Monday 2 September 2013

நான்காம் வகை ஆசிரியர்கள்

அரசுப்பள்ளியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் கீழ் மத்திய வகுப்பைச் சார்ந்தவர்கள்.அவர்கள் பெற்றோர்களும் கல்வியில் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முடிவதில்லை. அதனால் இயல்பாகவே அவர்களுக்கு கல்வியில் சறுக்கல்களோ, சரியான புரிந்துணர்தல்களோ கிடைப்பதில்லை.அதையெல்லாம் சரி செய்யும் பொறுப்பு தனியார் பள்ளி ஆசிரியர்களை விட, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம்.ஆனால் சில ஆசிரியர்கள் அதையெல்லாம் உணரவே இல்லை என்பது கசப்பான உண்மை. அரசாங்க வேலை, நல்ல சம்பளம், சமுதாயத்தில் மரியாதை-இவற்றுடன் திருப்திப்பட்டு விடுகிறார்களோ என்ற வினா எழுகிறது.

நான் பார்த்தது வரையில் ஆசிரியர்கள் 4 வகை.முதல் வகை:அனைத்து மாணவர்கள் மீதும் ஒரே அக்கறையுடன் இருப்பவர்கள்.மாணவர்களின் வளர்ச்சிக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்பவர்கள்.இரண்டாம் வகை:குறையேதும் சொல்ல முடியாமல் அவரவர் கடமைகளைச் சரியாகச் செய்பவர்கள்.மூன்றாம் வகை:எதையும் கண்டுகொள்ளாதவர்கள்.சம்பளம் வந்தால் சரி என்றிருக்கும் பேர்வழிகள்.இவர்களைக் கூட விட்டுவிடலாம்.மாணவர்கள் வாழ்க்கையில் அப்படி ஒன்றும் பேரிடர்களைப் பண்ணிவிட மாட்டார்கள்.ஆனால் அந்த நான்காம் வகை ஆசிரியர்கள் இருக்கிறார்களே, மாணவர்களை discourage பண்ணுபவர்கள்.பெர்சனலாகப் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்தாலும் குற்றம் காண்பவர்கள்.அதிகாரத்தைத் தவறாகவும் கடுமையாகவும் பயன்படுத்துபவர்கள்.சொந்த விருப்பு வெறுப்புகளை வகுப்பறையில் திணிப்பவர்கள்.இவர்கள் எல்லாம் ஒரே வகை-அபாய வகை.நான்காம் ஆசிரியர்களின் சதவீதம் குறைவாகவே இருக்கும்.ஆனால் நிறைய மாணவர்களுக்கு நிச்சயம் இந்த மாதிரி ஆசிரியர்களுடனான அனுபவம் இருக்கும். 

யாரையோ எதற்குச் சொல்ல வேண்டும், எனக்கே இப்படி ஒரு அனுபவம் இருந்தது எங்கள் பள்ளியில்.அந்த ஆசிரியருக்கு மெடிக்கல் படிப்பதில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது.உடனடியாகச் சம்பாதிக்கும் தொழில் இல்லையென்று எப்பவுமே சொல்வார்.ஒரு முறை 12-ஆம் வகுப்பில் அனைவரையும் என்ன படிப்பதில் ஆர்வம் என்று சொல்லச்சொன்னார்.என் முறை வந்த போது 'மெடிக்கல்' என்று சொன்னேன்.'அதெல்லாம் வேஸ்ட்.உக்காரு' என்று கூறிவிட்டார்..அதைக் கூட பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.'ஹால் டிக்கெட்' வாங்குவதற்கு பள்ளிக்குச் சென்றிருந்த போது அப்போதும் அதே கேள்வி.என் அதே பதில்.கடுப்பாகிவிட்டார் மனிதர்.என்னை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்துவிட்டார்.மெடிக்கல் வேஸ்ட் என்று.நான் என் கோணத்தினைச் சொன்னேன்.(அவரிடம் பணிவு தான் காட்ட முடியும்.அடிமையா பட முடியும்)அவரால் அவர் கருத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.தாக்குதல் வேறு மாதிரியாகத் தொடர்ந்தது.அப்போது நான் 2 அல்லது 3 -ஆம் ரேங்க் வாங்குவேன்.முதல் ரேங்க் வாங்கும் என் நண்பனை(அவன் engineering என்று அன்று சொன்னவன்.அதனால் அவன் மேல் இவருக்கு ஒரு பிரியம்) முந்துவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.அதைச் சொல்லி அவர் discourage பண்ண ஆரம்பித்து விட்டார்.'அவனையே உன்னால் முந்த முடியவில்லை.மெடிக்கல்ல சீட்டு கிடைக்கணும்னா எவ்வளவு போட்டி இருக்கும் தெரியுமா, உன்னால அதெல்லாம் முடியுமா?புத்திசாலித்தனமா யோசிச்சுக்கோ!பேசாம பொறியியல் படி.அதான் உன் குடும்பத்துக்குச் சரி'-என்றாரே பார்க்கலாம், எனக்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது.பரிட்சைக்குச் செல்லும் முன் தன் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பேசும் பேச்சா இது?என் நிலைமை எப்படி இருந்திருக்கும்?!

அவர் சாபம் விட்டதுபோல் என்னால் மெடிக்கல் படிக்க முடியவில்லை.பொறியியல் தான் படித்தேன்.அவரால் தான் என்று சொல்லவில்லை.என் மேல் கூடத் தவறு இருந்திருக்கலாம்.என் உழைப்பு குறைவாக இருந்திருக்கலாம்.ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் என் தைரியத்தையும், ஆர்வத்தையும் அசைத்துப் பார்த்து விட்டது.அதுவும் கூட ஒரு காரணம்தான் நான் இழந்ததுக்கு.அந்தச் சம்பவம் நடந்து 7 வருடம் ஆகிவிட்டது.ஆனால் அது மனதில் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.அந்த முதல் ரேங்க் நண்பன் இன்னும் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவன்.அந்த ஆசிரியரை மட்டும் என்னால் இன்னும் மன்னிக்கவே முடியவில்லை.விளைவு-அதன் பின் என் பள்ளியில் நிறைவாக நான் செல்லவே முடியவில்லை.என் தொடக்கப்பள்ளியை நான் நேசிக்கும் அளவுக்கு, இலகுவாக செல்லும் அளவுக்கு அந்தப் பள்ளிக்குச் செல்லவே மனம் தடுக்கிறது.ஒரு பள்ளியையே பிடிக்காமல் செய்து விடும் வல்லமை அவர் வார்த்தைகளுக்கு இருந்தது என் 'கட்டக் கோளாறு' என்றுதான் சொல்ல வேண்டும்.வேறு என்ன சொல்வது?

என் வாழ்வில் இந்த மாதிரி ஆசிரியர்கள் ஒரு புறமென்றால் இன்னொரு புறம், 12 ஆரம்பம் முதல் பார்த்துப் பார்த்து செதுக்கி எனக்காகவே அவர் சொந்த வேலைகளைக்கூடத் தள்ளிவைத்து படிப்பும், ஊக்கமும் கொடுத்த என் வேதியியல் ஆசிரியர், கணித ஆசிரியர் ஒரு புறம்.

எல்லா ஆசிரியர்களும் நான்காம் வகை இல்லை.நான்காம் வகை ஆசிரியர்கள் இல்லாத எந்தப் பள்ளியும் இல்லை.

(21.02.2013 புதிய தலைமுறை இதழ் பெண்கள் டைரி பகுதிக்காக எழுதியது)

No comments:

Post a Comment