Sunday 16 February 2014

சொல், ஒரு சொல்!...(5)

சென்ற வாரம் உணங்குதல் பற்றிப் பேசும் போது, துணங்கைக் கூத்து பற்றி நம் மாலன் தொட்டுச் சென்றார். அது குறித்துத் தேடியவற்றில் சிலவற்றை இங்கே பதிகிறேன்.

சங்க காலத்தில் வழிபாட்டின் போதும், போர்க்காலங்களிலும், பொழுதுபோக்கிற்காகவும் பல வகைக் கூத்துக்கள் ஆடப்பட்டிருக்கின்றன. அவைகளுள் முக்கியமானவை மற்றும் பரவலானவை: குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, தழூஉ கூத்து, வெறியாடல் போன்றவை. இவை தவிர இன்னும் 11 ஆடல் வடிவங்களைச் சிலப்பதிகாரம் சொல்கிறது.(பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப் பதினோராடலும் பாட்டும் கொட்டும்’)

துணங்கைக் கூத்து எப்படி ஆடப்படுகிறது?

துணங்கைக் கூத்து என்பது முடக்கிய கைகளால் விலாவில் புடைத்து, தோள்களை உயர்த்தி ஆடப்பட்டது. "பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கை யாகும்என்று திருமுருகாற்றுப்படை சொல்கிறது.

வகைகள்:

பேய்த்துணங்கை, போர்த்துணங்கை, மகளிர்த் துணங்கை என்று வகைகள் இருக்கின்றன.

குரவையும் துணங்கையும்:

குரவையும் துணங்கையும் இணைய வைத்தே பேசப்படுகிறது. குரவை என்பது கைகளைக் கோர்த்தும், கைகளை உயர்த்தியும் ஆடப்படுகிறது. இதில் பேய்த்துணங்கை என்பது பின்தேர்க்குரவை எனவும், போர்த்துணங்கை என்பது முன்தேர்க்குரவை எனவும் சொல்கிறார்கள். (போருக்குப் போகும் மன்னனின் தேருக்கு முன் ஆடுவது முன்தேர்க்குரவையாகும். போரில் வென்ற பின் மன்னன் தேருக்குப் பின்னால் ஆடுவது பின்தேர்க்குரவையாகும்.)

பேய்த்துணங்கை பற்றி அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. போரில் வென்ற அரசனின் புகழ் பாடி அவனது தேர்களுக்குப் பின்னின்று நிழல் போலப் பேய்கள் குரவை ஆடும் என்று சொல்லப்படுகிறது. (மன்னன் ஊரும் மறமிகு மணித்தேர்ப் பின்னும் முன்னும் பேய்ஆ டின்று.) அது போல பேய்த்துணங்கையும் இருக்கலாம்.

பொதுவாக வழிபாட்டின் போதும், போரில் வென்ற களிப்பிலும் துணங்கைக் கூத்து ஆடப்படுகிறது. வழிபாட்டின் போது அதிகம் பெண்களும், வெற்றிக் களிப்பின் போது ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவதாக இருக்கிறது.

வழிபாட்டில்:

முந்தைய பதிவில் மாலன் quote செய்திருந்த திருவாய்மொழிப் பாடலில் இதைக் காணலாம்.

அணங்குக்கு அருமருந்து என்று,அங்குஓர்
    ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக்
    கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக்கழு தைஉதடு
    ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர்
    வேதம்வல் லாரையே.


இந்தப் பாடலின் பொருள்: "அந்தப் பெண்ணின் நோயைப் போக்கும் உரிய மருந்து என்று ஆட்டையும் கள்ளையும் மதித்து தோள் குலைய துணங்கை ஆடும் பெண்களே! காய்ந்த நெல் கெட அதைத் தின்கின்ற கழுதையின் உதடு அசைவதைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்? வேதத்தில் சிறந்தவர்களைப் போய் வணங்குங்கள்!"

இங்கு வழிபாட்டின் போது பெண்கள் ஆடிய மகளிர்த் துணங்கைக் காணலாம்.

//ஆடும் கள்ளும் பராய்// ஆடு எதற்கு வந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் கூத்தின் போது கள் குடித்தாடும் வழக்கம் அப்போது(ம்) இருந்தது.
​​

​"​திண்டிமில் வன்பரதவர் 
 
வெப்புடைய மட்டுண்டு 
தண்குரவைச் சீர்தூங்குந்து
"​ - என்று புறநானூறு சொல்கிறது. (மட்டுண்டு - மதுவுண்டு)

போரில்:

குண்டு கண் அகழிய மதில் பல கடந்து

பண்டு பண்டுந்தாம் உள் அழித்துண்ட

நாடு கெழு தாயத்து நனந்தலை அருப்பத்துக்

கதவம் காக்கும் கணை ஏழு அன்ன

நிலம்பெறு திணி தோள் உயர ஓச்சிப்

பிணம் பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடி
” – பதிற்றுப்பத்து

இப்பாடலின் பொருள்: “ஆழ்ந்த அகழிகளையுடைய மதில்கள் பலவற்றைக் கைப்பற்றிக் கடந்து சென்று, உட்புகுந்து அழித்து, நாடாட்சிக்கு உரியதாக அமைந்த, அகன்ற உள்ளிடத்தையுடைய அரண்களின், வாயில் கதவு வலிமையுடையதாகக் காக்கும் கணைய மரத்தை ஒப்ப, பகைவர்களின் நாடுகளைப் பெறும் திண்ணிய தோள்களை உயரத் தூக்கி வீசி, பிணங்கள் குவிந்து கிடக்கும் போர்க்களத்திலே முன்னே பல காலங்களில் பன்முறை துணங்கைக் கூத்தினை ஆடி”

போர் வெற்றி தவிர்த்து பக்திக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பெண்கள் துணங்கை ஆடினாலும், அதில் தலைக்கை கொடுத்தல் என்று ஆணுக்கும் பங்கு இருக்கிறதாம். தலைக்கை அல்லது முதற்கை கொடுத்தல் என்றால் பெண்ணின் கையைப் பற்றி ஆடுதல் அல்லது தழுவிக் கொண்டு ஆடுதல். 

குறுந்தொகையின் மருத நிலப்பாடலில் தலைவியை அயலார் வந்து மணமுடிக்க விரும்பிய போது, தன் தலைவன் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தும் பாடலில் இப்படி வருகிறது.

மள்ளர் குழீஇய விழவி னானும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டும் காணேன் மாண்டக் கோனை

யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த

பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே


பொருள்: “மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனாகிய தலைவனை, வீர்ர் கூடியுள்ள சேரி விழாவின்கண்ணும், மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின்கண்ணும் ஆகிய எவ்விடத்தும் காணவில்லை. நானும் ஒரு ஆடுகின்ற களத்திற்குரிய மகளே! தந்தங்களை அறுத்துச் செய்த வளையல்கள் தன் பிரிவினால் நெகிழுமாறு செய்த பெருமைமிக்க தலைவனும் ஓர் ஆடுகின்ற களத்திற்குரிய மகனே!

அதாவது என்னோடு துணங்கை ஆடிய தலைவன் ஒருவன் உள்ளான் என்று அவள்(ஆதிமந்தி) சொல்வதாய் உரையாசிரியர் சொல்கிறார். “மகளிர் விழாக் காலத்தே துணங்கை ஆடுதலும் ஆடவர் அவர்கட்கு முதற்கை கொடுத்தலும் பண்டை வழக்கங்கள்” என்றும் சொல்கிறார். 

