கைகளும் ஒருபுறம் இருக்கும். அவற்றில் ஒன்று ரெட்டை வால் குருவியை ஒற்றைப்படை எண்ணிக்கையில் பார்க்கக் கூடாது என்பது. நான் படிக்கும் காலத்தில் ரொம்பவும் சீரியஸாக இதை நம்புவார்கள். ரெட்டைவால் குருவியை ஒற்றையாய்ப் பார்த்த அன்று ஏதாவது டெஸ்ட் இருந்தால் பயந்து சாகும் நண்பர்கள் எனக்குண்டு. மற்றொன்றைக் காணும்வரை அவர்கள் மனமெல்லாம் அதில் தானிருக்கும்.

அது போல 'ஐயோ', 'ஐய்யய்யோ' என்றெல்லாம் சொன்னால் கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் என்றொரு சம்பிரதாயம் சிறுவர்களையும் தாண்டி பெரியவர்களுக்குக் கூட இருப்பதுண்டு. 'ஐயோ' என்பது எமனின் மனைவி பெயராம். யாராவது 'ஐயோ' என்றால் 'தன் மனைவியை யார் அழைக்கிறார்கள்' என்று பார்க்க எமன் வந்து விடுவானாம். இதை பள்ளிப் பருவத்தில் என் தோழி சொல்லிய மாலை நேரம் இன்னமும் மனதுக்குள் இருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களில் எனக்குப் பொதுவாக நம்பிக்கை கிடையாது. அதனால் அன்றைக்கு பள்ளி முடிந்ததும் சைக்கிள் ஸ்டாண்டில் உட்கார்ந்து கொண்டு அது பற்றி பயங்கர ஆராய்ச்சி நடந்தது. 50 முறை 'ஐயோ' சொல்லி, 'நாளைக்குள் நான் இறந்து விட்டால் நீ ஜெயிச்ச! இல்லைன்னா நான் ஜெயிச்சேன்' என்று என் தோழியிடம் சவால் விட்டேன். 'வேணாம்டி வேணாம்டி ஐயோ சொல்லாதடி' என்று அவள் அப்படி அழுதாள். ஆசிரியரிடம் அடி வாங்கும் போது கூட 'போயா' என்று அசால்ட்டாக நிற்பவள் அழுததும் எனக்குமே உள்ளூர உதறல் தான். ஆனாலும் பெரிதாகச் சட்டம் பேசியாயிற்றே! 'அதெல்லாம் சும்மாடி ஒன்னும் ஆகாது' என்று அவளைச் சமாதானப்படுத்தி, 50 முறை 'ஐயோ' சொல்லி முடித்து வீட்டுக்குக் கிளம்பியாச்சு. அன்றைக்கு இரவெல்லாம் என் அப்பாவைக் கட்டிப் பிடித்துக்  கொண்டேன். ஒரே பயம். நான் இறந்து விட்டால் அம்மா எப்படியெல்லாம் அழுவாள் என்று மனதிற்குள் ஓடுகிறது. 'அம்மாவுக்காவது பரவாயில்ல, பாப்பா இருக்கா. அப்பா தான் பாவம்' என்று அவர் மேல் பரிதாபம் வேறு. இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

ஐயோ என்பதை எதிர்மறை வார்த்தையாகத் தான் நாம் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது ஆச்சர்யத்தைக் குறிக்கும் வார்த்தையும் கூட! புதிய தலைமுறையில் மாலன் தனது சீனப் பயணக் கட்டுரைக்கு 'ஐயோ' என்று தலைப்பிட்டிருந்தார். ஆச்சர்யமாகவும் புதிராகவும் இருந்தது. கம்பரின் 'மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ இவன் வடிவு' என்பதை மேற்கோள் காட்டி அவர் எழுதுகிறார்: "ஐயோ! அது அவலச் சொல் அல்ல. அச்சத்தில் உதிர்க்கின்ற சொல் அல்ல. ஆச்சர்யத்தை அறிவிக்கின்ற, வியப்பை வெளிப்படுத்தும் சொல்லும் அது தான். அது ஒரு பழந்தமிழ்ச் சொல். கம்பனின் காலம் 12-ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். அப்படியானால் அது சுமாராக 1000 ஆண்டுகளாகவேனும் தமிழில் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அந்தத் தமிழ்ச் சொல் சீன மொழியிலும் உள்ளது. இன்றும் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது அதே அர்த்தத்தில். அதாவது அச்சத்தில் பதற்றத்தில் தானாக வந்து விழும் சொல்லாக உதிர்கிறது, ஐயோ!"

ஒரு வார்த்தைக்குள் என்னவெல்லாம் இருக்கிறது! இதைப் படித்த பிறகு தமிழ் இலக்கியத்தில் வேறு இடங்களில் எப்படி இந்தச் சொல் பயன்பட்டிருக்கிறது என்று பார்க்கும் ஆவலால் கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.

கம்பரைப் போலவே பாணர் ஆழ்வாரும் அழகை வர்ணிக்கும் போது 'ஐயோ'வைப் பயன்படுத்தியிருக்கிறார். "அரவின் அணை மிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!" என்றும் "நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!" என்றும் சொல்கிறார்.

பாணருக்கு இளைத்தவரா திருமங்கை ஆழ்வார்? அச்சோ பதிகம் என்றே ஒன்றை எழுதி விட்டார். 10 பாடல்கள் வருகின்றன. தன்னைப் பெண்ணாகப் பாவித்து நாராயணன் அழகில் மயங்கிப் பாடும் பாடல்கள் அத்தனையும். ஒவ்வொரு பாடலும் 'அச்சோ ஓர் அழகிய ஆ!' என்று முடிகிறது.

வைணவர்கள் மட்டும் தான் ஆச்சர்யப்படுவார்களா? சைவர்கள் கை என்ன பூப்பறிக்காவா போகும்? விடுவாரா மாணிக்கவாசகர்? அதே மாதிரி அச்சோ பதிகம். அதே மாதிரி 10 பாடல்கள். நாராயணின் அழகில் ஆழ்வார் சொக்குகிறார். சிவன் அருளில் நாயன்மார் சொக்குகிறார். 'எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!' படிக்க இலகுவாகவும் பக்தி ரசம் சொட்டும் பாடல்களுமாக இருப்பது 'எப்டித்தான்யா இப்டி எழுதினீங்க? அச்சோவே!' என்று கத்தணும் போல இருக்கிறது.

