Friday 15 February 2013

ஆனாலும் நேசிக்கிறேன்....

ஒவ்வொரு முறையும்..
உன் வருகைக்காகவே  
வாசல் கதவைத் திறக்கிறேன்;
நீயோ - சாத்திய 
சாளரங்களைப் பார்த்தபடியே கடக்கிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் உதடசைவிற்காகவே 
உரையாடல்களைத் தொடங்குகிறேன்;
நீயோ - இதழ்களின்
இறுமாப்பில் இன்பம் காண்கிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் தோட்டப்பூக்களின்
தோற்றங்கள் வசீகரம் என்கிறேன்;
நீயோ -சருகுகளின் 
சன்னதியே சாரம் என்கிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் அருகில் 
அமர்வதே ஆனந்தம் என்கிறேன்;
நீயோ - தனிமையின் 
தவிப்பைத் தேடியே அலைகிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் இதயத்தை 
இன்றாவது திறப்பாயா என்கிறேன்;
நீயோ - ஏமாற்றச்சிறகினில் 
ஏற்றி அனுப்பி வைக்கிறாய்;

அடே அன்பா!
உனக்குத் தெரியுமா? 
முன்னைவிட உன்னை 
அதிகம் நேசிக்க வைப்பதும்  - இவைகள் தானென்று!

No comments:

Post a Comment