குரவை, துணங்கை போல, வெறியாட்டு என்ற ஒன்றும் வெரி குட்டான கூத்து. சிவபெருமான் அல்லது முருகன் அருள் வந்து வேகமாக ஆடுவது. வேலன் வெறியாட்டு என்று பல இலக்கியங்களில் வரும். பொன்னியின் செல்வனில் கூட, வந்தியும் ஆதித்தனும் பழுவேட்டையர் அரண்மனையில் இருக்கும் போது, வேலன் வெறியாட்டு கூத்து நடக்கும் நிகழ்ச்சி வருவது போல ஒரு மங்கல் ஞாபகம். (ஸாரி, பொன்னியின் செல்வனை refer பண்ண நேரமில்லை. அதைத் தொட்டால் கீழே வைக்க விடாது.)

குறுந்தொகை...(3)

பாடல் - 4

நோம், என் நெஞ்சே; நோம் என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே.

- காமஞ்சேர் குளத்தார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப் பாடல். தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள் என்று கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியது.

பொருள்:

(அடேங்கப்பா! இந்தப் பாடலுக்கு எகனைக்கு மொகனையாக ஏகப்பட்ட விளக்கங்கள். அதில் எனக்குச் சரியென்று தோன்றியதை இங்கே பதிகிறேன்)

என் நெஞ்சம் வருந்தும். என் நெஞ்சம் வருந்தும். கண் இமைகளைத் தீயச் செய்யும் கருவி போல, வெம்மையுடைய எனது கண்ணீரைத் தான் துடைத்து, அளவளாவுவதற்கு அமைந்த நம் தலைவர், இப்பொழுது மனம் பொருந்தாராய்ப் பிரிந்திருத்தலால், என் நெஞ்சம் வருந்தும்.

இந்தப் பாடலில் என்னவொரு அழகு! பொதுவாக நீர் என்பது தீயை அணைக்கும். இங்கே கண்களின் கண்ணீர் அவள் இமைகளைத் தீயிலிடுகிறதாம். என்ன அழகான கற்பனை! வாவ்!

இதே போல, அகநானூற்றுப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது. அது இதை விட ஒரு படி அழகு அதிகம்.

நறவின் சேயிதழ் அனைய ஆகி,  குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல் உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்,
வெய்ய உகுதர, வெரீஇ

குவளை மலர் போன்ற கரிய நிறம் கொண்டிருந்த கண்ணிமைகள், நறவம்பூவின் சிவந்த இதழ்களைப் போல செந்நிறமானதாம், அவள் கண்ணீரால். (நீளமாகச் சொல்லத் தேவையில்லை என்பதால் சுருக்கமான விளக்கம் எனக் கொள்க)

இன்னும் சில இடங்களில் இதே கருத்தையொட்டி, கருந்தடக் கண்ணின் இமைதீர் வெம்பனி முலைமுக நனைப்ப (பெருங்கதை), உற்று மை கலந்து கண்கள் வெம்பனி உகுத்த அன்றே (சீவகசிந்தாமணி),  கண் உகும் வெய்ய நீர் வெள்ளத்து மெள்ளச் சேறலால் (கம்பராமாயணம்) என்று வருகிறது.

குறுந்தொகையின் 202 ஆவது பாடலிலும் இதே போல, முதலடியில் இரண்டு 'நோம் என் நெஞ்சே'வும் கடைசியிலும் 'நோம் என் நெஞ்சே'வும் வருகிறது. (மொத்தத்தில் தலைவர்கள் எல்லாம் தலைவிகளை நோகடிக்கத்தான் செய்யுறானுவ போல)

பாடல் - 5

அதுகொல் தோழி! காம நோயே?-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை
உடை திரைத்திவலை அரும்பும் தீம் நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே

- நரி வெரூஉத்தலையார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப்பாடல். தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள் என்று கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியது.

பொருள்:

தோழி! சேற்றில் தங்கியிருக்கும் நாரைகளைத் தன் இனிய நிழலால் உறங்க வைக்கிற புன்னை மரங்களை உடையதும், கரையை உடைக்கின்ற அலைகளில் இருந்து தெறிக்கும் துளிகளால் அரும்புகின்ற, கண்ணுக்கு இனிமையாகிய நீர்ப்பரப்பையும் கொண்ட, மெல்லிய கடற்கரை நாட்டுத்தலைவன் பிரிந்ததனால், பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள் இமை பொருந்துதலைச் செய்யவில்லை(அதாவது தூங்கவில்லை). காம நோய் என்பது இத்தன்மை கொண்டதா?

வதி - சேறு அல்லது கால்வாய் ( 'குருகு' எனச் சொல்லப்படும் நாரைகள் பொதுவாக சேறு கொண்ட புதர்களில் தங்குமாம். குருகு பற்றி சில நல்ல விளக்கங்கள் ஜெயமோகன் தளத்தில் இருக்கிறது. அதன் சுட்டி: http://www.jeyamohan.in/?p=16748)

குருகு - பொதுவான அர்த்தம் நாரை என்பது

திரை - அலை

திவலை - துளி

புலம்பு - கடற்கரை (புலம்பன் - தலைவன் ( நெய்தல் திணை என்பதால்))

ஒல்லா - பொருந்தாத


இது உரையில் இருக்கும் விளக்கம். இப்பாடலை நான் இப்படிக் கற்பனை பண்ணி ரசிக்கிறேன்.

குருகுவையும் தலைவியையும் அவள் ஒப்பிடுவது போல எனக்கு ஒரு கற்பனை.

தலைவனின் நாடு, கரையை உடைக்கின்ற அலைகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகளின் இனிமையால் நிறைந்திருக்கிறது. அது போல, தலைவன் உறைகின்ற அவளது மனது அவன் பிரிவால், நெஞ்சில் உண்டாகக் கூடிய அலைகளிலிருந்து தெறித்துக் கண்ணில் கண்ணீர்த்துளியாக இருக்கிறது. ஆனால் அவன் நாட்டில் அது இனிமையானதாகவும், இவளுக்கு இங்கே அது துயரம் தருவதாகவும் இருக்கிறது. ( கடல் அலைகள் vs நெஞ்சின் அலைகள். இதை நம்ம தலைவரும் சொல்லியிருக்கிறார். "நீலக் கடலலையோ நினது நெஞ்சின் அலைகளடி (எனக்கு ரொம்பப் பிடிச்ச பாரதி வரிகளுள் ஒன்று இது)" அலை தெறித்த துளி vs கண்ணீர்த்துளி)

அவன் நாட்டின்கண் இருக்கும் புன்னை மர நிழல்கள் நாரைகளைத் தூங்க வைக்கும் சுகம் தருகிறது. ஆனால் அவன் மீது இருக்கும் இவளது அன்போ, அவளைத் தூங்கவிடாமல் செய்கிறது. ( குருகு vs தலைவி )

இந்த மாதிரி கற்பனையில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் இப்படி நம்புகிறேன். இது பாடலின் அழகைத் தூக்கிக் காட்டுகிறது.

இந்த 'ஒல்லா' என்ற வார்த்தை 'கேட்சி'யாக இருக்கிறது அல்லவா!

