Thursday 11 April 2013

அன்றொரு நாள் அதே நிலவில் - 2

தேவி பள்ளிக்கூடம் விட்டு வருவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க வேண்டும். அதற்குள் வந்துவிட்டால் சேட்டை செய்ய ஆரம்பித்து விடுவாள்.

'இந்தாம்மா! காபி குடி'

'தேங்க்ஸ் அத்தை'

'முடிஞ்சதா'

'இன்னும் இந்த செல்ஃப் மட்டும் தான்'

'தேவி வரைந்த பேப்பரா தான் இருக்கும் இது முழுக்க'

'ஆமாத்தை. நாய்க்குட்டி..நல்லா கிறுக்குது'

இன்னும் தேவிக்குட்டிக்குப் பென்சிலைச் சரியாகப் பிடிக்க வரவில்லை. அதற்குள் என்னவெல்லாம் முயற்சிக்கிறாள். யானை, குதிரை, பேய், பென்-10 என்று. பள்ளி விடுமுறையென்றால் கலர் பென்சிலும் கையுமாகத் தான் இருப்பாள். நிலா வரைய முயன்றிருக்கிறாள். கோழி முட்டையை உடைத்து வைத்தது போல் இருந்தது.

அருணாவுக்கும் அப்படித் தானோ? நிலவென்று நினைத்து ரசித்திருந்தது, கடைசியில் கோழி முட்டையாக ஆகியிருந்தது.

பொறியியல் இளங்கலைப் படிப்பு முடித்த கையுடன் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

'பிறந்தோம். படித்தோம். திருமணம் செய்தோம் என்றெல்லாம் இருக்க முடியாது. எனது கனவுகள் வேறு. லட்சியங்கள் வேறு. கட்டாயப்படுத்தாதீர்கள்' - தீர்க்கமான வாதம். மூன்று ஆண்டுகள் எடுபட்டது - அதாவது அப்பாவிற்கு முதல் மாரடைப்பு வரும் வரை. அன்று முதல் குடும்பத்தில் அவள் முற்போக்கு எண்ணங்கள் பிடிவாதங்களெனப் பெயர் சூட்டப்பட்டன. கருத்துக்கள் திமிராய்த் திரிந்தன. கடைசியில் அவள் தான் இறங்கி வர வேண்டியிருந்தது.

நல்ல கலர். ஆறு இலக்கச் சம்பளம். அமெரிக்க மாப்பிள்ளை. திருமணத்திற்குப் பின் இங்கே - சென்னையில் செட்டில் ஆவதாய் முடிவு. தலையை ஆட்ட வைத்தது குடும்பச் சூழ்நிலை.

ஜிமெயிலில் 'சேட்'டினார்கள். ஸ்கைப்பில் சில நேரம் வீடியோ கால். அருணாவை விடக் கொஞ்சம் மார்டன். பிடிக்கவில்லை என்று சொல்லக் காரணங்கள் இல்லை. பிரசாத்தை ரசிக்க ஆரம்பித்திருந்தாள் - அது காலத்தின் கட்டாயமாகக் கூட இருந்திருக்கலாம். பொதுவாகத் தமிழ்ச் சூழலில் கணவனை மனைவிக்குப் பிடிக்க வேறு என்ன சிறப்பான காரணங்கள் வேண்டும்? அவன் 'கணவன்' என்பதே போதுமல்லவா? அப்படித் தானே பழக்கி வைத்திருக்கிறார்கள் நம் பெண்களை!

ஏகப்பட்ட முரண்பாடுகள் அவர்களுக்குள். அவள் சித்தாந்தங்களை ஆழமாகச் சீண்டாத வரை விட்டுக் கொடுத்திருந்தாள். சுடிதார் ஜீன்ஸ் ஆனது. தலைப் பின்னல் 'V' கட் ஆனது. விஜய் டீவி ஸ்டார் சீரிஸுக்குப் போனது. புளி சாதம் பீசாவானது. அவனுக்கு இது போதவில்லை. அவன் ரசிக்கும் 'பப்'கள் இவளுக்கு அலர்ஜித்தது. 'மாட்டேன்' என்று சொன்ன போது 'பட்டிக்காடு' என்ற வசையாடல்கள். ரசிக்க 1000 இருக்கிறது என்ற உபதேசங்கள்.