பெரியாழ்வார் திருமொழியில் தாலப் பருவம், அம்புலிப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், தளர்நடைப் பருவம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அச்சோப் பருவம் என்றும் ஒன்று வருகிறது. தாய் தனது குழந்தையை வாரி அணைத்துக் கொள்ள அழைக்கும் பருவம் தான் அச்சோப் பருவமாம். அதனால் அச்சோ என்பதை hug எனக் கொள்ளலாம்.

இவ்வளவு நேரம் பேசியது மேட்டர் இல்லை. இதிலிருந்து ஒரு புது வார்த்தை நான் கற்றுக் கொண்டேன். அது "பங்கி"

பங்கி என்றால் ஆண் தலைமுடியாம். 

பெரியாழ்ஸ் சொல்கிறார்: 

"செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல் 
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப 
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய 
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ 
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
"​

​பங்கி​..நல்லாருக்குல்ல?!

ஆண் தலைமுடிக்கு இன்னொரு பெயர் "சூளி" என்பதாம். ஆண் தலைமுடிக்கு ஒரு பெயர் இருந்தால் பெண் தலைமுடிக்கும் ஒரு பெயர் இருக்கும் தானே! அது "அளகம்". கம்பராமாயணத்தில் "அளகம் தரும் மதியின் பாகம்" என்று ஒரு வரி வரும். எழுத்தாளர் முத்துலிங்கம் கூட ஒரு கட்டுரையில் சூளி-அளகம் பற்றி எழுதியிருப்பார்.

எப்பேற்ப்பட்ட அழகு நம் மொழி! வியக்கிறேன்.​

Sunday, 6 April 2014

ஏப்ரல் 1

                                  

ஹையா...ஹையா..நாளைக்கு ஏப்ரல் 1...............

போன வருஷம் ஏப்ரல் 1 திங்கட்கிழமை வந்தது.

அன்னைக்கு அப்பா (foster father) படு பிஸியா இருந்தார். சிங்கத்தைக் கவுக்க சரியான சமயம் இது தான்னு ப்ளானைப் போட்டேன்.

சாட்ல மூஞ்ஜியத் தூக்கி வச்சுட்டு...'அப்பா...வீட்ல எனக்கு மாப்ள பார்த்துட்டாங்க. அவருக்குச் சென்னைல வேலையாம்'ன்னேன்.

"ஓ! வாழ்த்துகள்டா. பையனப் பார்த்தியா? பிடிச்சுருக்கா..." - இது அப்பா..

"ம்ஹூம். பார்க்கல இன்னும். எனக்குப் பிடிக்கல. கல்யாணம் வேண்டாம். அப்பா கேக்க மாட்றாரு. சரி போய்த்தொலைங்கன்னு சரின்னு சொல்லிட்டேன்" - அப்டினு கப்ஸா வுட்டேன்.

அப்பா பதறிப் போயி, "என்னடா..ஒருக்கயாவது பார்க்க வேண்டாமா? பேச வேண்டாமா? ஏன் சரின்னு சொன்ன? ஒரெட்டு சென்னை வந்து பார்த்துப் போயிட வேண்டிது தானே? இல்லைன்னா, அப்பா ஆபிஸ்க்கு வரச் சொல்றியா? பார்க்கலாம்" -ன்னார்.

'ம்' - நான்

"என்ன? உம்ம்முன்னு இருக்கே? தேதி கூட ஃபிக்ஸ் பண்ணியாச்சா?" - அப்பா

"ம்ஹும். உங்க கிட்ட பேசிட்டும் பண்ணனும்ன்னாங்க"

"அப்பா ஒரு வாரம் சிங்கப்பூர் போறேனே. என்ன பண்றது?" - அப்பா

"சிங்கப்பூர்ல கல்யாணம் வச்சுக்கலாம்"

"கழுத! இன்னும் குழந்தையாவே இருக்கயே? சரி பையன் பேர் என்ன?" - அப்பா

"உண்டுவளந்தான்" - நான். (இப்பக் கூட எங்கப்பாருக்குச் சந்தேகம் வரல)

"ஊர்?"

"எங்கூர் தான்"

"ம்....நம்பர் இருக்கா?"

"ம்ஹும். மாப்ள போட்டோ அனுப்ச்சுருக்காங்க. பார்க்குறேங்களா?"

"ம்..அனுப்பு...."

அனுப்பினேன். (ஏப்ரல் ஃபூல் ன்னு ஒரு ஜோக்கர் போட்டோ)

"கழுத கழுத உத படப்போற" - அப்பா

"ஹி ஹி ஹீ...ஏப்ரல் ஃபூல் ஃபூல்..ஒண்ணாந்தேதி காப்பித் தூள் தூள்...."

ஆனால் அப்பாவை ஏமாற்றிய ஒரு குழந்தையின் முட்டாள்தனமான சந்தோஷத்தை விட அதிக சந்தோஷம் அன்றிருந்தது. காரணம், என் அப்பாவின் அன்பை, அக்கறையை, எனக்காகப் பதறும் மனதை அதிக நெருக்கத்தில் தரிசித்த முதல் நாள் அது.

அப்பாவை ஒரு படி அதிகம் நேசிக்க ஆரம்பித்த முதல் நாள் எப்படி முட்டாள்கள் தினமாகும்? அன்பு தினமன்றோ அது?



Tuesday, 11 March 2014

Why 'Reading'?



My contribution for our Office's Internal Newsletter 'Awaaz' during the celebration of women's day.

***

Name of the hobby: Reading books

When did you start this Hobby (From how many years): From childhood. "MORE" over the past one and half years 

Inspiration to take up this Hobby: Mr. Maalan Narayanan

To explain this, a small introduction about Maalan is necessary. Maalan is a veteran journalist, wonderful writer, Editor of the weekly magazine named "PUTHIYA THALAIMURAI" and my charismatic mentor. He is the one who passionately writes and speaks for the development of the younger generation.

One of his articles changed me completely. It is about the skills of younger generation. He wrote: "It tears my heart to know that one doesn't know about Bharathi even until the age of 30. Without knowing Bharathi, how can you learn about the depth of language and social views? This generation is 100 times smarter than me. If you would have read Bharathi's writings, how much more vigorous you would be!", as it continued.