திருக்குறளிலும் நிறைய இடங்களில் வருகிறது. அவற்றில் ஒன்று:

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. ( குறள் எண்: 870: அதிகாரம்: பகைமாட்சி)

(ஒல்லாவைத் தேடும் போது, வேறொன்று கண்ணில் பட்டது. மேலோட்டமாகத் தேடியதில், அதில் சில சுவாரஸ்யங்கள் இருக்கும் போலத் தெரிகிறது. அதை வாய்ப்பிருந்தால் அடுத்த ஞாயிறில் ஆழமாகப் படிப்போம் என்றிருக்கிறேன். அது ஒரு கில்பான்சி கிஜு கிஜா)

Sunday 9 February 2014

சாகர் என்றால் கடல்


எனக்கொரு நண்பர் இருக்கிறார். சாகர் என்று பெயர். அவர் நட்பு கிடைத்தது என் வாழ்வின் அழகான தருணங்களுள் ஒன்று.

சாகர் டெல்லிவாலா. எப்படியும் 60+ வயதிருக்கும். அவர் ஒரு டாக்டர். பல மருத்துவ நிறுவனங்களில் Managing Director ஆக இருந்து விட்டு, ஒய்வுக்குப் பின், தன் மகன், மருமகள், பேரனுடன் இங்கே பெங்களூரில் தங்கியிருக்கிறார். அவர் எனக்கு Walking-mate(schoolmate, roommate போல). அதெப்படி, அருப்புக்கோட்டைக்கும் - டெல்லிக்கும் ஒரு இணக்கம் என்று நீங்கள் கேட்டால், அதற்கு ஒரு கதை இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அவர் என் அப்பா போல நிறம், நெற்றி, மூக்கு, ஹேர் ஸ்டைல் கொண்டவர். இவை போதாதா, அவர் மீது அன்பு கொள்வதற்கு!

அவருக்கும் இது தெரியும். அவர் மீது நான் கொண்ட நட்பு, என் அப்பா மீது கொண்ட பேரன்பில் சிதறிய மிச்ச சொச்சம் என்று! சில அல்லது பல நேரங்களில் அவரிடம் என் அப்பாவைத் தேடுவதுண்டு. ஆயிரம் தான் இருந்தாலும் என் அப்பாவுக்கு மாற்றாக வர முடியாது. அப்படி இருந்தாலும், என் அப்பாவின் நற்குணங்கள் கொஞ்சம் அவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் என் அப்பாவின் தோற்றத்தைக் கடன் வாங்கியிருப்பது என்பது என் நம்பிக்கை!

அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்கள். டெல்லியில் மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். என் அப்பாவை நான் அவரிடம் தேடுவது போல, சில சமயங்களில் தன் மகளை அவர் என்னிடம் தேடுவார். அட ராமா! அன்பு என்பது எப்படியாகப்பட்ட குணம் கொண்டது பாருங்கள்! எல்லைக் கோடுகளை அழித்து எவரோ இருவர் ஒரு புள்ளியில் அல்லது ஒரு உணர்வில் இணைகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது முட்டாள்தனமாக, என் அப்பா சொல்வது போல, அசட்டுத்தனமாக இருக்கும். ஆனால் அதனுள் இருக்கும் பரிபூரணம் எனக்கும் சாகர் அங்கிளுக்கும் மட்டும் புரியும்.

நாலைந்து நாட்களாக அவரைப் பார்க்கவில்லை. இடையில் எனக்குக் காய்ச்சலாக இருந்ததால், 2 நாட்கள் போகவில்லை. அவருக்காக கஷ்டப்பட்டுக் காய்ச்சலோடு போன நாட்களில் அவர் தாமதமாக வந்ததால் பார்க்க முடியவில்லை. கடவுள் கருணை, இன்று பார்த்தோம்.

நான்கு நாட்களாகப் பேசாதது அனைத்தையும் சேர்த்து வைத்துப் பேசினோம். முதல் நாள் போட்ட தும்மலிலிருந்து முந்தைய நாள் படித்த புத்தகம் வரை அவ்வளவையும் பேசியாகி விட்டது. அவரும் அது போலவே! ஜலதோஷத்தில் ஆரம்பித்து பிரணாப் முகர்ஜியில் போய் தான் முடித்தார்.

பேசும் போது இடையில் ஒரு வார்த்தை சொன்னார். கல்வெட்டில் பொறித்து வைத்துக் கொள்ளலாம்: 'எப்பேர்ப்பட்ட அப்பாக்களும் மகள்களுக்கு மென்மையானவர்கள் மை டியர்' என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

மேற்சொன்னவையெல்லாம் என் சாகர் அங்கிளின் அறிமுகம் மட்டுமே! ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு!

சாகர் அங்கிளுக்கு 'வாடா என் நல்ல பெண்ணே!' என்பதைத் தவிர வேறு தமிழ் தெரியாது. எனக்கு 'மேரே நாம் கியா ஹே' என்பதைத் தவிர வேறு இந்தி தெரியாது.

பலமொழிகள் கற்றுக் கொள்வதைப் பற்றி (ஆங்கிலத்தில்) பேசிக் கொண்டிருக்கும் போது கேட்டார்: "Baby! Do you know 'SUBRAMANYA BHARATHI'?" என்றார். எனக்கு ஒரு கணம் பூமி காலடியில் நழுவியது. 'என்ன கேட்டேங்க அங்கிள்?' என்றேன். அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டுத் தொடர்ந்தார். 'How many languages he knew?' என்று என்னமோ தொடர்ந்தார். நான் விழிகள் வியக்க அவர் வாயையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். 'What baby?' என்ற பிறகு தான் பிரக்ஞ்யே வந்தது.

தமிழ் என்பதே தெரியாத ஒருவருக்குப் பாரதி தெரிகிறது. அப்படியானால் தமிழர்கள் நமக்கு அவனைப் பற்றி எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? ஹ்ம்ம்..

சாகர் என்றால் கடல் என்று பொருள். உண்மை தான். என் சாகர் ஓர் அறிவுக் கடல். அது மட்டுமல்லாமல் அவர் அன்பிலும் கடல். கடலின் எல்லை கண்களுக்குப் புலப்படாது. நான் அதனுள்ளே போக முடியாது. கரையில் நின்றே ரசிக்க முடியும். ஆனால் அவர் அன்பலைகள் எனை வந்து போகும் ஓய்வில்லாமல். என் கரை நனைந்து கிடக்கும் சோர்வில்லாமல்.

அடச்சீ! இதென்ன அதிசயமா? அவர் அறிவும் அன்பும் எப்படி வந்ததாம்? என் அப்பாவின் தோற்றம் தந்ததல்லவா அது! இல்லையா பின்னே?!

சொல், ஒரு சொல்!...(4)

இன்றைய சொல்: "உணங்கு"

உணங்குதல் என்றால் உலர்தல், மனம் வாடுதல்

மேற்கோள்கள்:

1. பட்டினப்பாலை - நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்

அகல் நகர் வியன் முற்றத்து
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனம் குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும்பல் குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு

2. அதே பட்டினப்பாலையில் 'நிலவு அடைந்த இருள் போல, வலை உணங்கும் மணல் முன்றில்' என்றும் வருகிறது.