'நீங்க எவ்ளோ தான் சொன்னாலும் என்னால முடியாது பிரசாத். அந்தக் கலர் கலர் லைட். எல்லார் கையிலும் மதுப்புட்டி. மங்கிய வெளிச்சம். நீங்கள் ரசிக்கலாம். என்னால் முடியவில்லை பிரசாத். கட்டாயப்படுத்தாதீர்கள். நீங்க போய்ட்டு வாங்க. நோ ப்ராப்ளம். என்னைக் கூப்பிடாதீர்கள்'

'சோ, நீ வர மாட்ட?'

'நோ டௌட்'

'வந்துதான் ஆகணும்னு சொன்னா?'

அவனின் இந்தக் கேள்வியில் அதிர்ந்துதான் போய் விட்டாள். அவனுக்கு இப்படியொரு ஆணாதிக்க முகமிருக்கும் என்று இது வரை அவள் யோசித்தது கூட இல்லையே!

'கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று சொல்ல வேண்டியிருக்கும் - கணவன் என்ற போதிலும். எது வசதி?' - வார்த்தைகள் கொஞ்சம் சூடாகத் தான் வந்து விழுந்தன.

அதன் பிறகு இதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. அவன் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் இருந்தது.

ஹனி..குட் மார்னிங் ஸ்வீட்டி..பை டியர்..செல்லக் கொஞ்சல்கள் குறைந்திருந்தது. அவ்வப்போது சின்னச் சின்னதாய் பிரச்சனைகள். முடிவு காணாமலே முடிக்கப்பட்டிருந்தது - சில நேரம் இவர்களால், சில நேரம் அவன் அம்மா தலையீட்டால்.
அந்த நேரத்தில்தான் தேவி ஜனித்திருந்தாள். 'எல்லாம் சரியாகி விடும்' என்று நம்பிய இரவுகளில் ஏமாந்ததால் விளைந்த குழந்தை.

நிறைய மாறியிருந்தது. ஆனால் எல்லாமே எதிர்த்திசையில். அருணா பிரசவம் முடிந்து அம்மா வீட்டில் 3 மாதம் தங்கியிருந்து, திரும்பி வருவதற்குள் அவன் அந்நியனாகியிருந்தான். 'ரீட்டா' வின் பழக்கம் வேறு. சந்தேகிக்காத அளவுக்கு அவன் நடந்து கொள்ளவில்லை. விசாரித்தார்கள். சந்தேகம் சரியென அவனே ஒப்புக் கொண்டிருந்தான் - சிறிதும் குற்ற உணர்ச்சியில்லாமல்.

அன்றைக்கே தாய் வீடு திரும்பியிருந்திருப்பாள் - அந்த அத்தை மட்டும் அப்படி அழுது மயங்கி விழாமல் இருந்திருந்தால்; பாவம், பிரசாத்துக்கு 3 வயது இருக்கும் போது விபத்தில் மாமா இறந்து போக, ஒற்றை மனுஷியாய் இவ்வளவு தூரம் வளர்த்திருக்கிறாளே, அந்த மரியாதைக்காக அங்கேயே தங்கும் படி ஆனது. ஆம்.தங்கும்படி தான். வாழும்படி இல்லை.

***

'தேவிக்குட்டி..இந்தா இந்த ட்ரெஸை மாத்திட்டு பாட்டி கூட இரு. சேட்டை பண்ணாம சமத்துப் பிள்ளையா இருக்கணும். சரியா?'

'என்னம்மா! தலை வலிக்குதுன்னு தானே ஆபிஸ்க்கு லீவ் போட்ட? வெளில போய்ட்டு வந்தா இன்னும் கஷ்டமால்ல இருக்கும்?'

'பரவாயில்ல அத்தை. ஒரு முக்கியமான வேலை. போய்த்தான் ஆகணும். வர கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும். டின்னடர்க்கு வெயிட் பண்ண வேண்டாம்த்தை'

அவள் ஸ்கூட்டி மெரினா பீச் நோக்கிப் பறந்தது.

(தொடரும்)

1 comment:

  1. * அவள் முற்போக்கு எண்ணங்கள் பிடிவாதங்களெனப் பெயர் சூட்டப்பட்டன.

    * தங்கும்படி தான். வாழும்படி இல்லை.

    நல்ல வரிகள்

    ReplyDelete