After reading this how could I not to be reading Bharathi? Until then, I have been reading just whatever I got. After that I started to be selective in my reading materials. I can say, Maalan's words channelized my reading.
 

Why does this mean so much to you? - Few days ago, I wrote one imaginary suicide letter, just for fun.(You can see it on my blog. Link: http://rajeesankar.blogspot.in/2014/01/blog-post_1755.html) Maalan commented on it saying "Your feelings have been expressed properly. Your Writing style has aptly captured the emotion without exaggerating the feeling and gives a lively touch to it. The concealed writer has come out from Rajee. It is not Rajee's suicide attempt, it is the attempt to express her skills". These words are not only a positive feedback for my writing but also the highest blessings I have ever gotten from my master.

His appreciation make me happy and it is not easy to get it from him. In order to get it, I have to work a lot, have to think a lot, have to collect lot of information. So I started reading.

Also my reading habit is protecting my dreams from the flames of daily life. My dreams are what still keeps me alive! My dreams assure me that there is still happiness remains in my life. Giving up my dreams and living as an ordinary person, is not acceptable to me. So I started reading.

"Literature is not something to read for entertainment. It is connected with thought process. Language and Thought process have a traditional continuation to them, and therefore, there are pundits and mentees in Literature", as Maalan said. I would also like to become a successor . I wish to do my best for my language. So I started reading.

I wish to show my love beyond the barriers of nation, religion and language. Religion teaches this to some. Literature teaches the same to me.


 ***

Sunday, 16 February 2014

சொல், ஒரு சொல்!...(5)

சென்ற வாரம் உணங்குதல் பற்றிப் பேசும் போது, துணங்கைக் கூத்து பற்றி நம் மாலன் தொட்டுச் சென்றார். அது குறித்துத் தேடியவற்றில் சிலவற்றை இங்கே பதிகிறேன்.

சங்க காலத்தில் வழிபாட்டின் போதும், போர்க்காலங்களிலும், பொழுதுபோக்கிற்காகவும் பல வகைக் கூத்துக்கள் ஆடப்பட்டிருக்கின்றன. அவைகளுள் முக்கியமானவை மற்றும் பரவலானவை: குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, தழூஉ கூத்து, வெறியாடல் போன்றவை. இவை தவிர இன்னும் 11 ஆடல் வடிவங்களைச் சிலப்பதிகாரம் சொல்கிறது.(பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப் பதினோராடலும் பாட்டும் கொட்டும்’)

துணங்கைக் கூத்து எப்படி ஆடப்படுகிறது?

துணங்கைக் கூத்து என்பது முடக்கிய கைகளால் விலாவில் புடைத்து, தோள்களை உயர்த்தி ஆடப்பட்டது. "பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கை யாகும்என்று திருமுருகாற்றுப்படை சொல்கிறது.

வகைகள்:

பேய்த்துணங்கை, போர்த்துணங்கை, மகளிர்த் துணங்கை என்று வகைகள் இருக்கின்றன.

குரவையும் துணங்கையும்:

குரவையும் துணங்கையும் இணைய வைத்தே பேசப்படுகிறது. குரவை என்பது கைகளைக் கோர்த்தும், கைகளை உயர்த்தியும் ஆடப்படுகிறது. இதில் பேய்த்துணங்கை என்பது பின்தேர்க்குரவை எனவும், போர்த்துணங்கை என்பது முன்தேர்க்குரவை எனவும் சொல்கிறார்கள். (போருக்குப் போகும் மன்னனின் தேருக்கு முன் ஆடுவது முன்தேர்க்குரவையாகும். போரில் வென்ற பின் மன்னன் தேருக்குப் பின்னால் ஆடுவது பின்தேர்க்குரவையாகும்.)

பேய்த்துணங்கை பற்றி அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. போரில் வென்ற அரசனின் புகழ் பாடி அவனது தேர்களுக்குப் பின்னின்று நிழல் போலப் பேய்கள் குரவை ஆடும் என்று சொல்லப்படுகிறது. (மன்னன் ஊரும் மறமிகு மணித்தேர்ப் பின்னும் முன்னும் பேய்ஆ டின்று.) அது போல பேய்த்துணங்கையும் இருக்கலாம்.

பொதுவாக வழிபாட்டின் போதும், போரில் வென்ற களிப்பிலும் துணங்கைக் கூத்து ஆடப்படுகிறது. வழிபாட்டின் போது அதிகம் பெண்களும், வெற்றிக் களிப்பின் போது ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவதாக இருக்கிறது.

வழிபாட்டில்:

முந்தைய பதிவில் மாலன் quote செய்திருந்த திருவாய்மொழிப் பாடலில் இதைக் காணலாம்.

அணங்குக்கு அருமருந்து என்று,அங்குஓர்
    ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக்
    கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக்கழு தைஉதடு
    ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர்
    வேதம்வல் லாரையே.


இந்தப் பாடலின் பொருள்: "அந்தப் பெண்ணின் நோயைப் போக்கும் உரிய மருந்து என்று ஆட்டையும் கள்ளையும் மதித்து தோள் குலைய துணங்கை ஆடும் பெண்களே! காய்ந்த நெல் கெட அதைத் தின்கின்ற கழுதையின் உதடு அசைவதைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்? வேதத்தில் சிறந்தவர்களைப் போய் வணங்குங்கள்!"

இங்கு வழிபாட்டின் போது பெண்கள் ஆடிய மகளிர்த் துணங்கைக் காணலாம்.