3. நற்றிணை - உணங்கு திறன் நோக்கி

முற்றா மஞ்சள் பசும்புறங் கடுப்பச்
சுற்ரிய பிணர சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிப்
புன்னையங் கொழுநிழல் முன்னுய்த்துப் பரப்புந்
துறைநணி யிருந்த பாக்கமும் உறைநனி
இனிதுமன் அளிதோ தானே துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

4. பதிற்றுப்பத்து - கான் உணங்கு கடு நெறி

முகநூலில் பகிர்வுக்குப் பின் பிற்சேர்க்கை:

மாலன்: திருக்குறளிலும் ’உணங்கு’ உண்டு. உணக்கு என்று எழுதுவார் வள்ளுவர். தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் (குறள் 1037) பலம் வீசை மணங்கு என்பவை பழையகாலத்து அளவுகள்.பலம் என்பது சுமாராக 35 கிராம்.தொடி என்பது பலத்தைக் குறிப்பதற்கு இன்னொரு சொல்.ஒரு பலம் புழுதி (மேல் மண்) நன்றாகப் பொடிந்து கால் பலம் ஆகும் அள்விற்கு உழவு செய்து நிலத்தை காயப்போட்டால் (உலர்த்தினால், உணங்கு செய்தால்) அந்த நிலத்தில் ஒரு பிடி உரம் கூடப் போடாமல் பயிர் செய்யலாம் என்கிறார் வள்ளுவர்.

லாவண்யா: "இடிக்கும் கேளிர் நும் குறை ஆகநிறுக்கல் ஆற்றினோ நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.


இப்படியும் ஒரு பாடல் இருக்கு தோழி. வெண்ணெய் உருகி வழிவதை சொல்லி இருக்காங்க, அது வெண்ணையின் இயல்பே என்றாலும் ஒரு துயரத்தோடும் ஒப்பிடலாம், இந்த பாடலில் தொனி அதுவே.


இராஜி: முந்தைய இடங்களிலெல்லாம் 'உலர்ந்த' என்று பொருளில் வந்தது, இங்கு உருகிய என்று வருகிறது. (செயலறுதல் என்று கூடச் சொல்லலாம். உணங்குதலுக்கு அப்படி ஒரு அர்த்தம் அகராதி சொல்கிறது)
வெப்பத்தில் உருகிய வெண்ணையைப் படித்ததும், சமீபத்தில் படித்த ஒரு கம்ப ராமாயணப் பாடல் நினைவு வருகிறது. சூர்ப்பனகையின் காதல் வெறியை இதே வார்த்தைகளில் கம்பர் சொல்லியிருப்பார்.

//
கைகளால், தன் கதிர் இளங் கொங்கைமேல்,
ஐய தண் பனி அள்ளினள், அப்பினாள்;
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால்
//


மாலன்:
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் உணக்கில்லாதோர் வித்து என்று ஒரு வரி எழுதுவார். அதாவது உலர்ந்து போகாத விதை. உலராத விதைதான். ஆனால் மழை இல்லாததால் முளைக்காமல் கிடந்தேன். நீ மழையாக வந்து கருணை காட்டினாய் என்கிறார். இது சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பாடியது: 

பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கிலாததோர் இன்பமே வரும்
துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமை
என் வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.


வைணவத்திற்குப் போனால், திருவாய்மொழியில் உணங்கல் கெடக்கழு தைஉதடு ஆட்டம்கண்டு என்பயன்? என்று ஒரு வரி உண்டு. உலர்ந்த நெல்லைத் தின்கிற கழுதையின் உதடுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் என்ன பயன் என்று அர்த்தம். உலர்ந்த நெல்லைத் தின்னும் கழுதையின் உதடு எப்படிஆடும் என்று ஒரு நாள் உதைக்காத கழுதைக்குப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும். இது துணங்கைக் கூத்து என்ற ஒன்றைப்பற்றிய குறிப்பும் கூட. துணங்கைக் கூத்து என்றால் என்ன என்று நேரம் கிடைக்கும் போது கதைக்கலாம்.

குறுந்தொகை...(2)


பாடல் - 2

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது, கண்டது மொழிமோ:

பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,


செறி எயிற்று, அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?



- இறையனார்

விளக்கம்:

இதுவும் முதல் பாடலைப் போல குறிஞ்சித் திணைப் பாடல். தலைவியின் வெட்கம் போக்கும் பொருட்டு தலைவன் அவள் கூந்தல் மணத்தின் இனிமையை அள்ளி விடும் பாடல்.

பூக்களின் மகரந்தத்தை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய வண்டே! நீ என் நிலத்து வண்டாதலால், நான் விரும்பியதைச் சொல்லாமல், நீ கண்ட உண்மையைச் சொல்! என்னுடன் நெருக்கமான நட்பு கொண்ட மயில் போன்ற, நெருங்கிய பல்வரிசைகளையுடைய இளம்பெண்ணின் கூந்தலைப் போல, நறுமணமிக்க பூக்கள் உள்ளனவா? நீ அறிவாயா?

கொங்கு - பூக்களின் மகரந்தம் / தேன்

தேர் - தேர்ந்தெடுத்து

அஞ்சிறை - அம் சிறை; அம் - அழகிய; சிறை - சிறகு

காமம் - விருப்பம்

பயிலியது - பழக்கம் கொண்ட

கெழீஇய - நெருங்கிய

எயிறு - பல்

நறியவும் - நறுமணமும்

இந்தப் பாடலை எழுதியவர் இறையனார்.

இதை எங்கேயோ கேட்டது போல இருக்குமே! யெஸ். திருவிளையாடல் படத்தில், நாகேஷ் - சிவாஜி சீன். ஐ ஆம் சாரி. திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் தருமிக்கு எழுதிக் கொடுக்கும் பாடல். (copyright குறித்து ஹன்ஸா மேம் பதிவு போடும் போதெல்லாம் எனக்கு இந்தப் பாடல் மனதில் வந்து போகும்) அதனால், இங்கு இறையனார் என்பவர் அந்தச் சிவபெருமான் தான் எனக் கொள்க. அதற்கு ஆதாரம் திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்த வரி: "தென்ன வன்குல தெய்வமாகிய,மன்னர்கொங்குதேர் வாழ்க்கை யின்றமிழ், சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார், இன்ன றீர்ந்தவ னிறைஞ்சி வாங்கினான்’’

இதே கருத்தொத்து திருக்குறளின் காமத்துப்பால்-களவியல் பகுதியில் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் ஒரு குறள் வருகிறது.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ள் இவட்கு
. (1113ஆவது குறள்)

பாடல் - 3:

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.



- தேவகுலத்தார்

விளக்கம்:

இந்தப் பாடலின் களம்: தலைவன் தலைவிக்காக வேலிக்கு அந்தப் புறத்தில் காத்துக் கொண்டு நிற்கிறான். தலைவியை அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் அவள் அன்பை அவன் முழுதாக உணர்ந்து கொள்ள வேண்டுமென்றும் எண்ணிய தலைவியின் தோழி (ஹ்ம்...'காவலன்' படம் பார்த்திருக்கீகளா?), அவர்கள் காதலைக் இழித்துப் பேசுகிறாள். அதைக் கேட்டுத் தலைவி பொறுக்க முடியாமல் தன் காதலை உயர்வாகக் கூறுகிறாள். அது தலைவனுக்கும் கேட்கிறது. இதுவும் குறிஞ்சித்திணைப் பாடலே!

மலைப்பக்கத்தில் உள்ள, கருமை நிறத்த கொம்புகளை உடைய குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனைச் சேகரித்து வைக்கும் பெரிய வண்டுகள் நிறைந்த நாட்டை உடைய தலைவனோடு நான் கொண்ட நட்பானது(காதலானது) நிலத்தை விடப் பெரியது. வானை விட உயர்ந்தது. கடலின் ஆழத்தை விட அளவில் பெரியது.

