Thursday 11 April 2013

அன்றொரு நாள் அதே நிலவில் - 1

சுற்றியிருந்த மேகப் போர்வையை மெல்ல விலக்கி எட்டிப் பார்த்து நிலா. சூரியன் கிளம்பிக் கொண்டிருந்தான். பால் வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு, பணியைத் தொடர வந்தது நிலா. அதற்குத் தெரியும் இன்று அவர்கள் வாழ்வின் முக்கிய நாள் என்று.

***
'காற்றின் வழி தூது. உங்கள் கானக்குயில் 90.4கோடு. இன்றைய 'இளையதேசம்' நிகழ்ச்சியில் கருத்துரைத்த அன்பு உள்ளங்களுக்கும் கேட்டுச் சுவைத்த நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் சந்திக்கலாம் நாளை மாலை 5 மணிக்கு. சுகந்த வணக்கங்களுடன் உங்கள் சுதர்சன்.நன்றி நேயர்களே!'

'சுதர்..ஒன் அவர் வெயிட் பண்றயா? புரோக்ராம் முடிச்சுட்டு நானும் வந்துடறேன்.'

'சாரிடா மச்சி..ரூம்க்குப் போகல. மெரினா பீச் போறேன்'

'பீச்சுக்கா? என்னடா..உனக்கும் சுண்டல் சாப்பிட ஆசை வந்துருச்சா?'

'ஆமாடா..ஆசை தான்..அருணாவுடன் சாப்பிட ஆசை'

'கேரி ஆன் டா..ஆல் தி பெஸ்ட்'

'பை மச்சி'

அதிசயமாகத் தான் இருந்தது, அன்று பேருந்தில் இரண்டு காலும் வைத்து நிற்க இடம் கிடைத்தது. இதே போலொரு பேருந்துப் பயணத்தில் தான் அருணாவை முதன்முதலில் பார்த்தான். 6 மாதங்கள் பின்னோக்கிச் சென்றது அவன் நினைவுகள்.

4 மணியாகியும் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த முன்மாலை நேரம் அது. தீபாவளி சிறப்புப் பேட்டிக்காக அந்தப் புகழ் பெற்ற எழுத்தாளரைச் சந்தித்துத் திரும்பிக் கொண்டிருந்தான். அரை மணி நேரப் பேட்டிக்கு ஆயிரம் முறை அலைந்தாயிற்று. கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும். அந்த தெய்வம் வண்டி பஞ்சரையும் சேர்த்துக் கொடுத்தது. பேச்சுக் கலை, குரல் வளம், அறிவுத் திறன் இருந்தும் என்ன பிரயோஜனம்? நம் சுதர்சன் சர்க்கஸும் கொஞ்சம் கற்றிருக்கலாம். பேருந்தில் ஏறுவதற்குள் பெரிய பாடாய் அல்லவா இருக்கிறது? ஒரு வழியாக கூட்டம் குறைந்த பேருந்தில் ஏறி, மிச்சமிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். பக்கத்தில் பள்ளிக்கூடச் சிறுவன்.

அடுத்த நிறுத்தத்தில் கைப்பையுடன் நீல நிறச் சுடிதார் சகிதம் அவள் ஏறினாள். அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது. சுதர்சனருகில் வந்து லாவகமாகக் கம்பியைப் பிடித்து நின்று கொண்டாள். துப்பட்டா காற்றின் வேகத்திற்கு பறந்து அவன் முகத்தில் மோதியது. 

'சாரி..சாரி' - கெஞ்சலுடன் துப்பட்டாவைப் பிடித்து சொருகிக் கொண்டாள்.

டிக்கெட்டுக்குப் பணம் எடுக்க கைப்பையைத் திறக்கும் போதும் துப்பட்டா பிடி நழுவி அவன் முகத்தை வருடியது.

மீண்டும் சாரி.

'ப்ளீஸ்..உக்காருங்க மேடம் இந்த சீட்ல'

'பரவாயில்ல சார்'

'கஷ்டப்படுறேங்களே! நான் நின்னுக்கறேன்! நீங்க உக்காருங்க!'

'பரவாயில்ல.தேங்க்யூ!'

'பாவம் பொம்பளைப் பிள்ள நீங்க!'

'சோ வாட்?'

'ரொம்ப நேரம் நிக்க கஷ்டமாயிருக்கும்ல?'

'சோ, நீங்க ஒரு இளக்காரத்துல தான் உக்காரச் சொல்றேங்கன்னு எடுத்துக்கலாமா?'

'இதுக்குப் பேரு இளக்காரம் இல்லைங்க. கருணை'

'அது ஏன் பெண்களைப் பார்த்தா மட்டும் வருது?'

'அன்பு தான்'

'இதுக்குப் பேரு அடக்குமுறை மிஸ்டர்........'