//ஆடும் கள்ளும் பராய்// ஆடு எதற்கு வந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் கூத்தின் போது கள் குடித்தாடும் வழக்கம் அப்போது(ம்) இருந்தது.
​​

​"​திண்டிமில் வன்பரதவர் 
 
வெப்புடைய மட்டுண்டு 
தண்குரவைச் சீர்தூங்குந்து
"​ - என்று புறநானூறு சொல்கிறது. (மட்டுண்டு - மதுவுண்டு)

போரில்:

குண்டு கண் அகழிய மதில் பல கடந்து

பண்டு பண்டுந்தாம் உள் அழித்துண்ட

நாடு கெழு தாயத்து நனந்தலை அருப்பத்துக்

கதவம் காக்கும் கணை ஏழு அன்ன

நிலம்பெறு திணி தோள் உயர ஓச்சிப்

பிணம் பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடி
” – பதிற்றுப்பத்து

இப்பாடலின் பொருள்: “ஆழ்ந்த அகழிகளையுடைய மதில்கள் பலவற்றைக் கைப்பற்றிக் கடந்து சென்று, உட்புகுந்து அழித்து, நாடாட்சிக்கு உரியதாக அமைந்த, அகன்ற உள்ளிடத்தையுடைய அரண்களின், வாயில் கதவு வலிமையுடையதாகக் காக்கும் கணைய மரத்தை ஒப்ப, பகைவர்களின் நாடுகளைப் பெறும் திண்ணிய தோள்களை உயரத் தூக்கி வீசி, பிணங்கள் குவிந்து கிடக்கும் போர்க்களத்திலே முன்னே பல காலங்களில் பன்முறை துணங்கைக் கூத்தினை ஆடி”

போர் வெற்றி தவிர்த்து பக்திக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பெண்கள் துணங்கை ஆடினாலும், அதில் தலைக்கை கொடுத்தல் என்று ஆணுக்கும் பங்கு இருக்கிறதாம். தலைக்கை அல்லது முதற்கை கொடுத்தல் என்றால் பெண்ணின் கையைப் பற்றி ஆடுதல் அல்லது தழுவிக் கொண்டு ஆடுதல். 

குறுந்தொகையின் மருத நிலப்பாடலில் தலைவியை அயலார் வந்து மணமுடிக்க விரும்பிய போது, தன் தலைவன் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தும் பாடலில் இப்படி வருகிறது.

மள்ளர் குழீஇய விழவி னானும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டும் காணேன் மாண்டக் கோனை

யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த

பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே


பொருள்: “மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனாகிய தலைவனை, வீர்ர் கூடியுள்ள சேரி விழாவின்கண்ணும், மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின்கண்ணும் ஆகிய எவ்விடத்தும் காணவில்லை. நானும் ஒரு ஆடுகின்ற களத்திற்குரிய மகளே! தந்தங்களை அறுத்துச் செய்த வளையல்கள் தன் பிரிவினால் நெகிழுமாறு செய்த பெருமைமிக்க தலைவனும் ஓர் ஆடுகின்ற களத்திற்குரிய மகனே!

அதாவது என்னோடு துணங்கை ஆடிய தலைவன் ஒருவன் உள்ளான் என்று அவள்(ஆதிமந்தி) சொல்வதாய் உரையாசிரியர் சொல்கிறார். “மகளிர் விழாக் காலத்தே துணங்கை ஆடுதலும் ஆடவர் அவர்கட்கு முதற்கை கொடுத்தலும் பண்டை வழக்கங்கள்” என்றும் சொல்கிறார். 

குரவை, துணங்கை போல, வெறியாட்டு என்ற ஒன்றும் வெரி குட்டான கூத்து. சிவபெருமான் அல்லது முருகன் அருள் வந்து வேகமாக ஆடுவது. வேலன் வெறியாட்டு என்று பல இலக்கியங்களில் வரும். பொன்னியின் செல்வனில் கூட, வந்தியும் ஆதித்தனும் பழுவேட்டையர் அரண்மனையில் இருக்கும் போது, வேலன் வெறியாட்டு கூத்து நடக்கும் நிகழ்ச்சி வருவது போல ஒரு மங்கல் ஞாபகம். (ஸாரி, பொன்னியின் செல்வனை refer பண்ண நேரமில்லை. அதைத் தொட்டால் கீழே வைக்க விடாது.)

Sunday, 9 February 2014

சொல், ஒரு சொல்!...(4)

இன்றைய சொல்: "உணங்கு"

உணங்குதல் என்றால் உலர்தல், மனம் வாடுதல்

மேற்கோள்கள்:

1. பட்டினப்பாலை - நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்

அகல் நகர் வியன் முற்றத்து
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனம் குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும்பல் குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு

2. அதே பட்டினப்பாலையில் 'நிலவு அடைந்த இருள் போல, வலை உணங்கும் மணல் முன்றில்' என்றும் வருகிறது.

3. நற்றிணை - உணங்கு திறன் நோக்கி

முற்றா மஞ்சள் பசும்புறங் கடுப்பச்
சுற்ரிய பிணர சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிப்
புன்னையங் கொழுநிழல் முன்னுய்த்துப் பரப்புந்
துறைநணி யிருந்த பாக்கமும் உறைநனி
இனிதுமன் அளிதோ தானே துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

4. பதிற்றுப்பத்து - கான் உணங்கு கடு நெறி

முகநூலில் பகிர்வுக்குப் பின் பிற்சேர்க்கை:

மாலன்: திருக்குறளிலும் ’உணங்கு’ உண்டு. உணக்கு என்று எழுதுவார் வள்ளுவர். தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் (குறள் 1037) பலம் வீசை மணங்கு என்பவை பழையகாலத்து அளவுகள்.பலம் என்பது சுமாராக 35 கிராம்.தொடி என்பது பலத்தைக் குறிப்பதற்கு இன்னொரு சொல்.ஒரு பலம் புழுதி (மேல் மண்) நன்றாகப் பொடிந்து கால் பலம் ஆகும் அள்விற்கு உழவு செய்து நிலத்தை காயப்போட்டால் (உலர்த்தினால், உணங்கு செய்தால்) அந்த நிலத்தில் ஒரு பிடி உரம் கூடப் போடாமல் பயிர் செய்யலாம் என்கிறார் வள்ளுவர்.

லாவண்யா: "இடிக்கும் கேளிர் நும் குறை ஆகநிறுக்கல் ஆற்றினோ நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.


இப்படியும் ஒரு பாடல் இருக்கு தோழி. வெண்ணெய் உருகி வழிவதை சொல்லி இருக்காங்க, அது வெண்ணையின் இயல்பே என்றாலும் ஒரு துயரத்தோடும் ஒப்பிடலாம், இந்த பாடலில் தொனி அதுவே.