( சாதாரணத் தேன் இல்லையாம். 12 வருடங்களுக்கு ஒருக்கா பூக்கும் குறிஞ்சிப் பூக்களின் தேனைச் சேகரித்து வைக்கும் நாடாம்! அது மாதிரி 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி'யாம். சும்மா எல்லாப் பூவிலும் போயெல்லாம் மகரந்தத்தை உண்ணாதாம். நல்ல பூக்களாகத் 'தேர்ந்தெடுத்து' உண்ணுமாம்! அம்புட்டு கவுரதையா வாழுறாகளாம்! சக்க! சக்க! சக்க! )
 

தோழிக்கு ஒரு கடிதம்: நூல் அறிமுகம் - அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

அன்புள்ள ராஜி,

இன்று ஒரே சிட்டிங்-இல் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தேன். அந்த அனுபவத்தை வார்த்தைகளில் வடிப்பதில் நான் நிச்சயம் தோற்றுத் தான் போவேன். இருந்தாலும் உன்னிடம் சில வார்த்தைகளிலாவது சொல்லித் தான் ஆக வேண்டும். புத்தகத்தைப் படித்து முடிக்க என்னவோ இரண்டரை மணி நேரம் தான் ஆகியது. ஆனால் இது சொல்லும் விஷயங்களைப் புரிந்து கொள்ளவும் கிரகிக்கவும் வருடங்கள் பிடிக்கும். ஏன், நம்மால் புரிந்து கொள்ளப்படாமலே கூட போகலாம். அப்படியானதொரு புத்தகம் இது.

புத்தகத்தின் பெயர்: அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

ஆசிரியர்: மிகைல் நைமி. தமிழில்: கவிஞர் புவியரசு

வெளியீடு: விஜயா பதிப்பகம்
                                                                     

இந்தப் புத்தகத்தை எந்த வகைக்குள் சேர்ப்பது என்பதில் எனக்குப் பெரும் குழப்பம் இருக்கிறது. இது நாவலா, கதையா, சித்தாந்த நூலா, உண்மைச் சம்பவமா, புனைவா? தெரியவில்லை. வேண்டுமென்றால் புரிந்து கொள்வதற்கு எளிதாக 'வாழ்க்கை குறித்தான தேடல்' எனச் சொல்வது ஓரளவு பொருந்தும்.

நைமி லெபனான் நாட்டு எழுத்தாளர். அவருக்கு ஊரை விட்டு ஓடி வந்து டீ பாரில் வேலை பார்த்த அம்மை முகத்தான் ஒருவனின் நாட்குறிப்பு கிடைக்கிறது. அதில் காணப்படும் சம்பவங்களும், எண்ணவோட்டங்களும், தேடல்களுமே இந்தப் புத்தகம். (The Pitted face என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம்)

எல்லாம் அறிந்தவர்களின் மொழி மௌனம் என்று ஓஷோ சொல்கிறார். இங்கு எல்லாம் தேடுபவர்களின் மொழியும் மௌனம் என்று அம்மை முகத்தான் வாயிலாக நமக்குத் தெரிகிறது.

தான் யார்? என்ற கேள்வியின் வழி, வாழ்க்கைக் கூறுகளைத் தனக்குள்- தன் மௌனத்திற்குள் - விவாதிக்கிறான், அம்மை முகத்தான்(இனி, அ.மு என வரும்).

"மற்றவர்கள் மகிழ்ச்சிப்படுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பது ஆச்சர்யமல்ல. மற்றவர்கள் துக்கப்படுவதும் தனக்குத் துக்கம் தரவில்லை" என்று உலகத்திலிருந்தும், "மனதைக் கொண்டிருக்கும் ஓர் உடலல்ல நான், மாறாக ஓர் உடலைக் கொண்டிருக்கும் மனம்" என்று தன்னிடமிருந்தும் தனித்து நிற்கிறான். எதன் மீதும் ஒரு பற்றில்லாமல், அதே நேரத்தில் அனைத்தையும் சமமாய் அன்பு பாவிக்கும் ஆத்மாவாக அ.முவின் எண்ணங்கள் இருக்கின்றன.

மனிதர்களின் மனத்தில் எல்லைக்கோட்டைப் போடும் தேசங்களின் பிரிவினை குறித்த அவனது சிந்தனை சாதாரணர்களுக்கு வாய்க்காது. நாடு என்ற வரையறைக்குள் நின்று கொள்ள அவன் தயாரில்லை. இந்த பிரபஞ்சம் முழுதும் அவனுக்கானது என்கிறான். அதே நேரத்தில் தன் ஆத்மாவும் உடலும் கூட தன்னுடையதில்லை, தன் இரத்தம், தசை, உணர்ச்சிகள் எல்லாவற்றிலும் உலகத்தவர் பங்கும் உள்ளது என்று சொல்வது என்ன அழகான சிந்தனை!

எதன் மீதும் பற்றுக் கொள்ளாதவனான அவனுக்குமே ஒரு கட்டத்தில் அந்த பாருக்கு வரும் சென்னா செரிப் என்பவருடன் ஒரு சின்ன இணக்கம் ஏற்படுகிறது. தன் அறையில் இருக்கும் பூனையையும் தோழனாய்ப் பாவிக்கும் மனமும் இருக்கிறது. நூலின் இந்த மாதிரியான இடங்கள் பெரும் சிந்தனைக்குரியவை. அவற்றை வார்த்தைகளில் விளக்கவே முடியாது.

வாழ்க்கை போர்க்களம் என்று சொல்லித் திரியும் நமக்கு அது உலைக்களமில்லையா என்று எதிர்வாதம் வைக்கிறான். போர்க்களங்கள் மரணத்தைக் கொண்டு செலுத்தும். உலைக்களங்கள் உலோகத்தின் அழுக்கையெல்லாம் களைந்து புதியவைகளைக் கொண்டு வருமல்லவா என்பது வாழ்க்கை குறித்த வேறுபட்ட, நுட்பமான கோணம்.

மொழி மனிதனுக்கானது. அவற்றை மனிதன் தான் ஆள வேண்டும். அது மனிதனை ஆளும் நிலை வரக்கூடாது என்கிறான்.

மரணத்திற்கும் அ.மு க்கும் மற்றும் அ.முவிற்கும் பூனைக்குமிடையே நிகழும் மரணம் பற்றிய உரையாடல்கள் அர்த்தம் நிறைந்தவை. அவற்றை முழுதாய்ப் புரிந்து கொள்ள எனக்கு முதிர்ச்சி பத்தாது. ஆனால் அவனது ஒரு கேள்வி மிகவும் முக்கியமானது. 'மரணத்துடன் ஏன் வேதனை தொடர்பு கொண்டதாக இருக்கிறது? வேதனையைத் தவிர, வேறு ஒரு படைத்தலைவன் மரணத்திடம் இருந்தால், அதனைக் கண்டு உலகம் இவ்வளவு அச்சப்படாது. இவ்வளவு வெறுப்புக் காட்டாது' என்கிறான். இதே கருத்தை எளிய நடையில், 'பிரச்சனை மரணமல்ல, வலிகள்' என்று மாலன் எழுதியிருப்பார்.