'சுதர்சன்'

'உங்களை விட எங்களைத் தாழ்வாக நினைப்பதால் வரும் ஆதிக்கம்ன்னு சொல்லலமா? உங்களை விட உடல் வலுவில் நாங்கள் சில விஷயங்களில் குறைவானவராக இருக்கலாம். ஆனால் இப்படி எங்களால் சொந்தக் காலில் நிற்கக் கூட முடியாது என்று எண்ண வேண்டாம் மிஸ்டர்.சுதர்சன்'

'சின்னச் சலுகை காட்டியது தப்பா?'

'ஆம் தப்புத் தான். சலுகைகள் எங்கு அறிமுகமாகிறதோ அங்கு தான் அடக்கு முறையும் உன்னை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணமும் சலுகை தருபவர்களிடம்  வருகிறது என்பது என் கருத்து'

'...'

என்ன மாதிரிப் பெண் இவள்? இதன் பெயர் தன்னம்பிக்கையா? திமிரா? ID கார்ட் IT நிறுவனத்தில் பணி புரிகிறாள் என்று சொல்கிறது. சாரியோ, நன்றியோ, எதிர்ப்போ கண்ணைப் பார்த்து பேசும் வலிமை. முகம் நிறைக்கும் அமைதி. பூவா புயலா என யோசிக்க வைக்கும் இதழ்கள்.  என்ன மாதிரிப் பெண் இவள்? சண்டைக்காரியா? தெளிவான சிந்தனைக்காரியா?

யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் இருக்கைக்கு வலப்புற இருக்கையில் அவளுக்கு இடம் கிடைத்தது.

எது எப்படியாயினும் மீண்டும் சென்று பேச வேண்டும் எனத் தோன்ற வைக்கும் கேரக்டர்.

'மேடத்துக்கு குத்துச் சண்டை தெரியுமா?'

சின்னச் சிரிப்புடன் இயல்பாக அவன் கேட்டது சூழலை லேசாக்கியிருந்தது.

'எக்சேக்டா தெரியாது. பிரச்சனையென்றால் தற்காத்துக் கொள்ளத் தெரியும்.' - 'ஏன் கேட்கிறாய்' என்பது போலப் புருவச் சுளிப்பு.

'இல்லை. மேரி கோம் சிஸ்டர் உங்க பேர் 'யூரி கோமா' என்று கேட்க நினைத்தேன்'

'ஹ..ஹா..எவ்வளவு நாசுக்காகப் என் பேரென்ன என்று கேட்கிறீர்கள் சுதர்சன்.ம்..பத்திரிக்கைக்காரரோ?'

'இல்லை.கானக்குயில் பண்பலையில் RJ'

'ஓ! 'இளையதேசம்' சுதர்சன்?'

'யெஸ்'

'அப்பொழுதே நினைத்தேன்..கேட்ட குரலாக இருக்கிறதே என்று'

'என்ன அதிசயம்?'

'என்ன?'

'இந்த இதழ்களுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா?

'ஏன்? ஐயாவுக்கு பேருந்தில் நிற்க முடியாமல் அழும் பெண்கள் தான் தெரியுமோ ?சிரிக்கும் பெண்களைப் பார்த்ததே இல்லையோ?'

'சிறு திருத்தம்..சிரிக்கும் சிலைகளைப் பேருந்தில் பார்த்ததில்லை'

'அடடா..குத்துச் சண்டை படித்தால்தான் சரியா வரும் போல!'

'ஹ..ஹா..இல்லை இல்லை'

'சரி..என் ஸ்டாப் வந்து விட்டது..பார்க்கலாம்'

'அடுத்த ஒலிம்பிக்கிலா?

'ஹ..ஹா..மறக்க மாட்டீர்கள் போல?'

'நிச்சயமாக'

'அருணா'

'ஸ்வீட் நேம்'

'சி யூ'

'பை'

சில நாட்கள் கழித்து 'இளையதேசத்தில்' பேசினாள். செல்போன் வழி ஆரம்பித்த நட்பு. ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். காலத்தின் ஓட்டத்தில் காதலாய்க் கனிந்திருந்தது இவனுள். இது அவளுக்குத் தெரியாது என்றில்லை. யதார்த்தமாக வெளிப்படுத்தியுமிருந்தான். யோசிக்கக் கொஞ்ச நாள் வேண்டுமென்றாள். சரியென்றுதான் இவனுக்கும் பட்டது.

திருமணத்திற்குப் பின் தேவி அவனுடன் இருப்பதில் அவனுக்கு ஒன்றும் கஷ்டமில்லை. இன்னும் சொன்னப் போனால் மகிழ்ச்சி தான். அருணாவைப் பார்ப்பதற்கு முன் அப்படித் தானே நினைத்திருந்தான்!

இன்று அருணா கடற்கரைக்கு வரச் சொல்லியிருக்கிறாள் இது பற்றி பேசுவதற்கு. என்ன சொல்லப் போகிறாள்? மனது கேட்டது இவனிடம்.

அவனைப் பார்த்து நிலவு புன்னகைத்தது - பேருந்தின் ஜன்னல் வழி.

(தொடரும்)

No comments:

Post a Comment