Tuesday 3 September 2013

இரத்தத்தின் இரத்தங்கள்


தமிழ் சினிமாக்களில் நாம் அதிகம் கண்டிருப்போம். காதலையோ, குடும்பத்தினர் மேலுள்ள பாசத்தையோ பெரிதாகக் காட்ட வேண்டிய சூழல்கள், சத்தியம் செய்பவர்கள், நம்பிக்கை ஏற்படுத்த முனையும் முயற்சிகள் எல்லாம் கையை அறுத்து இரத்தத்தை முன்னிலைப்படுத்தியே இருக்கும். ஏன் இரத்தம் அத்தனை சிறப்புப் பெற்றது?

இரத்தம் புனிதமானது. காரணம் அது கடவுளைப் போல. நல்லவனுக்கும் கெட்டவனுக்கும், பணக்காரனுக்கும், ஏழைக்கும் ஒரே நிறம், ஒரே குணம். மருத்துவ மொழியில், ஆரோக்யமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இரத்தத்தில் 3 விதமான செல்கள் இணைந்திருக்கும். அவை 1. இரத்த சிவப்பணுக்கள் 2. இரத்தத்தட்டுகள் 3.சிவப்பணுக்கள்

இரத்த சிவப்பணுக்கள், நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்குக் கொண்டு செல்லவும், கார்பன்-டை-ஆக்ஸைடை மீண்டும் நுரையீரலுக்குக் கொண்டு வரவும் செய்கின்றன. இரத்தத்தட்டுகள் மற்றும் பிளாஸ்மாக்கள் இரத்தத்தை உறைய வைப்பதில் பங்கு வகிக்கின்றன.

இரத்த வகைகள்:

இரத்தத்தில் 4 வகைகள் உண்டு. அவை A, B, O, AB. இதிலும் உபபிரிவாக A+, A-, B+, B-, O+, O-, AB+, AB- எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரத்த வகைக்கும் அதே பிரிவைச் சேர்ந்த இரத்த வகையே பொருந்தும். இதில் O மற்றும் AB சற்றே வித்தியாசமுடையது. O பிரிவு இரத்த வகை அனைத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தும். அதாவது எந்த இரத்தவகையைக் கொண்டவர்களுக்கும் இந்த வகை இரத்தத்தை ஏற்றலாம்(Universal Donors). AB பிரிவு இரத்தவகை எல்லாப் பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளும்(Universal Acceptors).

ஏன் இரத்ததானம் அவசியம்?

  • அறுவைச் சிகிச்சையின் போதுவிபத்தின் போது அல்லது புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்ய இரத்த தானம் அவசியப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் நம் தேசத்தின் மொத்த இரத்தத் தேவை அளவு 4 கோடி யூனிட்கள்.(1 யூனிட் = 450ml) ஆனால் நமக்குக் கிடைக்கும் இரத்த அளவு வெறும் 40 லட்சம் யூனிட்கள்.
  • ஒவ்வொரு 2 வினாடிக்கும் யாரோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
  • ஒவ்வொரு நாளும் 38000 தானம் செய்பவர்கள் தேவைப்படுகிறார்கள்.
  • 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒருவர் 350-450மி.லி இரத்தம் தானம் செய்யலாம்.

தானம் செய்வதற்கான தகுதிகள்:

  • தானம் செய்பவர்களின் வயது 18லிருந்து 60க்குள் இருக்க வேண்டும்.
  • அவர்கள் உடல் எடை குறைந்த பட்சம் 45ஆக இருக்க வேண்டும்.
  • இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபினின் எண்ணிக்கை 12.5க்கு குறையாமல் இருக்க வேண்டியது அவசியம்.
  • ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்யலாம்.

யாரெல்லாம் இரத்த தானம் அளிக்க முடியாது?

  • எய்ட்ஸ், பாலியல் நோய், இரத்தப் புற்று நோய், மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் அளிக்க முடியாது.
  • மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 6 மாதங்கள் வரையிலும், மலேரியா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 3 மாதங்கள் வரையிலும் தானம் பண்ண முடியாது.
  • பெண்கள் கருவுற்றிருக்கும் போதும், மாதவிடாய்க் காலத்திலும், தாய்ப்பாலூட்டும் காலங்களிலும் ரத்த தானம் அளிக்க முடியாது.


எங்கே? எப்படி?

அரசு மருத்துவமனைகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரத்த வங்கிகள் செயல்படுகின்றன. அவை இரத்தத்தை தானம் பெறுவதோடு சேமித்து வைக்கவும் செய்கின்றன. இது போக, தனியார்த் தொண்டு நிறுவனங்கள் சிலவும் இந்தப் பணியினைச் சமூக சேவையாகச் செய்கின்றன. இரத்த தான விழிப்புணர்வுக்காக நடமாடும் இரத்த சேமிப்பு ஊர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தானம் பெறப்பட்ட இரத்தத்தின் சேமிப்புக்காலம்?

இவ்வாறு தானம் பெறப்பட்ட இரத்தம் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகிறது.

ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

  • தூய இரத்தம் (Whole blood)--35 நாட்கள்
  • இரத்தச் சிகப்பணு (Packed Red cells)--42 நாட்கள்
  • இரத்தத் தட்டுக்கள் (Platelets)--5 நாட்கள்
  • பிளாஸ்மா (Plasma)--1 வருடம்

ஒரு வாரத்திற்கு முன் நியூசிலாந்தில் ஒரு சம்பவம். எலித்தொல்லைக்காக வைத்திருந்த மயக்க மருந்தை தின்று விட்ட கிம் எட்வர்ட்ஸ் என்பவரின் செல்லப்பூனை ‘ரோரி’ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் அவரது தோழி மிச்சேல் விட்மோர் என்பவரின் நாயான ‘மேக்கி’யின் இரத்தம் ‘ரோரி’க்குச் செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டது.

எதிரி விலங்குகளான, வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த நாய், பூனைக்கு ரத்த தானம் செய்கிறது. ஒரே இனத்தைச் சேர்ந்த, ‘யாவரும் கேளிர்’ என வாழும் மனிதனுக்கு மனிதன் எப்போது செய்யப் போகிறோம்?

‘தனக்குப் போகத் தான் தானமும் தர்மமும்’ என்பது இந்தக் காலத்திற்கு சரி வராது. தனக்குப் போக, மற்றவனுக்காகவும் வேண்டும் (இரத்த)தானமும் தர்மமும் என்று புதிய மொழி படைப்போம். சக உயிர் காப்போம்.


தகவலுக்கு: ஜூன்14 – சர்வதேச இரத்த தான நாள்

(முற்றும்)

No comments:

Post a Comment