'உன் உயிலை எழுதிவிடு' - இந்த 3 வார்த்தைகளுக்குள் எவ்வளவு அர்த்தங்கள்!

இறுதியாக அவன் தன் உயிலைப் புழுக்களுக்கு எழுதி வைக்கிறான். நூலில் அந்த இடம், அடடா! அத்தனை அற்புதம்! பொதுவாக மனதைத் தொட்ட வரிகளுக்கு அடிக்கோடிட்டு வைப்பது என் வழக்கம். புத்தகம் இந்த ஐந்தாறு பக்கங்களுக்கு ரூல்டு நோட்டாகத் தான் மாறிப் போனது.

இறுதியில் ஒரு சின்ன முடிச்சுடன் நூல் முடிகிறது. அதெல்லாம் உண்மையா, புனைவா என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை. சொல்லப் போனால் அந்தத் தெளிவு தேவையுமில்லை.

மொத்தத்தில் இந்த நூல், வாழ்க்கையை - அதன் கூறுகளை - ஞானி மனநிலையில் ஆராய்கிறது. சில விஷயங்கள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சில கருத்துக்கள் அதன் அடர்த்தி காரணமாக முழுதாகப் புரிந்து கொள்ள முடியவிலலை. அது தவறில்லை. இது ஒரு இரவில் வாசித்து, படித்ததாய் முடித்து விடும் நூல் அல்ல. மாடு அசைபோடுவது போல், மெல்ல மெல்ல மனம் அசை போட்டுப் பார்க்க வேண்டிய பெட்டகம் இது. இன்று எனக்குப் புரியாதவைகள், அடுத்த வாசிப்பில் புரியலாம். முழுதாய்ப் புரிய முதிர்ந்த மனம் வேண்டும். அது நம் வாழ்நாளில் கிடைக்குமாயின் நாம் புண்ணியாத்மாக்கள்.

நான் முதலிலேயே சொன்னது போல, இந்த நூல் அனுபவம் குறித்து என் மனதில் எழுந்ததையெல்லாம் என்னால் வார்த்தைகளில் விளக்கும் பக்குவம் எனக்கு இருக்கவில்லை. அதையும் நைமியின் வரிகளிலேயே சொன்னால்,

'வெளிப்பாடு தான் நோக்கத்தைத் திருத்தி ஏமாற்றி விடுகிறது. நான் நினைத்தது இதுவல்ல'

அன்புடன்,
மகிழ்வதனா,
கற்பனையூர்
 

Saturday 8 February 2014

தோழிக்கு ஒரு கடிதம்: நூல் அறிமுகம் - செடல்

அன்புள்ள ராஜி,

உன்னுடன் பேசி மாதக்கணக்காகி விட்டது. நலம் தானே?

விஷயம் வேறு ஒன்றுமில்லை. வழக்கம் போல, நான் படித்த புத்தகம் பற்றிச் சில வார்த்தைகளை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 10, 12 நாட்களாக ஓர் அருமையான புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். நேற்றுக் காலையில் தான் முழுவதும் முடித்தேன். கையோடு உனக்குக் கடிதமும் எழுதி விட்டால் தான் படித்தது முழுமை பெறும்.

புத்தகத்தின் பெயர்: "செடல்"
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்

                                                 

என்ன இது 'செடல்'? 'வித்தியாசமான பெயராக இருக்கிறதே' என்று உன் புருவங்கள் உச்சி தொட்டு இறங்கி வருவது எனக்குத் தெரிகிறது. செடல் என்றால் ராட்டினமாம். மெரீனா பீச்சில் பார்த்திருப்பாய்.

பொட்டுக்கட்டுதல் என்று அறியப்படும் தேவதாசி முறை பற்றி நீ அறிந்திருப்பாய். அப்படி பொட்டுக் கட்டி விடப்பட்ட தலித் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது.

கூத்தாடிக் குடும்பத்தைச் சேர்ந்த கோபால்-பூவரும்பு தம்பதிக்கு எட்டாவது மகளாகச் செடல் பிறக்கிறாள். மகனாக எதிர்பார்த்து மகளாகிப் போனதால் வேண்டாத பிள்ளையாக வளர்கிறாள். மழை தண்ணி பொழியாமல் அந்தக் கிராமம் வறண்டு கிடக்கிறது. அதற்குக் காரணம் பொட்டுக்கட்டி விடாதது தான் என்று சில "அறிவுஜீவிகள்" கண்டுபிடிக்கிறார்கள்.

பொதுவாக தலித் ஜாதியினரை, அதிலும் குறிப்பாக கூத்தாடிப் பரம்பரையைச் சேர்ந்த கன்னிப் பெண்களையோ அல்லது சிறுமிகளையோ தான் பொட்டுக் கட்டி விடுவார்களாம். அப்படிப் பொட்டுக் கட்டி விடப்பட்டவர்களுக்குத் திருமண வாழ்வு மறுக்கப்படுகிறது. அந்த ஊர்ச் செல்லியம்மன் கோவிலில் பள்ளுப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, திருவிழாவின் போது செல்லப் புள்ள ஆட்டம் எல்லாம் ஆட வேண்டுமாம். தங்கள் ஒரு கிராமத்துக்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள 18 கிராமங்களிலும் திருவிழாவிற்கு இவர்கள் தான் பள்ளுப் பாடி ஆரம்பிக்க வேண்டுமாம். அதுவும் போக, ஊரில் குழந்தைகள் பிறந்தால் தாலாட்டுப் பாடுவது, எழவு விழுந்தால் ஒப்பாரி வைப்பது, அம்மை நோய் கண்டவர்களுக்குப் பாடுவது போன்றவை அவர்களின் வேலைகள். அவர்களுக்குத் திருவிழாவின் போது, நெல், வரகு போன்ற தானியங்கள், துணிமணிகள், அரிசிச் சோறு போன்றவற்றை ஊர்க்காரர்கள் தர வேண்டுமாம். அது போல "விசேஷ" வீடுகளுக்குப் பாடப் போகும் போது, அந்தந்த வீட்டுக்காரர்கள் முடிந்ததைச் செய்வார்கள். இப்படித் தங்கள் ஒரு மகளாவது வயிறாற சாப்பிடட்டுமென்று தாங்களே முன்வந்து தங்கள் பிள்ளைகளை பொட்டுக் கட்டி விடுவார்களாம்.

கோபால்-பூவரும்பு சம்மதத்தையும் மீறி செடல் பொட்டுக் கட்டப்படுகிறாள். அதுவும் அவள் சிறுமியாக இருக்கும் போதே! தான் பொட்டுக் கட்டப்படுகிறோம் என்பதே அறியாதவளாக இருக்கிறாள். அவளைக் கோவிலுக்கருகில் ஒரு சிறு வீட்டில் போட்டு, ஒரு கிழவியின் கண்காணிப்பில் தனது தாய், தந்தை, உடன்பிறந்தவர்களிடமிருந்து பிரித்து வைக்கப்படுகிறாள். அங்கிருந்து ஆரம்பமாகிறது அவள் தனிமைப்பட்டு நிற்பது. நாவலின் கடைசி வரை எந்தப் பிடிமானமும் இல்லாமல் அவள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனிமைப்படுத்தப்படுகிறாள்.

செடலிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவள் பெற்றோர்கள் பிழைப்புத் தேடிக் கண்டிக்குச் சென்று விடுகிறார்கள். அது நாள் முதல், கிழவியின் வசைகளுக்கு ஆளாகி, அது தான் விதி என்று ஏற்றுக் கொண்டு காலம் கழிகிறது.