இராஜி: முந்தைய இடங்களிலெல்லாம் 'உலர்ந்த' என்று பொருளில் வந்தது, இங்கு உருகிய என்று வருகிறது. (செயலறுதல் என்று கூடச் சொல்லலாம். உணங்குதலுக்கு அப்படி ஒரு அர்த்தம் அகராதி சொல்கிறது)
வெப்பத்தில் உருகிய வெண்ணையைப் படித்ததும், சமீபத்தில் படித்த ஒரு கம்ப ராமாயணப் பாடல் நினைவு வருகிறது. சூர்ப்பனகையின் காதல் வெறியை இதே வார்த்தைகளில் கம்பர் சொல்லியிருப்பார்.

//
கைகளால், தன் கதிர் இளங் கொங்கைமேல்,
ஐய தண் பனி அள்ளினள், அப்பினாள்;
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால்
//


மாலன்:
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் உணக்கில்லாதோர் வித்து என்று ஒரு வரி எழுதுவார். அதாவது உலர்ந்து போகாத விதை. உலராத விதைதான். ஆனால் மழை இல்லாததால் முளைக்காமல் கிடந்தேன். நீ மழையாக வந்து கருணை காட்டினாய் என்கிறார். இது சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பாடியது: 

பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கிலாததோர் இன்பமே வரும்
துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமை
என் வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.


வைணவத்திற்குப் போனால், திருவாய்மொழியில் உணங்கல் கெடக்கழு தைஉதடு ஆட்டம்கண்டு என்பயன்? என்று ஒரு வரி உண்டு. உலர்ந்த நெல்லைத் தின்கிற கழுதையின் உதடுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் என்ன பயன் என்று அர்த்தம். உலர்ந்த நெல்லைத் தின்னும் கழுதையின் உதடு எப்படிஆடும் என்று ஒரு நாள் உதைக்காத கழுதைக்குப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும். இது துணங்கைக் கூத்து என்ற ஒன்றைப்பற்றிய குறிப்பும் கூட. துணங்கைக் கூத்து என்றால் என்ன என்று நேரம் கிடைக்கும் போது கதைக்கலாம்.

தோழிக்கு ஒரு கடிதம்: நூல் அறிமுகம் - அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

அன்புள்ள ராஜி,

இன்று ஒரே சிட்டிங்-இல் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தேன். அந்த அனுபவத்தை வார்த்தைகளில் வடிப்பதில் நான் நிச்சயம் தோற்றுத் தான் போவேன். இருந்தாலும் உன்னிடம் சில வார்த்தைகளிலாவது சொல்லித் தான் ஆக வேண்டும். புத்தகத்தைப் படித்து முடிக்க என்னவோ இரண்டரை மணி நேரம் தான் ஆகியது. ஆனால் இது சொல்லும் விஷயங்களைப் புரிந்து கொள்ளவும் கிரகிக்கவும் வருடங்கள் பிடிக்கும். ஏன், நம்மால் புரிந்து கொள்ளப்படாமலே கூட போகலாம். அப்படியானதொரு புத்தகம் இது.

புத்தகத்தின் பெயர்: அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

ஆசிரியர்: மிகைல் நைமி. தமிழில்: கவிஞர் புவியரசு

வெளியீடு: விஜயா பதிப்பகம்
                                                                     

இந்தப் புத்தகத்தை எந்த வகைக்குள் சேர்ப்பது என்பதில் எனக்குப் பெரும் குழப்பம் இருக்கிறது. இது நாவலா, கதையா, சித்தாந்த நூலா, உண்மைச் சம்பவமா, புனைவா? தெரியவில்லை. வேண்டுமென்றால் புரிந்து கொள்வதற்கு எளிதாக 'வாழ்க்கை குறித்தான தேடல்' எனச் சொல்வது ஓரளவு பொருந்தும்.

நைமி லெபனான் நாட்டு எழுத்தாளர். அவருக்கு ஊரை விட்டு ஓடி வந்து டீ பாரில் வேலை பார்த்த அம்மை முகத்தான் ஒருவனின் நாட்குறிப்பு கிடைக்கிறது. அதில் காணப்படும் சம்பவங்களும், எண்ணவோட்டங்களும், தேடல்களுமே இந்தப் புத்தகம். (The Pitted face என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம்)

எல்லாம் அறிந்தவர்களின் மொழி மௌனம் என்று ஓஷோ சொல்கிறார். இங்கு எல்லாம் தேடுபவர்களின் மொழியும் மௌனம் என்று அம்மை முகத்தான் வாயிலாக நமக்குத் தெரிகிறது.

தான் யார்? என்ற கேள்வியின் வழி, வாழ்க்கைக் கூறுகளைத் தனக்குள்- தன் மௌனத்திற்குள் - விவாதிக்கிறான், அம்மை முகத்தான்(இனி, அ.மு என வரும்).

"மற்றவர்கள் மகிழ்ச்சிப்படுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பது ஆச்சர்யமல்ல. மற்றவர்கள் துக்கப்படுவதும் தனக்குத் துக்கம் தரவில்லை" என்று உலகத்திலிருந்தும், "மனதைக் கொண்டிருக்கும் ஓர் உடலல்ல நான், மாறாக ஓர் உடலைக் கொண்டிருக்கும் மனம்" என்று தன்னிடமிருந்தும் தனித்து நிற்கிறான். எதன் மீதும் ஒரு பற்றில்லாமல், அதே நேரத்தில் அனைத்தையும் சமமாய் அன்பு பாவிக்கும் ஆத்மாவாக அ.முவின் எண்ணங்கள் இருக்கின்றன.

மனிதர்களின் மனத்தில் எல்லைக்கோட்டைப் போடும் தேசங்களின் பிரிவினை குறித்த அவனது சிந்தனை சாதாரணர்களுக்கு வாய்க்காது. நாடு என்ற வரையறைக்குள் நின்று கொள்ள அவன் தயாரில்லை. இந்த பிரபஞ்சம் முழுதும் அவனுக்கானது என்கிறான். அதே நேரத்தில் தன் ஆத்மாவும் உடலும் கூட தன்னுடையதில்லை, தன் இரத்தம், தசை, உணர்ச்சிகள் எல்லாவற்றிலும் உலகத்தவர் பங்கும் உள்ளது என்று சொல்வது என்ன அழகான சிந்தனை!