கிழவி இறந்த பின்னான இரக்கமற்ற ஒரு மழை நாளில் செடல் பெரிய பெண்ணாகிறாள். அப்பொழுது பார்த்து அவள் வீடும் இடிந்து விழுந்து விடுகிறது. அவள் சொந்தக்காரர்களிடம் புகலிடம் கிடைக்கவில்லை. அண்டிக் கொள்ள இடம் தேடி, அறங்காவலர், கோவில் பூசாரி போன்ற ஆதிக்கக்காரர்களின் வீடுகளில் அவள் அலைவது கொடுமை. கோவில் பூசாரியிடம், தான் பெரியவளாய் ஆகி விட்டதை அவள் சொல்லுமிடத்தைப் படிக்கும் போது, மனதில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட கனம் இருந்தது.

தனிமை எவ்வளவு கொடுமையானது ராஜி. எல்லாரும் இருந்தும், எல்லாமும் இருந்தும், இன்னும் ஒவ்வொரு மாத வலிகளின் போதும் அப்பாவின் அரவணைப்பு என்ற ஒன்று எவ்வளவு அவசியப்படுகிறது நமக்கு! எனக்கெல்லாம் அவர் போனை எடுக்கக் கொஞ்சம் கால தாமதம் ஆனாலும் மரணத்தின் வாயிற் கதவைத் தட்டி விட்டு வரும் துன்பமிருக்கும். நமக்கு எல்லோரும் இருந்துமே இப்படியென்றால், யாருமில்லாத, எதுவுமில்லாத செடல் என்ன பாடுபட்டிருப்பாள்! இதை எழுதும் போதே எனக்குக் கையெல்லாம் நடுங்குகிறது ராஜி.

அந்த நேரம் பார்த்து அவளின் சொந்தக்காரனான பொன்னன் தன்னுடன் அழைக்கிறான். விரக்தியில் யாருக்கும் தெரியாமல் பொன்னனுடன் அவன் கிராமத்தை நோக்கி நடக்கிறாள். இத்துடன் நாவலின் முதல் பகுதி முடிகிறது.

முதல் பகுதி முழுவதும் சிறுமியாய் இருந்த செடல், இரண்டாம் பகுதியில் இளம் பெண்ணாக ஆகிறாள். அவளோடு சேர்ந்து அவள் பிரச்சனைகளும் வளர்கிறது. தவிர்க்க முடியாத சூழலில், 'கூத்தாடி' பொன்னனுக்கு உதவப் போக, கூத்து அவளை விடாமல் பிடித்துக் கொள்கிறது, அடுத்தடுத்த கட்டங்களில். 'பொன்னன் செட்டு' என்ற பெயர் போய் 'செடல் செட்டு' என்றாகிறது - அவள் திறமையாலும், பெண் என்ற பெயரினாலும்.

சின்னச் செடியாய் இருக்கும் போதே, பிடுங்கிப் போட நேரம் பார்க்கும் உலகம், கனி விளைந்த மரமாய் இருக்கும் போது கையைக் கட்டிக் கொண்டிருக்குமா? ஆடவர்களின் கண்களிலிருந்தும், கைகளிலிருந்தும் அவளைக் காத்துக் கொள்ளப் பெரும் போராட்டமாக இருக்கிறது. அவள் தனிமையை, வறுமையை, பாதுகாப்பின்மையைக் குறி வைத்து எத்தனை கோட்டான்கள்! அவற்றிற்கு, தன் உடல் தேவைகளுக்கு, உணர்வு மயக்கங்களுக்கு அவள் பலியாகாமல் 'தன்னைக்' காத்து வந்தாலும் அவளை நோக்கி எய்யப்பட்ட வசை அம்புகள் எத்தனை, எத்தனை! படிக்கும் நமக்கே அயற்சியாக இருக்கிறது. இந்தப் பகுதியில் தொப்பளான், ஆரான், விட்டம், விருத்தாம்பாள் என நிறைய கேரக்டர்கள். பொன்னன் இறந்து, 'செடல் செட்டு' இரண்டாய்ப் பிரிந்த பின், அவள் சகோதரியும் மகனும் பழையபடி கிராமத்துக்கே அழைக்கிறார்கள். வேறு வழியின்றி அவர்களுடன் புறப்படுகிறாள். அதனுடன் இரண்டாம் அத்தியாயம் முடிவு பெறுகிறது.

மீண்டும் சொந்த மண்ணில் ஜாதி ஜனங்களோடு இருக்கலாம் என்று தவிப்பில் வரும் செடலுக்குக் கிடைப்பதென்னவோ புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே! வனமயிலின் மகன் பரஞ்சோதியுடன் ஒரு பிடிமானத்திற்கு ஏங்கி நிற்கும் போது, அவனும் மாதா கோவிலில் சேர்ந்து கொள்கிறான். கிறிஸ்துவத்தின் அறிமுகம் தலித் மக்களிடம் எந்தெந்த சூழ்நிலைகளில் உள்நுழைகிறது என்பது நாவலில் ஆங்கங்கே ஊடு பாவாய் ஓடியிருக்கிறது. இப்படி யாருமற்றவளாய் இருக்கும் போது, தன்னைப் போன்ற பொட்டுக் கட்டி விடப்பட்ட உடல் நலமில்லாத கூத்தாடியான பாஞ்சாலியுடன் அவளது வாழ்க்கை தொடர்கிறது. சில நாட்கள் அவளுக்கு ஆறுதலாக இருக்கலாம். அதன் பின் அவள் என்னாவாள்? அவளின் எதிர்காலம் என்னவாகும்? இந்த நாவலின் பல கேரக்டர்கள் அடிக்கடி சொல்வது போல், அவள் கண்ணை மூடிய பின், அவளைக் குழியில் தள்ள யார் இருப்பார்கள்? இது போன்ற கேள்விகளைக் கேட்காமல் கேட்டு முடிகிறது நாவல்.

செடல் - வாழ்க்கை முழுக்க வெறுமையைச் சுமந்து கொண்டிருப்பவள் கதை; சமுதாயப் பழக்க வழக்கம் என்ற பெயரில் அவள் வாழ்வைச் சீர்குலைத்த கதை; ஆதிக்க வெறி தலித் மக்களின் மேல் அளவின்றிப் பொழிந்த கதை;

நாவலின் மொழி நடை பல இடங்களில் மனதைப் பிசையும். களங்களைக்  காட்சிப்படுத்துதலில் இமையத்தின் திறமை இமய அளவு. கூத்துப் பாட்டுக்கள் இரண்டாம் பகுதியில் அதிகம் வருகிறது. அவை நம்மைப் போன்ற 'கூத்து' என்பதை அறியாத தலைமுறையினருக்கு வித்தியாசமாகவும் ரசனையாகவும் இருக்கிறது.

படித்துப் பார்! உன் இதயத்தின் கதவுகள் அனைத்தையும் இறுக மூடிக் கொண்டு படித்தாலும், ஒரு கணமேனும் உன்னை உருக்குலைய வைக்கும் அவள் படும் பாடு!