எதன் மீதும் பற்றுக் கொள்ளாதவனான அவனுக்குமே ஒரு கட்டத்தில் அந்த பாருக்கு வரும் சென்னா செரிப் என்பவருடன் ஒரு சின்ன இணக்கம் ஏற்படுகிறது. தன் அறையில் இருக்கும் பூனையையும் தோழனாய்ப் பாவிக்கும் மனமும் இருக்கிறது. நூலின் இந்த மாதிரியான இடங்கள் பெரும் சிந்தனைக்குரியவை. அவற்றை வார்த்தைகளில் விளக்கவே முடியாது.

வாழ்க்கை போர்க்களம் என்று சொல்லித் திரியும் நமக்கு அது உலைக்களமில்லையா என்று எதிர்வாதம் வைக்கிறான். போர்க்களங்கள் மரணத்தைக் கொண்டு செலுத்தும். உலைக்களங்கள் உலோகத்தின் அழுக்கையெல்லாம் களைந்து புதியவைகளைக் கொண்டு வருமல்லவா என்பது வாழ்க்கை குறித்த வேறுபட்ட, நுட்பமான கோணம்.

மொழி மனிதனுக்கானது. அவற்றை மனிதன் தான் ஆள வேண்டும். அது மனிதனை ஆளும் நிலை வரக்கூடாது என்கிறான்.

மரணத்திற்கும் அ.மு க்கும் மற்றும் அ.முவிற்கும் பூனைக்குமிடையே நிகழும் மரணம் பற்றிய உரையாடல்கள் அர்த்தம் நிறைந்தவை. அவற்றை முழுதாய்ப் புரிந்து கொள்ள எனக்கு முதிர்ச்சி பத்தாது. ஆனால் அவனது ஒரு கேள்வி மிகவும் முக்கியமானது. 'மரணத்துடன் ஏன் வேதனை தொடர்பு கொண்டதாக இருக்கிறது? வேதனையைத் தவிர, வேறு ஒரு படைத்தலைவன் மரணத்திடம் இருந்தால், அதனைக் கண்டு உலகம் இவ்வளவு அச்சப்படாது. இவ்வளவு வெறுப்புக் காட்டாது' என்கிறான். இதே கருத்தை எளிய நடையில், 'பிரச்சனை மரணமல்ல, வலிகள்' என்று மாலன் எழுதியிருப்பார்.

'உன் உயிலை எழுதிவிடு' - இந்த 3 வார்த்தைகளுக்குள் எவ்வளவு அர்த்தங்கள்!

இறுதியாக அவன் தன் உயிலைப் புழுக்களுக்கு எழுதி வைக்கிறான். நூலில் அந்த இடம், அடடா! அத்தனை அற்புதம்! பொதுவாக மனதைத் தொட்ட வரிகளுக்கு அடிக்கோடிட்டு வைப்பது என் வழக்கம். புத்தகம் இந்த ஐந்தாறு பக்கங்களுக்கு ரூல்டு நோட்டாகத் தான் மாறிப் போனது.

இறுதியில் ஒரு சின்ன முடிச்சுடன் நூல் முடிகிறது. அதெல்லாம் உண்மையா, புனைவா என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை. சொல்லப் போனால் அந்தத் தெளிவு தேவையுமில்லை.

மொத்தத்தில் இந்த நூல், வாழ்க்கையை - அதன் கூறுகளை - ஞானி மனநிலையில் ஆராய்கிறது. சில விஷயங்கள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சில கருத்துக்கள் அதன் அடர்த்தி காரணமாக முழுதாகப் புரிந்து கொள்ள முடியவிலலை. அது தவறில்லை. இது ஒரு இரவில் வாசித்து, படித்ததாய் முடித்து விடும் நூல் அல்ல. மாடு அசைபோடுவது போல், மெல்ல மெல்ல மனம் அசை போட்டுப் பார்க்க வேண்டிய பெட்டகம் இது. இன்று எனக்குப் புரியாதவைகள், அடுத்த வாசிப்பில் புரியலாம். முழுதாய்ப் புரிய முதிர்ந்த மனம் வேண்டும். அது நம் வாழ்நாளில் கிடைக்குமாயின் நாம் புண்ணியாத்மாக்கள்.

நான் முதலிலேயே சொன்னது போல, இந்த நூல் அனுபவம் குறித்து என் மனதில் எழுந்ததையெல்லாம் என்னால் வார்த்தைகளில் விளக்கும் பக்குவம் எனக்கு இருக்கவில்லை. அதையும் நைமியின் வரிகளிலேயே சொன்னால்,

'வெளிப்பாடு தான் நோக்கத்தைத் திருத்தி ஏமாற்றி விடுகிறது. நான் நினைத்தது இதுவல்ல'

அன்புடன்,
மகிழ்வதனா,
கற்பனையூர்
 

Thursday, 23 January 2014

தாயகம் கடந்த தமிழ் - 2014


'தாயகம் கடந்த தமிழ்' மாநாடு பற்றிச் சில வார்த்தைகள்

மிக மிக அருமையான மாநாடு. மிகச் சிறந்த ஏற்பாடு. முதலில் இந்த மாதிரியான மாநாடு நம் காலத்தில் நடக்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றதற்கு நாம்(ன்) நல்ல உள்ளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனை சிறப்பு!

ஜனவரி 20, திங்கட்கிழமை மாலை தொடக்க விழா நடந்தது. உயர்நீதி மன்ற மாண்புமிகு நீதிபதி திரு.ராமசுப்ரமணியன் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தினார். முனைவர் ம.திருமலை மாநாட்டுக் கட்டுரைகளைக் கொண்ட, 'தாயகம் கடந்த தமிழ்' நூலை வெளியிட்டார். அன்றைய தினம் நம் மாலன் மற்றும் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் உரை நிகழ்த்தினர்.

அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க அமர்வுகள்.

முதலாம் அமர்வு: தாயகத்தைக் கடந்த தமிழ் இலக்கியங்கள் குறித்த ஓர் அறிமுகம். (இங்கு தாயகம் என வரையறை செய்யப்பட்டிருப்பது சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் ஈழ நாடும்)  சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பியத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான மிகச் சிறந்த ஓர் அறிமுகமாக இருந்தது. அவைகள் தோற்றம் முதல் தற்காலம் வரை என்னென்ன மாற்றங்கள் பெற்றிருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.