அன்புடன்,
மகிழ்வதனா,
கற்பனையூர்

Sunday 2 February 2014

சொல், ஒரு சொல்!....(3)

இன்றைய சொல்: "மூரல்"

மூரல் - புன்சிரிப்பு, பல், சோறு

மேற்கோள்கள்:

1. கம்பராமாயணம் - மூரல் முறுவலன் - இந்த இடத்தில் புன்சிரிப்பு எனும் பொருள்

சூர்ப்பணகை வதை படலத்தில், லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த பின், அவள் அலறல் கேட்டு இராமன் அந்த இடம் வருவான். என்ன நடந்தது என்று லட்சுமணனிடம் கேட்கும் பாடல் இது:

மூரல் முறுவலன், இளைய 
     மொய்ம் பினோன் முகம் நோக்கி, 
'வீர! விரைந்தனை, இவள்தன் 
     விடு காதும், கொடி மூக்கும், 
ஈர, நினைந்து இவள் இழைத்த 
     பிழை என்?' என்று இறை வினவ, 
சூர நெடுந்தகை அவனை 
     அடி வணங்கி, சொல்லுவான்.


​2. பன்னிரு திருமுறை - மூரல் எனச்சொல் வெண்மூத்த நகையார் - இந்த இடத்தில் பல் எனும் பொருள்​

வாரி சொரியுங் கதிர்முத்தும்
வயல்மென் கரும்பிற் படுமுத்தும்
வேரல் விளையுங் குளிர்முத்தும்
வேழ மருப்பின் ஒளிர்முத்தும்
மூரல் எனச்சொல் வெண்முத்த
நகையார் 

​​
தெரிந்து முறைகோக்குஞ்
சேரர் திருநாட் டூர்களின்முன்
சிறந்த மூதூர் செங்குன்றூர்.

​3. பெரும்பாணாற்றுப்படை 

பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்

இந்த இடத்தில் சோறு எனும் பொருள்

எயிறு என்றாலும் பல் எனும் பொருள் உண்டு.

"ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை இந்து இளம்பிறை போலும் எயிற்றினை- நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

குறுந்தொகை...(1)

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை படித்ததற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அது போல அடுத்த சுற்று ஞாயிறுதோறும் இன்னும் சில மரபு இலக்கியங்கள் படிக்கலாம் என்று எங்கள் குழுவில் முடிவு செய்திருக்கிறோம். ஆளுக்கு ஒரு இலக்கியத்தைத் தேர்வு செய்து படிக்கலாம் என்பது திட்டம். அதில் நான் தேர்வு செய்திருப்பது "குறுந்தொகை".

முதலில் குறுந்தொகை குறித்து ஒரு பறவைப்பார்வை பார்ப்போம்.

குறுந்தொகை எட்டுத்தொகை (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு) நூல்களுள் ஒன்று. மொத்தல் 401 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை 206 புலவர்கள் பாடியுள்ளனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை முதலிய ஐந்திணைகள் குறித்தும் பாடப்படும் அகப்பாடல்களின் தொகுப்பு. இதில் வருணணைகள் குறைந்தும் உணர்வுகள் மிகுந்தும் காணப்படுகிறதாம்.

முதல் பாடல் கடவுள் வாழ்த்து:

தாமரை புரையும் காமர் சேவடி
பவளத்து அன்ன மேனி, திகழ் ஒளி
குன்றி ஏய்க்கும் குடுக்கை, குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்,
சேவல்அம் கொடியோன் காப்ப,
ஏம வைகல் எய்தின்றால் உலகே

- பாரதம் பாடிய பெருந்தேவனார்

பொருள்:

தாமரை மலரை ஒத்த அழகு பொருந்திய செந்நிற அடிகளையுடையவனும், பவளம் போன்ற மேனி உடையவனும், விளங்கா நின்ற ஒளியையும், குன்றிமணி போன்ற சிவந்த ஆடையை அணிபவனும், குன்று நடுவில் பிளக்குமாறு எறிந்த அழகிய, ஒளி வீசுகின்ற நெடிய வேலை உடையவனும், சேவல் கொடியைக் கொண்டவனுமாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இன்பம் நிறைந்த நாட்களைக் கொண்டு விளங்குகிறது.

புரை - ஒத்த, பொருந்திய
அம் - அழகு
பக - பிளந்த (பகுத்தல் என்பதிலிருந்து 'பக')
ஏமம் - இன்பம்
வைகல் - நாள்

இந்த கடவுள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவர் 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். மகாபாரதத்தை வெண்பா வடிவில் 12000 பாடல்களில் எழுதியுள்ளாராம். ஆனால் 830 பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறதாம்.

பாடல் - 1

செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

(தோழி கையுறை மறுத்தது)

- திப்புத்தோளார்

விளக்கம்:

போர்க்களம் இரத்தத்தால் செந்நிறம் அடைய, அசுரர்களைக் கொன்று அழித்த செங்கோல் அம்பையும், (போர்க்களத்தில் பகைவர்களைக் குத்திக் கிழித்ததால்) சிவந்த தந்தங்களைக் கொண்ட யானையையும், தோள்வளை அணிந்திருப்பவனுமாகிய முருகக்கடவுளுக்குரிய இம்மலையானது கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் இரத்த நிறமுடைய காந்தள் மலர்களை உடையது.

அவுணர் - அசுரர்
கோடு - தந்தம்
தொடி - தோள்வளை
சேஎய் - முருகன் 

சே என்றால் செந்நிறம். எய் என்றால் அம்பு. இவை இரண்டும் உடையவன் முருகன். பொதுவாக முருகனைக் குறித்துச் சொல்லும் போதெல்லாம் செந்நிறத்தைச் சொல்வார்கள். (அபிராமி அந்தாதியின் முதற்பாடலில் இது போல செங்கதிர், உச்சித்திலகம், மாணிக்கம், மாதுளம்பூ, தாமரை, குங்குமம் என்று செந்நிறங்களை வரிசையாகச் சக்திக்கு உவமைப்படுத்திச் சொல்லியிருப்பார்)

இந்தப் பாடலின் களம் குறிஞ்சி நிலம். அதன் கடவுள் முருகன். 

தலைவன், செங்காந்தள் மலரைக் கொண்டு வந்து கொடுக்கிறான்.(அப்படித் தருவதை அந்தக் காலத்தில் கையுறை என்கிறார்கள். நம் பாஷையில் அது 'ஐஸ்' வைப்பது). அதற்கு நம் தலைவி அடப் போடா இவனே, சும்மா ஒரு காந்தள் பூவைக் கொண்டு வந்து கொடுத்து ஃபிலிம் காட்டாதே! எங்கள் மலையில் இந்த மாதிரி கொத்துக் கொத்தாக் கெடக்கு! இந்த மாதிரி டபாய்க்குற வேலையை விட்டுட்டு ஒழுங்கு மரியாதையா வந்து கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறாள். 

அதிலும் அவள் அலட்சியப்படுத்தும் அழகைப் பாருங்களேன்! அவன் ஒரு காந்தள் பூவைக் கொண்டு வர்றான். அது சிவப்பு நிறம் கொண்டது. அதை அலட்சியப்படுத்த எவ்வளவு செந்நிறத்தை அவள் வரிசையாய்ச் சொல்கிறாள் பாருங்கள். போர்க்களத்தின் இரத்த நிறம், அம்பு, யானைத் தந்தத்தில் படிந்த இரத்த நிறம், சேவற்கொடி எல்லாவற்றையும் சொல்லி விட்டு, "கொத்து கொத்தாக" அவங்க மலையில் காந்தள் பூ இருக்குதாம்.எப்படியொரு ரிவீட்டு! அழகுடி ராசாத்தி!