இரண்டாம் அமர்வு: தாயகம் பெயர்தலில் இருந்த/இருக்கும் வலியையும் வாழ்வையும் இலக்கியங்களில் பதிவு செய்திருப்பது தொடர்பான அமர்வு. பொருள் தேடி தாயகத்தை விட்டுச் செல்வோர், அரசியல் நிர்பந்தம் காரணமாக தாயகத்தை விட்டுச் செல்வோர் என இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொண்டு, தலைப்பு குறித்த செழுமையான அறிமுகத்தோடு மாலன் தொடங்கி வைத்தார்.

மூன்றாம் அமர்வு: பெண்ணெழுத்து குறித்தான அமர்வு. பெண் எழுத்தாளர்களின் மொழி நடை, கருப்பொருள் தேர்வு, அவர்கள் முன்னுள்ள சவால்கள், உடைத்தெறிந்த/உடைபட வேண்டிய தடைகள் குறித்து ஆழமான பார்வையை முன்வைத்தது. இதில் அதிகம் ஈழ எழுத்துப் பின்புலம் இருந்தது சிறப்பு.

நான்காம் அமர்வு: தமிழ் வளர்ப்பில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் பற்றியது. முரசு அஞ்சல், செல்லினம் கண்டுபிடிப்பாளர் முத்து நெடுமாறன் அவர்களின் பேச்சு, பார்வையாளர்களை அதிகம் கவர்ந்திழுத்தது எனலாம். e-book, video enabled e-book, virtual university பற்றிய ஆழமான புரிதலைக் கொடுத்தது அடுத்தடுத்த பேச்சாளர்களின் கட்டுரைகள்.

ஐந்தாம் அமர்வு: ஊடகத்தில் தமிழ் மொழி பற்றியது. வானொலி, பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம் என்று அத்தனையிலும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது அழகு.

ஆறாம் அமர்வு: மொழிபெயர்ப்பு பற்றியது. தனிப்பட்ட முறையில் என்னை மிக மிக மிகக் கவர்ந்த அமர்வு இது எனலாம். மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் குறித்து எனக்கு நேற்று வரைக்கும் மிகப் பெரிய அபிமானம் இருந்ததில்லை. என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அப்படிப்பட்ட புத்தகங்களைக் கையால் தொடுவேன். கர கர மொழியாக இருக்கும் என்பது, அதைப் படிக்காமலேயே அல்லது சரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்காததால், எனக்குள் இருந்த எண்ணம். அதையெல்லாம் புரட்டுப் போட்டு விட்ட அமர்வு இது. ஆற்றல் வாய்ந்த அறிஞர்கள் அத்தனை பேரும். 'ஆ'வென்று என்னை மறந்து வியந்திருந்த அமர்வு இது.
ஏழாம் அமர்வு: தாயகத்திற்கப்பால் தமிழ்க்கல்வி பற்றியது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறுபட்ட நாடுகளில் தமிழ்ப்பள்ளி நடத்துபவர்கள் தங்கள் அனுபவத்தையும் சவால்களையும் சில கேள்விகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மேலே சொன்னவைகள் அனைத்தும் மாநாடு குறித்த மிகச் சிறிய overview.

400 முதல் 500 பேர் மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். இதில் கணிசமான அளவு இளைஞர்கள் இருந்தார்களா எப்படி எனத் தெரியவில்லை. நிறைய கல்லூரி மாணவர்கள் கண்ணில்பட்டார்கள். நிறைவு விழாவில் கருத்து கேட்கும் போது அவர்களிடமும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என்பது என் சின்ன மனக்குறை. இளைஞர்களை மையப்படுத்தி எப்பொழுதும் பேசியும் எழுதியும் வரும் மாலன், பேராசிரியர், படைப்பாளர்களிடம் கருத்துக் கேட்டது போல, ஒரு கல்லூரி மாணவரைப் பிடித்துக் கேட்டிருந்தால், இளைஞர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்திருக்க முடிந்திருக்கும். நேரமின்மை மட்டும் தான் இந்த விடுபடலுக்குக் காரணமாக இருந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே! பரவாயில்லை. அவர் வேறு ஏதேனும் வழிமுறைகள் மூலம் அவர்கள் கருத்தை அறிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

இந்த மாநாடு ஏன் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்கு என்னிடம் சில காரணங்கள் இருக்கின்றன. (இங்கு இளைஞர் என்பதை என்னைப் போன்ற அல்லது நான் பார்த்த வரைக்குமான இளைஞர்கள் எனக் கொள்க)

1. ஒரு நிகழ்வை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை நாம் இவர்களிடமிருந்து பயில வேண்டும். அமர்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்புகள், அடடா, அற்புதம். ஒரு பொருளின் கீழ் ஒட்டு மொத்த வகைகளையும் மையப்படுத்தி இருந்தது மிகச் சிறப்பு.

2. இலக்கியம் படிக்க ஆரம்பித்திருக்கும் இளைஞர்களுக்குப் பிற நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான ஒரு கழுகுப் பார்வையைக் கொடுத்தது.

3. புத்தகங்கள் என்பவை வெறும் கதையும் வார்த்தை விளையாட்டும் மட்டுமல்ல. அவை ஒரு சமூகத்தின் சிரிப்பு, கண்ணீர், துக்கம், போராட்டம், மௌனம், கோபம், பண்பாடு என்ற அத்தனையையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

4. மொழி வழிப் பிணைப்பு என்பது அரிதாகி வரும் இன்றைய ஐடி வாழ் சூழலில் அவை குறித்த அழகான சிந்தனைகளையும் பெருமிதத்தையும் தூண்டியிருக்கிறது.

5. திருவள்ளுவர், ஜெயகாந்தன், சுஜாதா எழுதியது மட்டும் கொண்டது எழுத்துலகம் அல்ல. அது அதை விடப் பெரிது மற்றும் ஆழமானது எனச் சிலர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

6. எந்தவொன்றும் காலத்திற்கும் அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், அது அறிவியல் வழி மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை. அந்த விதத்தில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் நம்மை அடுத்த தளத்திற்குச் சிந்திக்க வைக்கின்றன.

7. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று அவன் எளிதாகச் சொல்லி விட்டான். அதிலிருக்கும் சவால்களை அவர்கள் கூறக் கேட்டு, எனக்குத் தமிழின் மீது பற்று பிய்த்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்ப்பில் படும் பாட்டை முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறிய பின், அப்படிப்பட்ட அழகுத்தமிழை நாம் ஏன் இன்னமும் படிக்காமல் கிடக்கிறோம் என்ற குற்ற உணர்வு வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டுரையில் மாலன் சொல்வார்: 'தமிழைப் பற்றி மிகைப்படப் பேசியிருக்கிறோம். ஆனால் அதன் நயங்களை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தியிருக்கிறோமா?' என்று! அது உண்மை தான் போல! எப்படி இவ்வளவு நாள் இது நம் கண்ணில் படாமல் போனது? போன தலைமுறைகளின் தலையில் உரிமையாக ஒரு குட்டு வைத்தால் நான் கொஞ்சம் நிம்மதியடைவேன்.

8. இன்னொரு சிறு நெருடல். பேசிய பேச்சாளர்களில் நிறையப் பேர், இக்காலத்து இளைய தலைமுறையின் மீது ஒரு அவநம்பிக்கையில் இருப்பது போலத் தெரிந்தது. அவர்கள் எண்ணம் ஓரளவுக்கு உண்மைதான் என்ற போதும், சில நேரத்தில் சங்கடமாக இருந்தது. இவ்வளவு அவநம்பிக்கை தேவையில்லை! நாங்கள் முட்டாள்கள் இல்லை. தமிழ் படிக்க விருப்பமில்லாதவர்கள் இல்லை. எங்களுக்கு தமிழ் குறித்து, அதன் நயம் குறித்துத் தெரியவில்லை. அவ்வளவு தான். தமிழறிஞர்கள் நீங்கள் அதை எங்களுக்குப் புரிய வைப்பது உங்கள் கடமை. அதன் பின்னும் நாங்கள் திருந்தவில்லை என்றால் அது எங்கள் தலையெழுத்து. அதாவது தேசத்தின் தலையெழுத்து. ஆனால் நாங்கள் அவ்வளவு தூரம் வேர்களைத் தூற்றுபவர்கள் கிடையாது என்ற நம்பிக்கையுடன் எங்களைத் திட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு குட்டுக்கும் பின்னே எங்கள் மீதான வெறுப்புகள் வேண்டாம். நம்பிக்கை மட்டும் இருக்கட்டும் என்று மெல்லாமாய்க் கூறிக் கொண்டு ஓடி விடுகிறேன்.

மொத்தத்தில் மிக நல்ல வாய்ப்பு இது. மிகவும் சிறப்பாக அமைந்தது. மகிழ்வாகவும் அமைந்தது. அது சரி, மாலன் தொட்ட எது துலங்காமல் போனது, இது போவதற்கு! :)

Wednesday, 1 January 2014

சிந்தனை கார்னர் - மாலன்

அறிந்த ஒன்றிலிருந்து அறியாத ஒன்றிற்கு இட்டுச் செல்வது அல்லது அறியாத ஒன்றை அறிமுகப்படுத்துவதுதான் இலக்கியத்தின் வேலை

 - மாலன்

பாரதி பிறந்தநாள் ஸ்பெஷல்

பாரதி பிறந்தநாள் ஸ்பெஷல்!

எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவராக இருந்த காந்திமதி நாதருக்கு பாரதி மேல கொஞ்சம் கடுப்பு. அதனால அவரை அவமானப்படுத்தனும்னு நெனச்சு 'பாரதி சின்னப்பயல்' என்று ஈற்றடி அமையுற மாதிரி 5 நிமிடத்தில் ஒரு பாடல் இயற்ற வேண்டும்ன்னு பாரதி கிட்ட சொன்னாராம். நம்மாளு அதுக்கு உடனே பாடுனாராம் இப்படி:

"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்ப
ோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்."

புரியுதா? (சகாக்களுக்காகப் பிரித்து, கீழே)

ஆண்டில் இளையவன் என்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்து என்னை ஏளனம் செய் - மாண்பு அற்ற
கார் இருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்.

அதாவது, தன்னை விட வயதில் இளையவன் நான் என்று அந்த அகந்தையினால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்த, பெருமை அற்ற, கருமையான இருள் போன்ற உள்ளம் கொண்ட காந்திமதி நாதனைப் பார், மிகவும் சின்னப் பயல் அவர்! என்று பொருள். (பாரதி சின்னப் பயல் = பார் அதி சின்னப் பயல்)

உடனே கா.ம.நா வுக்கு தலைகுனிவாப் போயிட்டுது.

அதைப் பார்த்து பாரதி பாட்டை கொஞ்சம் மாத்திப் பாடுறார் இப்படி:

"ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்."

ஆண்டில் இளையவன் என்றைய அருமையினால்
ஈண்டு இன்று என்னை நீ ஏந்தினையால் - மாண்புற்ற
கார் அது போல உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்

(கார் அது போல உள்ளத்தான் - மழை மேகம் போல கருணை மிக்க உள்ளம் கொண்டவன்)

இங்க பாரதி, தன்னையே சின்னப் பயல் ன்னு சொல்லிக்கறார்.

நன்றி: மாலன் சார்

மாலன் சார், உங்களுக்கு ஞாபகம் இருக்கா? பாரதி பற்றி நீங்க சொன்ன இந்தத் தகவல் தான், அவர் எழுத்துக்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டிய முதல் பொறி. மேலே சொன்ன இந்தப் பாட்டு வரிகளை நினைவில் இருந்து தான் எடுத்து எழுதறேன்(சரியாத் தான் இருக்கும்ன்னு நம்புறேன்). நாம் இது பற்றிப் பேசிய அந்த மாலைப்பொழுது, என் உலகத்தை விழிக்கச் செய்த ஒன்று. இடைப்பட்ட 11 மாதத்தில் நான் வளர ஆரம்பிச்சுருக்கேன். அதுக்கெல்லாம் முதல் பொறி நீங்கள் தந்தது. என் நன்றியை வெறுமனே வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனாலும் நெகிழ்ச்சி நிறைந்த நன்றிகள் சார்.